(12)
தஞ்சைத் தரணி என்றாலே நம் நினைவுக்கு வருவது தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்பதுதான். இன்று நேற்று அல்ல, கல்லணை கட்டிய காலம் தொட்டு, ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தி லேயே நெல் விளையும் பூமியாக திகழ்ந்துவருகிறது. கலை, இலக்கியம் படைத்த, இசை வளர்த்த பிரபலங் கள் உருவான பகுதி அது. அதேநேரத்தில், தஞ்சை மண்டல மக்கள் மத்தியில் ஒரு பகுதியினர் கோர வடிவிலான தீண்டாமைக் கொடுமைகளுக்கு ஆளாகி யிருந்தனர் என்பது பலரும் அறியாத வரலாறு.
கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் தஞ்சை மாவட்டத்தில் குறிப்பாக கீழத்தஞ்சையில் (இன்றைய நாகை, திருவாரூர் மாவட்டங்கள்) விவசாய சாகுபடி நிலங்கள் அனைத்தும் விரல்விட்டு எண்ணக்கூடிய பண்ணையார்கள், ரயத்துவாரி பண்ணையார்கள், கோவில் நிர்வாகம், ஜமீன்தார்கள், மடங்கள் வசம் இருந்தன. இவர்களில் பெரும் பகுதியினர் உயர்சாதி மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களை சார்ந்தவர்களாக இருந்தார்கள்.
மறுபுறம், மக்கள் தொகை யில் 30 சதவிகிதமாக இருக்கக்கூடிய பட்டியலினத்தைச் சார்ந்தவர்கள் சொந்த நிலமற்ற பண்ணை அடிமைகளாக உழன்றனர். பெரும்பான்மையான பிற்படுத் தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர் கள் சொந்த நிலமில்லாத நிலையில் பண்ணையார் மற்றும் கோவில் நிலங்களை சாகுபடி செய்யக்கூடிய குத்தகைதாரர்களாக இருந்தனர்.
பண்ணையார் களின் சாதி ஒடுக்குமுறை வடிவங்கள்
பண்ணையாட் களின் குடும்பம் முழுவதும் பண்ணையாருக்காக உழைக்க வேண்டும். ஆண்கள் வயலில் வேலை பார்த்தால், பெண்கள் ஆடுமாடு மேய்ப்பது, நாற்று நடுவது, களை பறிப்பது போன்ற வேலைகளைப் பார்க்க வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு படி நெல் கூலி. பண்ணையாளுக்கு குழந்தை பிறந்தால், கிராம முன்சீப்பிற்கு அதிலும் முக்கியமாக பண்ணையாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். ஆறு வயதான பையன்கள் மாடு மேய்க்க வேண்டும். 10 வயதாகி விட்டால் மாட்டுத் தொழுவத் தில் சாணி அள்ள வேண்டும். 15 வயதில் மாட்டுவண்டி ஓட்டும் வேலை. பதினெட்டு வயதில் அப்பாவைப் போல் கொத் தடிமை ஆகிவிடுவான். பெண் குழந்தைகள் ஆடுமாடுகளுக்கு இலை தழை பிடுங்கப் போக வேண்டும். பண்ணையாட்கள் சூரிய உதயத்திற்கு முன்பு வேலைக்கு சென்று, சூரியன் மறைவிற்கு பிறகே வீடு திரும்ப வேண்டும்.
பண்ணையாளின் மகனுக்கோ, மகளுக்கோ திருமணம் செய்ய வேண்டும் என்றால் பண்ணையாரிடம் அனுமதி வாங்க வேண்டும். திருமணத்தால் வேலைக்கு கூடுதலாக ஒரு ஆள் கிடைக் கும் என்றெல்லாம் கெஞ்சி அனுமதி பெற வேண்டும். கல்யாணத்திற்கு நெல், பணம், தாலி எல்லாவற்றிற்கும் பண் ணையாள், பண்ணையாரை நம்பியிருக்க வேண்டும். புதிதாய்த் திருமணம் ஆனவர்கள் எஜமானரிடம் ஆசி வாங்க வேண்டும்.
குத்தகை சாகுபடியாளர்களின் அவல நிலைமை
குத்தகைதாரர் விளைச்ச லில் நான்கில் மூன்று பங்கிலிருந்து ஐந்தில் நான்கு பங்கு வரை குத்தகையாக வோ, வாரமாகவோ பண் ணையாருக்குத் தர வேண்டி யது இருந்தாலும், அடுத்த ஆண்டு அதே நிலம் அவ ருக்கு சாகுபடிக்கு கிடைப்பது உறுதியில்லை. குத்தகையாக வாங்கியது போக, பண்ணை யார்கள் வேறு வகைகளிலும் நிறைய உறிஞ்சினார்கள். சமயங்களில் விளைச்சல் முழுவதையுமே பண்ணையா ருக்கு தர வேண்டியிருக்கும்.
குத்தகை தரமுடியாமல் போனால் பல வடிவங்களில் தண்டனை உண்டு. குத்தகை யைக் குறைவாக கொடுத்தால், பண்ணையார் அதைக் குறித்து வைத்துக்கொள்வார். அடுத்த ஆண்டும் தராவிட் டால், பண்ணையார் குத்தகைதாரரின் கால்நடைக ளைப் பறிமுதல் செய்வார். கால்நடைகள் இல்லை என்றால், கட்டி வைத்து கடுமையாக அடிப் பார்கள். வீட்டில் குடிதண்ணீர் கிணற்றின் விட்டத்தைப் பிடுங்கிக் கொண்டு போய்விடுவார்கள்.
தலித் மக்கள் ஏதாவது கேள்வி கேட்டால், வேலை செய்ய மறுத்தால் மாட்டுச் சாணத்தை கரைத்து மனிதனை குடிக்கச் செய்வதும், சாட்டையால் அடிப்பதுமான கொடிய தண்டனை வழங்கப்பட்டது.
தலித் மக்களையும், குத்தகை விவசாயிகளையும் ஒற்றுமைப்படுத்தி போராடக்கூடிய மகத்தான பணியினை கம்யூனிஸ்ட் இயக்கம் மேற்கொண்டது. .
தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானத்தின் அடிப்படையில் 1943-ஆம் ஆண்டு கீழத்தஞ்சையில் தென்பரை கிராமத்தில் விவசாய சங்க முதல் கிளையை துவக்கி விவசாய சங்கத்தின் செங்கொடியை பி.சீனிவாசராவ் ஏற்றி வைத்தார். அந்த கிராமத்தில் தான் குத்தகை விவசாயிகள் போராட்டம் துவங்கியது. நிலச்சுவான்தார்களின் கொடிய அடக்குமுறையையும் எதிர்த்து நின்று போராட்டம் வெற்றி பெற்றது.
கதிர் அடிக்கும் களத்துமேட்டிலேயே குத்தகை விவசாயிகளுக்கு சேர வேண்டிய குத்தகையை அளந்து கொடுக்க வேண்டுமெனவும், பண்ணையார் தனது பங்கை பெற்றுக் கொண்டதற்காக ரசீது தர வேண்டுமென்றும் ஒப்பந்தமானது.
தென்பரை கிராமத்தில் அடக்குமுறைகளை எதிர்கொண்டு செங்கொடி இயக்கம் (கம்யூனிஸ்ட் கட்சி - விவசாயிகள் சங்கம்) நடத்திய போராட்டத்தின் வெற்றி கீழத்தஞ்சை முழுவதும் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியது. எல்லா கிராமங்களிலும் தலித் மக்கள் தங்கள் பகுதிகளில் செங்கொடியை ஏற்றினார்கள். பண்ணை அடிமைத்தனத்திற்கு எதிராகவும், நிலப்பிரபுத்துவ சுரண்டலுக்கு எதிராகவும் தலித் மக்கள் மத்தியில் எழுச்சி ஏற்பட்டது. மொத்தத்தில் குத்தகை விவசாயிகளான பிற்படுத்தப்பட்ட மக்களும், பண்ணை அடிமை களான தலித் மக்களும் இணைந்து களத்தில் இறங்கி னார்கள். கீழத்தஞ்சை முழுவதும் போராட்டக் களமாக மாறியது. பண்ணையார்களுக்கு ஆதரவாக ஆங்கிலேய அரசு நிர்வாகம் இருந்தது.
பண்ணையார்கள் இந்த எழுச்சியைத் தடுக்க முயன்றாலும், முடியவில்லை.
தஞ்சை மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் 1944-ஆம் ஆண்டு கூட்டிய முத்தரப்புக் கூட்டத்தில், பேச்சுவார்த்தையின்போது முதன்முறையாக பண்ணையார்களுக்கு சமமாக பண்ணையாட்களின் பிரதிநிதிகள் அமர்ந்தார்கள். தலித் பண்ணையாட்களுக்கு இதுவே ஒரு வெற்றி. பண்ணை அடிமையாக இருந்து, விவசாய சங்கத் தலைவராக உயர்ந்த களப்பால் கிராமத்தைச் சார்ந்த குப்புசாமி (களப்பால் குப்பு என அழைக்கப் பட்டவர்) பேச்சுவார்த்தையில் கலந்து கொண் டார். அந்த முத்தரப்பு பேச்சுவார்த் தையில் சவுக்கடி, சாணிப்பால் போன்ற தண்டனைகள் நிறுத்தப்பட வேண்டுமென ஒப்பந்தமானது. 1948-ஆம் ஆண்டு பொய்க் குற்றச் சாட்டுகளின்பேரில் கைது செய்யப் பட்ட களப்பால் குப்புசாமி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவர் விஷம் வைத்து கொல்லப்பட்டார்.
நாடு விடுதலை அடைந்த பிறகு 1952-ஆம் ஆண்டு மாநில அரசு கொண்டுவந்த பண்ணையாள் பாதுகாப்புச் சட்டத் தின் மூலம் பண்ணை அடிமைமுறை ஒழிக்கப்பட் டது. மேலும், குத்தகை விவசாயிகளின் உரிமை பாதுகாக்கப்பட்டது. பண்ணை அடிமைகள் விவ சாயத் தொழிலாளர்களாக மாறினார்கள். கீழத்தஞ்சை முழுவதும் கூலி உயர்வு கேட்டும், நிலப்பிரபுக்களின் நிலங்களில் விவசாயத் தொழிலாளர்கள் குடிசை போட்டு வாழ்ந்து வரும் இடங்களை அவர்களுக்கு பட்டா வழங்கவேண்டுமென்றும் போராட்டம் நடத்தினார்கள். இத்தகைய பின்னணியில்தான் விவசாயத் தொழிலாளர்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்காக நெல் உற்பத்தியாளர் சங்கம் உருவானது. 1968-ஆம் ஆண்டு நெல் உற்பத்தியாளர் சங்கத்தை சார்ந்த நிலச்சுவான்தார்களும், அவர்களுடைய குண்டர்களும் வெண்மணியில் 44 தலித் மக்களை உயிரோடு எரித்துக் கொன்ற கோரமான சம்பவம் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து விவசாயத் தொழிலாளர் களின் கூலி உயர்வு உள்ளிட்ட மற்ற பிரச்சனை களையும் பரிசீலிப்பதற்காக, 1969-ஆம் ஆண்டு அன்றைய மாநில அரசு வருவாய்த் துறை அதிகாரி கணபதியா பிள்ளை தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைத்தது. விவசாயத் தொழிலாளர் களுக்கு குறைந்தபட்ச கூலிச் சட்டம் கொண்டுவர வேண்டுமென்றும், விவசாயத் தொழிலாளர்கள் நிலச்சுவான்தார்களின் நிலங்களில் குடிசை போட்டு தங்கியிருக்கும் அந்த இடங்களுக்கு பட்டா வழங்குவது குறித்தும் அரசு பரிசீலிக்க வேண்டு மென்று விசாரணைக் கமிஷன் பரிந்துரைத்தது.
தொடர்ந்து கம்யூனிஸ்ட் இயக்கம் நடத்திய போராட்டத்தினால் 1,80,000 விவசாயத் தொழி லாளர்களுக்கு வீட்டுமனை பட்டா கிடைத்தது. தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியின்போது நிலச்சீர் திருத்த சட்டத்தில் உச்சவரம்பு 30 ஏக்கர் எனத் தீர்மானித்தது. 1967-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்த போது 30 ஏக்கர் உச்சவரம்பை 15 ஏக்கராக குறைத்தது. இந்த சட்டத் தின் அடிப்படையில் உச்சவரம் பிற்கு அதிகமான நிலங்களை விவசாயத் தொழிலாளர்களுக்கும், சாகுபடி செய்யும் குத்தகை விவசாயிகளுக்கும் விநியோகம் செய்திட வேண்டுமென்று கம்யூ னிஸ்ட் இயக்கம் போராடியதன் அடிப்படையில் அடுத்தடுத்த ஆண்டுகளில் சுமார் 3 லட்சம் ஏக் கர் விநியோகம் செய்யப்பட்டது.
உயிர்த்தியாகம் உள்ளிட்டு, கைது, வழக்கு, சிறை என கம்யூனிஸ்ட்டுகள் எதிர்கொண்ட ஒடுக்கு முறையும், செய்த தியாகமும் ஒரு வீர காவியம். ஒப்பீட்டளவில் கீழத்தஞ்சையில் தீண்டாமைக் கொடுமை ஒழிக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் தலித் மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும் இணைந்து போராடியதுதான். சாதிக் கொடுமை, நிலப்பிரபுத் துவ சுரண்டல் இரண்டையும் ஒருசேர எதிர்த்துப் போராடியதால்தான் வெற்றியை ஈட்ட முடிந்தது.
கொடுமைகளுக்கு ஆளான தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் நிலப்பிரபுக்களையும், அவர்களது அடியாட்களையும், அவர்களுக்கு ஆதரவாக இருந்த அந்நிய ஆங்கிலேய அரசு நிர்வாகத்தையும், அதன் சட்டங்களையும் எதிர்க்க முடியும் என்ற நம்பிக்கையையும், துணிவையும் அந்த மக்களுக்கு ஏற்படுத்தியதுதான் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான பங்களிப்பு ஆகும்.
(தொடரும்)