gr

(21) மதநல்லிணக்கம்-மதச்சார்பின்மை

சில தினங்களுக்கு முன்பு, பல மாநிலங்களில் ராம நவமியை ஒட்டிய ஊர்வலங்களில் சங்பரிவார் அமைப் பினர் சிறுபான்மை மக்களைத் தாக்கினர். மசூதியில் ஆர்.எஸ்.எஸ். கொடியை ஏற்றியிருக்கிறார்கள். பல மாநிலங்களில் நடைபெற்ற இவ் வன்முறைச் சம்பவங்களை பிரதமர் மோடியோ, உள்துறை அமைச்சர் அமித் ஷாவோ கண்டிக்கவில்லை. இந்தப் பின்னணியில்தான் சோனியா காந்தி, சரத் பவார், சீத்தாராம் யெச்சூரி, து.ராஜா, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 13 கட்சித் தலைவர்கள் ஏப்ரல் 16 அன்று, ஒரு கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

அந்த அறிக்கையில் சங்பரிவார அமைப்புகளின் வன்முறையைக் கண்டித்ததோடு, மதநல்லிணக்கத்தை வலியுறுத்தியுள்ளனர். “பல நூற்றாண்டுகளாக இந்தியாவை வரையறுத்து வளப்படுத்திய சமூக நல்லிணக்கத்தின் பிணைப்புகளை, வலுப்படுத்த ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டும்’என நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். ராம நவமிக்கு அடுத்ததாக 17 ஏப்ரல் அன்று ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின்போதும் டில்லியில் வன்முறை நிகழ்ந்துள்ளது. மோடியும், அமித்ஷாவும் கோலோச்சும் தேசத்தின் தலைநகரத்தில்தான், இந்தக் கொடிய காட்சிகள் நிகழ்கின்றன.

Advertisment

இங்குதான் மதநல்லிணக்கம் பற்றி விளக்க வேண்டி யுள்ளது. மதச்சார்பின்மை என்பது அரசும் அரசியல் கட்சி களும் மதத்தில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்பதே. அதே நேரத்தில் பல மதங்களைச் சார்ந்த மக்கள், தாங்கள் நம்பிக்கை வைத்திருக்கும் மதவழிபாட்டு ஊர்வலங்கள், சடங்குகள் நடத்துகிறபோது பிற மதங்களைச் சார்ந்தவர் களோடு முரண்பாடோ, மோதலோ ஏற்படாமல் நல்லிணக் கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். பல காலப் பின்னணியில் ஆரியர்களின் வருகை, பூர்வகுடி மக்களுடன் கலப்பு, பல மதங்கள் இம்மண்ணில் உருவானது. நீண்டகாலமாக பல்வேறு சமூக, கலாச்சார பிணைப்புகளோடு அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் இணக்கமாக வாழ்ந்துவருகிறார்கள். இதைத்தான் 13 கட்சித் தலைவர்களும் வலியுறுத்தினார் கள். இப்போதும் இத்தகைய மதநல்லிணக்கத்திற்கு ஏராளமான உதாரணங்களைச் சுட்டிக்காட்ட முடியும்.

gr

Advertisment

மதுரை சித்திரைத் திருவிழாவில் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வின்போது பல லட்சம் பேர் கூடுகின்றனர். பல இடங்களில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மக்கள் வரவேற்பு கொடுக்கிறார்கள். மோர் பந்தல் அமைத்து பக்தர்களை உபசரிக்கின்றனர். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் துலுக்க நாச்சியார் என்ற பெண் கடவுள் வழிபாடு இன்றைக்கும் நடக்கிறது. நாகை மாவட் டத்திற்குச் செல்பவர்கள் சிக்கல் சிங்கார வேலர் கோவிலுக்கும், வேளாங்கண்ணி தேவாலயத்திற்கும், நாகூர் தர்காவிற்கும் மதவேறுபாடின்றி செல்வது வழக்கமாக உள்ளது. இதைத்தான் மத நல்லிணக்கம் என்கிறோம். மதுரையை ஆண்ட ராணி மங்கம்மாள் பல்வேறு முஸ்லிம், கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களுக்கு உதவி செய்துள்ளார். அதேபோல் மைசூரை ஆண்ட திப்பு சுல்தான் பல்வேறு இந்து கோவில் களுக்கு நிதியுதவி செய்துள்ளார். இத்தகைய மத நல்லிணக்கத்தை பாதுகாப்பதற்கு பல மதங்களை வழிபடக்கூடிய மக்களுக்குப் பொறுப்புள்ளது; இதற்கும் மேலாக, அரசுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் கூடுதல் பொறுப்புள்ளது. மாநிலத்திலும், மத்தியிலும் ஆட்சி அதிகாரத்திலுள்ள ஓர் அரசு, ஒரு மதத்தை ஆதரித்து பிற மதங்களின் மீது வெறுப்பை உமிழ்கிறபோது, மத நல்லிணக்கம் பாதித்து, மத மோதல் உருவாகிறது; இங்குதான் மதச்சார்பின்மை அவசியமாகிறது, முக்கியத்துவம் பெறுகிறது.

மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு உச்சநீதி மன்றத் தீர்ப்பை பயன்படுத்தி அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்டுகிறது. அந்த அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர், உள்துறை அமைச்சர் உள்ளிட்ட அரசுப் பதவியில் இருப்பவர்கள் கலந்து கொண்டார்கள். நேரு பிரதமராக இருந்தபோது குஜராத் மாநிலத்தில் சோமநாதர் கோவில் விழாவில் கலந்துகொள்ள மறுத்துவிட்டார். ஒரு மதச்சார்பற்ற அரசு எந்த ஒரு மதத்தின் வழிபாட் டுத் தலங்களைக் கட்டுவதற்கும் ஆதரவோ, நிதியோ வழங்க முடியாது என்பதுதான் இந்தச் சம்பவம் சொல்லும் செய்தி. ஆனால், மோடி, அமித்ஷா உள்ளிட்ட ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் மதத்தில் இருந்து விலகி நிற்பதற்கு பதிலாக இந்து ராஷ்டிரம் எனும் ஆர்.எஸ்.எஸ் திட்டத்தை செயல்படுத்த பகிரங்கமாகவே அரசு இயந்திரத் தைப் பயன்படுத்துகிறார்கள்.

இந்தியா- பாகிஸ்தான் பிரிவினையின்போது நடைபெற்ற மதக்கலவரங்கள் காந்தியைப் புண்படுத்தின. ”அரசு முற்றிலும் மதச்சார்பற்றதாக இருக்கவேண்டும். சட்டத்தின் பார்வையில் ஒவ் வொருவரும் சமமானவர்களாக இருக்கவேண்டும். ஒவ்வொரு தனிமனிதரும், பொதுச் சட்டத்தை மீறாத வகையில், தனது சொந்த மதத்தை தடையின்றி பின்பற்றும் சுதந்திரத்துடன் இருக்க வேண்டும். ’ஒவ்வொரு தனிநபருக்கும் தனது மதத்தைப் பின்பற்றும் சுதந்திரத்தை இந்தியா உறுதிப்படுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அப்போதுதான் இந்தியா சிறந்து இருக்க முடியும். ஏனென்றால், பண்டைய உலகில் கலாச்சார ஜனநாயகத்தை அங்கீகரித்த ஒரே நாடாக அது இருந்தது. ’கடவுளை அடையும் பாதைகள் பல, ஆனால் இலக்கு ஒன்றே. ஏனென்றால் கடவுள் ஒருவரே’ என்பதை அது அங்கீகரித்தது. உண்மையில், உலகில் தனிநபர்கள் இருப்பதால் பல்வேறு பாதைகள் இருக்கின்றன” என்று ஒரு ஜனநாயகக் குடியரசு நாட்டில் மதம் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து காந்தி குறிப்பிட்டார் (31.8.1947 ஹரிஜன் இதழ்)

அரசு மதத்தில் இருந்து விலகி நிற்கவேண்டும் என்று சொன்ன காந்தி, அரசியல் கட்சிகளும் மதத்தில் இருந்து விலகியே நிற்கவேண்டும் என்றும் சொன்னார். மதம் தனிப்பட்ட விவகாரம், அரசிய லிலும் மதத்தின் தலையீடு இருக்கக்கூடாது என்றார்.

ஒரு கட்டத்தில் மிகவும் நுட்பமாக, “உழைக் கும் வர்க்க மக்களை ஒன்றுபடுத்தும் முக்கிய சாதன மாக உழைப்பு இருக்கிறது. சாதி, மத வேறுபாடு களைத் தகர்க்கும் சாதனமாக இருக்கிறது” என்று குறிப்பிட்டார். மதக்கலவரம் நடந்த நவகாளியில் அமைதியை நிலைநாட்டச் சென்றபோது, அங்கு ஒரு கூட்டத்தில் குழுமியிருந்தவர்களைப் பார்த்து, ”"நீங்கள் எல்லாம் நெசவாளர்களாக, விவசாயி களாக, மீனவர்களாக இருக்க வேண்டும். மதத்தை மறந்துவிட வேண்டும்''’என்று கூறினார். வழிபாட்டைத் தவிர வேறு எதிலும் மதம் வரக் கூடாது என்பதைத் தெளிவுபடுத்தினார் காந்தி.

இந்தியா இந்துக்களுக்கு மட்டும் உரித்தானது அல்ல என்பதை நாம் உணர வேண்டும்; அதே போல், பாகிஸ்தானும் இசுலாமியர்களுக்கு மட்டுமே உரித்தானது அல்ல” என்று சொன்ன அண்ணல், ஒரு நாட்டில் அனைவருமே முழுக்க முழுக்க ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டுமே சார்ந்தவராக இருந்தாலும், அப்போதும் அந்த நாடு மதச்சார் பற்ற நாடாகத்தான் இருக்க வேண்டும் என்கிறார்.

மதச்சார்பின்மையை நிலைநாட்டுவதில் மக்களின் பொறுப்பு குறித்தும் காந்தி விளக்கி யுள்ளார். நேருவைப் போலவே பெரும்பான்மை மதவாதம் தான் மிகவும் ஆபத்தானது என்று சொல்லும் காந்தி, சிறுபான்மையினர் மீதான இணக்கத்தையும், அவர்களுடைய பாதுகாப்பையும் உறுதிசெய்வது இந்துக்களின் கடமை என்கிறார். இந்துக்கள் பெரும்பான்மையினர் என்பதால் அவர்களுக்கு மதச்சார்பின்மையை நிலைநாட்டும் கடமை கூடுதலாக உள்ளது எனக் காந்தி கருதினார்.

தனது தாத்தாவைப் போன்றே காந்தியின் பேரனான கோபால கிருஷ்ண காந்தியும் மதச்சார்பின்மையை உயர்த்திப் பிடிப்பதில் முன்னணியில் இருந்துவருகிறார். அவர் தொடர்ந்து மதச்சார்பின்மை குறித்து கூர்மையாக எழுதியும், பேசியும் வருகிறார்.

"இந்தியாவில் இந்து -முஸ்லிம் பிளவுகள் இதுவரை கண்டிராத கவலைக்கிடமான விகிதத் தில் அதிகரித்து வருகின்றன. நமது நாட்டை சிறுமைப்படுத்தி, அதன் பெருமையைக் குலைக் கின்றது; நமது பாரம்பரியமான பன்மைத்துவ மக்கள் சமூகம் என்பதை தகர்க்கின்றன''’என்கிறார் திரு. கோபால கிருஷ்ண காந்தி.

மதவாதத்தின் கோரப்பிடியில் சிக்கியிருக்கும் குஜராத் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற மதநல்லிணக்கச் சம்பவத்தை கோபால கிருஷ்ண காந்தி சுட்டிக்காட்டுகிறார் (தி இந்து: 15.4.2022)

"இதயம் கல்லாகி வறண்டுபோன பொழுது கருணை மழை என் மீது பொழிந்தது'’என்ற தாகூரின் வார்த்தைகளை மேற்கோள் காட்டி, மிகச்சமீபத்தில் குஜராத்தின் வட்கம் தாலுகாவை சேர்ந்த டல்வானா எனும் கிராமத்தில் நடைபெற்ற ஒரு அற்புதமான நிகழ்வைக் குறிப்பிடுகிறார். அந்த கிராமத்தில் வசிக்கும் 100 முஸ்லிம்களை 1200 ஆண்டு பழமையான வீர் மகாராஜா கோவிலின் நிர்வாகம் அழைத்து தங்கள் கோவிலில் “மக்ரிப்’எனப்படும் மாலை தொழுகையையும் ரமலான் நோன்பு முடிக்கவும் வேண்டியிருக் கிறார்கள் என கோபாலகிருஷ்ண காந்தி கூறுகிறார்.

இந்தியாவின் மதச்சார்பின்மை அடிப்படை களைக் காப்பாற்றினால்தான் நாம் அனைவருமே வாழத் தகுதியான நாடாக இந்தியா இருக்கும். இதில் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த இந்துகளுக்கு உள்ள கூடுதல் கடமையை குஜராத் சம்பவம் மிக ஆழமாக உணர்த்துகிறது. ராமர் கோவில், ராம நவமி, அனுமன் ஜெயந்தி போன்ற திட்டமிட்ட கலவர சம்பவங்கள் ஏன் நடைபெறு கின்றன; இவற்றால் மக்களுக்கு ஒரு ஆதாயமும் இல்லை; இழப்புகள் மட்டுமே என்பதை மக்கள் உணர வேண்டும். அழகர் ஆற்றில் இறங்கும் விழாவில் எந்த கலவரமும் இல்லை. ஏனெனில் அது பக்தி. ஆனால் ராம நவமி, அனுமன் ஜெயந்தி ஊர்வலங்களில் வன்முறை வெடிக்கிறது. ஏனெனில் இது சங்பரிவார்களின் கலவர யுக்தி.

மதத்தின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை எப்படி வகுப்புவாத உணர்வாக மாற்றுகிறார்கள் என்பதை அடுத்த கட்டுரையில் விவாதிப்போம்.

(தொடரும்)