இடைத்தேர்தல் இழுத்தடிப்பு! உ.பி.க்கள் ஷாக்!
திருவொற்றியூர் கே.பி.பி.சாமி, குடியாத்தம் காத்தவராயன் மற்றும் சேப்பாக்கம் ஜெ.அன்பழகன் என அடுத்தடுத்து மூன்று எம்.எல். ஏ.க்களை இழந்திருக்கும் நிலையில், காலியாக அறிவிக்கப்பட்டுள்ள இந்தத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தி.மு.க. தலைமை கணக்கிட்டிருந்தது.
திருவொற்றியூர் மறைந்த எம்எல்.ஏ. கே.பி.பி.சாமியின் தம்பி கே.பி.பி.சங்கருக்கு வந்த சிக்னலை அடுத்து, அவர் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டார். அண்ணன் இடத்தில் தம்பி சரிப்படுவாரா என தொகுதி உ.பிக்களிடம் கேட்ட போது, ""கே.பி.பி.சாமியின் வெற்றிக்கே முழு பின்புலமாக இருந் தது சங்கர்தான். ஜெ. ஆட்சியின் போது பொய்வழக்குப் போடப்பட்டு வேலூர் சிறையில் இருந்தபடியே கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்றவர் சங்கர். 2006 தேர்தலில் சங்கரின் 5வது வார்டில் கிடைத்த ஓட்டுதான் சாமிக்கு லீடிங் காட்டியது'' என் கிறார்கள்.
தமிழக சட்ட மன்றத் தேர்த லுக்கு இன்னும் 10 மாதங்கள் இருக்கும் நிலையில், இடைத் தேர்தலை எதிர்நோக்கி காத்திருக் கிறது திருவொற்றியூர் தி.மு.க. ஆனால், செப்டம்பர் 7ந் தேதி வரை இடைத்தேர்தலுக்கு வாய்ப்பில்லை என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அந்த எதிர்பார்ப்பைத் தள்ளிப் போட்டுள்ளது. "ஷாக்' ஆன திருவொற்றியூர் உ.பி.க்கள், “மக்கள் பிரநிதித்துவச் சட்டத்தின்படி, ஒரு சட்டமன்ற உறுப்பினர் இறந்தாலோ, ராஜினாமா செய்தாலோ, தகுதிநீக்கம் செய்யப்பட்டாலோ, அடுத்த ஆறு மாதத்திற்குள் அந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படவேண் டும் எனும்போது, கொரோனாவைக் காரணம்காட்டி சட்டமன்றத்தில் தி.மு.க.வின் குரலை இல்லாமல் செய்யும் சூழ்ச்சி நடக்கிறது'' என்கிறார்கள்.
-அ.அருண்பாண்டியன்
கோடிகளைச் சுருட்டிய அபேஸ் ஆசிரியர்!
“குடும்ப எதிர்காலத்துக்காக சேர்த்துவச்ச மொத்தப் பணத்தையும் ஆசைகாட்டி மோசம் செஞ்சுட்டாரே’’என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆசிரியர்கள் பலர் புலம்பிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவரை தனியே அழைத்து, என்னதான் பிரச்சனை என்று விசாரித்தோம்.
""என் பேரு வைரப்பெருமாள். திருச்சி முத்தரசநல்லூர் அரசுப் பள்ளியில்தான் என் மனைவி ஆசிரியையா இருக்கிறாங்க. அதே பள்ளியில் வேலைசெய்து வந்த சிவனேசன், தனது நண்பர் வி.ஏ.ஓ. செல்வராஜ் என்பவருடன் சேர்ந்து துறையூரில் பைனான்ஸ் கம்பெனி நடத்துவதாகச் சொன்னார். அதில் ஒரு லட்சம் முதலீடு செய்தால், தினமும் ரூ.500 வட்டியாகவும், 10 மாத முடிவில் அசலை அப்படியே திருப்பித் தருவதாகவும் சொன்னார்.
என் மனைவியுடன் 10 ஆண்டுகளா ஒண்ணா வேலை பார்க்கிறார் என்பதால், அவரது ஆசை வார்த்தையை நம்பி, 20 ஆண்டுகளா சேர்த்து வைத்த பணம் மொத்தத்தையும் முதலீடு செய்தேன். ஆனால், கடந்த ஆறுமாசமா எதுவுமே திரும்பிக் கிடைக்கலை. கமிஷனர் வரை போயும் பிரயோஜனமில்லை. அதனால், வேறு வழியில்லாம, இதில் ஏமாந்துபோன திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 49 ஆசிரியர்களும் ஒன்று சேர்ந்து ஆட்சியர் சிவராசனிடம் புகார் கொடுத்திருக் கிறோம்'' என்றார்.
இதுதொடர்பாக சிவனேசனிடம் விளக்கம் கேட்டு கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. வி.ஏ.ஓ. செல்வராஜ் சஸ்பெண்ட் செய்யப் பட்டிருக்கிறார். சிவனேசனின் இந்த வட்டித்திட்டத் தில் திருச்சி மட்டுமின்றி, தர்மபுரி, நாமக்கல், கடலூர் மாவட்டங்களிலும் 250க்கும் அதிகமான ஆசிரியர்கள் 1 லட்சம் முதல் 40 லட்ச ரூபாய் வரை முதலீடு செய்து ஏமாந்து போயுள்ளனர். சிவனேசனோ கோடிகளைச் சுருட்டிக்கொண்டு தலைமறைவாகிவிட்டார்.
தினந்தோறும் இதுபோன்ற ஆயிரம் செய்திகள் வந்தாலும், ஏமாறுகிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
- ஜெ.டி.ஆர்.
குவார்ட்டர் ரவுடியை காவு வாங்கிய ஃபுல் தண்ணி!
ஒரு காலத்தில் கோவை சொக்கம்புதூர் மக்களை தனது ரவுடியிசத்தால் அடக்கி வைத்திருந்த திவான் என்கிற திவான்ராஜையே மடக்கிப்போட்டது மதுப்பழக்கம். மிரட்டல் பேர்வழி, கட்டப் பஞ்சாயத்துக்காரன் என்ற பெயர் களெல்லாம் மறந்துபோய், "குடிகாரன்' என்கிற பெயரே மிஞ்சியது.
அனுதினமும் குடியே பிழைப்பாய் வாழ்ந்த திவானிடம், அன்று குவார்ட்டருக்கு ரூ.50 குறைவாக இருந்திருக்கிறது. காசுக்கு என்ன செய்வது என்று பிதற்றியபடியே முத்தண்ணன் குளத்துப் பக்கமாக நடந்து சென்றார். குளத்தோரத்தில் தூண்டில் போட்டு மீன்பிடித்துக் கொண்டிருந்த சிறுவர்கள், குளத்தில் மிதந்து கொண்டிருந்த பந்தைப் பார்த்து பதறினார்கள்.
அவர்களிடம் திவான் விவரம்கேட்க, ""அது தூண்டில் பந்து. அதில் சின்னதாக துளையிட்டு, டூவீலர் பிரேக் ஸ்பிரிங்கில் பத்து குண்டூசிகளைச் செருகி, அதன்மேல் சத்துணவு மாவைப் பூசி குளத்தில் வீசிவிடுவோம். நரம்பு எங்கள் கையில் இருக்கும். இந்த மாவைத் தின்னவரும் ராகு, கட்லா போன்ற முழங்கை அளவு மீன்கள் மட்டுமே தூண்டிலில் சிக்கும். இதுக்கு பந்து அவசியம். ஆனா, நரம்பு அறுந்துபோச்சு. பந்தை எப்படியாவது எடுக்கணும்ணா'' என்று கேட்டுள்ளனர்.
நூறு ரூபாய் கொடுப்பீங்களா? என்று அவர்களிடம் டீல்பேசி பணத்தை வாங்கிக் கொண்ட திவான், பந்தை எடுக்க குளத்தில் இறங்கினார். பந்து நகர்ந்துகொண்டே போனது. ஒருகட்டத்தில் குளத்தின் சேற்றுக்குள் திவானின் கால்கள் சிக்கிக்கொண்டன. இரண்டே நிமிடத்தில் முழுவதுமாக குளத்தில் மூழ்கிப்போனார்.
தீயணைப்பு வீரர்களே திவானை மீட்க இரண்டு நாட்கள் ஆனது. வெளியே எடுக்கப்பட்ட திவானின் சட்டைப் பையில் குவார்ட்டருக்காக வாங்கிவைத்த நூறு ரூபாய் இருந்தது. அதுதான், அவரது 2 மனைவியருக்கும், 6 குழந்தைகளுக்கும் மிச்சம்.
-அ.அருள்குமார்