தி.மு.க. அமைச்சர்களைக் குறிவைத்து மெல்ல மெல்ல நகர்ந்து வந்த அமலாக்கத் துறை, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையை நோக்கி தற்போது பார்வையைத் திருப்பியிருக்கிறது. அவரை கைது செய்வதற்கான ஆதாரங்களை அமலாக்கத் துறையினர் திரட்டிக்கொண்டிருப்பதாக தகவல்கள் கிடைக்கின்றன.
இந்தியாவின் பங்குச் சந்தைகளை முறைமைப்படுத்தும் அமைப்பான செபியின் தலைவர் மாதபி, பிரதமர் மோடியின் நண்பரான தொழிலதிபர் அதானியின் ஷெல் நிறுவனத்தில் பங்குகள் வைத்திருப்பது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தியது அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க்.
இந்த குற்றச்சாட்டுகளை கையிலெடுத்து காங்கிரஸ் உட்பட ஒட்டுமொத்த எதிர்க்கட்சி களும் பா.ஜ.க.வுக்கு எதிராக போர்க்குரல் உயர்த்தின. மோடி அரசுக்கு இது மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து காங்கிரஸ் தலைவர் களின் நடவடிக்கைகளை உற்றுக் கவனித்து வருகிறது அமலாக்கத்துறை.
இந்த நிலையில்தான், சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறையைக் கண்டித்து அத்துறையின் அலுவலகத்துக்கு எதிரே காங்கிரஸாரை திரட்டி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார் செல்வப்பெருந்தகை. அந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், மோடியின் மத்திய பா.ஜ.க. அரசு, அமலாக்கத்துறை, செபி அமைப்பு, அதானி ஆகியோரை எதிர்த்தும் கண்டித்தும் ஆவேசமாக முழக்க மிட்டார்.
செல்வப்பெருந்தகை நடத்திய ஆர்ப்பாட்டத்தினை குறிப்பெடுத்து டெல்லிக்கு அனுப்பி வைத்துள்ளது மத்திய புலானய்வுத்துறை. இதற் கிடையே, தங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய அவரின் குற்றப் பின்னணிகளை விசாரிக்கத் தொடங்கி யிருக்கிறது அமலாக்கத்துறை என்கிறார்கள்.
இதுகுறித்து நாம் விசாரித்த போது, "மோடி, அதானி, அமலாக் கத்துறையினர் ஆகியோருக்கு எதிராக யார் போராடினாலும் அவர்களை கண்காணிக்கிறது அமலாக்கத் துறை. அந்த வகையில், தற்போது அத்துறை யினரின் பார்வை செல்வப்பெருந்தகை மீது விழுந்துள்ளது.
செல்வப்பெருந்தகையின் மீதுள்ள பழைய வழக்குகளை தோண்டித் துருவுகின்றனர். அவர் மீதான ஆடிட்டர் கொலை வழக்கு, கொலை மிரட்டல் வழக்கு, பயங்கர ஆயுதங்களால் தாக்குதல், கலவரம் செய்தல் உள்ளிட்ட பழைய குற்ற வழக்குகள் அனைத்தையும் திரட்டுகின்றனர். அந்த வழக்குகளின் தற்போதைய நிலை குறித்தும் ஆராய்ந்துள்ளனர்.
இது மட்டுமல்ல, லண்டனில் அவர் செய்துள்ள முதலீடுகள், தமிழகத்தில் கட்டுமான நிறுவனங்கள், ஹோட்டல் இண்டஸ்ட்ரீஸ், ஸ்கிராப் பிசினெஸ், பெட்ரோல் பங்குகள் ஆகியவற்றில் அவர் செய்துள்ள முதலீடுகள் என அனைத்து பிசினெஸ் நடவடிக்கைகளையும் அமலாக்கத்துறையினர் எடுத்திருக்கிறார்கள். அவரது பினாமிகள் சிலரையும் கண்கொத்திப் பாம்பாக கண்காணிக்கின்றனர்.
மேற்கண்ட பிசினெஸ் ரீதியிலான தொடர்புகளில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்துள்ளதா என புலனாய்வு செய்து வரு கின்றனர். அதில் பல்வேறு வில்லங்கமான விஷயங்கள் அமலாக்கத்துறைக்கு கிடைத் துள்ளன. அந்த ஆதாரங்களை வைத்து விரைவில் செல்வப் பெருந்தகைக்கு சம்மன் அனுப்பப் படலாம். அதனைத் தொடர்ந்து ஒரு கட்டத்தில் கைது செய்யப்பட்டாலும் ஆச்சரியமில்லை''’ என்று சுட்டிக்காட்டுகிறது அமலாக்கத்துறை வட்டாரம்.
இதற்கிடையே சமீபகாலமாக செல்வப் பெருந்தகையின் நடவடிக்கைகளை தி.மு.க.வும் ரசிக்கவில்லை; காங்கிரஸ் தலைவர்களும் ரசிக்கவில்லை என்கிறார்கள் சத்தியமூர்த்தி பவன் கதர்ச்சட்டையினர்.
அதாவது, ‘’தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்திவருகிறார் செல்வப்பெருந்தகை. அண்மையில் கள்ளக்குறிச்சியில் நடந்த கூட்டத்திற்காக சென்ற செல்வப்பெருந்தகையை மன்னர்போல, குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் ஏற்றி, அவருக்கு ராஜகுடை வைத்து பேரணியாக அழைத்துச் சென்றனர் காங்கிரசார்.
இதனைக்கண்டு காங்கிரஸ் தலைவர்கள், மாநில நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர். காமராஜர் ஆட்சியை அமைப்போம் எனச் சொல்லிவரும் செல்வப்பெருந்தகை, எளிமையாக இருக்கப் பழகாமல் இப்படி ஆடம்பரமாக, மன்னர் போல பேரணி நடத்தி உலா வருவது முகம் சுளிக்க வைக்கிறது. இந்த மன்னர் உலா வரும் பேரணி போல மற்ற மாவட்டங்களிலும் நடத்தச் சொல்லி மாவட்ட காங்கிரஸ்காரர்களை வற்புறுத்துகிறார். இதெல்லாம் கட்சியின் வளர்ச்சிக்கு நல்லதல்ல. இதுதான் காங்கிரஸ் தலைவர்களை அதிர்ச்சி யடைய வைத்திருக்கிறது.
செல்வப்பெருந்தகையின் அந்த மன்னர் உலா பேரணியை மாவட்ட தி.மு.க.வினர் கட்சியின் தலைமைக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார்கள். மாநில உளவுத்துறையும் இதனை தலைமைக்கு கொண்டு சென்றுள்ளது. இதனையெல்லாம் தி.மு.க. ரசிக்கவில்லை. இதெல்லாம் எங்கு போய் முடியப் போகிறதோ? என்று ஆவேசப்படுகின்றனர் கதர்ச்சட்டைகள்.
செல்வப்பெருந்தகை மீது அமலாக்கத் துறையினர் நடவடிக்கை எடுக்க ரகசியமாக திட்டமிட்டிருக்கும் நிலையில், தி.மு.க.வும் காங்கிரசும் அவரது நடவடிக்கைகளில் அதிருப்தியடைந்திருப்பது காங்கிரஸ் கட்சியில் அதிர்வுகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.
__________________
நக்கீரன், 2024, ஆகஸ்ட் 28-30 இதழில், "அறநிலையத்துறை இடத்தை ஆக்கிரமித்த பள்ளி! -அரசு நடவடிக்கை எடுக்குமா?' என்று வெளியான கட்டுரையில், அப்பள்ளியின் செயலாளரான சென்னியப்பனுக்கு எந்த பிரச்சனையும் வராதிருப்பதற் காக, தலைமைச் செயலகத்தின் ஏ.பி.ஆர்.ஓ.வாக பணிபுரியும் வசந்த் என்பவர், தனது அதிகாரத்தை பயன்படுத்தி காரியத்தை முடித்துவைப்பார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் தன் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த முகாந்திரமும் இல்லை எனவும், பள்ளி விவகாரத்தில் தன் பதவியை தவறாக பயன்படுத்தவில்லை என்றும் ஏ.பி.ஆர்.ஓ. வசந்த் மறுப்பு தெரிவித்துள்ளார்.
(ஆர்.)