விருதுநகர் மாவட்ட பா.ஜ.க. மகளிரணித் தலைவி காளீஸ்வரி, சிவகாசி ஒன்றியம் - புதுக்கோட்டை ஊராட்சிமன்றத்தின் தலைவரும்கூட. அவருடைய கணவர் கருப்பசாமி பாண்டியனும், மேலும் இரு ஆண்களும், ரத்தினவேல் என்ற இளைஞரின் கைகளைக் கயிற்றாலும், வாயைத் துணியாலும் கட்டி அரை நிர்வாணப்படுத்த, காளீஸ்வரி அழுதபடியே, உருட்டுக் கட்டையால் அந்த நபரை மாறி மாறி அடிக்கிறார். இந்தக் காட்சி வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டு, வைரலாகப் பரவி வருகிறது.
நாம் காளீஸ்வரியைத் தொடர்புகொண்டோம். ""அந்த வீடியோ பத்தி கேட்கிறாங்க...'' என்று, தன் கணவர் கருப்பசாமி பாண்டியனிடம் செல்போனைக் கொடுத்தார். அவர் நம்மிடம் ""ஆமாங்க.. அடிச்சது உண்மைதான். அந்த ரத்தினவேல் எங்க கிளாஸ்மேட். இன்ஜினியர் வேற. இது நடந்து ஒன்றரை வருஷமாச்சு. வாட்ஸ்-ஆப் கால்ல வீட்ல உள்ளவங்ககிட்ட அசிங்கமா பேசினான். சம்பவம் நடந்த லிமிட்டான சென்னை அம்பத்தூர் போலீஸ் ஸ்டேஷன்ல விசாரிச்சாங்க. ஆமா... அடிச்சது உண்மைதான்... கேஸ் போடுங்கன்னு சொன்னேன். நாங்களும் கேஸ் போட்டோம். ஹைகோர்ட் வரைக்கும் போயி கேஸ் முடிஞ்சது. கம்ப்ளைன்ட் கொடுத்தவனே, தப்பை ஒத்துக்கிட்டான். அப்புறம் வாபஸ் வாங்கிட்டு போயிட்டான்'' என்றார்.
""கேஸை போலீஸ் இழுத்தடித்ததாலும், ரத்னவேல் தெனாவெட்டாக அப்படித்தான் பேசுவேன்னு சொன்னதாலும்தான் அடிக்க வேண்டியதாயிடிச்சி'' என்றவர், ""இந்த பழைய வீடியோ இங்கே கிராமத்துல பரவுறதுக்கு காரணம் லோக்கல் ஏடிஎம்கே பாலிடிக்ஸ். உள்ளாட்சி தேர்தல்ல எங்கள எதிர்த்து பிரசிடென்டுக்கு நின்னு தோத்து போயிட்டாங்க. அந்தக் கடுப்பு அவங்களுக்கு இப்பவும் இருக்கு. அந்த குடும்பத்துல நடுவுல உள்ளவன் பேரு சத்தியராஜ். வாட்ஸ்-ஆப் குரூப் வச்சிருக்கான். அரசியல்ல நாங்க வளர்ந்து வர்றது பிடிக்காம பழைய வீடியோவ போட்டு விடறான். அடுத்து, மகளிர் காவல் நிலையம் போகணும். அந்த சத்தியராஜ் மேல கம்ப்ளைன்ட் கொடுக்கணும்'' என்றார்.
சிவகாசி வடக்கு ஒன்றிய அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் சத்தியராஜுவிடம் பேசினோம். ""இங்கே கிராமத்துல தண்ணி பிரச்சனை ரொம்ப இருக்கு. பிரசிடென்டா இருக்கவங்க சரி பண்ணனும்ல. மற்றபடி பொது மக்களுக்கும் ரொம்ப இடைஞ்சல் பண்ணுறாங்க'' என்று ஊர் விவகாரம் குறித்து நழுவிப் பேசினார். கடப்பாரைய முழுங்கிட்டு சுக்கு கசாயம் சாப்பிட்டானாம்...’என்று கிராமங்களில் ஒரு சொல்வழக்கு உண்டு. அதுபோலவே, எத்தனை பழைய விவகாரமாக இருந்தாலும், ‘வில்லங்க வீடியோ’ என்றால், மீண்டும் உயிர்பெற்று விடுகிறது. புதுக்கோட்டை கிராமத்திலும் அதுதான் நடந்திருக்கிறது.
-ராம்கி