(19) இந்துத்துவாவும் இந்து மதமும் ஒன்றல்ல…

ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகளும், பா.ஜ.க.வும், அடிக்கடி மேற்கோள் காட்டுவது, சாவர்க்கர் முன்வைத்த இந்துத்துவா என்ற கோட்பாட்டைத்தான். அவருடைய இந்துத்துவா என்ற நூல் 1923-ஆம் ஆண்டு வெளியானது. இந்துத்துவா குறித்து அவர் தொடர்ந்து வியாக்யானம் செய்து வந்துள்ளார்.

""இந்து மதம் (இந்துயிசம்) என்கிற சொல் மேம்போக்காக உணர்த்தும் பொருளும், இந்துத்துவமும் ஒரே மாதிரியானவை அல்ல"" என்கிறார் சாவர்க்கர். அதாவது இந்து மதம் போன்றதல்ல, இந்துத்துவம் என்பது ஒரு அரசியல் திட்டம் ஆகும்.

Advertisment

gr

1937-ஆம் ஆண்டு ஒரு கூட்டத்தில் பேசுகிறபோது -இந்தியாவிற்குள் இரு தேசங்கள் இருப்பதாகவும், ""ஒன்று இந்துக்கள் தேசம்; மற்றொன்று முஸ்லீம்கள் தேசம்'' என்றும் சொன்னார். நாக்பூரில் ஒரு கூட்டத்தில் பேசுகிறபோது, ""இந்துக்களாகிய நாம் இயல்பிலேயே ஒரு தேசம்தான். ஏனெனில், மத, இன, கலாச்சார வரலாற்றுப் பந்தங்கள் நம்மை ஓர் ஒற்றைத் தன்மை கொண்ட தேசமாக இணைக்கின்றன. இதனுடன் சேர்ந்து எல்லைரீதியாகவும், ஒரே தேசமாக இருக்கும்''’என்று கூறினார்.

ஆம், மதத்தை தேசம் என்று திரிக்கிறார் சாவர்க்கர். மதம் என்பது சமூகத்தில் மக்கள் மத்தியில் நிலவும் கடவுள் நம்பிக்கை சார்ந்த விஷயம். ஆனால், தேசம் என்பது குறிப் பிட்ட பூகோளப் பகுதியில் காலங்காலமாக வாழ்ந்து வரும் ஒரு மக்கள் சமூகத்தை குறிக்கும் சொல். மதமும் தேசமும் வெவ்வேறானவை.

br

ஒரு தேசத்தில் பல்வேறு மதங்களைப் பின்பற்றும், ஆனால், ஒரே மொழியைப் பேசும், ஒரே வரலாற்றைக் கொண்ட மக்கள் இருக்கலாம். பல்வேறு மொழிகள் பேசும், பல்வேறு மதங்களைப் பின்பற் றும், ஆனால், ஒரே வரலாற்றைக் கொண்ட மக்களைக் கொண்ட தாகவும் ஒரு நாடு அமையலாம். இந்தியா பல்வேறு மொழிகள் பேசும், பல்வேறு மதங்களைப் பின்பற்றும், பல்வேறு பழக்க வழக்கங்களைப் பின்பற்றும் மக்கள் சமூகங்களைக் கொண்ட ஒரு துணைக்கண்டம். இந்தியா வின் வரலாற்றையே நாம் பல்வேறு காலகட்டங்களாக பகுதி பகுதியாகத்தான் கூற முடியும். இந்திய துணைக் கண்டத்தில் பல்வேறு ஆட்சிப் பிரதேசங்கள் நிலவின. பிரிட்டிஷ் காலனிய ஆதிக்க காலத்தில் கூட, மன்னர் சமஸ்தானத்தின் கீழ் நிறைய பிரதேசங்கள் இருந்தன.

இன்னொருபக்கம், மதத்தை எடுத்துக்கொண்டால், இந்தியாவில் நிலவும் பல்வேறு மத, சமய நம்பிக்கைகளுக்கு ‘இந்து’ என்ற பொதுப்பெயரே பின்னர் வந்த ஒன்றுதான். அது வெளியில் இருந்து சூட்டப்பட்ட ஒன்று. இதை காஞ்சி சங்கராச் சாரியார் சந்திரசேகரேந்திரரே ஒப்புக்கொள்கிறார். இங்குள்ள மக்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து வந்த வர்களாக, பல்வேறு மொழி களைப் பேசுபவர்களாக, பல்வேறு பழக்க வழக்கங்களைக் கொண்டவர்களாக வாழ்கிறார் கள். முக்கியப் பண்டிகைகள் கூட, பகுதிக்குப் பகுதி வேறுபடு கின்றன.

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை என்றால் தெலுங்கு பேசும் பகுதியில் சங்கராந்தி, கேரளாவில் திருஓணம் ஆகியவைகளை குறிப்பிடலாம். இவையெல்லாம் எல்லா மதத் தினரும் கொண்டாடும் பண்டிகை களாகவும், பொதுப்பண்பாட்டு அடையாளங்களாகவும் உள்ளன. ஓணம் பண்டிகையை வடநாட்டில் நாம் காண முடியாது. அதேபோல் வடநாட்டில் கொண்டாடப்படும் கொண்டாடும் ரக்ஷாபந்தன், ஹோலி ஆகிய பண்டிகைகள் தென் இந்தியாவில் பெரும்பாலும் இல்லை. வழிபடும் கடவுளர்கள், கொண்டாடும் பண்டிகை, திணிக்கப்பட்ட சாதி என ஏராளமான மாறுபட்ட பழக்க வழக்கங்கள் கொண்ட திரளைத்தான் ‘"இந்து'’என்ற ஒற்றைச் சொல் அடையாளப்படுத்துகிறது.

ஆனால் மதத்தையே தேசம் என்று புனைந்து, சாவர்க்கர் இந்து தேசம், முஸ்லீம் தேசம் என அறிவியலுக்குப் புறம்பான கருத்தை முன்வைக்கிறார். மேலும் இந்துத்துவா என்பது, கலாச்சார தேசியம் என்றும் சாவர்க்கர் கூறியிருக்கிறார். தமிழகத்தில் நாம் பண்பாடு என்ற சொல்லாடலைப் பயன்படுத்துகிறோம். பண்படுதலிலிருந்து வந்த சொல் இது. பண்பாடு என்பது பரந்த விசாலமான பல பரிமாணங்களை உள்ளடக்கிய ஓர் சொல். உண்ணும் உணவு, உடுத்தும் உடை, பேசும் மொழி, கொண்டாடும் பண்டிகைகள், நம்பிக்கை சார்ந்த அன்றாடப் பழக்க வழக்கங்கள் போன்ற பல பரிமாணங்களைக் கொண்டது. அதில் மதம் ஒரு பரிமாணம் மட்டுமே.

gr

இதிலிருந்து மாறுபட்டு, சாவர்க்கர் முன்வைக்கும் கலாச்சார தேசியம் முற்றிலும் மோசடியான ஒன்று. அறிவியலுக்குப் புறம்பானது. இவரைப் போலவே முகமது அலி ஜின்னாவும், முஸ்லீம் தேசமென்று பேசி இருக்கிறார். இந்தப் போக்கு சுதந்திரப் போராட்டத்துக்கு குந்தகம் ஏற்படுத்துவதாக இருந்தது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்தப் பிளவினை திட்டமிட்டு உண்டாக்கினார்கள். அவர்களுக்கு தேசிய விடுதலைப் போராட்டத்தில் உருவான மதம் கடந்த ஒற்றுமை, அச்சுறுத்தலாக இருந்தது. எனவேதான் அவர்கள் பிளவினை உருவாக்கினார்கள்.

விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற்றாலும் சாவர்க்கர், இந்துத்துவவாதியாக ஆன பிறகுதான், பிரிட்டிஷ் அரசிற்கு மன்னிப்புக் கடிதங்களை அனுப்பத் தொடங்கினார். மன்னிப்பு பெற்ற பின், அவர் ‘விசுவாசமான சேவகனாகவே’தொடர்ந்தார். ஆர்.எஸ்.எஸ். 1925-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து 1947 ஆகஸ்ட் 15 வரையில், அந்நியர் ஆட்சிக்கு எதிராக ஒரு துரும்பைக் கூட அவர்கள் எடுத்துப் போட்டதில்லை. அதுமட்டுமின்றி சுதந்திரப் போராட்டத்திற்கு துரோகமும் செய்தார்கள்.

ரவீந்திரநாத் தாகூரும், ஜவஹர்லால் நேருவும், தேசிய இயக்கத்தின் உள்ளடக்கமாக அரசியல் சுதந்திரம், பொருளாதார சமத்துவம், சமூக நீதி ஆகிய முழக்கங்களை முன்வைத்தனர். கம்யூனிஸ்ட் இயக்கம் அனைத்து விதமான சுரண்டலுக்கும் எதிராகப் போராடியது. இந்த போராட்டங் களின் நீட்சியாகவே மதச்சார்பற்ற நவீன இந்தியா உருவானது. பல்வேறு மொழிகள் பேசும், மதங்களைப் பின்பற்றும் மக்கள் வாழ்கிற, மொழி களுக்கிடையே சமத்துவம் கொண்ட நாடாக இந்தியா இருக்க வேண்டும் என்பதே விடுதலைப் போராட்டத் தின் அடிப்படை. இந்த அடிப்படை கள் நமது அரசியலமைப்புச் சட்ட அடிப்படைகளாகவும் மாறின.

இந்து தேசியம் என்று மதத் தின் பெயரால் இயக்கத்தை நடத்திய ஆர்.எஸ்.எஸ். மனுநீதியே அரசியல் சட்டத்தின் அடிப்படையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.

ஆர்.எஸ்.எஸ்.ஸின் இலக்கான இந்து ராஷ்டிரத்தை நிறைவேற்றத்தான் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என்ற போக்கில் நாட்டை பா.ஜ.க. தலைமையிலான ஒன்றிய அரசு இழுத்துச் செல்கிறது. உள்துறை அமைச்சர் அமித்ஷா வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் இந்தி மொழியை இணைப்பு மொழி என்று சொல்வது இந்தச் சித்தாந்தத்தின் அடிப்படையில்தான். புதிய கல்விக்கொள்கை என்ற பெயரில் கல்வி அமைப்பை அவர்கள் மாற்ற விரும்புவதும் அவர்களது மொத்தத் திட்டத்தின் ஒரு பகுதியே.

ராமநவமி பண்டிகை நாளன்று, அசைவ உணவு உண்பதற்கு எதிராக பல இடங்களில் கல வரங்களை உருவாக்கியது ‘ஒற்றைக் கலாச்சாரத்தின்’ ஆபத்தான வெளிப்பாடுதான். தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில் ராம நவமி பண்டிகை நாளன்று விடுதியில் அசைவ உணவை பரிமாறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பணியாளர்களையும், அசைவ உணவைச் சாப்பிட்ட மாணவர்களையும் பா.ஜ.க. வின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. அமைப் பைச் சேர்ந்த மாணவர்கள் தாக்கி இருக்கிறார்கள். சைவ உணவில் கூட பூண்டு, வெங்காயம் சேர்க்கக்கூடாது என்றெல்லாம் இப்போது வன்முறை யான கட்டுப்பாடுகள் போடப் படுகின்றன. இவையெல்லாம் இந்துத்துவம் என்ற கோட் பாட்டின் அடிப்படையில் இந்துராஷ்டிரத்தைக் கட்டமைக்க ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. மேற்கொள்ளும் பண்பாட்டு வன்முறைகள்.

ஒரே மதம் என்று வலியுறுத்தும் சங் பரிவார அமைப்புகள் ராம நவமி அன்று மத்தியப் பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் போன்ற பல மாநிலங்களில் ராம நவமியின்போது நடைபெற்ற ஊர்வலங்களில் வன்முறை வெறியாட்டங்களை நடத்தி யிருக்கின்றன.

ஆயுதம் தாங்கிய குண்டர்கள் சிறுபான்மையினர் வசிக்கும் பகுதிகள் வழியே ஊர்வலம் செல்லும்போது ஆத்திரமூட்டும் கோஷங்களை எழுப்பியதைத் தொடர்ந்து தகராறு ஏற்பட்டதாகவும், அதன்பிறகு கல்லெறி சம்பவம் நடந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இந்துத்துவா என்ற கருத்தியலின் விளைவு தான் ராமநவமி அன்று சங் பரிவார அமைப்புகள் நிகழ்த்திய வன்முறை.

இந்த சூழலில், இந்து மதம் வேறு, இந்துத்துவம் வேறு என்பதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்வதோடு, நாட்டு மக்களுக்கு எடுத்துரைத்து பிரச்சாரம் செய்ய வேண்டும். பல்வேறு கடவுளர்களை வழிபடும் மரபு இந்தியாவில் உண்டு. இந்த மரபை சாமானிய மக்கள் பின்பற்றுகிறார்கள். ஆனால், இந்துத்துவம் அதற்கு மாறானது. அது மனுநீதியை அடிப்படையாகக் கொண்ட இந்துராஷ்டிரத்தைக் கட்டமைக்கும் ஒரு அரசியல் திட்டம். இந்து மதத்தில் நம்பிக்கை கொண்ட சாமானியர்களுக்கும் எதிரானது மனுநீதி அடிப்படையிலான இந்து ராஷ்டிரம். அது பிளவுவாத மதவெறி அரசியல் செய்யும் தீய சக்திகளின் சதித்திட்டம்.

நாம் இந்துத்துவத்தை எதிர்க்கிறோம் என்றதும் பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்.சும், ’அய்யோ, இந்துக்களுக்கு ஆபத்து!’ என்று கூச்சல் போடுகிறார்கள். அவர்களின் உள்நோக்கத்தை அம்பலப்படுத்த வேண்டும். இந்துத்துவா என்ற ஆர்எஸ்எஸ்-ன் அரசியல் திட்டத்தை எதிர்க்கிறோம். இந்து மதத்தை அல்ல. மதம் குறித்த கண்ணோட்டம் எவ்வாறு அமைய வேண்டுமென அடுத்து விவாதிக்கலாம்.

(தொடரும்...)