மாவட்ட அதிகாரத்தைப் பிடித்த பழங்குடியின வேட்பாளர்!

sகொடநாடு என்றதும் சட்டென்று நினைவுக்கு வருபவர் ஜெயலலிதா. அந்த ஜெயலலிதாவுக்கே கொடநாடு என்றால் பொன்தோஸ்தான் நினைவுக்கு வருவார். அதற்குக் காரணமும் இருக்கிறது. 2006 ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்காலத்தில், கொடநாடு கிராம ஊராட்சித் தலைவராக இருந்தவர் பொன்தோஸ்.

கொடநாடு எஸ்டேட்டுக்குள் யாருக்கும் தெரியாமல் அனுமதியின்றி கட்டப்பட்டு வந்த கட்டிடங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி சீல் வைக்கச் செய்தார். இதனால், பொன்தோஸ் மீது பொய்வழக்குப் போட்டு கைதுசெய்யும் முயற்சிகளும் நடந்தன. எதற்கும் அவர் அசைந்து கொடுக்கவில்லை.

எஸ்டேட்டுக்குப் பின்னால் பூர்வகுடிகளான அண்ணா நகர் மக்கள் பயன்படுத்தி வந்த வழியை, இரும்பு கேட் கொண்டு மூடினார் ஜெ. இதை எதிர்த்து பொன்தோஸ் தொடர்ந்த வழக்கில், அண்ணா நகர் மக்களுக்கு சாதகமாக கேட்டைத் திறந்துவிடச் சொல்லி நீதிபதிகள் உத்தரவு வழங்கியும் இன்றுவரை அந்த வழி திறக்கப் படவில்லை. மக்கள் ஆபத்தான விலங்குகள் செல்லும் பாதையில் பயணிக்கின்றனர். இப்படி தொடர்ந்து அந்தப் பகுதி மக்களின் பக்கம் நிற்பவர் பொன்தோஸ்.

Advertisment

இந்நிலையில், நீலகிரியில் மொத்தமுள்ள ஆறு மாவட்ட ஊராட்சி வார்டுகளில், தி.மு.க. 4, சி.பி.ஐ. மற்றும் அ.தி.மு.க. தலா ஒரு இடங்களில் வெற்றிபெற்றன. நீலகிரி மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவி பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டது. நெலக்கோட்டை ஊராட்சியில், தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பொன்தோஸ் மட்டுமே பழங்குடியினர் என்பதால், அவர் போட்டியின்றி தேர்வுசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டார்.

தமிழக வரலாற்றில், பழங்குடியின பிரிவைச் சேர்ந்த ஒருவர் மாவட்ட ஊராட்சித் தலைவராக தேர்வு செய்யப்படுவது இதுவே முதல்முறை. இதுகுறித்து பொன்தோஸிடம் பேசியபோது, ""பழங்குடியின பிரிவைச் சேர்ந்தவர்களும் அதிகாரத்தை எட்டமுடியும். அதன்மூலம் உரிமையை நிலைநாட்ட முடியும் என்பது இதன்மூலம் உண்மையாகி இருக்கிறது. தி.மு.க.தான் இதற்குக் காரணம்'' என்றார் மகிழ்ச்சியுடன்.

-அருள்குமார்

Advertisment

யார் இந்தக் குழந்தை? புதிர் போட்டு காமெடி பண்ணும் கட்சியினர்!

சமீபத்தில் ரிலீஸான அந்த படத்தில் வரும் ஒரு குறிப்பிட்ட வசனம் யாரையோ குறிப்பிடுவதாக சர்ச்சை எழுந்தது. அந்த வசனத்தை நீக்கியே ஆகவேண்டும் என்று போர்க்கொடி தூக்கி னார்கள் ஒரு கட்சியினர். இந்த நிலையில், “"நல்ல கருத்துதான்' என்று அந்த வசனத்தை வரவேற்பதாக பொதுவெளியில் பேசிவிட்டது ஒரு பிரபலம்.

ஏற்கனவே, அந்தப் பிரபலம் ஒரு பெண்ணுடன் பேசிய விவகாரமான ஆடியோ ஒன்றை வெளி யிட்டு, அவரது ரகசிய உறவு குறித்தும் வெளி யுலகத்துக்குத் தெரியாத குழந்தை பற்றிய விவ ரத்தையும் தகவலாகக் கசியவிட்டனர் அந்தக் கட்சி யினர்.

"இவர்தான் தந்தை'’என, அக்குழந்தையின் பிறப்புச் சான்றிதழெல்லாம் அப்போது ‘லீக்’ ஆனது. ‘இந்த அளவுக்குச் சும்மா கிழி கிழியென்று கிழித்தும், அடங்கவில்லையே அந்தப் பிரபலம்? கருத்து வெளியிட்டு தங்களின் மரி யாதைக்குரியவரைச் சீண்டுகிறாரே?’ என்ற கடும் கோபத்தில் அந்தக் கட்சியின் ஐ.டி. விங், முகம் தெரியாத பெண்ணின் மடியில் அமர்ந் திருக்கும் ஒரு குழந்தையின் படத்தை வலைத்தளங்களில் வெளியிட்டு, ‘"குட்டிப்பையன் யாருன்னு தெரியுதா? முகச்சாயலை வைத்துக் கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்'’என்று புதிர் போட்டுள்ளது.

அந்த போட்டோவைப் பார்த்துவிட்டு, "சான்ஸே இல்ல... சத்தியமா இது மீன் குஞ்சுதான்...'’என்று கமெண்ட் போட்டுவருகிறார்கள் குறும்புக்கார நெட்டிசன்கள்.

ரோட்டோரம் வரச் சொன்ன மேட்டரை வைத்து, இன்னும் எத்தனை காலத் துக்குத்தான் அந்தப் பிர பலத்தைச் சந்திசிரிக்க வைப் பார்களோ?

-ராம்கி

பாழாய்ப்போன பாதயாத்திரைப் பாதை! குமுறும் முருக பக்தர்கள்!

ss

ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசம் வந்தாலே, பழனி முருகன் கோவிலை நோக்கி பல்லாயிரக்கணக்கான முருக பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொள்வது வழக்கம். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சாலையோரமாகவே நடப்பதால், அவர்களில் பலர் சாலை விபத்துகளில் உயிரிழக்க நேர்ந்தது.

இந்நிலையில், கலைஞர் ஆட்சியில் ரூ.5 கோடி செலவில், திண்டுக்கலில் இருந்து பழனி வரை 50 கி.மீ. தூரத்திற்கு சாலையோரங்களில் ஹாலோ ப்ளாக் கற்களைக் கொண்டு நடைபாதை அமைக்கப்பட்டது. தற்போது, அதை முறையாக பராமரிக்காத காரணத்தால், முட்புதர்கள் மண்டி பக்தர்கள் பயன்படுத்த முடியாத சூழல் உருவாகி இருக்கிறது.

""முன்பெல்லாம் தனிப்பாதை இருந்ததால், சுலபமாக பாதயாத்திரை மேற்கொண்டோம். இப்போது முட்புதர்கள், பழுதடைந்த நடைபாதையால் நடக்க முடியவில்லை. குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு நடப்பவர்கள் அதிக சிரமத்துக்கு ஆளாகிறார்கள்'' என்று குமுறுகிறார்கள் முருக பக்தர்கள்.

பக்தர்களின் இந்தக் குறையைக் கண்ட தமிழ்நாடு சிறப்புக் காவல்படையின் 14 ஆம் அணியின் எஸ்.பி. அய்யாசாமி தலைமையில், ஏழு உதவி ஆய்வாளர்கள், 84 போலீசார் கொண்ட குழு நடைபாதையை சுத்தப்படுத்த களமிறங்கினார்கள். பழனியில் இருந்து சத்திரப்பட்டி வரை சுமார் 15 கி.மீ. சாலை சீரமைக்கப்பட்டு, தண்ணீர் விட்டு சுத்தப்படுத்தியதால், மீண்டும் பக்தர்கள் பயன்பாட்டுக்கு வந்தது நடைபாதை.

இருப்பினும், பழுதடைந்த பாதை சீரமைப்பு அத்தியாவசியம் என்பதால், இதனை கலெக்டர் விஜயலெட்சுமி கவனத்துக்கு கொண்டுசென்றோம். “""எஸ்.பி. அய்யாசாமியின் குழு மனிதாபிமான அடிப்படையில் செய்த பணி பாராட்டுக்குரியது. மீதமுள்ள பாதையை ஊரக வேலைவாய்ப்புப் பணியாளர்களை பயன்படுத்தி சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்கிறேன்'' என்று உறுதியளித்தார்.

பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் முன்பே பணிகளைத் தொடங்கினால், இன்னும் பயனுள்ளதாக இருக்கும் என்பது பக்தர்களின் கோரிக்கை.

-சக்திவேல்