நீங்கள் யார் பக்கம்…?
மகாத்மா மண்ணில் மதவெறி கட்டுரைத் தொட ரின் நிறைவுப் பகுதிக்கு வந்திருக்கிறோம். 1925-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, 1948-ல் அண்ணல் காந்திஜி படுகொலை செய்யப்பட்ட தற்குப் பிறகு தடைசெய்யப் பட்டது. அதன் பிறகு அரசியல் தளத்தில் செயல் படுவதற்காக ஜனசங்கம் என்ற அரசியல் கட்சியை ஆர். எஸ்.எஸ். தொடங்கியது. 1977-ம் ஆண்டு ஜனசங்கம், ஜனதா கட்சியின் அங்கமாக மாறியது. பிறகு 1980-ல் அதுவே பாரதிய ஜனதா கட்சியாக உருவெடுத்தது. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, 1999-இல் அதிகாரத்துக்கு வந்து 2004-ஆம் ஆண்டுவரை மத்தியில் ஆட்சியில் இருந்தது. மீண்டும் 2014-ஆம் ஆண்டு மோடி தலைமையில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தது. மீண்டும் 2019-ஆம் ஆண்டு வெற்றிபெற்று மூன்றாவது முறையாக பா.ஜ.க. ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறது. இக்காலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சங்பரிவார அமைப்புகளை ஆர்.எஸ்.எஸ். உருவாக்கியது. பல பெயர்களில் அவதாரமெடுத்த ஆர்.எஸ்.எஸ். பல கோணங்களில் நூறு ஆண்டு காலமாக மத ரீதியில் மக்களை பிளவுபடுத்தும் வேலையைச் செய்துவருகிறது. எல்லா அமைப்புகளின் நோக்கமும், செயல்பாடுகளும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செயல்திட்டமான இந்து ராஷ்டிரத்தைக் கட்டமைப்பதே.
அவர்கள் கீழ்க்காணும் வகையில் செயல்படுகிறார்கள்.
1. இந்துத்துவா என்ற கருத்தியலை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்வது
2. வன்முறை வெறியாட்டங்களை கட்டவிழ்த்துவிடுவது
3. மத்தியிலும், மாநிலங்களிலும் அதிகாரத்துக்கு வருகிறபோதெல்லாம், அரசு நிர்வாக இயந்திரத்தைப் பயன்படுத்தி, தங்களது செயல் திட்டமான இந்து ராஷ்டிரத்தைக் கட்டமைப்பதற்கான அடித்தளத்தை ஏற்படுத்துவதே அவர்களின் செயல்திட்டம்.
கடந்த 8 ஆண்டு காலமாக, அரசு நிர்வாகத்தைப் பயன் படுத்தி -குறிப்பாக மத்திய புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம், நீதித்துறை உள்ளிட்ட அமைப்புகளையும், உள்துறை உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்களையும் பயன்படுத்தி இந்துக்கள் அல்லாதோரை ஒடுக்கி வருகிறது.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து, அந்த மாநிலத்தையே உடைத்து ஒன் றிய அரசின் கட்டுப்பாட்டிற்குள் வரக்கூடிய யூனியன் பிரதேசங்களாக மாற்றியது. மத அடிப் படையில் குடியுரிமை சட்டத்தைத் திருத்தியது. இப்படிச் சட்டங் களையே வளைத்து மதச்சார்பற்ற குடியரசான இந்தியாவை இந்துத்துவா எனும் ஒற்றை மதச்சார்பு கொண்ட நாடாக மாற்றுவதற்கான சதிச் செயல்களை செய்து வருகிறது.
அரசியல், அரசு நிர்வாகம், மதம் ஆகிய மூன்றையும் ஒன்றாகக் கலக்கும் வேலையைச் செய்வதன் வாயிலாக இந்தியாவின் மதச்சார்பற்ற, ஜனநாயக, கூட்டாட்சித் தன்மையை பா.ஜ.க. சீர்குலைத்து வருகிறது. பிரதமர் மோடி, உத்திரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டவர்கள் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவிலை நிர்மாணிப்பதே அரசியல், அரசு நிர்வாகம், மதம் மூன்றையும் ஒன்று கலப்பதற்கான முதன்மையான உதாரண மாகும்.
சிறுபான்மை மக்கள் மீது சங் பரிவார அமைப்புகள் தொடுக்கும் வன்முறைத் தாக்குதலுக்கும் மேலாக, அரசு நிர்வாகத்தைப் பயன்படுத்தி, புல்டோசர்களை வைத்து இசுலாமியர்களின் சொத்துக்கள் இடிக்கப்படும் கொடுமைகள் எல்லாம் இப்போது அரங்கேறத் தொடங்கியுள்ளன. கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி மத்தியப் பிரதேசத்தில் கார்கோன் பகுதியில், ராம நவமி ஊர்வலத்தில் கல்லெறிந்தவர்களின் மீது நடவடிக்கை எடுக்கிறோம் எனச் சொல்லி இசுலாமியர்களின் வீடுகளையும், கடைகளையும் புல்டோசரைக் கொண்டு தரைமட்டமாக்கியது பா.ஜ.க. மாநில அரசு. இவர்களின் சொத்துகள் ஆக்கிரமிப்புகள், ஆதலால் அகற்றினோம் எனப் பா.ஜ.க. பசப்புகிறது. கல்லெறிந்ததாக காவல்துறை வழக்குதொடர்ந்துள்ள வசீம்ஷேக் என்பவர் தரைமட்டமாக்கப்பட்ட அவரது கடையின் முன் நிற்கும் காட்சி காண்பவரை உறைய வைத்துவிடும். 2005-ஆம் ஆண்டில் ஒரு விபத்தில் இரண்டு கைகளையும் இழந்தவர் வசீம். அவரால் எப்படிக் கற்களை வீசியிருக்க முடியும்? ஆனால், பா.ஜ.க.வுக்கு அதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல; கைகள் இல்லாத ஒருவர் கல்லெறிந்தார் என அதன் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை வழக்கு தொடர்வதற்கு அவர் இசுலாமியர் என்ற ஒற்றைக் காரணமே போதும். பா.ஜ.க. செய்த இந்தக் கொடூர சம்பவம் இந்தியக் குடிமைச் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கி, மிகப்பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், அப்படியெல்லாம் நடக்கவில்லை.
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் இசுலாமிய வழிபாட்டுத் தலங்களை குறிவைத்து கூம்பு வடிவ ஒலி பெருக்கிக்கு தடை எனச் சொல்லி பல இடங்களில் அதை அகற்றினார்கள். இசுலாமியர்களின் புனித நாளான ரமலான் அன்றுகூட இராஜஸ்தானில் மிகப்பெரிய கலவரத்தை ஆர்.எஸ்.எஸ். உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.
இசுலாமியர்கள் மீது சங்பரிவாரங் களோ, அல்லது பா.ஜ.க. அரசாங்கமோ தாக்குதல் நடத்தினால், பெரும்பான்மை சமூகம் அதைப் பார்த்து, கவலைப்படாத, கண்டிக்காத, கடந்துபோகும் மனோநிலையை இன்றைக்கு சங்பரிவாரங்கள் செய்துவருகின்றன. 1990-களில் அத்வானி ரத யாத்திரையை தொடங்கியபோது, "எங்கள் நோக்கம் ஆட்சிக்கு வருவது மட்டுமல்ல; இந்திய குடிமைச் சமூகத்தின் தன்மையை மாற்றுவது'’ என்று குறிப் பிட்டிருந்தார். அதைத்தான் பா.ஜ.க. சங்பரிவாரங்கள் இன்றைக்கு சாதித்து வருகின்றன.
இந்தக் கொடூர சம்பவங்களையும், பா.ஜ.க. அரசின் போக்கையும் கண்டித்து, இந்திய அரசின் உயரதிகார மட்டத்தில் பணியாற்றிய 108 அதிகாரிகள் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளார்கள். ”நம் முன்னோர்கள் உருவாக்கித் தந்த அரசியல் அமைப்புச் சட்டத்தின் மாண்புகள் அழிக்கப்பட்டு வரும் வேகத்தின் காரணமாக நாங்கள் தாமாகவே முன்வந்து பேசும், எங்கள் கோபத்தை வெளிப்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பும், தீங்கு செய்யும் மனப்பான்மையும், மாநிலங்களில் உள்ள கட்டமைப்புகள், நிறுவனங்கள், நிர்வாகச் செயல்முறைகளில் ஆழமாகப் பதிந்துள்ளது வருத்தமளிக்கிறது. நம் நாட்டில் வெறுப்பு காரணமாக நிகழும் அழிவை நாம் கண்டுகொண்டு இருக்கிறோம். இங்கு பலி பீடத்தில் இருப்பது முஸ்லிம்களும், சிறுபான்மைச் சமூகங்களும் மட்டுமல்ல; அரசியல் அமைப்புச் சட்டமும்தான்’என முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், முன்னாள் வெளியுறவுத் துறைச் செயலாளர் சுஜாதா சிங், முன்னாள் உள்துறைச் செயலாளர் ஜி.கே.பிள்ளை, டில்லி முன்னாள் துணைநிலை ஆளுனர் நஜீப் ஜங், முன்னாள் பிரமதர் மன்மோகன் சிங்கின் முதன்மைச் செயலர் டி.கே.ஏ. நாயர் உள்ளிட்டோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இவர்கள் யாரும் எந்தவொரு அரசியல் கட்சியையும் சாராதவர்கள் என்பதை நாம் இங்கே கவனிக்க வேண்டும். ’முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பும், தீங்கு செய்யும் மனப்பான்மையும், மாநிலங்களில் உள்ள அதிகாரக் கட்டமைப்புகள், நிறுவனங்கள், நிர்வாகச் செயல்முறைகளில் ஆழமாகப் பதிந்துள்ளது’ என்பதற்கு வசீம் ஷேக் சாட்சியாக இருக்கிறார்.
‘ஒன்றிய அரசின், தாராளவாத நிர்வாக அமைப்புகளை ஏற்றுக்கொண்டு, அவற்றிற்குள் ஊடுருவி, உள்ளிருந்துகொண்டே, அரசு அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் அணுகுமுறையை ஆர்.எஸ்.எஸ். கடைப் பிடிக்கிறது; இந்த நிறுவனங்களைக் கைப்பற்றி அவற்றின் வாயிலாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் ஆட்சிசெய்ய முடியும்; கணிசமான அளவில் அரசு இயந்திரம் உள்ளிருந்தே கைப்பற்றப் பட்டுவிட்டது’ என்று மார்க்சிய அறிஞர் அய்ஜாஸ் அகமது கூறுகிறார்.
ஹார்வர்ட் பல்கலையின் இரு பேராசிரியர்கள், உலக அளவில் தேர்தல் ஜனநாயக முறை மூலமாக ஆட்சி அதி காரத்துக்கு வருபவர்கள் எப்படி சர்வாதி காரிகளாக மாறி ஜனநாயகத்தைக் கொலை செய்கிறார்கள் என்று ஆய்வுகள் மேற்கொண்டு, ஜனநாயகம் எப்படி மரணிக்கிறது என்ற தங்களது நூலில், விரிவாக எழுதி இருக்கிறார்கள். ’ஜனநாயகம் ராணுவத் தளபதிகளால் அல்ல; தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களாலேயே கொலை செய்யப்படு கின்றது; அதாவது, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர்களும், ஜனாதி பதிகளும், தங்களை பதவிக்குக் கொண்டுவந்த ஜனநாயகம் என்ற கருவியைக் கொண்டே, ஜனநாயகத்தைக் கொலை செய்கிறார்கள்’ என்கின்றனர். இதுதான் இன்று இந்தியாவிலும் நடந்துகொண்டு இருக்கிறது.
இந்நிலையை மாற்ற பா.ஜ.க.வை அரசு அதிகாரத்தில் இருந்து அகற்ற இடதுசாரி, ஜனநாயக சக்திகள் கடுமையாகப் போராடவேண்டும்; மக்கள் அமைதியான வாழ்க்கை வாழ மதச்சார்பற்ற தன்மையின் அவசியத்தைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இல்லையேல்
அவர்கள் முதலில் கம்யூனிஸ்டுகளை தேடி வந்தார்கள்
நான் குரல் எதுவும் எழுப்பவில்லை
ஏன் என்றால் நான் ஒன்றும் கம்யூனிஸ்ட் அல்ல.
பின்பு அவர்கள் சோசலிஸ்ட்களை தேடி வந்தார்கள்
அப்போதும் நான் குரல் எதுவும் எழுப்பவில்லை
ஏனென்றால் நான் ஒன்றும் சோசலிஸ்ட் அல்ல.
அதன் பின்னர் அவர்கள் தொழிற் சங்கவாதிகளை தேடி வந்தார்கள்
அப்போதும் நான் குரல் எதுவும் கொடுக்கவில்லை
ஏனென்றால் நான் ஒன்றும் தொழிற் சங்கவாதி அல்ல
பின்பு அவர்கள் யூதர்களை தேடி வந்தார்கள்
அப்போதும் நான் குரல் எதுவும் கொடுக்க வில்லை
ஏனென்றால் நான் ஒன்றும் யூதன் அல்ல
அதன் பின்பு அவர்கள் என்னைத் தேடி வந்தார்கள்
அப்போது எனக் காக குரல் கொடுக்க யாருமே இல்லை”
என்ற மார்ட்டின் நிமோலரின் வார்த்தை கள் மெய்யாகிவிடும்.
இந்நிலையில், வரலாறு நாட்டு மக்கள் முன் ஒரு கேள்வியை எழுப்புகிறது. நீங்கள், மத நல்லிணக்கம், மதச்சார்பின்மை, மதச்சார்பற்ற குடியரசு, கூட்டாட்சி ஆகிய அரசியல் சட்ட விழுமியங் களை பாதுகாப்போர் பக்கமா?
அல்லது
இவைகளையெல்லாம் அழித்து இந்து ராஷ்டிரத்தை அமைக்கத் துடிக்கும் பாசிசத் தன்மை கொண்ட ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவாரங்களின் பக்கமா?.
யார் பக்கம்?
நாளை என்பது கூட காலதாமதமே
இன்றே, இப்போதே களமிறங்குவோம்!
(நிறைவடைந்தது)