அரசுப் பள்ளியை மீட்க ஆசிரியர்களின் முயற்சி!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் உள்ளது அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி. 350 மாணவர்கள் படித்துவரும் இப்பள்ளியில், கடந்த சில ஆண்டுகளாகவே மாணவர் சேர்க்கை கணிசமாகக் குறைந்திருக்கிறது.

ss

இதை கவனித்த கல்வித்துறை அதிகாரிகள், மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டனர். இதுதொடர்பாக பள்ளி ஆசிரியர்களும் கலந்து ஆலோசித்தனர். 2020-21ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை தொடங்குமாறு அரசு அறிவித்திருக்கும் நிலையில், காட்டுமன்னார்கோவில் அரசுப்பள்ளி சார்பில், காட்டுமன்னார்கோவில் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் ஒரு துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

Advertisment

அதில், “மிகவும் பழமைவாய்ந்த நம் பள்ளிக்கூடம், பல சாதனையாளர்களை உலகிற்கு அளித்துள்ளது. கற்றல் திறன் குறைபாடுள்ள ஏழை, எளிய குழந்தைகளுக்கு தரமான கல்வி வழங்கும் உன்னத பள்ளி. இங்கு சேர்க்கப்படும் மாணவர்களுக்கு கணினிவழி கல்வி, சிறந்த நூலக வசதி, ஆங்கிலத்தில் பேச பயிற்சி, சுத்தமான குடிநீர், அரசு உதவித்தொகையைப் பெற்றுத்தருதல் உள்ளிட்ட வசதிகளோடு, நீட் பயிற்சிக்கு தேர்வெழுதுவதற்கான விண்ணப்பக் கட்டணத்தை பள்ளியே ஏற்கிறது.

மாலையில் யோகா, தடகள விளையாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படும். வாழ்க்கைமுறை, தன்னம்பிக்கையை வளர்க்கும் வழிமுறைகள் கற்றுத்தரப்படும். புதிய மாற்றத்தை நோக்கிய இந்தப் பயணத்தில், நம் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் உதவித்தொகையும் வழங்கப் படும்’என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் சேர்க்கைக்கான ஆசிரியர்களின் இந்த முயற்சி வரவேற்பைப் பெற்றுள்ளது.

- எஸ்.பி.சேகர்

Advertisment

லஞ்ச அதிகாரிகளால் அதிகரிக்கும் அனுமதியில்லா கட்டடங்கள்!

புதிதாக கட்டிடங்கள் கட்டுவதற்கும், பழைய கட்டிடங்களை இடித்துவிட்டு புதிதாக கட்டுவதற்கும் மாநகராட்சியிடம் அனுமதிபெற வேண்டும். ப்ளான் அப்ரூவல் இன்றி கட்டப்படும் கட்டடங்களுக்கு தடைவிதித்து உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் சென்னை மாநகராட்சி மண்டலம் 4-க்கு உட்பட்ட வட சென்னை பகுதியில் அனுமதியின்றி கட்டப்படும் கட்டிடங்கள் அதிகரித்து வருகின்றன.

ss

இதுகுறித்து நம்மிடம் பேசிய வடசென்னை சமூக செயற்பாட்டாளர்கள், ‘""உதாரணத்திற்கு, தண்டையார்பேட்டை வ.உ.சி.நகர் 6-வது குறுக்குத் தெருவில் 9 மாதங்களாக கட்டப்பட்டு வரும் 1800 சதுரஅடி கொண்ட வீட்டிற்கு மாநகராட்சியின் ப்ளான் அப்ரூவல் பெறப்படவில்லை.

கட்டிடத்தை கட்டுவதற்கு முன்பு அதிலிருந்த பழைய கட்டிடத்தை இடித்துள்ளனர். அதற்கும் அனுமதி பெறப்படவில்லை. இந்த கட்டிடத்திற்காக, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இருக்கும் சென்னை மெட்ரோ வாட்டர் பொது குழாயினை பயன்படுத்தி தண்ணீர் திருடப்பட்டது. பொதுமக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு மெட்ரோ வாட்டர் நிர்வாகத்திடம் புகார் கொடுத்ததும் அதிகாரிகள் ஆய்வுசெய்து தவறை கண்டுபிடித்து அபராத தொகை வசூலித்தனர். பொதுக்குழாயினை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டது.

ஆனால், அனுமதியின்றி கட்டப்பட்டு வரும் அந்த கட்டிடம் குறித்து மண்டலம் 4-ன் செயற் பொறியாளரிடம் புகார் தெரிவித் தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், மாநகராட்சியின் உயரதிகாரிகளின் கவனத்துக்கு பொது மக்கள் கொண்டு சென்றனர். உயரதிகாரிகளும் அக்கறை காட்டவில்லை'' என்கின்றனர்.

அனுமதியின்றி கட்டப்படும் கட்டிடங்களை கண்டுகொள்ளாமல் இருக்க, ஒரு சதுர அடிக்கு குறிப்பிட்ட தொகையை அன்பளிப்பாக அதிகாரிகள் பெறுவதால் கோடிகளில் புரளுகிறார்கள் மாநகராட்சி அதிகாரிகள்.

- இளையர்

தொடரும் கருவறைத் தீண்டாமை!

சமூகநீதியை நிலைநாட்டும் வகையில், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என இரண்டாவது முறையாக தமிழக சட்டமன்றத்தில் சட்டம் நிறைவேற்றி, ஆகஸ்ட் 22ந் தேதியுடன் 14 ஆண்டுகள் ஆகிவிட்டன. இருந்தும் எந்தவித நீதியும் கிடைக்க வில்லை. அர்ச்சக அரசுப்பணியில் அனைத்து இந்துக்களுக்குமான இடஒதுக்கீட்டை தடுப்பது யார்? என தொடர்ந்து போராடிவரும் அரச்சகர் பயிற்சிபெற்ற மாணவர்கள், கருவறை தீண்டாமை குறித்து ட்விட்டர் பரப்புரையையும் தொடங்கிவிட்டனர். தங்களின் போராட்ட பின்னணி குறித்து, அம்மாணவர்களே விவரிக்கின்றனர்.

ss

""28/02/2007ல், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் பயிற்சிக்கான சேர்க்கை விண்ணப்பப்படிவம் வெளியானதும், தமிழகம் முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்து நேர்காணலில் கலந்துகொண்டனர். அவர்களில் 206பேர் ஒன்றரை ஆண்டுகால அர்ச்சகர் பயிற்சியை நிறைவுசெய்தனர். இருந்தும் கடவுளைத் தொட்டு வழிபாடு செய்யும் அவர்களின் எண்ணம் கானல்நீராகவே இருக்கிறது.

‘பரம்பரை வழி அர்ச்சகர் உரிமை’ ஒழிக்கப்பட்டு, உச்சநீதிமன்றமே அதனை பலமுறை உறுதிசெய்துள்ளது. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் தமிழக அரசின் அரசாணையை 2015ல் உச்சநீதிமன்றம் செல்லுபடியாக்கினாலும், அதன் சட்டத்தன்மை குறித்து திராவிடத்தின் வழிவந்ததாய் சொல்லும் தமிழக அரசு இதுவரை கருத்துச் சொல்லவில்லை.

சாதிக்கொரு சுடுகாடு இருப்பதுபோல், தனியாக இருக்கும் கோவில்களில் குறிப்பிட்ட பிரிவினரல்லாத சாதியினரை அர்ச்சகராக பணியமர்த்தும் நிலைமாறி, இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் அறநிலையத்துறை கட்டுப்பாட் டில் இருக்கும் 38 ஆயிரம் கோவில்களிலும் பணிநியமனம் செய்யவேண்டும். இது வெறும் வேலைவாய்ப்பல்ல, இந்திய அரசமைப்பின் அடிப்படை உரிமைகளைக் காக்கும் செயல்பாடு. அதோடு, எக்காரணமும் இன்றி மூடப்பட்ட அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளை மீண்டும் திறக்கவேண்டும்'' என்கிறார்கள்.

அர்ச்சக மாணவர்களின் 14 ஆண்டுகால போராட்டம் எப்போது முடிவுக்கு வருமோ?

- ராம்கி