டிரான்ஸ்பரா? வாபஸா?

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் 20-7-18 அன்று புதுக்கோட்டைக்கு வந்தபோது, அவருக்கு கறுப்புக்கொடி காட்ட காத்திருந்த சி.பி.ஐ., சி.பி.எம். கட்சிகளைச் சேர்ந்த 825 தோழர்களை ஆளுநர் வரும்முன்பே கைது செய்து மூன்று மண்டபங்களில் அடைத்தனர்.

signalஅதோடு நின்றுவிடாமல் கறுப்புக்கொடிக்காக கைது செய்த அவர்களை மாலையில் வீடுகளுக்கு அனுப்பிவிடக்கூடாது, ஜாமீனில் வெளியே வரமுடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சிறைக்கு அனுப்ப வேண்டுமென மேலிட உத்தரவுப்படி முடிவு செய்தார்கள் காக்கி அதிகாரிகள்.

அதற்கேற்ற முறையில் புகாரை எழுதிக்கொண்டு போய், கைதான இடத்தில் நின்ற ஆலங்குடி வட்டாட்சியர் ரத்தினாவதியிடம் கொடுத்து கையெழுத்து கேட்டார்கள். அவர் கையெழுத்திட மறுத்துவிட்டார். அதே இடத்தில் பணியில் இருந்த மற்றொரு வட்டாட்சியரான கந்தர்வக்கோட்டை தேவசேனாவிடம் கையெழுத்து கேட்டார்கள். அவரும் கையெழுத்திட மறுத்துவிட்டார். ஏமாற்றத்துடன் திரும்பிய காக்கிகள் கடைசியாக, அந்தப் பகுதியின் வருவாய் ஆய்வாளர் வைரவனை நெருங்கினர்.

Advertisment

""ஸாரி சார்... இந்தப் புகாரில் என்னால் கையொப்பமிட முடியாது. இங்கே என்ன நடந்ததோ அதை அப்படியே அறிக்கையாக எழுதி, என் மேலதிகாரியிடம் கொடுத்துவிட்டேன். உங்களிடம் புகார் தரமுடியாது'' என்று அவரும் உறுதியாக மறுத்துவிட்டார்.

இதனால் மண்டபங்களில் அடைத்து வைத்திருந்த 825 தோழர்களையும் 12 மணிக்கே வெளியே விடவேண்டியதாகிவிட்டது. தாங்கள் நினைத்ததைச் சாதிக்க முடியவில்லையே என கோபம் கொண்ட காவல் அதிகாரிகள், புகார் கொடுக்க மறுத்த வட்டாட்சியர்களையும் ஆய்வாளரையும் உடனே பணியிட மாறுதல் செய்யுமாறு மாவட்ட நிர்வாகத்திடம் சிபாரிசு செய்திருக்கிறார்கள். அடுத்த சில விநாடிகளில் மூவரும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுவிட்டனர்.

இதனைக் கண்டித்து வருவாய்த்துறையினர் போராட்டம் நடத்த தயாரானார்கள். மாவட்ட அளவில் சங்க பொறுப்பில் உள்ளவர்கள் ""கலெக்டரிடம் பேசிக்கொண்டிருக்கிறோம், கொஞ்சம் பொறுங்கள்'' என்று சமாதானப்படுத்தினார்கள்.

Advertisment

-இரா.பகத்சிங்

பழுதா? திருட்டா?

சிவாலயங்களில் தவறாமல் இடம்பெறும் முக்கிய தெய்வங்களில் ஒன்று சண்டீசர் எனும் சண்டிகேசுவரர். இவர்தான் சிவன் கோயிலுக்குள் இருக்கும் சொத்துகளுக்கு பொறுப்பாளர்.

signal

சிவன் கோயில்களில் எல்லா தெய்வங்களையும் வணங்கிவிட்டு, கோயிலில் இருந்து வெளியே செல்லுமுன் சண்டீசருக்கு முன்னால் குனிந்து, ""நாங்கள் இங்கிருந்து சிவனுக்குரிய எதையும் எடுத்துச் செல்லவில்லை'' என்று கூறி கைகளை விரித்துக்காட்டி அல்லது சுடக்குப் போட்டு அல்லது விரல்களை மடக்கித் தலையில் கொட்டிக்கொண்டு வருவார்கள் பக்தர்கள்.

குமரி மாவட்டம் சுசீந்திரத்தில் உள்ள புகழ்மிகு தாணுமாலயன் கோயிலில் உள்ள சண்டீசர் சிலையின் கழுத்துப் பகுதி உடைந்துள்ளது. சிலையில் இந்த உடைப்பு ஏற்பட்டு 15 நாட்களுக்கு மேலாகிறது. ஆகம விதியின்படி பழுதான சிலைக்கு பூஜை செய்யக்கூடாது. ஆனால் இங்கே?

""மூன்றடி உயரம் கொண்ட அந்த சண்டிகேசுவரர் சிலையில், கழுத்தில் சிமெண்ட் வைத்து ஒட்டி, அது பக்தர்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காக மாலையைப் போட்டு மறைத்துள்ளார்கள். பூஜை செய்கிறார்கள். சிலை உடைந்ததை அதிகாரிகளுக்குச் சொல்லவேயில்லை. கோயிலில் இருந்த 63 நாயன்மார் சிலைகளில் இப்போது 38தான் உள்ளன. இந்த சண்டிகேசுவரர் சிலையை யாரோ திருட முயன்றிருக்கிறார்கள். உடைந்ததும் அப்படியே விட்டுவிட்டு போயிருக்கிறார்கள் என்ற சந்தேகம் உண்டாகிறது'' என்கிறார் திருக்கோயில் திருமடங்களின் மாநில அமைப்பாளர் காளியப்பன்.

தாணுமாலயன் கோயில் கண்காணிப்பாளர் ஜீவானந்தத்திடம் இதுபற்றிக் கேட்டோம். ""விசாரணை நடக்கிறது'' என்று ஒற்றை வரியில் முடித்துக்கொண்டார்.

-மணிகண்டன்

அசலா? நகலா?

signal

பழனி அருள்மிகு தண்டபாணி திருக்கோயிலில், கர்ப்பக்கிரகத்தில் இப்போது உள்ள திருச்சிலை போகர் என்னும் சித்தரால் செய்யப்பட்ட ஒரிஜினல் நவபாஷாண சிலைதானா? என்று கேள்வி எழுப்புகிறார், போகரின் வழிவந்த சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமி.

ஒன்பது மூலிகைகளால் (நவபாஷாணம்) செய்யப்பட்ட அந்த மூலவிக்கிரகத்தின் கைகளும் கால்களும் பழுதடைந்து கீழே விழுந்துவிட்டது என்று சொல்லித்தான் ஒரு மோசடிச் சிலையை மூலிகைச் சிலைக்கு முன்னால் வைத்து பூஜை செய்து உண்மை தெரிந்து, ஸ்தபதி முத்தையாவும் இன்னும் மூன்று அதிகாரிகளும் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேலிடம் சிக்கினர்.

""நவபாஷாணச் சிலையின் இன்றைய நிலையென்ன? அதற்கு உரிமைப்பட்டவர்கள் நாங்கள். ஆகவே நவபாஷாண ஞான தண்டாயுதபாணிக்கு எங்கள் தலைமையில் பாதுகாப்பு கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும்'' என்று உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார் பாத்திரசாமி. அதை விசாரித்த நீதியரசர், ""நவபாஷாணச் சிலையை அரசு பாதுகாத்து வருகிறது. சிலை பாதுகாப்பாக இருக்கிறது'' என்று தீர்மானித்தார்.

""நாங்கள் மீண்டும் ரிட் தாக்கல் செய்து கேட்கவிருக்கிறோம். மூலஸ்தானத்தில் இருப்பது போகர் செய்த சிலையா என்பதில் எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது. உயர்நீதிமன்றத்தில் எங்களுக்கு நீதி கிடைக்காவிட்டால் உச்சநீதிமன்றத்திற்கு செல்லத் தயாராக இருக்கிறோம்'' என்கிறார் பாத்திரசாமி.

பழனியாண்டவர் கோயில் கருவறைக்குள் சென்று அனுபவமுள்ளவர்கள் சோதனை செய்தால் மட்டுமே இருப்பது அசலா, நகலா என்பதை அறிய முடியும்!

-சக்தி