"கொரோனா காலத்திலும் வேல் யாத்திரை எனும் பெயரில் மதத்தை பரப்பி அரசியல் செய்துவரும் பா.ஜ.க.விற்கு அனுமதி இல்லை' என உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துவிட்டு, அதற்குமாறாக விமான நிலையத்தில் அரசு மரியாதை, திரும்பிய பக்கமெல்லாம் காவல்துறையினரின் சல்யூட், போக்குவரத்து ஒழுங்கு என தன்னுடைய அரசால் என்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்து பா.ஜ.க.வின் ஆசையை நிறைவேற்றி வைத்துள்ளது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு.
"வேல் யாத்திரை' எனும் பெயரில் நவ. 6-ம் தேதி திருத்தணியில் அரசியல் ஆட்டத்தை தொடங்கியது தமிழக பா.ஜ.க. அப்போதே, கண்டும் காணாமல் இருந்த தமிழக காவல்துறை, ஒவ்வொரு நாளும் கைது நாடகம் நடத்தி... மாலையில் விடுவித்து, மறுநாளும் யாத்திரைக்கு அனுமதித்தது. "பெண்களின் குத்தாட்டம், செருப்புக்கு பக்கத்தில் வேல், மூலவரை படமெடுத்தது...' என பலவித சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் வளைய வந்த வேல் யாத்திரை, பாபர் மசூதி இடிப்பு நாளான டிசம்பர் 6-ம் தேதி திருச்செந்தூரில் முடிந்தபோது, தமிழக காவல்துறையின் உண்மை முகம் தெரியவந்தது.
"நிறைவு கூட்டத்தை நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் எச்ச ரிக்கை விடுத்தார். ஆனால், பா.ஜ.க. தொண்டர்களை திருச்செந்தூர் அழைத் துப் போவதற்காக தூத்துக்குடி வடக்கு ரத வீதியில் நின்றிருந்த வேனை போலீசார் கைப்பற்றி ஸ்டேஷனுக்கு கொண்டு வந்தனர். சற்று நேரத்தில் எங்கிருந்தோ ஒரு போன் வந்ததும், வேன் விடுவிக்கப்பட்டது.
நிறைவு விழாவில் கூட்டம் சேராமல் போய்விடக்கூடாது என்பதற்காக, காலி திடலைத் தவிர்த்து, திருச்செந்தூரில் திரு மண மண்டபத்தினை வாடகைக்கு அமர்த்தி 400 நபர்களை காலை 9 மணிக்கே அடைத்துவிட்டனர். மாநிலத் தலைவர் முருகன் தலைமையிலான பா.ஜ.க.வினர், ஹைதராபாத்திலிருந்து தனி விமானம் மூலம் வருகை தந்த மத்தியப்பிரதேச முதல் வர் சிவராஜ்சிங் சவுகானை வரவேற்பதற் காக வாகைக்குளம் விமான நிலையத்திற்கு சென்று காத்திருந்தனர். அனுமதி மறுக்கப் பட்ட கூட்டத்திற்கு வருகின்றார் என்று தெரிந்தும் மங்கள வாத்தியங்கள் முழங்க, காவல்துறையினரின் அணிவகுப்பு என அரசு மரியாதை வழங்கி அமர்க்களப் படுத்தியது எடப்பாடி பழனிச் சாமி தலைமையிலான தமிழ்நாடு அரசு. ம.பி. முதல்வரின் வாகனம் செல்லும் வழியெல்லாம் காவல் துறையினரின் சல்யூட்.
நிறைவு விழா மண்டபத்தில் நைனார் நாகேந்திரன், சுதாகர் ரெட்டி, சி.டி. ரவி, சசிகலா புஷ்பா, முருகன் ஆகியோர் முக்கியத் துவம் பெற்றநிலையில், ஹெச். ராசாவும் அண்ணாமலையும் ஓரமாக உட்கார வைக்கப் பட்டனர். மைக் பற்றிய மாநிலத் தலைவர் முருகனோ, வழக் கம்போல கந்த சஷ்டி கவசம், கறுப்பர் கூட்டம், தி.மு.க. என பேசினார். ""வரும் சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அதிகஅளவில் வெற்றிபெற்று சட்டமன்றம் செல்வார்கள்'' என்றார்.
ம.பி. முதல்வர் சிவராஜ்சிங் சவுகானோ ""தமிழகத்தில் இருக் கும் நாத்திக,தேச விரோத அசுர சக்திகளை அழிக்கவே கொண்டு வரப்பட்டது வேல் யாத்திரை. எம்.ஜி.ஆர். பாடியது போல "கொடுத்ததெல்லாம் கொடுத்தார்... அதை யாருக்காக கொடுத்தார், ஒருவருக்கா கொடுத்தார், இல்லை ஊருக்காக கொடுத்தார்' என்பதுபோல் பல்வேறு திட்டங்களை செய் துள்ளார் மோடி. தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் தமிழகத்தில் தாமரை மலரும்'' என்றார். திருச்செந்தூர் சுப்பிர மணியசுவாமி கோவிலில் சென்று சுவாமி தரிசனம் செய்த நிலையில், மூன்றடி நீளமுள்ள வேல், கொடி மரத்தின் அருகிலுள்ள உண்டியலில் போடப்பட்டது.
எல்லாவற்றையும் கவனித்த தூத்துக்குடி மக்களோ, வேல் யாத்திரைக்கும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு பேரணிக்கும் அரசு கடைபிடித்த இரட்டை அணுகுமுறையை சுட்டிக்காட்டுகின்றனர்.
""ஸ்டெர்லைட் ஆலையால் நோயுற்று தூத்துக்குடியிலுள்ள மக்கள் மட்டுமல்ல மாவட்டத்திலுள்ள மக்கள் அனைவரும் செத்துமடிந்த வேளையில்... மக்கள் அறவழியில் பேரணி நடத்தி, கோரிக்கை மனுவுடன் ஆட்சியரை சந்திக்கச் சென்றோம். தடையை மீறி வந்தோம் என, எடப்பாடி அரசின் உத்தரவுப்படி 15க்கும் அதிகமானோரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது போலீசு. நூற்றுக்கணக்கனோருக்கு கொடுங் காயம். இன்று மத யாத்திரைக்குப் பாதுகாப்பு கொடுக்கும் தமிழக அரசு, அன்று எங்களுக்குப் பாதுகாப்பு கொடுத்திருந்தால் இந்த நிலை வந்திருக்குமா? இது எடப்பாடி பழனிச்சாமி நடத்தும் நாடகம். சட்டத்தினை கேலிசெய்து மத யாத்திரைக்கு சிவப்புக் கம்பள விரிப்பு கொடுக்கின்றது இந்த தமிழக அரசு'' என்கின்றனர் ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான போராட்டத்தில் தன்னுயிரை ஈந்த ஈகியரின் குடும்பத்தினரும் வாயில் குண்டடிப்பட்டு இறந்த ஸ்னோலின் அம்மா வனிதாவும், போலீஸாரால் அடித்து மிதித்துக் கொல்லப்பட்ட செல்வசேகரின் அண்ணன் ஜெயசேகரும்.
என்ன பதில் சொல்லப்போகிறது எடப்பாடி அரசு?
-நாகேந்திரன்
படங்கள்: விவேக்