திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு தலைவர், உறுப்பினர்கள் பதவி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆந்திர மாநில அரசால் மாற்றி அமைக்கப்படும். இந்த குழுவில் ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் அந்தந்த மாநில அரசுகளின் சிபாரிசின்படி உறுப்பினர்களாக நியமிக்கப்படு வார்கள். இது பல ஆண்டுகளாக கடைப்பிடிக்கப் பட்டுவரும் நடைமுறை. ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் பதவியேற்றதும், திருப்பதி அறங்காவலர் குழு தலைவராக தனது சித்தப்பா சுப்பாரெட்டியை 2019 ஜூன் மாதம் நியமனம் செய்தார். செப்டம்பர் மாதம் எப்போதும் இல்லாத வகையில் 25 பேர் அறங்காவலர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். தலைவருக்கான பதவிக்காலம் 2021 ஜூன் மாதம் முடிந்தாலும், உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிய இன்னும் 3 மாதங்கள் உள்ளன. குழு தலைவர் பதவி ஏற்ற மாதத்தை கணக்கிட்டு இரண்டு ஆண்டுகள் முடிந்ததென ஜூன் 23-ஆம் தேதி அறங்காவலர் குழு கலைக்கப்பட்டது. புதிய அறங்காவலர் குழு உருவாக்கும்வரை, தேவஸ்தான அதிகாரிகள் நிர்வாகம் செய்வார்கள் என அறிவித்துள்ளது ஆந்திர அரசு.
கடந்தமுறை டி.டி.டீ சார்பில் அறங்காவலர் குழுவில் தமிழ்நாட்டின் சார்பில் 4 பேர் உறுப்பினராக சேர்க்கப்பட்டனர். அதில் தமிழ்நாடு அரசு சார்பாக அ.தி.மு.க.வை சேர்ந்த உளுந்தூர் பேட்டை எம்.எல்.ஏ.வாக இருந்த குமரகுரு, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிபாரிசில் கிருஷ்ணமூர்த்தி, தி.மு.க. தலைவராகவும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராகவும் இருந்த மு.க.ஸ்டாலின் சிபாரிசில் டாக்டர் நிச்சித்தா, இந்தியா சிமெண்ட் சீனிவாசன் நியமிக்கப்பட்டனர். சிறப்பு அழைப்பு உறுப்பினராக ஜெகன்மோகன் நேரடி உத்தரவில் தொழிலதிபர் சேகர்ரெட்டி நியமிக்கப்பட்டார். இதில் சி.பி.ஐ. வழக்கு உள்ள சீனிவாசன், ஆந்திர தொழிலதிபர் பார்த்தசாரதி, சேகர்ரெட்டி நியமனம் அப்போது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆந்திர ஆட்சியாளர்களின் நேரடி சிபாரிசு, தமிழ்நாட்டில் அ.தி.மு.க. பெருந்தலைகளின் செல்லப்பிள்ளையாக, துணைமுதல்வர் ஓ.பி.எஸ்சுக்கு வேண்டியவராக சேகர் ரெட்டி வலம் வந்ததால் சர்ச்சை அமுக்கப்பட்டது. அந்த சேகர் ரெட்டியும், சீனிவாசனும் தற்போது பதவி இழந்துள்ளனர்.
இதுபற்றி ஆந்திர அரசியல்வாதி ஒருவரிடம் பேசியபோது, 2019 ஜூன் மாதம் சேர்மன் பதவியை சுப்பா ரெட்டி ஏத்துக்கிட்டார். 2020 மார்ச் மாதம் முதலே கொரோனாவால் கோயில்கள் மூடப்பட்டன. அதன்பின் சில மாதங்கள் கழித்து ஏழுமலையான் கோயில் திறக்கப்பட்டாலும் மாதம் ஒரு முறை நடக்கும் அறங்காவலர் குழு கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் வழியேதான் நடந்தன. கொரோனா காலமாக இருப்பதால் அரசு நினைத்திருந்தால் இன்னும் 6 மாதங்கள் பதவி நீட்டிப்பு வழங்கியிருக்கலாம், அப்படி வழங்கவில்லை. அதற்கு காரணம், சேர்மன் சுப்பாரெட்டி எம்.எல்.சியாகி அமைச்சராகவோ எம்.பியாகவோ ஆகவேண்டுமென விரும்புகிறார். சித்தாப்பாவின் ஆசையை ஜெகன்மோகன் நிறைவேற்ற விரும்புவதால் அறங்காவலர் குழுவுக்கு பதவி நீட்டிப்பு வழங்காமல் உடனடியாக இந்த போர்டு கலைக்கப்பட்டது, பணம் கொழிக்கும், பெரிய மரியாதை தரும் இந்த சேர்மன் பதவியைப் பெற சிலர் முட்டிமோதுகின்றனர்'' என்றார்.
புதியதாக அமைக்கப்படவுள்ள அறங்காவலர் குழு உறுப்பினருக்காக தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா மாநில அரசுகளுக்கு கடிதம் அனுப்பவுள்ளது ஆந்திர அரசு. அந்த அறங்காவலர் குழுவில் தமிழ்நாட்டின் சார்பில் யாரை நியமிக்க முதல்வர் ஸ்டாலின் சிபாரிசு செய்வார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்தமுறை தமிழ்நாடு அரசின் சார்பில் அறங்காவலர் குழுவில் 5 பேர் உறுப்பினர்களாக இருந்தாலும், தமிழ்நாட்டு பக்தர்களுக்காக பேசவில்லை. அடுத்து சர்ச்சைக்குரிய சேகர் ரெட்டி. திருப்பதி தேவஸ்தானம் உறுப்பினர் பதவியை வைத்தும், உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை வைத்து நீதித்துறை, வருமான வரித்துறை, சி.பி.ஐ., பத்திரிகைத் துறையில் தமிழ்நாடு மட்டுமல்ல டெல்லிவரை செல்வாக்கை வளர்த்துக்கொண்டதை தி.மு.க. தலைமை கவனித்தே வந்தது. இப்போது பதவி காலியானதும் மீண்டும் அறங்காவலர் குழுவில் இடம்பிடிக்க முயற்சி செய்கிறார் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். அவர் தமிழ்நாடு முதல்வரை சரிக்கட்ட ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி உதவியை நாடியுள்ளார். தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரும் சேகர் ரெட்டிக்காக தனியாக லாபி செய்கிறார். தமிழக பா.ஜ.க. பிரமுகர்கள் சிலர் துணை ஜனாதிபதி மூலமாக முதல்வரிடம் சிபாரிசு செய்யச் சொல்லி தமிழ்நாடு கோட்டாவில் இடம்பிடிக்க முயல்கிறார்கள். இரண்டு மூத்த அமைச்சர்கள், தங்கள் ஆளை நியமிக்க வேண்டுமென சதுரங்க ஆட்டத்தில் இறங்கியுள்ளார்கள். அதேபோல் சென்னைக்கு அருகில் உள்ள ஒரு எம்.எல்.ஏ, வட மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ. என இருவர் தீவிரமாக காய் நகர்த்துகின்றனர் என்கிறார் கள் விபரம் அறிந்தவர்கள்.