“"சரக்குல கலக்கறதுக்கு தண்ணி வேணும் தா!'ன்னு கதவைத் தட்டிக் கேட்கறாங்க. “"மதியம் 12 மணியிலருந்து இரவு 10 மணி வரைக்கும் இந்த தெருவுல நடக்க முடியல.'”“இந்த தெருவுலயா இருக்கீங்க? அப்படின்னு மாப்பிள்ளை வீட்டுக்கு வந்தவங்க, பொண்ணு தரமாட்டேன்னு சொல்லிட்டாங்க சார்'” என அந்த தெருவிலுள்ள குடியிருப்புவாசிகள் ஒவ்வொருவருக்கும் ஒரு குறை உள்ளது.

ss

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் நகராட்சியின் இந்திரா நகர் இரண்டாவது தெருவிலிருந்துதான் இந்த புலம்பல் குரல்கள் வந்தன. சோளிங்கர் நகர பேருந்து நிலையத்திலிருந்து 100 மீட்டர் தூரத்திலிருந்தது அந்த தெரு. அந்த சாலைக்குள் நுழைய முயன்றபோது, நமது இருசக்கர வாகனத்தால் செல்ல முடியவில்லை. நாம் பலமுறை ஹார்ன் அடித்தபோதும், நம்மை திரும்பி முறைத்துவிட்டு சரக்கில் தண்ணீர் கலந்து தெருவிலேயே உட்கார்ந்து குடித்துக்கொண்டு இருந்தார்கள். சிறிது நேரங்கழித்தே நமக்கு வழிவிட்டனர்.

அந்த சாலையை ஒட்டினாற் போல் ஒரே காம்ப்ளக்ஸில், அடுத்தடுத்து இரண்டு டாஸ் மாக் கடைகள் இருந்தன. இந்த கடைகளை ஒட்டி னாற்போல் இந்திராநகர் இரண்டாவது தெரு இருந்த தால், திறந்த வெளி பாராக அத்தெருவை மாற்றியிருப்பது தெரிந்தது. அத்தெருவில் சுமார் 25 குடும்பங்கள் வசித்து வருகின்றன. "இந்த டாஸ்மாக் கடைக்கு அருகே ஐந்துக்கும் மேற்பட்ட திருமண மண்டபங்கள் உள்ளன. எனவே எப்போதும் மக்கள் நடமாட்டம் இருந்தபடியே இருக்கும். மதியம் 12 மணிக்கு கடை திறந்தது முதல் இரவு 10 மணிக்கு கடை மூடப்பட்டாலும் 11 மணி வரை கூட்டம் குறையாதிருக்கும்'' என்றார்கள்.

Advertisment

அத்தெருவில் வசித்தபடி போட்டோ ஸ்டூடியோவும் வைத் துள்ள சரவணன், "12 மணிக்கு கடை திறந்ததும் எங்க தெரு முனையில் வந்து உட்கார்ந்துடறாங்க. ராத்திரி 11 மணி வரைக்கும் கும்பல் கும்பலா குடிச்சிக்கிட்டே இருக்காங்க. முகூர்த்த நாள்னா ராத்திரி 12 மணி வரைக்கும் தெருவின் பாதி தூரம் வரை ஜேஜேன்னு உட்கார்ந்து குடிக்கறாங்க. அடுத்தவங்க வீட்டு வாசல்ல உட்கார்ந்து குடிக்கறோ மேங்கற குறைந்தபட்ச மன சாட்சியும், நாகரிகமும் இல்லாம நடந்துக்கறாங்க. காலையில எழுந்து வீட்டுக் கதவை திறந்தா, வாசல் முழுக்க பாட்டில்ங்க, டம்பளர்ங்க, கப்புங்களா இருக்கு'' என்றார்.

ss

அதே தெருவை சேர்ந்த ஒரு பெண்மணி, "எங்க தெருவுக்கு இருக்கறது ஒரு பக்க வழி தான். இந்த வழியா தான் போகணும், வரணும். 12 மணிக்கு மேல வீட்டை விட்டு வெளியில போக முடியல. சாயந்திரம் எங்க பொண்ணுங்க ஸ்கூல், காலேஜ் முடிச்சிட்டு வீட்டுக்குள்ள வரமுடியல. குடிச்சிட்டு டிரஸ் அவிழ்ந்து போய் படுத்துக்கிடக்கிறாங்க. அந்த பக்கம் போகவே அசிங்கமா இருக்கு. பகல்ல மதியத்துக்கு மேல குடிகாரங்க கதவைத் தட்டி தண்ணி குடுங்கன்னு அதிகாரமா கேட்கறாங்க. இங்க தெருவுல ஒரு பையனுக்கு பொண்ணு பார்த்து எல்லாம் ஓகேயாச்சி. பொண்ணு வீட்டுக்காரங்க, மாப்பிள்ளை வீட்டை பார்க்க வந்தாங்க. அவுங்க வந்தப்ப தெருவுல குடிச்சிக்கிட்டு இருக்குறதப் பார்த்துட்டு அதிர்ச்சியாகி பொண்ணு தரமாட்டோம்னு சொல்லிட்டு போய்ட்டாங்க. நாங்க இருக்கறது வாடகை வீடா இருந்தால் காலி செய்துட்டு போய்டலாம். சொந்த வீட்டை விட்டு நாங்க எங்க போறது சொல்லுங்க. எந்த வேலையா இருந்தாலும் மதியம் 12 மணிக்குள்ள முடிச்சிக்கிட்டு வீட்டுக்குள்ள வந்து புகுந்துக்க வேண்டியதா இருக்கு'' என்றார் வருத்தத்துடன்.

ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் லஷ்மணன் தலைமையில் மக்கள் ஒன்று சேர்ந்து, டாஸ்மாக் கடையை காலி செய்யச்சொல்லி தொகுதி எம்.எல்.ஏ., கலெக்டர், எஸ்.பி. என இதுவரை பலமுறை மனுக்களை தந்துள்ளனர். அதிகாரிகள் வந்து ஆய்வு செய்வதோடு நின்றுவிடுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இதுவரை ஒரு மனு மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதுபற்றி நகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர் கோபால் நம்மிடம், "ஜமாபந்தியில் இந்த கடையை காலி செய்யச்சொல்லி மனு தந்தேன். அதிகாரிகள் வந்து விசாரித்தபோது பானாவரம் கூட்டு ரோடு அருகே அரசு புறம்போக்கு இடம் உள்ளது. அங்கு கடையை இடமாற்றம் செய்யலாம், யாருக்கும் எந்த தொந்தரவும் இருக்காது எனச் சொல்லியுள்ளேன். வருவாய்த்துறை அதிகாரிகளும், இந்த கடையால் அனைவருக்கும் பெரும் தொந்தரவாக உள்ளது. அதனால் இடமாற்றம் செய்யலாம் எனச்சொல்லி அறிக்கை தந்துள்ளார்கள். ஆனால் டாஸ்மாக் நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் இதில் எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டேன் என்கிறார்கள்'' என்றார்.

மக்களுக்கு தொந்தரவாக வைக்கப்பட்டுள்ள அந்த இரண்டு டாஸ்மாக் கடைகள் வாடகைக்கு இருப்பது, சோளிங்கர் நகராட்சி தலைவர் தமிழ்செல்வியின் கணவரும், தி.மு.க. பிரமுகருமான அசோகனுக்கு சொந்தமான இடத்தில். டாஸ்மாக் நிறுவனம் இந்த கடைகளுக்கு அதிக வாடகை தருகிறது. இதனால் கடைகளை காலி செய்ய விடாமல் அவர் தடுத்து வருகிறார் என்கிறார்கள்.

Advertisment