ரசியல் கட்சி ஆரம்பிக்கப்போவதாக ரஜினி அறிவித்து பத்து மாதங்கள் ஆகிவிட்டன. கட்சி ஆரம்பிப்பதற்கு ஆயத்தமாக உறுப்பினர் சேர்க்கை, பூத் கமிட்டி அமைத்தல், இவற்றில் ரஜினி மக்கள் மன்றத்தினர் தீவிரம் காட்ட வேண்டும் என மா.செ.க்களுக்கு அன்புக் கட்டளையிட்டார் ரஜினி. அதை ஏற்று மா.செ.க்களும் களப்பணியில் இறங்கி இரவு-பகல் பாராமல் உழைத்தார்கள்.

rajiniபதினைந்துக்கும் மேற்பட்ட மா.செ.க்கள், ரஜினி விதித்த காலக்கெடுவுக்குள் தங்கள் பணிகளை முடித்தனர். மீதி மாவட்டங்களில் சுணக்கம் ஏற்பட்டபோதுதான், மாவட்ட வாரியாக சீராய்வுக் கூட்டத்தை நடத்தும்படி டாக்டர் இளவரசன், ரிடையர்டு ஐ.பி.எஸ். அதிகாரி ராஜசேகர், தூத்துக்குடி மா.செ. ஏ.ஜே.ஸ்டாலின் ஆகியோருக்கு உத்தரவிட்டுவிட்டு, "பேட்ட'’ ஷூட்டிங்கிற்காக உத்தரப்பிரதேசம் சென்றுவிட்டார் ரஜினி.

சில மாதங்களாகவே வரிசையாக பல மா.செ.க்களை தடாலடியாக நீக்கியது ரஜினி மக்கள் மன்றத் தலைமை. உ.பி.யில் "பேட்ட'’ஷூட்டிங்கில் ரஜினி இருந்தபோதும் சில மா.செ.க்கள் நீக்கப்பட்டனர். "தலைவர் தமிழ்நாடு திரும்பிய பிறகு நம்மையெல்லாம் கூப்பிட்டுப் பேசுவார், நல்ல சேதி சொல்வார்' என காத்திருந்தனர் நீக்கப்பட்டவர்கள்.

அக்டோபர் 20-ஆம் தேதி சென்னை திரும்பிய ரஜினி, ""கட்சி ஆரம்பிப்பதற்கான 90% வேலைகள் முடிந்துவிட்டன. ஆனால் டிச. 12-ஆம் தேதி எனது பிறந்தநாளில் கட்சிப் பெயரை அறிவிக்கும் திட்டம் எதுவுமில்லை''’எனச் சொல்லி ரசிகர்களுக்கு லேசாக ஜெர்க் கொடுத்தார். 21-ஆம் தேதி முழுக்க தனது பேரன் வேத் கிருஷ்ணா(இளைய மகள் சௌந்தர்யாவின் மகன்) வுடன் தனது போயஸ்கார்டன் வீட்டிலிருந்து, மூத்த மகள் ஐஸ்வர்யாவின் வீட்டுக்கு ஆட்டோவில் ஜாலியாக சென்றார். அன்று முழுவதும் பேரன்களுடன் பொழுதைக் கழித்தார்.

Advertisment

22-ஆம் தேதி தலைமை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். ரஜினி ஆலோசனை நடத்தும் தகவல், அனைத்து மா.செ.க்களுக்கும் தெரிந்ததும், "தலைவர் நல்ல முடிவை அறிவிப்பார்' என்ற நம்பிக்கையில் இருந்தனர். 23-ஆம் தேதி ரஜினி ரிலீஸ் பண்ணிய அறிக்கையோ ரசிகர்களுக்கு ஷாக் ட்ரீட்மெண்ட்டாக இருந்தது.

""நமது மக்கள் மன்றத்தில் எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்துமே என் பார்வைக்கு கொண்டு வரப்பட்டு, என் ஒப்புதலுடன்தான் அறிவிக்கப்படுகின்றன.’தன் குடும்பத்தை பராமரிக்காமல் மன்றப் பணிகளுக்காக யாரும் வரவேண்டாம். மன்றத்திற்காக செலவு செய்ய வேண்டும் என யாரையும் நான் சொன்னது கிடையாது. நான் மன்றத்தினருக்கு கொடுத்திருக்கும் வேலை, பணம் செலவு செய்து முடிக்கவேண்டிய வேலையும் கிடையாது. பணம் செலவழித்தேன் என்று யாராவது சொன்னால் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

rajini30, 40 வருடங்கள் ரசிகர் மன்றத்தில் இருந்தது மட்டுமே மக்கள் மன்றத்தில் பதவி பெறுவதற்கோ, அரசியலில் ஈடுபடுவதற்கோ முழுத்தகுதி ஆகிவிட முடியாது. அதுதான் தகுதி என நினைத்தால் அவரது புத்தி பேதலித்துள்ளது என்றுதான் அர்த்தம்'' என்ற ரஜினியின் அறிக்கை அரசியல் எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்குப் பேரிடியானது.

Advertisment

ரஜினியின் இந்த அதிர்ச்சி அறிக்கை வெளியான சில நிமிடங்களிலேயே பதினைந்துக்கும் மேற்பட்ட மா.செ.க்கள் நம்மைத் தொடர்புகொண்டனர்.

""புத்தி பேதலிச்சிருச்சுன்னு எங்களையெல்லாம் சொல்லியிருக்கிறாரு தலைவர். உண்மைதான்; புத்தி பேதலிச்சதால 40 வருஷமா இவர் பின்னால் நின்றோம். அவரின் ஒவ்வொரு படமும் ரிலீசாகும்போதும் எங்க கைக்காசைப் போட்டுத்தான் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம், ரசிகர் மன்ற ஸ்பெஷல் ஷோவையெல்லாம் நடத்தினோம். எங்க குடும்பத்தை நடுத்தெருவுல விட்டுட்டு வந்து யாரும் பதவி கேட்கல.

"மன்றத்துக்காக செலவு பண்ணுனேன்னு சொன்னா நான் நம்பமாட்டேன்'னு தலைவர் சொல்றாரே. செலவு இல்லாம பூத் கமிட்டி அமைக்க முடியுமா? சீராய்வுக் கூட்டத்துக்காக ஏழெட்டு தடவை சென்னைக்கு நிர்வாகிகளுடன் வந்து போனோமே, செலவழிக்காம இதெல்லாம் முடியுமா? பொதுமக்களுக்கு பொறுப்பு கொடுக்கணும்னு சொல்றாரு. அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், சவுதியில இருக்குறவர்களுக்கு இங்கே மன்றத்தில் பொறுப்பு கொடுத்தார்களே, அந்த மாதிரி ஆட்கள்தான் பொதுமக்களா?

புதுக்கோட்டை மா.செ.வும் இல்லாம, மாவட்டப் பொறுப்பாளரும் இல்லாம சீராய்வுக் கூட்டம் நடத்துனதெல்லாம் தலைவருக்குத் தெரியுமா? இதைவிட பெரிய கூத்து கடலூர் மாவட்டத்துல நாலு ஒன்றியங்கள், ஒரு நகரப் பொறுப்புக்கு ஆட்கள் தேவைன்னு போன மாசம் பேப்பர்களில் விளம்பரம் கொடுத்த கொடுமையாவது தலைவருக்குத் தெரியுமான்னு எங்களுக்குத் தெரியல. அவரோட நம்பிக்கை வட்டாரம், "கார்ப்பரேட் அரசியல்' நடத்த நினைக்கின்றன. கார்ப்பரேட் கம்பெனியில் எங்களை மாதிரி கைநாட்டுகளுக்கு என்ன வேலை?''’என்றனர்.

இங்கிருப்பவர்களை ஆட்டுவிக்கும் அரசியல் ஆடிட்டர் ஒருவரின் வீட்டிற்கு அடிக்கடி செல்கிறார் ரஜினி. அதேசமயம் தி.மு.க. தலைமையுடன் நெருக்கமாக இருக்கும் சிமெண்ட் அதிபர் மூலம் தி.மு.க.வைச் சேர்ந்த மாஜி மத்திய மந்திரி ஒருவரையும் சந்தித்துள்ளார். கடந்த 24-ஆம் தேதி இரவு டிராவல்ஸ் காரில் பயணம் செய்து, கோட்டூர்புரம் பாலம் அருகே, காரிலேயே அமர்ந்து ரஜினியும் மாஜியும் நீண்ட நேரம் பேசியுள்ளனர்.

"நல்லதே நினைப்போம், நல்லதே பேசுவோம், நல்லதே செய்வோம், நல்லதே நடக்கும்'’ ரஜினி மக்கள் மன்றத்தின் லெட்டர்ஹெட்டில் இருக்கும் இந்த வாசகம்தான் ரசிகர்களுக்கு இன்னும் நம்பிக்கை அளித்து வருகிறது.

-ஈ.பா.பரமேஷ்வரன்