வேதரத்தினத்திற்கு போட்டியாக ஜீவஜோதி?
பா.ஜ.க.விலிருந்து தி.மு.க.வுக்கே திரும்ப வந்த வேதாரண்யம் தொகுதியின் மூன்று முறை எம்.எல்.ஏ. வேத ரத்தினம், தாய்க் கழகப் பணியில் பிஸியாகிவிட்டார். கலைஞர் நினைவுதினத்தை சிறப்பாகக் கடைப்பிடித்ததால் ஆடிப்போனது பா.ஜ.க. கூடாரம். இந்த நிலையில்தான், வேதரத்தினத்தின் ஊர்க்காரரும், ஒருவகையில் உறவுக்காரப் பெண்ணுமான, ஹோட்டல் சரவணபவன் அண்ணாச்சி விவகாரத்தில் தமிழகம் அறிந்த ஜீவஜோதியை வேதரத்தினத்திற்கு போட்டியாக களமிறக்கி, கொடியேற்று விழாவையும் நடத்தியிருக்கிறார் பா.ஜ.க.வின் கருப்பு முருகானந்தம். இதற்கிடையே, வேதாரண்யம் எம்.எல்.ஏ. சீட்டை வாங்கிவிட, தி.மு.க.வில் ஏகப்பட்ட போட்டி நிலவுவதால், வேதரத்தினத்திற்கு சீட் கிடைக்குமா என்பதே சந்தேகம்தான். ஒருவேளை அவரையே தி.மு.க. தலைமை களமிறக்குமானால், எப்பாடு பட்டாவது அவரைத் தோற்கடிக்கவே ஜீவஜோதியைக் களமிறக்கி இருப்பதாக பா.ஜ.க.வினர் சொல்கிறார்கள்.
இதுபற்றி ஜீவஜோதியிடம் கேட்டபோது, ""நான் யாருக்கும் எதிராகவோ, மாற்றாகவோ அரசியலுக்கு வரவில்லை. விரும்பியே பா.ஜ.க.வில் ஓராண்டுக்கு முன்பே இணைந்து, கட்சி வேலைகளிலும் ஈடுபடுகிறேன். கட்சி என்ன கட்டளையிடுகிறதோ அதை நிறைவேற்றுவதை கடமையாக நினைக்கிறேன்'' என்றார்.
""வேதரத்தினம் திரும்பி வராமல் போயிருந்தாலும் வேதாரண்யத்தில் தி.மு.க.வை எந்த சக்தியாலும் அசைக்க முடியாது. பா.ஜ.க. இங்கு மூன்றிலக்கத்தில் வாக்கு பெற்றாலே பெரிய விஷயம். ஜீவஜோதியெல்லாம் எங்களுக்கு பொருட்டே கிடையாது''’என்கிறார்கள் வேதாரண்யம் தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள்.
-க.செல்வகுமார்
ஆளுங்கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் தனித்தனி சட்டமா?
கலைஞரின் 2ஆவது நினைவுதினமான ஆகஸ்ட் 7ந்தேதி, திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தின் முன்பு, நலத்திட்ட உதவிகள் வழங்கியது தி.மு.க. வழக்கறிஞர் அணி. இதில், விதிகளை மீறியதாக மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் கே.வி.மனோகரன் உள்ளிட்ட 30பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது காவல்துறை.
இதுபற்றி காவல்துறை வட்டாரத்தில் கேட்டபோது, ""தி.மு.க.வினர் அரசின் தடை உத்தரவை மதிக்காமல் அடிக்கடி கூட்டங்கள் நடத்துகிறார்கள். அவர்களுக்கு உணர்த்தவே தி.மு.க. வழக்கறிஞர் அணிமீதே வழக்குப்பதிவு செய்தோம்'' என்றனர். ஆனால், ஆகஸ்ட் 8ந்தேதி திருவண்ணாமலை நகரில் பிரம்மாண்ட ஊர்வலம் நடத்திய ஆளுங்கட்சியை மட்டும் ஏனோ காவல்துறை கண்டு கொள்ளவில்லை.
அரசு அதிகாரி தற்கொலை விவகாரத் தில் கைதாகி சிறை சென்றதால், அ.தி. மு.க.வில் ஓரங்கட்டப் பட்ட முன்னாள் அமைச்சர் அக்ரி. கிருஷ்ணமூர்த்தி, சமீபத்தில் மீண்டும் மா.செ. வானார். இந்த நியமனத்தைக் கொண்டாடும் விதமாகவே இந்து அறநிலையத்துறை அமைச்சரும், அ.தி.மு.க. அமைப்புச் செயலாளருமான சேவூர் ராமச்சந்திரனைக் கூட்டிக்கொண்டு, திருவண்ணாமலையில் இருக்கும் அண்ணா, பெரியார், எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு மாலை அணிவிப்பதற்காக தனது ஆதரவாளர்கள் 500 பேருடன் ஊர்வலமாகக் கிளம்பினார்.
ஊரடங்கு நேரத்தில் தமிழக அமைச்சர் ஒருவரே, விதிகளைக் காற்றில் பறக்க விட்டதைப் பார்த்து திருவண்ணாமலை நகரமே அதிர்ந்துபோனது. சுமார் மூன்று மணிநேரம் நடைபெற்ற இந்த ஊர்வலத்தை காவல்துறை வேடிக்கைதான் பார்த்தது. இதுபற்றி மீண்டும் காவல்துறையிடமே கேட்டபோது, “ஊர்வலம் நகரம், கிழக்கு மற்றும் தாலுகா ஆகிய மூன்று பகுதி காவல்நிலைய எல்லைகளிலும் நடந்தாலும், ஆளுங்கட்சி மீது வழக்குப்பதிவு செய்ய காவல்துறையினர் தயங்குகிறார்கள். அப்படியே வழக்குப்பதிவு செய்தாலும் அமைச்சரை பாதிக்காத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யவும் உயரதிகாரி கள் மட்டத்தில் ஆலோசனை நடக்கிறது'' என்றனர்.
-து.ராஜா
ஐ.நா. அங்கீகாரத்தைக் கண்டித்து ஜக்கிக்கு எதிர்க்குரல்!
சுற்றுச்சூழலை தன் சுயநலத்திற்காக சகட்டுமேனிக்கு ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார் சாமியார் ஜக்கி வாசுதேவ். அவரது ஈஷா யோக மையத்திற்காக யானை வழித்தடங்களை மறித்து எழுப்பப்பட்ட கட்டிடங்களை இடிக்கவும், ஆக்கிரமித்த நிலங்களை மீட்டுத்தரவும் கோரி சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார்கள் பழங்குடியின மக்கள்.
""அரசு அதிகாரத்தை சட்டைப்பையில் வைத்துக் கொண்டு ஈஷா போடும் ஆட்டம் கொஞ்சநஞ்சமல்ல. இப்போது மத்திய அரசின் பரிந்துரையோடு சுற்றுச்சூழலை பேணிப் பாதுகாப்பதாக, ஐ.நா.வின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் ஈஷாவுக்கு அங்கீகாரம் கொடுத்து, எங்களை நிலைகுலையச் செய்திருக்கிறது'' என்கிறார் பழங்குடியின சங்கத்தின் முத்தம்மாள்.
""ஜக்கியின் ஆக்கிரமிப்புகளால் லட்சக்கணக்கான நுண்ணுயிர்கள் அழிந்திருக்கின்றன. வனவாழ்வு பாதிக்கப் பட்டிருக்கிறது என தொடரப்பட்ட வழக்குகள் சென் னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன. இந்நிலையில், ஈஷாவுக்குக் கிடைத்திருக்கும் ஐ.நா. அங்கீ காரம் வேதனையளிப்பதாகத் தெரிவிக்கும், சமூகநீதிக் கட்சியின் வழக்கறிஞர் பன்னீர்செல்வம், “ஜக்கியின் ஆக்கிரமிப்புகளை நேரடியாகப் பார்வையிட்டு, ஐ.நா. சபை அவர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். அதுவரை ஈஷா அறக்கட்டளையின் அங்கீகாரத்தை நிறுத்தி வைக்கவேண்டும். பழங்குடி மக்களின் நிலங்களை ஈஷா ஆக்கிரமித்திருப்பதை ஐ.நா. சபை நேரில் விசாரித்து கண்டறியவேண்டும் என்று தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறோம்'' என்றார் கோபத்துடன். இதற்கிடையே, காடுகளை அழித்துவிட்டு, கோடிகளில் குளித்துக் கொண்டிருக்கும் ஜக்கி வாசுதேவ், “பள்ளிச் சீருடைகளில் கைத்தறி ஆடைகளை அறிமுகம் செய்வதன்மூலம், கைத்தறி நெசவுத் தொழிலை ஊக்குவிக்க முடியும்’’என பேசிவருவது, வேறு ஏதாவது டார்க்கெட்டா என்ற சந்தேகத்தை சமூக ஆர்வ லர்கள் தரப்பில் ஏற்படுத்தி இருக்கிறது.
-அருள்குமார்