மாணவர்களுக்கு புழுத்த அரிசி!

ஊரடங்கு காலத்தில் வேலைக்குப் போகமுடியாத மக்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருட் களை வழங்கிவருகிறது தமிழக அரசு. அதிலும் பல ரேஷன் கடைகளில் ஒவ்வொரு மாதமும் 20ந் தேதிக்கு மேல் ஸ்டாக் இல்லையென்ற குற்றச்சாட்டு நிலவுகிறது.

ss

இந்நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மே மாத கோடை விடுமுறை காலத்திற்கான உலர் உணவு வழங்கும் வகையில், தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு அரிசி, பருப்பு வழங்க உத்தரவிடப் பட்டது.

Advertisment

இதை வாங்க, குழந்தைகளுக்கே உரிய ஆர்வத்துடன் வந்திருந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு பேரதிர்ச்சி காத்தி ருந்தது. பல மாதங்களுக்கு முன்பே ஸ்டாக் வைத்திருந்ததால், புழுங்கல் அரிசி முழுவதும் வண்டுகளும், புழுக்களும் ஊர்ந்து கொண்டிருந்தன. அவற்றை சுத்தம் செய்யாமலே மாணவர்களுக்கு வழங்கிக் கொண்டிருந்தனர். பாதிக்கும் ஏற்பட்ட மாண வர்களுக்கு பருப்பு வழங்கப்பட வில்லை.

இதைக் கொண்டுபோய் சாப்பிடவா முடியும். எல்லாமே கோழிக்குத்தான் என புலம்பியபடி மாணவர்கள் சென்று கொண்டிருந்தனர். இந்தக் கொடுமைபற்றி அமைப்பாளர்களிடம் நாம் கேட்டபோது, “பிப்ரவரி மாசமே கொண்டுவந்த ஸ்டாக்கை, அப்படியே கொடுத்து விடுங்கன்னு அதிகாரிகள் சொல்லிட்டாங்க. எங்களுக்கே மனசில்லாமத் தான் இந்த அரிசியை மாணவர்களுக்குக் கொடுக்கிறோம். பருப்பு ஸ்டாக் இல்லைன்னு தகவல் சொல்லியும் இன்னும் வரவேயில்ல’’ என்றார்கள்.

இதுதொடர்பாக உணவுத்துறை அமைச்சர் காமராஜுக்கு தெரியப்படுத்தி, அவரது கருத்தறிய செல்போனில் அழைத்தோம். அவரது பி.ஏ. எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, சார் மீட்டிங்கில் இருக்கிறார். வெளியில் வந்ததும் சொல்லிவிடுகிறேன் என்றார். அதன்பிறகு எந்த விளக்கமும் கிடைக்கவில்லை.

Advertisment

-இரா.பகத்சிங்

நடுரோட்டில் நின்று கத்தித்தீர்த்த பெண்போலீஸ்!

ss

மதுரை மத்திய சிறையில் வார்டன், அவரது மனைவி மற்றும் குழந்தைக்கும், இன்னொரு வார்டனுக்கும் கொரோனா தொற்று ஏற்பட, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, சிறையிலுள்ள குவார்ட்டஸுக்கு திரும்பினார்கள். வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அவர்கள் அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.

இந்த விஷயம், உயரதிகாரிக்குத் தெரிந்ததும், ‘அவங்க எப்படி குவார்ட்டஸுக்கு வரலாம்? என்றும் வானத்துக்கும் பூமிக்கும் குதித் திருக்கிறார். இதையடுத்து, ஜெயிலர், ஹெட் வார்டன் என ஒவ்வொருவராக சென்று, இடிப்பதற்கு ஆர்டர் போடப்பட்டிருக்கும் பழைய ஓட்டுவீட்டில் தங்கச்சொல்லி அவர்களை நிர்பந்தித்துள்ளனர். பாம்பு, பல்லி அடைஞ்சி கிடக்கும் பாழடைந்த வீட்டில் மனுசன் தங்குவானா என்று நொந்து கொண்டவர்கள், அங்கிருந்தே வெளியேறும் நிலைக்கு ஆளானார்கள்.

சாத்தூர் மகளிர் சிறையில் பணிபுரிந்த முதல் தலைமைப் பொறுப்பிலுள்ள பெண்போலீஸ் ஒருவர், நிர்வாகக் காரணத்திற்காக மதுரை மத்திய சிறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவரை மதுரையிலிருந்து கிருஷ்ணகிரிக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்தார் அந்த உயரதிகாரி. கிருஷ்ணகிரி மகளிர் சிறைக்குச் சென்ற அவருக்கு சோதனை செய்ததில் கொரோனா பாசிட்டிவ் என்று முடிவுவந்தது.

ஒருவார சிகிச்சைக்குப் பிறகு, டிஸ்சார்ஜ் ஆன அவரை, நடுரோட்டில் இறக்கிவிட்டுச் சென்றது ஆம்புலன்ஸ். எங்கே போவதென்றே புரியாமல், மதுரை மத்திய சிறையின் உயரதிகாரியை போனில் தொடர்புகொண்டு, ""நீங்கதானே எனக்கு டிரான்ஸ்பர் போட்டீங்க? இப்ப நான் நடுரோட்ல நிக்கிறேன். எனக்கு ஒரு வழி சொல்லுங்க...'' என்று கத்தித் தீர்த்திருக்கிறார். உடனே அந்த மதுரை அதிகாரி, கோயம்புத்தூர் டி.ஐ.ஜி. சண்முகசுந்தரத்திடம் பேச, கிருஷ்ணகிரியிலிருந்து கார் ஏற்பாடு செய்து, சொந்த ஊரான மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

காவலர்களுக்கே இந்த கதியென்றால், சாமான்யர்களைப் பற்றி சொல்லவா வேண்டும்?

-ராம்கி

தாய்க் கட்சிக்கு திரும்பிய முன்னாள் எம்.எல்.ஏ!

ss

பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதியில் அசைக்க முடியாத அரசியல் சக்தியாக இருந்தவர் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வேதரத்தினம். எஸ்.கே.வி. என பிரபலமாக அழைக்கப்படும் இவர், தி.மு.க.வில் 12 ஆண்டுகள் ஒ.செ.வாக இருந்தவர். 1996, 2001, 2006 ஆகிய மூன்று சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு அசைக்கமுடியாத வெற்றியைப் பெற்றவர்.

2011 தேர்தலில், வேதரத்தினத் துக்கு சீட் கொடுக்காமல், கூட்டணியில் இருந்த பா.ம.க.வுக்கு வேதாரண்யத்தை ஒதுக்கியது தி.மு.க. தலைமை. இதில் கடுப்பான வேதரத்தினம், சுயேட்சையாக போட்டியிட்டு பா.ம.க. வேட்பாளர் சின்னதுரையை பின்னுக்குத் தள்ளி இரண்டாமிடம் பிடித்து, தி.மு.க. கூட்டணிக்கு ஷாக் கொடுத்தார்.

அதன்பிறகு தனிமரமான வேதரத்தினத்தை பா.ஜ.க.வுக்கு இழுத்தார் பொன்.ராதாகிருஷ்ணன். 2016 தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டபோது, மோடியே ஆகாய மார்க்கமாக வந்து வேதரத்தினத்துக்காக வாக்குகேட்டார். நாட்கள் நகர்ந்தன. மாநிலப் பொதுச் செயலாளர் ஆக்குவார்கள் என்று காத்திருந்தார். ஆனால், தேசியப் பொதுக்குழு உறுப்பினர் என டம்மியாக்கப்பட்டார்.

விரக்தியடைந்த வேத ரத்தினம், தி.மு.க.வா அ.தி.மு.க.வா என்ற யோசனையில் இருப்பதையறிந்து, தி.மு.க. வழக்கறிஞரும் கட்சி செயல்பாடுகளில் அக்கறையுடன் செயல்படுபவருமான மறைமலை மூலம் தி.மு.க. மாவட்டப் பொறுப்பாளரிடம் தகவல் சென்றது. இதையடுத்து, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஒப்புதல் பெற்று, மீண்டும் தி.மு.க.வுக்கே திரும்பியிருக்கிறார்.

வேதாரண்யம் தி.மு.க. அலுவலகத்தில் நடந்த இந்த இணைப்புவிழாவை தொடர்ந்து, பேரணியாக சென்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் வேதரத்தினம்.

-க.செல்வகுமார்