சேலத்தில் பிரபல கல்லூரியின் முதல்வருக்கு எதிராகக் கிளம்பியுள்ள பாலியல் விவகாரம், உயர்கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
சேலம் கொண்டலாம்பட்டியில் சவுடேஸ்வரி அரசு உதவிபெறும் மகளிர் கல்லூரி இயங்கிவருகிறது. 1000 மாணவிகள் படிக்கின்றனர். இக்கல்லூரியின் முதல்வராக பாலாஜி என்பவர் பணியாற்றிவந்தார்.
இவர், ஆய்வகப் பெண் உதவியாளர், பெண் உதவிப் பேராசிரியர், மாணவிகளுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக திடீரென்று புகார்கள் கிளம்பின. இதையடுத்து கல்லூரி நிர்வாகம் அவரை கடந்த ஜன-23 ஆம் தேதியுடன் கட்டாய மருத்துவ விடுப்பில் செல்ல அனுமதித்தது. பின்னர் பணியிடைநீக்கமும் செய்யப்பட்டார்.
இந்நிலையில், மார்ச் 4-ஆம் தேதி பாலாஜிக்கு எதிராக மாணவிகள், உதவிப் பேராசிரியர்கள், இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் கல்லூரி முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மார்ச் 8-ஆம் தேதி, அகில இந்திய மாதர் சங்கத்தினர் முதல்வர் பாலாஜியை கைதுசெய்யக்கோரி சேலம் கோட்டையில் போராட்டத்தில் குதித்தனர். ஆனால், காவல்துறையோ போராட்டத்திற்கு அனுமதி இல்லை எனக்கூறி அவர்களை கைதுசெய்து குண்டுக்கட்டாகத் தூக்கிச்சென்றது.
சேலத்தில் விசுவரூபம் எடுத்துள்ள இந்த சம்பவம் குறித்து நக்கீரன் கள விசாரணையில் இறங்கியது.
அரசு உதவிபெறும் சவுடேஸ்வரி கல்லூரியானது, கடந்த 2021-ல்தான் மகளிர் கல்லூரியாக மாற்றப்பட் டுள்ளது. அதற்கு முன்பு வரை இருபாலர் கல்லூரியாகச் செயல்பட்டு வந்தது. இந்தக் கல்லூரியில் ஆய்வக உதவி யாளராகப் பணியாற்றிவரும் நந்தினி (பெயர் மாற்றப் பட்டுள்ளது), கல்லூரி முதல்வர் பாலாஜி தன்னிடம் தகாத முறையில் நடந்துகொண்ட தாகவும், ஆட்கள் இல்லாத நேரங்களில் தனது அறைக்கு வரவழைத்து உடல்ரீதியாக பாலியல் சீண்டலில் ஈடு பட்டதாகவும் காவல்துறையில் புகாரளித்துள்ளார்.
இந்தப் புகாரின் பேரில் தான் பாலாஜியை, கல்லூரி நிர்வாகம் வீட்டுக்கு அனுப்பப் பார்த்துள் ளது. இதுதொடர் பாக கல்லூரிக் கல்வி இணை இயக்கு நருக்கும் புகார் சென்றுள்ளது.
இதுமட்டு மின்றி, உதவிப் பேராசிரியர் சந்திரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரும், முதல்வர் பாலாஜியும் விடுமுறை நாட்களிலும் கல்லூரிக்கு வந்து, அடிக்கடி தனி அறையில் நீண்ட நேரமாக இருப்பார்கள் என்றும், எதற்கெடுத்தாலும் அவரை மட்டும் முதல்வர் அறைக்கு வரவழைத்து அரட்டைக் கச்சேரி நடத்துவார் என்றும் கல்லூரி வட்டாரத்தில் கிசுகிசுக்கிறார்கள்.
இதுமட்டுமின்றி, டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதவந்த பெண் தேர்வர் ஒருவரை தகாத இடத்தில் தொட்டுப்பேசியதாகவும் ஒரு புகார் பாலாஜிக்கு எதிராகச் சென்றுள்ளது.
இந்த நிலையில், கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் ராமலட்சுமி, சவுடேஸ்வரி கல்லூரியில் பிப்ரவரி 27-ஆம் தேதி நேரில் விசாரணை நடத்தினார். இதற்கிடையே என்ன நடந்ததோ, முதல்வர் பாலாஜியை மீண்டும் பணியில் சேர அனுமதிக்கும்படி அவரிடமிருந்து ஓர் உத்தரவு வந்தது.
அந்த உத்தரவுடன் பாலாஜி, மார்ச் 4-ஆம் தேதி கல்லூரிக்குச் சென்றபோதுதான் அவரை உள்ளே விடாமல் மாணவிகள், உதவிப் பேராசிரியர்கள், எஸ்.எப்.ஐ. நிர்வாகிகள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
இதுகுறித்து கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் ராமலட்சுமியிடம் கேட்டபோது, "சேலம் சவுடேஸ்வரி கல்லூரி மீது நிர்வாகச் சீர்கேடுகள், பாலாஜி மீது பாலியல் புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்தினேன். பாலாஜியை, பாலியல் புகார் தொடர்பாக போலீசில் புகார் சொல்வோம் என்று மிரட்டி, கல்லூரி நிர்வாகத்தினர் அவரிடமிருந்து கட்டாய ஓய்வில் செல்வதாக கடிதம் எழுதி வாங்கியுள்ளனர்.
தற்போது, பூங்கொடி முதல்வராக நியமிக்கப் பட்டுள்ளார். அவர் பணியில் மிக இளையவர். அவரை முதல்வராக நியமித்ததிலும் முறைகேடு நடந்துள்ளது'' என்றார்.
உதவிப் பேராசிரியர் சந்திராவிடம் மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரை அலுவலக ஊழியர்கள் நான்கு பேர், பாலாஜிக்கு எதிராக வீடியோ கேமரா முன்னிலையில் வாக்குமூலம் வாங்கியுள்ளனர். விசாரணை என்கிற பெயரில், கொச்சையான கேள்விகளைக் கேட்டு சங்கடப்படுத்தியுள்ளனர். இதனால் மனமுடைந்த சந்திரா, கல்லூரித் தாளாளர் குமாரராஜா, ஊழியர்கள் மீது மகளிர் ஆணையம் மற்றும் காவல்துறையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக புகாரளித்துள்ளார்.
இதனால் அதிர்ந்துபோன தாளாளர் குமாரராஜாவும், அவ ருடைய தாயார் கண்ணம்மாளும் உதவிப் பேராசிரியர் சந்திரா விடம் காலில்விழுந்து மன்னிப்புக் கேட்டுக்கொண்டதால் அவர் தனது புகாரை வாபஸ் பெற்றார் என்றும் சொல்கின்றனர்.
இதுதொடர்பாக கல்லூரித் தாளாளர் குமாரராஜாவிடம் கேட்டபோது, "என்னால் தமிழில் சரளமாகப் பேசமுடியாது. நீங்கள் என் உதவியாளர் மோகன்ராஜிடம் பேசிக்கொள்ளுங் கள்'' என்றார்.
இதையடுத்து நாம் சவுடேஸ்வரி கல்லூரி அலுவலக உதவியாளர் மோகன்ராஜிடம் பேசினோம்.
"கடந்த 2014 முதல் பாலாஜிதான் இந்தக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி வந்தார். அவர் மீது பலர் பாலியல் புகாரளித்துள்ளனர். அதனால்தான் அவரைப் பதவியிலிருந்து விலகி விடும்படிச் சொன்னோம். அவரே வி.ஆர்.எஸ். பெற்றுக்கொள்வதாக எழுதிக் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார்.
பிறகு அவரே மீண்டும் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் மூலமாக பணியில் சேரவந்தார். நாங்கள் அதற்குள் பூங்கொடி என்பவரை முதல்வராக நியமித்துவிட்டோம். அவரை மிரட்டிப் பணியவைத்ததாகச் சொல்வதில் எந்த உண்மையும் இல்லை. பாதிக்கப்பட்ட பெண் உதவிப் பேராசிரியரிடம் தாளாளர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கவில்லை. வாய்மொழியாக வருத்தம் தெரிவித்தார். அவ்வளவுதான்,'' என்கிறார் மோகன்ராஜ்.
இதுகுறித்து புகாருக்குள்ளான சவுடேஸ்வரி கல்லூரி முன்னாள் முதல்வர் பாலாஜியிடம் பேசினோம்.
"கல்லூரியில் உள்ள மாணவிகள் விடுதி மற்றும் வகுப்பறைகளை, தனியார் நீட் பயிற்சி மைய நிர்வாகிகள் வாடகைக்குக் கேட்டனர். ஒரு மாணவிக்கு 14,000-ம், வகுப்பறைக்கு 8000-ம் வாடகையாகச் செலுத்திவிடுவதாகச் சொல்லவும், கல்லூரித் தாளாளர் ஒப்புக்கொண்டார். இந்த விடுதி, சமூக நலத்துறையில் பதிவுசெய்யப்படவில்லை.
நாளை ஏதாவது சிக்கல் வந்தால் முதல்வர் என்ற ரீதியில் நான்தான் பொறுப்பேற்க வேண்டியது வரும் எனக்கூறி ஆட்சேபம் தெரிவித்தேன். மேலும், மகளிர் கல்லூரியாக மாற்றப்பட்ட பிறகு ஒரு பெண் முதல்வரை நியமிக்கவும் அவர்கள் முன்பே முடிவெடுத்து விட்டனர். இதையெல்லாம் மனதில் வைத்துதான் என் மீது பொய் புகார்களைக் கூறி வெளியே தள்ள முயற்சித்தனர்.
நான் தந்தையைப்போல பாவிக்கும் முன்னாள் உடற்கல்வி இயக்குநர் ரவி என்பவர் மூலமாக என்னை எமோஷனல் பிளாக்மெயில் செய்து, என்னிடம் கட்டாயப் பணி ஓய்வில் செல்வதாக கடிதம் பெற்றுக்கொண்டனர். ஜன. 12-ஆம் தேதியே என் மீது பாலியல் குற்றச்சாட்டு வந்ததாகச் சொல்வோர், ஏன் அதைப்பற்றி உடனடியாக விசாரிக்கவில்லை?
மகளிர் கல்லூரியாக மாற்றப்பட்டபோது முறையான ஆய்வுகள் நடத்தப்படவில்லை. உதவிபெறும் கல்லூரி நடக்கும் இதே வளாகத்தில் பள்ளி, சுயநிதிக் கல்லூரிகளும் செயல்படுகின்றன. தனித்தனி நுழைவாயில்கள் இல்லை. இதெல்லாமே யு.ஜி.சி. விதிகளுக்குப் புறம்பானது. இதுபோன்ற விதிமீறல்களுக்கு நான் உடன்படாததால் என் மீது பொய்ப் புகாரளிக்கின்றனர். நான் எந்தப் பெண்ணிடமும் ஒருபோதும் தவறான கண் ணோட்டத்தில் நடந்துகொள்ளவில்லை. எனக்கும் இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்'' என்றார் பாலாஜி.
இதுபற்றி, இந்திய மாணவர் சங்க சேலம் மாவட்டத் தலைவர் பவித்திரன் கூறுகையில், "சவுடேஸ்வரி கல்லூரி முதல்வர் மீது பாலியல் புகார் வந்ததையடுத்து, அவரை கைதுசெய்யும்படி போராட்டத்தில் ஈடுபட் டோம். ஆனால், எங்கள் போராட்டத்தை ஒடுக்கும் விதமாக காவல்துறையினர் எங்களை கைது செய்துள்ளனர். இதைக் கண்டித்து சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் மீது புகாரளித்துள்ளோம். முதல்வர் பாலாஜி, கல்லூரிக் கல்வி இயக்குநர், காவல்துறை அதிகாரிகளுக்கு பணம் கொடுத்து சரிக்கட்டிவிட்டதாகத் தெரிகிறது. எனினும், இந்த சம்பவம் குறித்து தனிக்குழு அமைத்து தீவிரமாக விசாரித்து தீர்வு காணவேண்டும்,'' என்றார்.
இது ஒருபுறமிருக்க, முதல்வர் மீது தற்போது 30-க்கும் மேற்பட்ட மாணவிகள் பாலியல் புகார் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து விசாரிக்க விசாகா கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. மார்ச் 20-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி பாலாஜிக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.
பெண்கள் பொதுவெளியில் பெரிய அளவில் வரத்தொடங்கியுள்ள இக்காலத்தில் இதுபோன்ற பா-யல் புகார்களால் அவர்கள் மீண்டும் வீட்டுக்குள்ளேயே முடங்கிவிடும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.