திரைப்பாடல்களாலும் தனிப்பாடல் களாலும் தமிழ்மக்களின் நெஞ்சில் நிறைந்திருக்கிறார் கவியரசு கண்ண தாசன். அவரது நினைவுநாளில் பல்வேறு நிகழ்வுகளை கவிதை அன்பர்கள் நடத்திய நிலையில், கண்ணதாசனின் புதல்வரும் திரையுலகப் பங்கேற்பு கொண்டவருமான கண்மணி சுப்பு, முக்கியமான சில தகவல்களை நம்மிடம் பகிர்ந்தார்.

shankar

*உங்கள் திரையுலகப் பயணம் பற்றி?

நான் நன்றாகப் படித்து முன்னேற வேண்டும் என்று அப்பா ஆசைப்பட்டார். எனக்கு அதில் நாட்ட மில்லாமல் போய்விட்டது. ஒருநாள் அவரிடம், ""உங்களைப் போல் நானும் மரபுக்கவிதை எழுத வேண்டும். யாப்பிலக் கணம் கற்றுக்கொடுங்கள்'' என்றேன். "இந்தப் புத்தகத்தைக் கரைத்துக் குடி... அதுவே உனக்கு மரபுக் கவிதையைச் சொல்லிக் கொடுக்கும்' என்று, கவிஞர் முருகு சுந்தரத்தின் ’"கடைத் திறப்பு'’ நூலைக் கையில் கொடுத்தார். அதைப் பலமுறை படித்தபோது எனக்கும் மரபுக் கவிதை பிடிபட்டது. அதிலிருந்துதான் என் திசைகள் திறந்துகொண்டன. பிறகு என் 20 வயதில் அப்பாவிடம் உதவியாளராகச் சேர்ந்துகொண்டேன். அவருடன் பாடல் எழுத என்னையும் அழைத்துச் செல்ல ஆரம்பித்தார். அப்பா டிக்டேட் செய்வார். நான் பாடல்களைப் படியெடுப்பேன். அப்படி அவருடன் சென்று நான் படியெடுத்த முதல் பாட்டு, "கௌரவம்' படத்தில் வரும் ‘"கண்ணா நீயும் நானுமா?'தான். அவர் என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டுதான் அந்த வரியைச் சொன்னார்.

Advertisment

*உங்கள் சகோ தரர்கள் எல்லோரும் தங்கள் பெயரோடு உங்கள் அப்பாவின் பெயரையும் சேர்த்துக் கொண்டிருக்கிறார்களே?’’

நான் அப்பாவிடம் உதவியாளராகச் சேர்வதற்கு முன்பே கண்மணி சுப்பு என்று புனைபெயரை வைத்துக்கொண்டேன். அப்பாவின் பெயரைப் பயன்படுத்தாமல் மேலே வரவேண்டும் என்று நினைத்ததன் விளைவு அது. இதை அப்பா எப்படி அறிந்தார் என்று தெரியவில்லை. அந்த வருட ஆங்கிலப் புத்தாண்டு அன்று, அவரிடம் ஆசிர்வாதம் வாங்கிய நான், ""என்னை வாழ்த்திக் கவிதை எழுதிக் கொடுங்கள்'' என்றேன். உடனே விறுவிறுவென்று ‘"எண்ணிய எண்ணம் ஓங்க/ எழுத்தெலாம் புதுமை தேங்க/ கண்மணி சுப்பு வாழ்க!/காலங்கள் இனிது வெல்க'-ன்னு எழுதிக்கொடுத்தார். இதன் மூலம் அவர் என் புனைபெயரை அவர் அங்கீகரித்துவிட்டார்.

* இன்றைய திரைப்படங்கள் பற்றி?

Advertisment

இன்றைய திரையுலகில் கதைப்பஞ்சம் அதிகம். அதனால் அடுத்தவர் கதைகளைத் திருடிப் படம் எடுக்கும் போக்கும் அதிகமாகி விட்டது. இப்படிப்பட்டவர்கள் என் தந்தையார் கதையையும் விட்டுவைக்கவில்லை.

* எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள்? விளக்கமாகச் சொல்லுங்கள்?

shankar

எங்கள் அப்பா, தான் எடுத்த படங்களில் எல்லாம் மக்களுக்கு எதையாவது போதிக்க வேண்டும் என்று நினைத்தார். சீனப்போர் நடந்ததன் பின்னணியில், அரசியல் களத்தில் அவர் ’ரத்தத்திலகம்’ எடுத்தார். அதேபோல் தமிழ்த் தேசியக்கட்சியைக் கலைத்து விட்டு, சொல்லின் செல்வர் சம்பத்தோடு காமராஜரிடம் அப்பா சேர்ந்த நேரத்தில், காமராஜர் ஒரு மாநாட்டில் ஜனநாயக சோசலிசம் என்ற கருத்தை மையமாக வைத்துப் பேசியதைக் கேட்டு, அதன் அடிப்படையில் ஒரு கதையை அப்பா எழுதினார். பணம் ஓரிடத்தில் தேங்கக்கூடாது. அது இல்லாதோர் பக்கம் போகவேண்டும் என்பதுதான் மையக்கரு. அந்தப் படம்தான் ’"கருப்புப்பணம்'. இந்தக் கதையின் மையக் கருவை அப்படியே திருடி, இயக்குநர் ஷங்கர் "ஜென்டில்மேன்'’ என்ற படத்தை எடுத்து விட்டார். அதேபோல்தான் "எந்திரன்' படத்துக்கான கதையையும் அவர் திருடியிருக்கிறார். அந்த மூலக்கதைக்கும், படத்துக்கும் 16 அம்சங்கள் ஒத்துப்போகிறது என்று நீதிமன்றம் சொன்னதில் இருந்தே, அது அப்பட்டமான கதைத் திருட்டு என்று புரிகிறது.

கதைத் திருட்டு என்பது திரையுல கில் தொடர்கதையாகவே இருந்து வருகிறது. ஒருவரின் படைப்பு என்பது அவரது அறிவுசார் சொத்து. அதைத் திருடுவது என்பது உடமைகளைத் திருடுவதை விடவும் மோசமானது.

* கண்ணதாசன் என்றாலே போதை... மது... என்கிற கருத்தை பலரும் வைக்கிறார்களே?

அவர் பாடல் எழுதும்போதோ, வேறு பணிகளில் ஈடுபடும்போதோ, மதுவைத் தொடமாட்டார். அவருக்கான தனிஅறையில் தனியே அமர்ந்து தன் வாழ்க்கை அனுபவங்கள் பற்றிய சிந்தனையில் லயித்திருப்பார். அவற்றையே மெட்டுக்குள் பாடலாக நிரப்பிக் கொடுப்பார். அவர் தனியாக கம்பீரமாக மது அருந்துவது தவம்போல் இருக்கும். அந்த அனுபவமும் அவர் பாட்டுக்குள் வந்து விழுந்தது.

மண்ணைத் தோண்டித் தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி/

என்னைத் தோண்டி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி’

என்று எழுதினார். அவர் தன்னைத் தோண்டி ஞானம் கண்ட அறைதான் அவர் மது அருந்திய அறை.

* உங்கள் அப்பா மறைந்த சூழல் நினைவில் இருக்கிறதா?

அமெரிக்காவில் அவர் மறைந்த செய்தி, அன்று எங்கள் தலையில் இடிபோல் விழுந்தது. அவரை உயிரற்ற உடலாகப் பார்த்த அந்த நொடியை இப்போதும் மறக்கமுடியாது. முன்பு என் பெயரோடு அப்பா பெயரைச் சேர்த்துக் கொள்ள யோசித்த நான், இப்போது கண்ணதாசனுக்கு மகன் என்ற பெருமிதத்தோடு வாழ்கிறேன்.

-நமது நிருபர்