அ.தி.மு.க. ஆட்சியில் இந்தியா முழுவதும் பிரபலமானவர் தொழிலதிபர் சேகர்ரெட்டி. கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் ரூபாய் நோட்டுகள் செல்லாது என மோடி அரசு அறிவித்து? புதியதாக 2000 ரூபாய் நோட்டை அறிமுகப்படுத்திய வேகத்தில், டிசம்பர் 8-ஆம் தேதி வருமானவரித்துறை, அமலாக்கத்துறை இணைந்து சேகர் ரெட்டி வீட்டில் ரெய்டு நடத்தியது. அப்போது 34 கோடி ரூபாய் புத்தம் புதிய இரண்டாயிரம் ரூபாய் தாள்கள் சிக்கின. ஒத்தை தாளுக்கு லைனில் நின்று மரணித்த நாட்டில் ஒரே நபரிடம் இவ்வளவு புது நோட்டா என இந்தியாவே அதிர்ச்சியானது. அதைவிட அதிர்ச்சி, அந்த வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டது.
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த தொண்டான்துளசி கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் ரெட்டி. இவரது அப்பா ஜெகன்நாதன் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர். 1996க்கு முன்புவரை சில லாரிகளை வைத்துக்கொண்டு, சின்ன காண்ட்ராக்டுகள் எடுத்து செய்துவந்தார். தி.மு.க. ஆட்சியில் மாவட்ட அமைச்சரின் ஆதரவில் பொதுப்பணித்துறையில் காண்ட்ரக்ட்கள் எடுத்தார் சேகர் ரெட்டி. 2001-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த போது, சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் துணையுடன் தொழிலைத் தொடர்ந்தார். அ.தி.மு.க. அமைச்சர்களை சரிக்கட்டிக் கொண்டார். 2006-ல் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தபோதும் சேகர் ரெட்டியின் கொடி பறந்தது- ஒருகட்டத்தில் மாவட்ட அமைச்சருக்கும் சேகர் ரெட்டிக்கும் மோதல் வந்து 2010-ல் அ.தி.மு.க. ஆதரவாளராக மாறினார். 2011-ல் அ.தி.மு.க. ஆட்சி அமைந்த போது, பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த ஓ.பி.எஸ்சுடனான நட்பு பலமாகிறது. உயர்அதிகாரிகள் நட்பும் கிடைக்கிறது. அதில் முக்கியமானவர் தலைமைச் செயலாளராக பின்னர் மாறிய தலைமைச் செயலகத்தில் சி.பி.ஐ. ரெய்டுக்கு ஆளான ராம்மோகன்ராவ். சேகர் ரெட்டியின் மனைவி சித்தூரை சேர்ந்த ஜெயஸ்ரீ. அவரது உறவுகள் மூலமாக ராம்மோகன்ராவ் மனைவி பழக்கமாகிறார். இரு பெண்மணிகளின் நட்பு ரெட்டியையும் ராவ்வையும் நெருக்கமாக்குகிறது. பாலாறு, கரூர் மணல் விற்பனை முழுவதும் சேகர் ரெட்டி வசம் ஒப்படைக்கப்படுகிறது.
ஓ.பி.எஸ்.ஸிடம் வருவாய் கணக்குகளை கச்சிதமாக ஒப்படைத்து நம்பிக்கை பெறுகிறார். சசிகலாவுக்கு நம்பகமான பினாமி தேவைப்பட ஓ.பி.எஸ், ராமமேகன்ராவ் இருவரின் சிபாரிசில் கார்டனுக்குள் நுழைந்தார் சேகர்ரெட்டி. அதன்பின் அவரின் வளர்ச்சி ராக்கெட் வேகத்தைவிட வளர்ந்தது. திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் தமிழகத்தின் சார்பில் உறுப்பினரானதும் டெல்லியில் அவரது அதிகாரம் அதிகரித்தது. 2016-ல் மீண்டும் முதல்வராக ஜெ. வந்தபோது, கார்டனில் இவரின் செல்வாக்கு உயர்கிறது. ஜெ. மறைந்தபோது, மீண்டும் ஓ.பி.எஸ்.சை முதல்வராக்க லாபி செய்தவர்களில் முக்கியமானவர் சேகர் ரெட்டி.
அரசியல் விளையாட்டில் இவரது வீட்டில், நிறுவனத்தில், நண்பர்கள் வீடுகள், நிறுவனங்களில் ரெய்டு நடத்தப்பட்டு கோடிகளில் பணம் கைப்பற்றப்பட்டு சிறை சென்றார். சிறையில் இருந்து வெளியே வந்தபின், தொழிலில் தீவிரமானார்.
வெளியுலகின் வெளிச்சம் படாமல் இருந்தவர் தற்போது தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்ததும், தன் பெயரில் உள்ள ரெட்டியை கட் பண்ணிவிட்டு, வழக்கமான உடைக்கு மாறாக வேறு உடை அணிந்து, தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய் தந்தது தமிழகத்தில் பரபரப்பாகியுள்ளது. எந்தக் கட்சி வந்தாலும் தன் கொடி பறப்பதை உறுதி செய்து கொள்ளும் சேகர் ரெட்டிக்கு தி.மு.க.வில் உள்ள இரண்டு அமைச்சர்களும், வேறு சிலரும் உதவுகிறார்கள் என் பவர்கள், அவரை தள்ளியே வைக்கவேண்டும் என அதிர்ச்சியுடன் எச்சரிக்கிறார்கள் தி.மு.க.வைச் சேர்ந்த காண்ட்ராக்டர்கள்.
இதனிடையே, கொரோனா நிவாரணத் தொகையான 2,000 ரூபாயுடன், ஜூன் 3-ஆம் நாள் 13 மளிகை பொருட்கள் அடங்கிய பை, குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க உத்தரவிடப் பட்டுள்ளது. பொருட்களைப் போட்டுத்தரும் துணிப்பை அச்சிடும் டெண்டர் முழுமையும் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த அதே ஒப்பந்ததாரர்களுக்குத் தரப்பட்டுள்ளது. தி.மு.க. ஒப்பந்தக்காரர்களை உள்ளேயே அனுமதிக்க வில்லை என்ற குமுறுல் கேட்கிறது.
துணி பை அச்சிடும் ஒப்பந்தத்தை உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணியின் வலதுகையாக இருக்கக்கூடிய வேடச்சந்தூர் தி.மு.க. ஒன்றியச் செயலாளர் சாமிநாதன் முழுமையாக கையாண்டிருக்கிறார் என்கிறார்கள். பழைய பர்சண்டேஜ் கணக்கிலேயே பல துறைகளிலும் இது போன்ற காண்ட்ராக்ட்டுகள் விடப்படுவதாக குமுறல் எழுந்துள்ளது.
"கோட்டையில் முதல்வர் மட்டும்தான் மாறி யிருக்கிறார், அதிகாரிகள் முதல் காண்ட்ராக்டர்கள்வரை பெரும்பாலும் அதே அ.தி.மு.க. ஆட்சியின் சாயல்தான்'' என்கிறார்கள் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆளுங்கட்சியாகியிருக்கும் தி.மு.க.வினர்.