ரகளையில் முடிந்த இணைப்பு விழா!

மிழகத்தில் மாற்றுக் கட்சியினருடன் மாற்று மதத்தினரையும் பா.ஜ.கவில் இணைக்கும் செயல்திட்டங்களில் நிர்வாகிகள் தீவிரமாக கவனம் செலுத்தி வருகின்றனர். குறிப்பாக, கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்களை பா.ஜ.க.வில் சேர்ப்பதில் தீவிரம் அதிகரித்துள்ளது. அந்த வகையில் கோவையில் நடந்த ஒரு இணைப்பு விழாவில் சலசலப்புகளும் சர்ச்சைகளும் எழுந்துள்ளன.

ss

தமிழக பா.ஜ.க. விவசாய அணியின் மாநில தலைவராக இருக்கிறார் கோவையைச் சேர்ந்த ஜி.கே.நாகராஜ். இவர், சூலூர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் எட்வின் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ மதத்தினரை பா.ஜ.க.வில் இணைத்தார். இதற்கான இணைப்பு விழாவில் உறுப்பினர் அட்டையும் வழங்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்த இணைப்பு விழாவில் பேசிய எட்வின், ’""கத்தோலிக்க கிறிஸ்தவ மத்தத்தை சேர்ந்த நான், பிரதமர் மோடியின் ஊழலற்ற அரசு நிர்வாகத்தால் ஈர்க்கப்பட்டேன். இதுவரை எந்த அரசியல் கட்சியிலும் நான் இல்லை. ஆனால், அரசியல் ஆர்வம் எனக்கு வந்தபோது பா.ஜ.க.தான் சரியான இடம் என தீர்மானித்தேன். நான் உட்பட கிறிஸ்தவர்கள் 110 பேர் இன்றைக்கு பா.ஜ.க.வில் இணைந்திருக்கிறோம். இந்த எண்ணிக்கை இனி அதிகரிக்கும்'' என்றார்.

இந்த இணைப்பு விழாவில் பா.ஜ.க.வைச் சேர்ந்த முன்னணி நிர்வாகிகள் பலரும் கலந்துகொள்ள, கிறிஸ்தவர்களை பா.ஜ.க.வில் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை வடக்கு மாவட்ட தலைவர் வி.பி.ஜெகநாதன், மாநில பொதுச் செயலாளர் ஜி.கே.செல்வகுமார் ஆகியோர் கூட்டத்தை புறக்கணித்தனர். இவர்களது ஆதரவாளரான மாவட்ட பொதுச்செயலாளர் முருகேசன், கிறிஸ்தவர்கள் இணைப்பை விமர்சித்து கூட்டத்தில் குரல்கொடுக்க ரகளையில் முடிந்தது இணைப்பு விழா!

-இளையர்

Advertisment

கட்சி கடந்தும் கண்ணீர் மழை!

கொரோனா பெருந்தொற்றின் கோரப்பசிக்கு உலகம் முழுவதும் விலை மதிப்பற்ற உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த வரிசையில் கடந்த ஆகஸ்ட் 30ந்தேதி, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த சேகர் என்பவர் உயிரிழந்தார்.

ss

இவர் நாமக்கல் மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளராக இருந்தார். குமாரபாளையம் நகர்மன்றத் தலைவராக சேகர் செயல்பட்டபோது, கட்சி பேதமின்றி அங்குவாழும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில் முதன்மையானவராக இருந்துள்ளார். தான் சார்ந்த இயக்கம் தி.மு.க. என்றாலும், அனைத்துத் தரப்பு மக்களின் கோரிக்கைகளுக்காகவும் முன்னின்று குரலெழுப்பியதோடு, செய்தும் கொடுத்ததால் பரந்துபட்ட மக்கள் ஆதரவு சேகருக்கு இருந்தது.

இந்நிலையில்தான், 20 நாட் களுக்கு முன்பாக சேகருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, கோவை தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இருந்தும் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்த நிலையில்தான், 30ந் தேதி அவரது உயிர் பிரிந்தது.

தங்களிடம் அன்போடும், இணக்கமாக வும் பழகிவந்த சேகரின் இறப்புச் செய்தி வெளியானதுமே, குமாரபாளையம் பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கினர். தி.மு.க.வுக்கு கொள்கை ரீதியில் எதிர்க் கருத்து கொண்டிருந்தாலும், பா.ஜ.க.வினர் கூட சேகருக்காக கண்ணீர் அஞ்சலி செலுத்தி யுள்ளனர். குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ.வும், தொழில்துறை அமைச்சருமான தங்கமணியும் இரங்கல் தெரிவித்திருக்கிறார். கட்சி கடந்து, மக்கள் மனதில் நிறைந்த சேகரின் இழப்பால், குமாரபாளையம் பகுதியே கண்ணீரில் மூழ்கி யிருக்கிறது.

-ஜீவாதங்கவேல்

அமைச்சரால் அதிர்ந்த தூய்மைப் பணியாளர்கள்!

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிறப்பு மையமாக ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளிகள் பயன்படுத்தும் கழிவறைகள் முறையாக சுத்தம் செய்யப்படுவதில்லை என அடிக்கடி புகார் எழுந்தது.

ss

இந்தப் புகாரைத் தொடர்ந்து, மருத்துவமனை யில் ஆய்வு மேற்கொண்ட புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், கழிவறைகள் மூலமாக தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமென்பதால், அவற்றை முறையாக பராமரிக்குமாறு மருத்துவமனை நிர்வாகத்திடம் அறிவுறுத்தினார். இதன்பிறகு, மருத்துவமனை நிர்வாகமும் கொரோனா நோயாளிகள் பயன்படுத்தும் கழிவறைகளை முறையாக பராமரிக்கத் தொடங்கியது.

இதோடு நிறுத்தாத அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மருத்துவக் கல்லூரிக்கு ஆய்வுக்கு செல்லும் போதெல்லாம், கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை குறித்தும், அவர்கள் பயன்படுத்தும் கழிவறைகள் பராமரிப்பு குறித்தும் விசாரித்து வந்தார்.

இந்த நிலையில்தான், சில தினங்களுக்கு முன்னர், வழக்கம்போல ஆய்வுக்குச் சென்ற அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், கொரோனா நோயாளிகளின் கழிவறைகள் அசுத்தமாக இருப்பதைக் கண்டு அதிருப்தி தெரிவித்ததோடு, கழிவறையை அவரே சுத்தம் செய்யத் தொடங்கினார். இதைக் கண்டு அதிர்ந்துபோன சுகாதாரப் பணியாளர்களிடம், இனியாவது இந்த இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்வீர்கள் என்று நம்புவதாக கூறியபடி நகர்ந்தார்.

மாநில சுகாதாரத் துறையின் அமைச்சராக இருந்துகொண்டு, மல்லாடி கிருஷ்ணாராவ் காட்டிய அதிரடி பொதுமக்கள் தரப்பில் பாராட்டைப் பெற்றுள்ளது.

-சுந்தரபாண்டியன்