அ.தி.மு.க. மா.செ.வாக உள்ள இரண்டு முன்னாள் அமைச்சர்கள், வரும் சட்டமன்றத் தேர்தலில் இந்தத் தொகுதி யில்தான் நாங்கள் போட்டியிடப் போகிறோம் எனக் களப்பணியில் இறங்கியுள்ளது அ.தி.மு.க. தொண்டர் களிடையே அதிர்ச்சியையும், அதிருப்தியையும் உருவாக்கியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இரண்டு தொகுதிக்கு ஒரு மா.செ. என அ.தி.மு.க.வில் நான்கு மா.செ.க்கள் உள்ளனர். திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர் தொகுதிகளை உள்ளடக்கிய கிழக்கு மாவட்டச்செயலாளராக முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன், கலசப்பாக்கம், செங்கம் (தனி) தொகுதிகளை உள்ளடக்கிய தெற்கு மா.செ.வாக முன்னாள் அமைச்சர் சிட்டிங் எம்.எல்.ஏ. அக்ரி.கிருஷ்ணமூர்த்தி உள்ளனர். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் கீழ்பென்னாத்தூர் தொகுதியை குறிவைத்து ராமச்சந்திரனும், கலசப்பாக்கம் தொகுதியை குறிவைத்து அக்ரி.கிருஷ்ணமூர்த்தியும் களமிறங்கியுள்ளனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய கட்சி நிர்வாகிகள் சிலர், “"கீழ்பென்னாத்தூர் தொகுதியில் வன்னியர்கள் அதிகமென்பதால் அந்த தொகுதியில்தான் போட்டியிடவேண்டும் என முடிவுசெய்து ராமச்சந்திரன் களமிறங்கி யுள்ளார். இதற்காக அவருக்கு விசுவாசமான ந.செ. செல்வம் தலைமையில், வழக்கறிஞர் மணிகண்டன், செந்தில்நாயகம், கவுன்சிலர்கள் சிவில் சீனுவாசன், சரவணன் உட்பட 10 பேர், ஆவூர், வேட்டவலம், கீழ்பென்னாத்தூர் பகுதிகளில் கட்சி முக்கியஸ்தர்கள் என 20 பேரை தேர்வுசெய்துள்ளார். அவர்களோடு தனியார் சர்வே நிறுவனத்தைச் சேர்ந்த ஐவரை களமிறக்குகிறார். கட்சியினர் நான்கு பேருடன் ஒரு சர்வே நபர் என 5 பேர் கொண்ட 4 குழுக் களை ஒவ்வொரு கிராமமாக போகச்சொல்லி யுள்ளார். ஒவ்வொரு ஊராட்சியிலும் உள்ள வாக்காளர்கள் எண்ணிக்கை? அதில் ஒவ்வொரு சாதிக்கும் எவ்வளவு வாக்குகள்? இதில் கட்சி உறுப்பினர்கள் எவ்வளவு பேர்? எனப் பட்டியல் எடுக்கின்றனர். கட்சி கி.செ.க்களுக்கு என்ன தேவை, அவர்களின் குறை என்ன என கேட்கச் சொல்லியுள்ளார். கட்சி நிர்வாகிகளிடம், ‘"நான் கீழ்பென்னாத்தூர் தொகுதியில் நிற்பதாக தலைமையில் பேசி உறுதிவாங்கிவிட்டேன், நீங்கள் கட்சிக்காக வேலைசெய்யுங்கள், வேலை செய்யமாட்டேன் என்றால் ஒதுங்கிக்கொள்ளுங் கள், எனக்கு யாரை எப்படி வேலை வாங்க வேண்டும் எனத் தெரியும்' என நேரடியாக மிரட்டும் தொனியில் நிர்வாகிகள் கூட்டத்தில் கூறினார். தேர்தலில் இந்தத் தொகுதிக்கு கட்சித் தலைமை செலவு செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை. நான் என் சொந்தப்பணம் 30 கோடி ரூபாய் செலவுசெய்யத் தயாராகவுள் ளேன்’ என்கிறார்.
இதேபோல் தெற்கு மா.செ. அக்ரி.கிருஷ்ணமூர்த்தியும் தேர்தல் வேலையைத் தொடங்கியுள்ளார். இப்போது அவர் போளூர் தொகுதி எம்.எல்.ஏ., ஆனால் அந்தத் தொகுதியை கடந்த இரண்டு ஆண்டுகளாக கண்டுகொள்ளவில்லை. கலசப்பாக்கம் தொகுதியில் வலம்வருகிறார். கடந்த தேர்தலில் தனக்கு கலசப்பாக்கம் தொகுதியைக் கிடைக்கவிடாமல் செய்த அந்த தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. பன்னீர்செல்வத்தை எடப்பாடியிடம் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி ஒதுக்கிவிட்டார். சிட்டிங் எம்.எல்.ஏ.வான தி.மு.க. சரவணனை சீண்டிக்கொண்டிருக்கிறார். கலசப்பாக்கம் தொகுதியிலுள்ள தன் கட்சிக்காரர்களுக்கு கான்ட்ராக்ட்களாகத் தருகிறார். சில மாதங்களுக்கு முன்பு சட்டவிரோதச் செயலில் ஈடுபட்ட கடலாடியைச் சேர்ந்த கட்சி இளைஞர்களைக் காப்பாற்ற முயற்சிசெய்தார்.
கிழக்கு மாவட்டத்திலுள்ள தனது ஆதரவு பிரமுகர்களை தெற்கு மாவட்டத்தில் போலியாக முகவரி காட்டி அங்கே பொறுப்பு தந்து கட்சிப் பணி செய்யவைக்கிறார். சிட்டிங் மா.செ.வாக உள்ள இவர்கள் இருவருமே தாங்கள் நிற்கப்போகும் தொகுதியில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். வரும் சட்டமன்றத் தேர்தலில் தாங்கள் வெற்றிபெறவேண்டும் என்பதற்காக இவர்களாகவே ஆளுக்கு ஒரு தொகுதியைத் தேர்வுசெய்து அங்கே தேர்தல் பணியைத் தொடங்கியுள்ளார்கள். இப்படி இருப்பவர்கள் எதற்கு மா.செ. பொறுப்பில் இருக்கவேண்டும்? சுயநலமாக இருந்தால் கட்சி எப்படி வெற்றிபெறும்? ஆட்சியைப் பிடிக்கும்?
திருவண்ணாமலை தொகுதி எம்.எல்.ஏ.வாக தொடர்ந்து மூன்றாவது முறையாக உள்ள அமைச்சர் எ.வ.வேலு, தொகுதியை பலமாக வைத்துள்ளார். இவரை எதிர்த்து ராமச்சந்திரன், அக்ரி.கிருஷ்ண மூர்த்தி போன்றவர்கள் நின்றால் சரியான போட்டியாக இருக்கும். ஆனால் இவர்களோ, நாங்கள் யாரும் நிற்கவில்லை என ஒதுங்குகிறார்கள். திருவண்ணாமலை நகரச்செயலாளர் செல்வத்தை திருவண்ணா மலை வேட்பாளராக்குங்கள் என இ.பி.எஸ்.ஸிடம் ராமச்சந்திரன் கோரிக்கை வைக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த கலியபெருமாளை வேட்பாளராக்குங்கள் என அக்ரி.கிருஷ்ண மூர்த்தி முன்னிறுத்துகிறார். வலிமையான ஒருத்தரை எதிர்த்து வலிமையான ஒருத்தரைத்தானே நிறுத்தவேண்டும்?
அம்மா (ஜெ.) உயிருடன் இருந்த போது, வேலுவை எதிர்த்து 2011-ல் ராமச்சந்திரனையும், 2016-ல் ராஜனையும் களமிறக்கினார். இவர்கள் போட்டியிட்ட போதே கீழ்மட்ட கட்சி நிர்வாகிகள் பலர் வேலுவிடம் சோரம்போய்விட்டார்கள். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் எ.வ. வேலு வெற்றிபெற அக்ரி.கிருஷ்ணமூர்த்தியும் பெரியளவில் உதவிசெய்தார். இப்போது இரு மா.செ.க்களும் வேலுவை வெற்றி பெறவைக்க களமாடுகிறார்கள். இதுகுறித்து தலைமைக்குத் தெரிவித்தும் கண்டுகொள்ள வில்லை. இதை எப்படி ஏற்றுக்கொள்வது? வலிமை இல்லாத தலைமை கண்டுங் காணாமல் இருப்பதற்கு பதில், வேட்பாளரை நிறுத்தாமல்விடலாம் எனக் கொதிக் கிறார்கள் கட்சியினர்.