""எங்க ஏரியாவில் திடீரென நிறைய போலீசார் சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள். இங்கே இருக்கிற ஒரு விடுதியைக் கடந்த 3 நாட்களாக சல்லடையாகச் சோதனை போட் டுக்கொண்டிருக்கிறார்கள். போலீசார் எப்போதும் பாதுகாப்பில் இருக்கிறார்கள். இது எங்களுக்குப் பதட்டமாகவே இருக்கிறது'' என்று திருச்சி காஜாநகர் பகுதி மக்களிடமிருந்து நமக்கு தொடர்ந்து தகவல் வர, நாம் அந்தப் பகுதியில் விசாரிக்க ஆரம்பித்தோம்.

ஜானகி என்கிற ஜானகிராமன் என்பவர், தான் நடத்தும் பெண்கள் விடுதியில் தங்கியிருந்த ஒரு பெண்ணை ஊரடங்கைப் பயன்படுத்தி தன் வீட்டில் தங்க வைத்து, குளிக்கும்போது வீடியோ எடுத்த விவகாரம் போலீஸ் கமிஷனர் வரை புகார் சென்றதை யடுத்து ஜானகிராமன் தற்போது கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.

vv

ஜானகிராமன் விவகாரம் குறித்து திருச்சி மாநகர போலிஸ் ரகசியம் காத்து வந்த நிலையில், இது குறித்து போலிஸ் அதிகாரியிடம் விசாரித்தபோது, பாதிக்கப்பட்டவர் மைனர் பெண் என்பதால் தகவல் வெளியிடவில்லை என்றனர். காஜாநகர் மக்களிடம் நக்கீரன் கேட்டறிந்தபோதுதான் பல உண்மைகள் வெளிப்பட்டன.

கடந்த 2018ஆம் ஆண்டு திருச்சியைச் சேர்ந்த சஞ்சீவி (45) என்பவர் சென்னை ஆதம் பாக்கத்தில் தில்லை பெண்கள் விடுதி நடத்தியபோது விடுதி அறையில் ரகசிய கேமிரா வைத்து பெண்களைப் படம் பிடித்தது கண்டுபிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு தமிழ்நாடு முழுவதும் பெண்கள் விடுதிகள் நடத்துவதற்கு கடுமையான விதிமுறைகள் விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் தான் ஆச்சாரமாக இருந்து பழக்கப்பட்ட குடும்பம் என்று அடிக்கடி சொல்லிக்கொள்ளும் ஜானகிராமன், காஜா நகரில் நடத்தி வந்த பெண்கள் விடுதிக்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் இந்த விடுதியைக் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக நடத்தி வந்திருக்கிறார். பெண்கள் விடுதிக்கு முறையான அனுமதி இல்லாமல் எந்த போர்டும் வைக்காமல்தான் விடுதி நடத்தி இருக்கிறார்.

அந்தப் பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் உள்ள விடுதிகளுக்கு வாங்கும் கட்டணத்தை விட குறைவான கட்டணத்தை வசூல் செய்வதால், கஷ்டப்படும் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் இயல்பாக இங்கு வந்து சேருகிறார்கள். கல்லூரி விடுதியின் கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டு நீக்கப்பட்ட பெண்கள் இந்த விடுதியில் சேர்ந்திருக்கிறார்கள்.

விடுதி மாணவிகளில் சிலர் இரவு நேரங்களில் விடுதியின் முன்பு ரோட்டில் நின்று கொஞ்சி குலாவி பேசிக்கொண்டு இருப்பதைப் பார்த்த அந்தத் தெரு பொதுமக்கள் சிலர் கோபமாகி ஜானகிராமனை அழைத்து கண்டித்திருக்கிறார்கள். ஜானகிராமனின் தாயார்தான் விடுதியைக் கவனித்து வருகிறார். சமையலுக்கு வயதான ஒருவரை நியமித்து இருக்கிறார்கள். ஜானகிராமன் விடுதியின் முன் அறையில் தங்கி இருக்கிறார். அந்த விடுதியில் அதிகபட்சமாக 60 முதல் 80 பெண்கள் வரை தங்கியிருக்கிறார்கள்.

ஜானகிராமனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து வரை சென்று தற்போது விடுதியில் தங்கியிருந்த ஒரு பெண்ணுடன் இருக்கிறாராம். விடுதி விடுமுறை விட்டால் உடனே விடுதியில் உள்ள பாத்ரூம் லைட்டுகளை மாற்றிக்கொண்டே இருப்பாராம்.

தற்போது ஊரடங்கு அறிவிப்பு வெளியானவுடன் விடுதியில் உள்ள அனைத்து பெண்களை ஊருக்கு அனுப்பி விட, கேரளவில் இருந்து டான்ஸ் சொல்லி கொடுக்க வந்திருந்த ஒரு பெண்ணை, இந்த விடுதியில் தனியே தங்க வேண்டாம் என்று கே.கே. நகரில் உள்ள தன் வீட்டிற்கு அழைத்து சென்றிருக்கிறார்.

தனது வீட்டில் தங்க வைத்த அந்த கேரள பெண்ணிற்குத் தெரியாமல், குளிக்கின்ற போது மாடியில் இருந்து வீடியோ எடுத்திருக்கிறார். இதைக் கண்டுபிடித்த அந்தப் பெண், கேரளாவில் உள்ள தன் பெற்றோருக்குத் தகவல் சொல்லவும் உடனடியாக திருச்சி மாநகர காவல்துறை ஆணையரிடம் அழுது கொண்டே புகார் செய்திருக்கிறார்.

காவல்துறை ஆணையர் நேரடியாக ஜானகிராமன் வீடு, மற்றும் விடுதிகளை ஆய்வு செய்து சீல் வைக்க உத்தரவிட்டார். ஒரு பெரிய போலிஸ் படையே சென்று கடந்த 4 நாட்களாக அந்த விடுதி முழுவதும் ஆய்வு செய்து கடைசியில் ஜானகிராமன் மீது வழக்குப் பதிவுசெய்து சிறையில் அடைத் திருக்கிறார்கள்.

ரகசிய வீடியோ எடுத்த வழக்கில் கைதான ஜானகிராமன் திருச்சியில் உள்ள சில முக்கியமான சங்கங்களில் பொறுப்புகளில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

பெண்கள் விடுதியை உரிய அனுமதியின்றி ஒரு ஆண் நடத்துவதை எப்படி இங்குள்ள அதிகாரிகள் கண்டும் காணாமல் இருந்தனர் எனக் கேள்வி எழுப்புகிறார்கள் மக்கள். திருச்சியில் உள்ள பெரும்பாலான தனியார் பெண்கள் விடுதிகளை ஆண்கள் தான் நடத்துகிறார்கள். இதைச் சரியாகக் கவனிக்க வேண்டிய அரசு அதிகாரிகளைக் கவனித்து விட்டால் அவர்கள் இந்த விடுதிகளைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறார்கள் என்பது தான் கவலைக்குரிய செய்தி.

-ஜெ.டி.ஆர்