அறிவாலயத் தொண்டருக்கு நிதியுதவி!

தென்சென்னை மாவட்ட தி.மு.க. இலக்கிய அணிச் செயலாளராக இருந்தவர் திருவாரூர் கந்தசாமி. அறிவாலயத்தில் நடக்கும் எந்தவொரு நிகழ்ச்சிக்கும் முதல் ஆளாக சென்று, ஏற்பாடுகளைச் செய்யக்கூடியவர். சென்னையில் நடக்கும் கட்சி நிகழ்ச்சி எதுவாக இருந்தாலும் கலந்துகொண்டு, அங்குவரும் முக்கிய நிர்வாகி களுக்கு இருக்கைகள் ஒதுக்கித் தந்து, அவர்களுக்கு வேண்டிய உபசரிப்புகளைச் செய்துகொடுப்பார். கலைஞர், பேராசிரியர் அன்பழகன், மு.க.ஸ்டாலின் எல்லாருக்கும் திருவாரூர் கந்தசாமி என்றால் தெரியும்.

Advertisment

ss

கொரோனா ஊரடங்குக்கு சில நாட்கள் முன்பு , கந்தசாமிக்கு மாரடைப்பு ஏற்படவே, யாரையும் தொந்தரவு செய்யாமல், சென்னை ஜி.ஹெச்.சில் அட்மிட்டானவரின் உயிர் பிரிந்துவிட்டது. இந்தத் தகவலறிந்து வந்த தி.மு.க. வர்த் தக அணி துணை செயலாளர் வி.பி. மணி, கந்தசாமியின் உடலை சொந்தவூருக்கு எடுத்துச்செல்ல ஏற்பாடு செய்ததுடன், கந்தசாமி தன்வாழ்நாளில் அதிகநேரத்தை செலவழித்த அறிவாலயத்தின் முன்னே சில நிமிடங்கள் வாகனத்தை நிறுத்தச் செய்தார். இதுபற்றி ஏற்கனவே நக்கீரனில் எழுதியிருந்தோம்.

Advertisment

நக்கீரன் செய்தி உடன்பிறப்புகளிடையே தாக்கம் ஏற்படுத்தி யிருந்த நிலையில், கந்தசாமியின் குடும்பத்தினரை, ஆகஸ்ட் 3ந்தேதி அறிவாலயத்திற்கு நேரில் அழைத்த தி.மு.க. தலைவர் ஸ்டாலின், தென்சென்னை மா.செ. மா.சுப்பிர மணியின் முன்னிலையில் ரூ.9 லட்சம் நிவாரண உதவியை வழங்கினார். தி.மு.க. வர்த்தகர் அணி மாநிலச் செயலாளர் கவிஞர் காசி. முத்துமாணிக்கத்தின் முயற்சியில், ஜெகத்ரட்சகன் மூலமாக கந்தசாமியின் மகனுக்கு கல்வி வாய்ப்பு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

-கீரன்

சிபாரிசுக்கே சிபாரிசு! பா.ம.க. மா.செ. குழப்பம்!

போளூர், ஆரணி சட்ட மன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய திருவண்ணாமலை வடக்கு மாவட்டத்தில் பா.ம.க. மா.செ.வாக இருந்தவர் கலைமணி. கட்சிக் கொள்கைக்குப் புறம்பாக ஆற்றுமணல் கடத்தல், சாராய விற்பனையாளர் களுடன் தொடர்பு என அநேக செயல்பாடுகளில் ஈடுபட்டாலும், கட்சி நிகழ்ச்சிகளுக்கு தாராளம் காட்டுவதால், நிர்வாகிகள் யாரும் இவரைக் கண்டுகொள்ளவில்லை.

Advertisment

ss

இந்நிலையில், மணல்கடத்தல் விவகாரத்தில், பனையூர் அக்கூர் ஊராட்சிமன்றத் தலைவர் அஞ்சலி குப்புசாமிக்கும், கலைமணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அஞ்சலி குப்புசாமி பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால், ஆரணி தாலுகா காவல்நிலையத்தில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் கொடுத்தார். போலீசாரும் கலைமணி மீது பி.சி.ஆர். வழக்குப்பதிவு செய்தனர். கலைமணி தலைமறைவானார். இந்த விவகாரம் பா.ம.க. தலைமைக்குத் தெரிவிக்கப்பட, ஜூன் மாதம் கலைமணியின் மா.செ. பதவி பறிக்கப்பட்டது.

இந்த மா.செ. பதவியை எப்படியாவது பிடித்துவிட ஒன்றிய கவுன்சிலர் புங்கம்பாடி ஏழுமலை, ஆரணி நகர பா.ம.க. தலைவர் வி.எஸ்.வெங்கடேசன், முன்னாள் மாவட்ட தலைவர் ஏழுமலை, போளூர் வழக்கறிஞர் உள்ளிட்ட சிலர், பா.ம.க. மாநில துணைத்தலைவர் எக்ஸ் எம்.பி. துரை, மாநில துணைப் பொதுச் செயலாளர் வேலா யுதம் இருவரையும் சுற்றி வருகின்றனர். ஆனால், இருவரும் இதுவரை யாரையும் சிபாரிசு செய்யவில்லை.

மாறாக, ""இந்த மாவட்டத்தில் இரண்டு சாதிகளுக்குள் சண்டையை உருவாக்கி, லாபம் பார்க்க வேறுசில சாதிக்காரர்கள் சந்தர்ப்பம் பார்த்துட்டு இருக்கிறாங்க. அதனால், அனைத்து சாதியினரையும் அரவணைத்துப் போகக்கூடிய திறமையான ஆள் இருந்தால் சொல்லுங்க. அவருக்கே மா.செ. பதவி தரச்சொல்லி அய்யாவிடம் சிபாரிசு செய்கிறோம்'' எனச்சொல்ல, சிபாரிசுக்கு சென்றவர்களோ, செய்வதறியாமல் முழிக்கின்றனர்.

- து.ராஜா

பேத்திகளைக் கிணற்றில் வீசிய பாட்டி!

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகேயுள்ளது நிறைமதி குட்டிக்காடு. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த திருஞான சம்மந்தம் கீர்த்தனா தம்பதிக்கு ரிஷிகா(5), அமுதினி (2) ஆகிய இரண்டு மகள்கள். இவர்கள் கடந்த ஞாயிற்றுக் கிழமை உதயமாம்பட்டு கிராமத்திலுள்ள கீர்த்தனாவின் தாய்வீட்டுக்குச் சென்றுள்ளனர்.

ss

இரவு நேரமானதால் அங்கேயே இரவு உறங்கிய வர்களுக்கு, காலை எழுந்ததும் அதிர்ச்சி காத்திருந்தது. அருகில் உறங்கிக் கொண்டிருந்த இரண்டு மகள்களையும் காணவில்லை. பதறியடித்துக் கொண்டு அக்கம்பக்கம் தேடியலைந்தும் கிடைக்கவில்லை. தியாகதுருகம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களும் தேடுதலில் இறங்கினர்.

இதற்கிடையில், மனநலம் பாதிக்கப்பட்டவரான கீர்த்தனாவின் தாயார் வள்ளியம்மை மீது சந்தேகம் வலுத்துள்ளது. இதுகுறித்து அவரிடம் பேச்சுக்கொடுத்த போலீசார், ""200 ரூபாய் தர்றோம். வாங்கிட்டு பிள்ளைகளைக் கொடுத்திருங்க'' என்று கேட்டுள்ளனர். இதைக் கேட்டதும், அவர்களைக் கூட்டிக்கொண்டு வீட்டிற்கு அருகில் பலராமன் என்பவருக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றைக் காட்டியுள்ளார்.

உள்ளே எட்டிப்பார்த்தவர்கள், இரண்டு குழந்தைகளும் சடலமாக மிதப்பதைக் கண்டு அதிர்ந்து போனார்கள். உடனடியாக உடல்களை மேலே கொண்டுவந்து பெற்றோரும், உற்றாரும் கதறியழுது கொண்டிருந்த வேளையில், ஒரு ஓரமாக நின்றுகொண்டு எதுவும் நடக்காததுபோல், எங்கோ பார்த்தபடி ஏதேதோ தனியாக பேசிக் கொண்டிருந்தார் வள்ளியம்மை.

மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதால், வள்ளியம்மை மீது கொலையில்லாத மரணம் விளைவித்தல் என்ற சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர் போலீசார். கண்ணுக்குக் கண்ணாக வளர்த்த பிஞ்சுக் குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோரின் கதறல் சத்தம், இன்னமும் அங்கே அடங்கவில்லை.

-எஸ்.பி.சேகர்