அரசுப் பணத்தை விரயமாக்கும் கல்வி அதிகாரி!

மாணவர்களின் எண் ணிக்கைக்கேற்ப ஆசிரியர்கள் இல்லை என்கிற அவலம் பல பள்ளிக்கூடங்களில் இருக்கும் நிலையில், உபரியாக இருக்கும் ஆசிரியர்களை மாணவர்கள் அதிகமுள்ள பள்ளிகளுக்கு மாற்றாமல் அடம் பிடிப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகள் எதிரொலிக்கின்றன.

சென்னை பாரிமுனையில் கோவிந்தப்ப நாயக்கன் தெருவி லுள்ள ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரி தேவஸ்தானம் மேற்பார்வையில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் எஸ்.கே.பி.டி. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேவைக்கு மேல் 4 ஆசிரியர்கள் கூடுதலாக இருக்கிறார்கள்.

இவர்களை வேறு பள்ளிக்கு மாற்றுங்கள் எனவும், நாங்களே முன்வந்து அவர்களை அரசிடம் ஒப்படைக்கிறோம் என்றும், மாணவர்கள் அதிக முள்ள பள்ளிகளில் இவர்களை பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்றும் பள்ளி நிர்வாகமே சென்னை முதன்மை கல்வி அலுவலருக்கு (சி.இ.ஓ.) கடந்த ஜனவரியில் கடிதம் எழுதியது. ஆனால், முதன்மை கல்வி அலுவலர் அனிதா இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த ஜூலை 13-ந்தேதி மீண்டும் நினைவூட்டப்பட்டது. ஆனாலும், அதிகாரிகள் அக்கறைகாட்டவில்லை.

Advertisment

""ஒரு ஆசிரியருக்கு ஒரு மாதத்திற்கு சராசரியாக 1 லட்சம் ரூபாய் ஊதியம் எனில் 4 ஆசிரியரும் 4 லட்சம் என கடந்த 7 மாதங்களில் மட்டும் 28 லட்ச ரூபாய் பள்ளிக்கல்வித் துறைக்கு இழப்பு. சக ஆசிரியர்களும் இதை சுட்டிக்காட்டியும் நோ ஆக்ஷன். வேலையே இல்லாமல் ஊதியம் வழங்கப்படுவது பல பள்ளிகளிலிலும் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. அப்படிப்பட்ட ஆசிரியர்களுக்கும் கல்வித்துறை அதிகாரிகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதால் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை'' என்கின்றனர் கல்வியாளர்கள். அமைச்சர் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார் என நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.

-இளையர்

Advertisment

வீடு தேடிச் சென்று பாடம் நடத்தும் நல்லாசிரியை!

ss

கொரோனா பரவல் தொடங்கி, ஊரடங்கு அறிவிக்கப்படும் முன்பே, பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதில், ஒருபுறம் தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்கிவிட்ட நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கோ கல்வியுடனான தொடர்பு முழுவதுமாக அறுந்துவிட்டது.

திகட்ட திகட்ட விடுமுறையை அனுபவித்து வரும் அரசுப்பள்ளி மாணவர்கள், கல்வியில் இருந்து மனரீதியில் விலகி விடக்கூடாது. இதனால், இடைநிற்றலும் அதிகரிக்கும் என்று கல்வியாளர்கள் வருத்தப்பட்டு வந்த நிலையில்தான், அரசுப்பள்ளி மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பாடமெடுத்து வருகிறார், காரைக்கால் தந்தை பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக இருக்கும் மேகலா.

புதுச்சேரி அரசின் நல்லாசிரியர் விருதையும் பெற்றவர்தான் ஆசிரியை மேகலா. மக்களின் வாழ்த்து களை பெற்றுவரும் ஆசிரியை மேகலாவிடம் பேசுகையில், ""என்னிடம் படிக்கும் மாணவர் களை நலன் விசாரிப்பதற்காக திருநள்ளாறு, அதிபடுகை, பிள்ளைதெருவாசல், பூமங்கலம் போன்ற கிராமங்களுக்கு சென்றபோது, அவர்கள் நோட்டு, புத்தகங்களை எடுத்து எழுதவோ, படிக்கவோ செய்வதில்லை. படிப்பையே முற்றிலுமாக மறந்துவிட்டார்கள் என்பது தெரிந்தது. போதாக்குறைக்கு செல் போனும் அவர்களிடம் மனரீதியிலும், உடல்ரீதியிலும் மாற்றங்களை ஏற்படுத்தி இருந்தது.

மேலும், எப்படா பள்ளிக்கூடம் திறப்பாங்க என்ற எதிர்பார்ப்பும் சில மாணவர்களிடையே இருந்ததைப் பார்க்க முடிந்தது. எனவே, மாணவர்களின் வீட்டுத் திண்ணைகளில் வைத்தே, காலையும் மாலையும் இருவேளையாக வகுப்புகள் நடத்திவருகிறேன். பாடத் தோடு, கையெழுத்துப் பயிற்சி, ஸ்போக் கன் இங்கிலீஸ், தமிழ் இலக்கியத்தை வாசிக்கப் பழகுதல் போன்ற பயிற்சி களையும் அளித்து வருகிறேன்'' என்றார் ஆர்வத்துடன்.

-க.செல்வகுமார்

கொரோனாவில் கொள்ளையடிக்கும் மருத்துவமனை!

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் களுக்கு இலவச சிகிச்சையளிக்க அரசு ஒதுக்கியிருக்கும் மையங்களைப் போலவே, அந்தத் தனியார் மருத்துவ மனையும் 80 பெட்களைக் கொண்ட அரங் கத்தை மாவட்ட நிர்வாகத்திற்கு ஒதுக்கித் தந்திருக்கிறது.

இதுபோக, தனியாக கட்டண கொரோனா சிகிச்சை மையமும் அங்கு செயல்படுகிறது. இதில், 5 ஆயிரம், 8 ஆயிரம் என காசுக்கேற்ப வசதிகொண்ட ரூம்கள் இருப்பதால், செல்வாக் குள்ளவர்கள் இதில் சேர்கிறார்கள். இதில்தான், பலர் ஏமாற்றப்பட்டிருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட தாய், மகளை இந்தத் தனியார் மருத்துவமனையில் இருக்கும் இலவச முகாமிற்கு அனுப்பியிருக்கிறது மாவட்ட நிர்வாகம். இங்கு வந்ததும், தனி ரூம், டாய்லெட் வசதியுடன், நல்ல உணவும் தருகிறோம் என ஆசை வார்த்தை பேசி, தங்களது கட்டண வார்டில் அட்மிட் செய்ய வைத்திருக்கிறார் மருத்துவமனை நிர்வாகி. பத்து நாட்களில் அம்மா, மகள் இருவருக்கும் ஒரேநேரத்தில், ஸ்வாப் டெஸ்ட் எடுத்துள்ளனர். இதில் அம்மாவுக்கு ரிசல்ட் நெகட்டிவ் என வந்துள்ளது. ஆனால், மகளுக்கு வரவில்லை. 8 வயது மகளை தனியாக விட்டுச்செல்ல மறுத்த தாயையும், உடனிருக்க வைத்து மூன்று நாளில் டிஸ்சார்ஜ் செய்தபோது, 15 ஆயிரம் கூடுதலாக வசூலித்திருக்கிறது மருத்துவமனை நிர்வாகம்.

ஒரேநேரத்தில் அரசு ஆய்வகத்தில் டெஸ்ட் எடுத்த அம்மா, மகளுக்கு தனித்தனியாக ரிசல்ட்டைக் காட்டியதே பணம் பறிக்கத்தானோ என்ற சந்தேகம் எழுகிறது. கொரோனா சிகிச்சைக்கு கட்டணமாக இன்சூரன்ஸ் க்ளைம் செய்யவும் மருத்துவமனை நிர்வாகம் மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் கட்டணக் கொள்ளை மருத்துவமனைகள் கொரோனாவில் கூத்தாடுகின்றன.

-து.ராஜா