கள்ளக்குறிச்சியில் கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு மாணவி கடந்த ஜூலை 11ம் தேதி மர்மமான முறையில் பலியானார். இதையடுத்து நடந்த போராட்டத்தின் உச்சத்தில் கலவரமாக வெடித்து, தனியார் பள்ளிக்கூடம் அடித்து நொறுக்கப்பட்டு, பேருந்து களும், சான்றிதழ்களும் தீவைத்துக் கொளுத்தப் பட்டன. மாணவியின் மர்ம மரணம், பள்ளியில் நடந்த கலவரம் என இரு வழக்குகளும் தீவிர விசாரணையில் இருக்கின்றன. தனியார் பள்ளிகளில் தொடரும் உயிர்ப்பலிகள், பாலியல் குற்றச்சாட்டு கள், வாகன விபத்து உள்ளிட்ட விவகாரங்கள், தனியார் பள்ளிகளின் தரம் கேள்விக்குறியாகி விட்டதா, அவற்றைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தவறிவிட்டதா எனப் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன.
தனியார் பள்ளிகளின் வளர்ச்சி
இந்தியாவிலேயே தமிழ்நாடு கல்வித்துறையில் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. இதற்கு அடிப்படைக் காரணம், அரசு பள்ளிகளில் மதிய உணவு உள்ளிட்ட பல் வேறு சலுகைகளுடன் கூடிய இலவசக் கல்வியும், கிறிஸ்தவ மிஷனரிகளின் தனியார் பள்ளிக் கல்விச் சேவையும் என்றால் மிகையாகாது. மதத்தைப் பரவலாக்கும் முயற்சியின் ஊடாக கிறிஸ்தவப் பள்ளிகள், அரசாங்கமே நுழையாத தமிழகத்தின் குக் கிராமங்களிலும், மலைப்பகுதிகளிலும் அவர்களால் வழங்கப்பட்ட மருத்துவ, கல்விச்சேவை, தனியார் பள்ளிகளின் வரலாற்றில் மைல்கல் போன்றது.
1900-ல் தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 2,000 கிறிஸ்தவக் கல்வி நிலையங்கள் இருந்தன. அவற்றில் 50,000 மாணவர்கள்வரை கல்வி பயின்றனர். பின்னர் இந்த எண்ணிக்கை மேலும் அதிகமானது. கிறிஸ்தவ கான்வென்ட்கள், நம்மிடையே ஆங்கில அறிவை வெகுவாக வளர்த்தன. இன்னொரு பக்கம், சுதந்திர இந்தியாவில் தமிழக அரசு, இலவசக் கல்வியை தமிழகமெங்கும் வழங்குவதற்காக எண்ணற்ற கல்விக்கூடங்களைத் தொடங்கியது. அடித்தட்டு மக்களை எப்பாடுபட்டாவது கல்விக்கூடத்துக்கு வரவழைப்பதற்காக மதிய உணவுத்திட்டம் கொண்டு வரப்பட்டது. பின்னர் அது சத்துணவாக மாறி, இன்னும் பல்வேறு இலவசச் சலுகைகள் வழங்கப்பட்டு, தற்போது காலை உணவும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதன்மூலம் ஏழை எளியோருக்கு அரசு பள்ளிகள், கல்வி கற்பதற்கான நல்வாய்ப் பாக அமைந்துள்ளன. அருகாமையில் அரசுப் பள்ளிகள் இல்லாததாலும், கூடுதல் பாடங்களைக் கற்றுக் கொள்ள விரும்புபவர்களும் தனியார் பள்ளிகளில் கட்டணத்தோடு கற்கத் தொடங்கினார்கள். அதேபோல், தமிழகத்திலுள்ள ஜாதி அமைப்புகளும் தங்கள் சமூகத்துக்கு கல்வியறிவை மேம்படுத்த கல்வி நிறுவனங்களைத் தொடங்கின.
தனியார் பள்ளிகளின் வியாபார மோகம்
காலப்போக்கில், உலகமயமாக்கலில், கல்வி, மருத்துவம் போன்ற துறைகளும் வியாபாரத்துக்கான ஒன்றாக மாறிய பின்னர், நிறைய தனியார் கல்வி நிறு வனங்கள் வியாபார நோக்கில் பெருகத்தொடங்கின. அரசுப் பள்ளி மாணவர்களைத் தங்களுடைய கல்விக்கூடங் களுக்கு ஈர்ப்பதற்காக, கான்வென்ட்டுகளைப்போல் வித விதமான சீருடைகள், ஷூ, டை போன்ற எக்ஸ்ட்ரா ஃபிட் டிங்குகள் என மாணவர்களின் தோற்றத்தை மாற்றிய தோடு, திட்டமிட்ட கற்பித்தல், மாணவர்கள்மீது தனித்த கவனம், பல்வேறு விளையாட்டுக்கள், கலை நிகழ்ச்சிகள் என விதவிதமான செயல்களில் இறங்கின. இதன்காரண மாக மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் தனியார் பள்ளிகள் மீதான மோகம் அதிகரிக்கத் தொடங்கியது.
ஒரு கட்டத்தில், மாணவர்களின் பெற்றோரின் அதீத ஆர்வமே, தனியார் பள்ளிகளின் வியாபார உத்திகளைப் பெரிதும் வளர்த்தது. அதிக மதிப்பெண்களுக்காக அதிகக் கல்விக்கட்டணம் தரத் தயாராக இருந்தார்கள். விண்ணப்ப பாரத்தை வாங்குவதற்காக இரவிலிருந்தே க்யூவில் நின்றார்கள். பள்ளிக் கட்டணம் போல, கட்டிட நிதி என்று டொனேஷன் பெற்றாலும் கொடுக்கத் தயாராக பெற்றோர் இருந்தார்கள். இதையெல்லாம் சாதகமாக்கி, நிறைய கல்வித்தந்தைகளும், கல்வி வள்ளல்களும் உருவாகி, தனியார் பள்ளிக்கூடங்களை வளமான தொழிலாக உருமாற்றினார்கள். தனியார் பள்ளிகளின் வியாபாரப் போட்டிக்கு கல்வி அதிகாரிகளும் மறைமுக ஆதரவைத் தெரிவித்தார்கள். அதற்கேற்ப அவர்கள் வசூல் வேட்டையில் இறங்கினார்கள். பள்ளிக்கூட அனுமதி வழங்குவதிலிருந்து ஒவ்வொரு தேவைக்காக அரசை நெருங்கும்போதும் மறைமுக லஞ்சம் வழக்கமானது. இப்படிப் பெறப்படும் லஞ்சமே, கல்விக்கட்டணங்கள் அதிகரிப்பதற்கு அடிப்படைக் காரணமானது.
அதேபோல், பள்ளி மைதானமே இல்லாவிட்டா லும், சரியான கட்டட வசதியில்லாவிட்டா லும் கல்விக்கூட அனுமதியை கல்வி அதிகாரிகள் வழங்கினார்கள். கும்பகோணம் பள்ளித் தீ விபத்து அதற்கு எடுத்துக்காட்டா னது. பள்ளி வாகனங்கள் மோசமாக இருந் தாலும் கண்டும்காணாமலும் இருந்தார்கள். தனியார் பள்ளிகள்மீது புகார்கள் வரும் போதெல்லாம் அதனைப் பற்றி பெரிதுபடுத் தாதபடி பார்த்துக்கொண்டனர். போகப் போக, அரசின் உத்தரவுகள் பலவற்றையும் மதிக்காதபடி பல தனியார் கல்வி நிறுவனங் களின் போக்கு மாறியது. கடந்த கொரோனா முடக்கத்தின்போது, மாணவர்களிடம் கட்ட ணம் வசூலிப்பதில் அரசாங்கம் விதித்த விதிமுறைகளையெல்லாம் பல தனியார் பள்ளிகள் காதில் போட்டுக்கொள்ளவில்லை. பெற்றோரிடம் கறாராகக் கட்டணங்களை வசூலிப்பதாகப் பல புகார்கள் எழுந்தன. அதன்காரணமாக தனியார் பள்ளியிலிருந்து நிறைய மாணவர்கள் அரசுப் பள்ளிகளை நோக்கி வந்தனர். அம்மாணவர்களுக்கு சான்றிதழ்களைத் தராமல் தனியார் பள்ளிகள் அலைக்கழித்தன. இவ்வாறாக, தனியார் பள்ளிகளின் செயல்பாடுகளில், தமிழக பள்ளிக் கல்வித்துறையால் கண்டிக்க இயலாத அளவுக்கு எதேச்சதிகாரப்போக்கு அதிகரித்த சூழலில், மாணவியின் மர்ம மரணம், அனைவர் மத்தியிலும் பீதியைக் கிளப்பியுள்ளது.
மாணவர்களின் நலனைப் பாதுகாக்க, தனியார் பள்ளிகளின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தவும், அரசின் கட்டுப்பாட்டுக் குள்ளும் கண்காணிப்புக்குள்ளும் வைத்திருக் கவும் எத்தகைய நடவடிக்கைகள் தேவை என்று கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபுவிடம் கேட்டபோது, "தனியார் பள்ளி களை ஒழுங்குபடுத்துவதற்கென்று தமிழ் நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டம் இருக்கிறது. கும்பகோணம் பள்ளியில் தீ விபத்தைத் தொடர்ந்து பல்வேறு வகை யான வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு பள்ளிக்கூடத்துக்கு குறைந்தபட்சம் எவ்வளவு இடம் இருக்க வேண்டும், எத்த கைய கட்டுமானங்கள் இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நெறிமுறைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. பள்ளிக்கூடங் களுக்கான அங்கீகாரம் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படுகிறது. சில நேரங்களில் ஆண்டுக்கு ஆண்டுகூட புதுப்பிக்கப்படுகின்றது. ஒவ்வொரு முறை அங்கீகாரத்தைப் புதுப்பிக்கும்போதும் தனியார் பள்ளிகள், கட்டட ஸ்திரத்தன்மைக் கான சான்று பெற்று, கட்டிட உரிமத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலோ, இது தொடர்பான வட்டாட்சியர் அலுவலகத் திலோ பெற வேண்டும். அதேபோல் தீயணைப்புத்துறையின் தடையின்மைச் சான்று, சுகாதாரத்துறை அதிகாரிகளிடமிருந்து சான்றிதழ் போன்றவற்றைப் பெற வேண்டும். இவற்றையெல்லாம் வைத்துதான் மாவட்ட ஆட்சியர் புதுக்கட்டிட உரிமம் தருவார். அந்த உரிமம் வந்தால்தான் பள்ளிக்கான அங்கீகாரம் புதுப்பிக்கப்படும். இதன்படிதான் தனியார் பள்ளிகள் தொடர்ந்து செயல்பட்டுவருகின்றன.
இந்த நடைமுறையில் எத்தகைய விதிமீறல்கள் நடக்கின்றன, எந்தெந்த பள்ளிகள் விதிகளைப் பின்பற்றவில்லை என்பதை ஆண்டுக்கு ஒருமுறையாவது கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்வதன்மூலம்தான் கண்டறிய முடியும். பள்ளி வளாகத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வாரியங்களிடம் அங்கீகாரம் பெற்ற பள்ளிகள் இருக்கின்றதா என்பதைப் பார்க்க வேண்டும். அதாவது, ஒரே நிர்வாகம், ஒரே பள்ளி வளாகத்தினுள் மெட்ரிகுலே ஷன் பள்ளியையும் நடத்துகிறது, சி.பி.எஸ்.சி. பள்ளியை யும் நடத்துகிறது என்றால் அது எப்படி நியாயமாக இருக்க முடியும்? இதையெல்லாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். சி.பி.எஸ்.சி. பள்ளிக்கு மாநில அரசு தடையின் மைச் சான்றிதழைக் கொடுத்த பின்புதான் சி.பி.எஸ்.சி. வாரியம், அதற்கான அங்கீகாரத்தை வழங்கும். அப்படி யானால் தடையின்மைச் சான்றிதழை தமிழக அரசு வழங்குமுன் இதுகுறித்து ஆய்வு செய்ய வேண்டும். பள்ளி யில் விடுதியும் நடத்துகிறார்கள் என்றால், அந்த விடுதி எப்படிச் செயல்படுகிறது, அங்கீகாரம் உள்ளதா என்று பார்க்க வேண்டும். இரு பாலருக்குமான விடுதி என்றால், போதிய இடைவெளிவிட்டுக் கட்டியிருக்கிறார்களா? மாணவர்கள் தவறி விழுந்திடாதபடி பால்கனிப் பகுதி பாதுகாப்பாயிருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும்.
இவற்றையெல்லாம் கடந்து, மாணவர்களுக்கு பாதுகாப்பான கல்விச்சூழல் பள்ளியில் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். மாணவர்களுக்கு மாணவர்களாலேயே துன்புறுத்தல் நேரலாம், அல்லது முன்னாள் மாணவர் களால் துன்புறுத்தல் நேரலாம். மாணவர்களுக்கு ஆசிரியர்களாலோ, நிர்வாகத்தாலோ துன்புறுத்தல் நேரலாம். இதையெல்லாம் கண்டறிய மாணவர்களிடம் நேரடியாகவே பள்ளிக்கல்வி அதிகாரிகள் தன்மையான முறையில் விசாரணை நடத்தி, அப்படியான தவறுகள் இருக்கும்பட்சத்தில் களையலாம். இறுதியாக, இதற்கான நிரந்தரத் தீர்வென்பது, அரசின் பொறுப்பிலும், செல விலும் அரசுப் பள்ளிகளின் மூலமாகக் கல்வி கொடுப்பதே ஆகும்'' என்றார். ஒவ்வொரு விபத்திலிருந்தும், அசம்பா விதத்திலிருந்தும் பாடம் கற்பதே கல்வித்துறையின் வழக்கமாக இருக்கும் சூழலில், இனிவரும் காலங்களில் பள்ளி வளாகத்திலோ, விடுதியிலோ மர்மமான மரணங்கள் நேராதவாறு மாணவர்களைப் பாதுகாப்பதற்கு கல்வி அதிகாரிகள் முனைப்பு காட்ட வேண்டும்.