ஆயிரம் கோடி ரூபாய் திட்டம்! அமைச்சர் தரப்பு உற்சாகம்!
வழக்கமாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துறைரீதியான ஆய்வுக்கூட்டம் முடித்து, செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுப்பது அமைச்சர் செங்கோட்டையன்தான். அதிசயமாக ஜூனியரான சுற்றுச்சூழல் அமைச்சர் பவானி கருப்பண்ணன் கலந்துகொண்டு பேட்டி கொடுத்தது மட்டுமின்றி, அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 13 பேருக்கு நல்லாசிரியர் விருதும் கொடுத்துள்ளார்.
பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கருப்பண்ணன், ""தமிழக அரசு மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், அதற்காக ஒதுக்கப்பட்ட சிறப்பு திட்டங்கள் உள்ளிட்டவற்றைப் பற்றி அடுக்கினார். அடுத்தபடி யாக, தமிழகத்தில் நீர்நிலைகளில் சாயக்கழிவுகள் கலக்கும் பிரச்சனையைத் தீர்க்கும் விதமாக, ஆயிரத்து நூறு கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில், 9 பொது சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அதில், இரண்டு திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் தந்துவிட்டது.
முதற்கட்டமாக ஈரோடு மாவட்டம் பவானி மற்றும் விருதுநகர் மாவட்டத்திலும் இதற்கான திட்டப் பணிகள் தொடங்கப்படவுள்ளன. இன்னும் மூன்று மாதத்தில் இந்தப் பணிகளுக்கான டெண்டர் விடப்பட்டு, உடனே கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும்'' என்று கூறினார்.
உடன்வந்த ர.ர. ஒருவர், ""ஆஹா ரெண்டு ப்ளாண்டுக்கும் சேர்த்து ப்ராஜெக்ட் அமவுண்ட் முன்னூறு கோடி ரூபாய். அப்புறமென்ன, கணக்குப் போடு… ட்வெண்டி ஃபைவ் பர்செண்ட்'' என உற்சாகமாக கமெண்ட் அடித்தார்.
- ஜீவாதங்கவேல்
முடிந்தால் ஜெயித்துப்பார்! அ.தி.மு.க.வைக் கலங்கடிக்கும் போஸ்டர்!
சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், கொரோனா காலத்து நடவடிக்கைகளை தனக்கு ஆதர வான போஸ்டர்களாக ஒட்டச்செய்து, பாப்புலாரிட்டியை வளர்த்து வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இப்போது அதே போஸ்டரைக் கொண்டு ஒருகாலத்தில் அ.தி.மு.க. கோட்டையாக இருந்த திண்டுக்கல்லில் டேமேஜ் செய்திருப்பது பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை ஒன்றிய அ.தி.மு.க. தேவேந்திரகுல வேளாளர் என்ற அமைப்பின் சார்பில் ஒட்டப்பட்டிருக்கும் கண்டன போஸ்டரில், “அ.தி.மு.க. அரசு எங்கள் சமுதாயத்தினரை தேவேந்திரகுல வேளாளர் என அறிவித்து அரசாணை வெளியிடுவதாக வாக்குறுதி அளித்தது. இதை நம்பி, அ.தி.மு.க.வை தலையில் தூக்கி கொண்டாடிய எங்களின் நெஞ்சில் கத்தியால் குத்தியதைப் போல, ஏமாற்றிவிட்டது இந்த அரசு.
மேலும், நிலக்கோட்டை ஒன்றியத்தில் பெரும் பான்மையாக இருக்கும் எங்கள் சமுதாயத்தில் இருந்து ஒருவருக்கு, ஒன்றியச் செயலாளர் பொறுப்புகூட கொடுக்காமல் புறக்கணித்து விட்டார்கள். எனவே, வருகிற 2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வை நாங்கள் புறக்கணிக்கிறோம் என்று அந்தப் போஸ்டரில் தெரிவித்துள்ளதோடு, முடிந்தால் எந்த வேட்பாளரை வேண்டுமானாலும் நிறுத்தி ஜெயித்துப் பார்! என்று சவாலாகவும் எழுதியுள்ளனர்.
தென்மாவட்டங்களில் வெற்றிபெற புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியை கூட்டணியில் தக்கவைக்க அ.தி.மு.க. தலைமை முயற்சி செய்துவரும் நிலையில், இந்த போஸ்டர் எடப்பாடிக்கு புதிய தலைவலியாக வெடித்திருக்கிறது.
-சக்தி
கவர்ச்சியுடன் பயிற்சி! தாக்கப்பட்ட நடிகை!
கொரோனா ஊரடங்கு கெடுபிடிகள் கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்பட்டு வருகின்றன. கர்நாடக மாநிலத்தில் ஒரு மாதத்திற்கு முன்பே பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு விட்டன. தற்போது உடற்பயிற்சிக் கூடங்கள், பூங்காக்களும் திறக்கப்பட்டு விட்ட நிலையில், பொதுமக்கள் சகஜமாக கூடத் தொடங்கியுள்ளனர்.
இதில் பெங்களூருவில் உள்ள பூங்கா ஒன்றில், தமிழில் வாட்ச்மேன், பப்பி, கோமாளி போன்ற படங்களில் நாயகியாக நடித்துள்ள சம்யுக்தா ஹெக்டே, கவர்ச்சியான உடையில் தனது நண்பர்களுடன் உடற்பயிற்சி செய்துள்ளார். அப்போது அதிக இரைச்ச லுடன் இசையையும் பயன்படுத்தியதால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட் டுள்ளது.
இதைத் தட்டிக்கேட்பதாகக் கூறிக்கொண்டு, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கவிதா ரெட்டி உள்ளிட்ட சிலர், சம்யுக்தாவிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றியதில் சம்யுக்தாவை, தகாத வார்த்தைகளால் திட்டியதோடு தாக்கவும் தொடங்கினார் கவிதா ரெட்டி. ஒருபுறம் பூங்காவிற்கு பூட்டு போடப்பட்டதால் பரபரப்பு தொற்றிக்கொள்ள, போலீசார் வந்து சமாதானம் பேசினர்.
இதற்கிடையே தனது முகநூல் லைவ் வீடியோவில் பேசிய சம்யுக்தா ஹெக்டே, நாங்கள் வெறும் உடற்பயிற்சி மட்டுமே செய்தோம் எனக் கூறியபடி, தனது டிசர்ட்டைக் கழற்றி மேலாடையுடன் நின்றார். உடனடியாக அவரை அங்கிருந்து போலீசார் கூட்டிச் சென்றனர்.
இந்த சம்பவத்தில் இருதரப்புமே போலீசிடம் புகார் கொடுத்திருந்தது. இந்நிலையில், நடிகையைத் தாக்கிய காங்கிரஸ் பிரமுகர் கவிதா ரெட்டி, இன்னொருவரின் தனிப்பட்ட காரியத்தில் தலையிட்டதும், தகாத வார்த்தைகளால் பேசியதும் மிகப்பெரிய தவறு. இதில் சம்யுக்தா மற்றும் அவரது தோழிகளிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
-அரவிந்த்