குவாரி மோசடிகளை வெளிப்படுத்த சகாயம் ஐ.ஏ.எஸ்., சிலைக் கடத்தலை வெளிக்கொண்டுவர பொன் மாணிக்கவேல் ஐ.பி.எஸ். என சாதாரண மக்கள் நம்பிக்கை வைத்த நிலையில்தான்... அவர் விசாரித்துவந்த வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றி அரசாணை வெளியிட்டுள்ளது எடப்பாடி அரசு. இது வஞ்சம் தீர்க்கும் நடவடிக்கை என்கிறார்கள் காவல்துறையினர்.
நக்கீரனில் அம்பலப்படுத்தப்பட்ட இந்து அறநிலையத்துறை கூடுதல் இயக்குனர் கவிதா, 50 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கியதாக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கோயில்களை காக்கவேண்டிய இந்து அறநிலையத்துறை அதிகாரிகளே ஊழலில் திளைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை "கடவுளை ஏமாற்றும் அறநிலைத்துறை -சர்வம் சண்முகமணி மயம்'’ என்ற தலைப்பில் கடந்த 2017 ஆகஸ்டு 30-ந்தேதி நக்கீரனில் அதிகாரிகளின் பட்டியலோடு அம்பலப்படுத்தினோம். அடுத்த சிலநாட்களிலேயே இந்து அறநிலையத்துறை ஆணையர் சண்முகமோனி ஐ.ஏ.எஸ். பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அப்போதே கூடுதல் ஆணையர்கள் திருமகள், கவிதா உள்ளிட்ட அதிகாரிகளுக்கு சிலை மோசடிகளில் தொடர்பு இருக்கிறது என்று அம்பலப்படுத்தினோம்.
அதுமட்டுமல்ல, கடந்த 2018 ஜூலை 25-27 தேதியிட்ட நக்கீரனில் "சிலை கடத்தலில் சிக்கும் அறநிலையத்துறை அதிகாரிகள்'’என்ற தலைப்பில் அதிகாரிகளின் பட்டியலுடன் அம்பலப்படுத்தினோம். அதாவது, சிலை கடத்தல் மன்னர் ஸ்தபதி முத்தையா, முன்னாள் ஆணையர் தனபால், இணை ஆணையர் ராஜா உள்ளிட்ட அதிகாரிகள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து கூடுதல் ஆணையர்கள் திருமகள், கவிதா, இணை ஆணையர்கள் ஜெயராமன், காவேரி, உதவி ஆணையர் ஜோதிலட்சுமி ஆகியோரும் கைது செய்யப்பட இருக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டியிருந்தோம்.
குறிப்பாக, கூடுதல் ஆணையர்கள் திருமகளும் கவிதாவும்தான் சிலைத்தடுப்பு பிரிவு போலீஸின் ஹிட் லிஸ்டில் இருக்கிறார்கள். இருவரும் ஊழல் செய்வதில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்லர் என்றும் எழுதியிருந்தோம். இந்நிலையில்தான், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சிலை செய்வதில் நடந்த முறைகேட்டில் 50 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கடந்த 31-ந்தேதி காலை ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலைத்தடுப்பு போலீஸாரால் கைது செய்யப்பட்டார் கூடுதல் ஆணையர் (திருப்பணி) கவிதா.
இதுகுறித்து, நம்மிடம் பேசிய சிலைக்கடத்தல் பிரிவு போலீஸாரோ, ""பழனி முருகன் கோயிலில் நடந்த சிலை மோசடியில் கைது செய்யப்பட்ட முத்தையாவின் பினாமிகளுக்கே மீண்டும் சிலை செய்ய ஆர்டர் கொடுக்க கூடுதல் ஆணையர் கவிதாவுக்கு எந்தெந்த விதங்களில் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்திவருகிறோம். மேலும், "இரும்புத்திரை' பட இயக்குநரான கவிதாவின் மகன் மித்ரன் சம்பந்தப்பட்ட தொடர்புகளையும் விசாரிக்கிறோம். எந்தெந்த விதங்களில் கவிதாவுக்கு ஸ்தபதி முத்தையா உதவியிருக்கிறார் என்பதையும் தீவிர விசாரணை செய்துவருகிறோம். "அடுத்த கைது திருமகள்தான்''’என்றார்கள் அதிரடியாக.
இந்நிலையில்தான், ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலைக் கடத்தல் பிரிவு போலீஸ் சிலைக்கடத்தல்கள் தொடர்பாக நடத்தும் விசாரணையில் நம்பிக்கை இல்லை என்றும் சி.பி.ஐ. விசாரிக்கவேண்டும் என்றும் தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்திருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்ததோடு அதற்கான ஆணையையும் பிறப்பித்திருக்கிறது.
அறநிலையத்துறை உயரதிகாரி கைது செய்யப்பட்டதை கண்டித்தும் இனி யாரையும் கைதுசெய்துவிடக் கூடாது என்றும் அவசர ஆலோசனைக் கூட்டம் இந்து அறநிலையத்துறை தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்து அறநிலையத்துறையின் திருச்சி இணை ஆணையர் ஜெயராமன் தலைமையிலான ஆலோசனைக்கூட்டத்தில் எஸ்.ஐ., இன்ஸ்பெக்டரில் ஆரம்பித்து ஏ.சி., டி.சி. என அனைவரும் 59 நாட்கள், 58 நாட்கள் லீவு போடுவோம் என்று ஆலோசிக்கப்பட்டுள்ளது. 60 நாட்கள் லீவு போட்டால் மெடிக்கல் போர்டில் அதற்கான காரணத்தைச் சொல்லவேண்டும் என்பதால் இப்படி, விடுமுறை போட்டு அரசுக்கு எதிரான போராட்டத்தை செய்ய ஆலோசித்தார்கள். சிலை மோசடிகளில் தொடர்புள்ள அமைச்சர்கள் தரப்பும் அதிர்ந்துபோனது.
மேலும் இந்து அறநிலையத்துறையின் ஆணையர் ஜெயா ஐ.ஏ.எஸ்., கூடுதல் ஆணையர் திருமகள், இணை ஆணையர் சுதர்சனம் உள்ளிட்ட அதிகாரிகள் அவசர அவசரமாக இந்து அறநிலையத்துறையின் செயலாளர் அபூர்வவர்மாவை சந்தித்துப் பேசியதோடு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனையும் சந்தித்து முறையிட்டார்கள். "அமைச்சர்கள் முதல்… உயரதிகாரிகள்வரை சொல்வதைக் கேட்டு நாங்கள் பணி செய்கிறோம். அதிகாரிகளை மட்டும் குறிவைத்து கைது செய்கிறது சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு. கூடுதல் ஆணையர் கவிதாவின் வாக்குமூலத்தை வைத்து அடுத்தடுத்து எங்களையும் கைது செய்ய இருப்பதோடு யார், யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறதோ அத்தனை அரசியல் புள்ளிகளும் சிக்குவார்கள்'’ என்று தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்துதான், சிலைக்கடத்தல் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியது எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு.
கவிதா ஜாமீன்மனு தாக்கல் செய்த நிலையில், அவருக்கு 10 நாட்களுக்கு முன் இரு கண்களிலும் ஆபரேஷன் நடந்திருப்பதைக் கருத்தில் கொண்டு, திருச்சி சிறையிலிருந்தவர் ஜி.ஹெச்.சில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாம் மேலும் விசாரித்தபோது, ""ஐ.ஜி. பொன்மாணிக்கவேலின் விசாரணையிலிருந்து வழக்கானது சி.பி.ஐக்கு மாற்றப்பட்டதால் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் இந்து அறநிலையத்துறையின் அதிகாரிகளும் சம்பந்தப்பட்ட ஊழல் அமைச்சர்களும். காரணம், ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் அதிரடியாக விசாரணை நடத்தி கைது நடவடிக்கை எடுத்து வந்தார். குஜராத்திலிருந்து ராஜராஜ சோழன் சிலையை மீட்டு வந்தார். மேலிடம் வரையிலான கடத்தல் நெட்வொர்க்கை நெருங்கினார். இந்து அறநிலையத்துறையிலேயே இருக்கும் இரண்டுவிதமான அதிகாரிகளின் கூட்டணியில் இன்னொரு கூட்டணி பல்வேறு தகவல்களை ஆதாரத்துடன் போட்டுக் கொடுத்துக்கொண்டிருப்பதை நக்கீரன் ஏற்கனவே எழுதியுள்ளது. ஐ.ஜி. பொன்மாணிக்கவேலிடமிருந்து சி.பி.ஐ.க்கு மாற்றினால் தேவையான ஆவணங்களை அரசுத் தரப்பினர் தாக்கல் செய்வார்களா என்பது கேள்விக்குறி. இந்த வழக்கை சி.பி.ஐ. எடுக்கவே மாதக்கணக்கில் ஆகிவிடும்.
டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா வழக்கில் கூட சி.பி.ஐ. விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல், சரியான ஆவணங்களை திரட்டாமல் முடித்துவைத்துவிட்டது சி.பி.ஐ. மேலும், ஐ.ஜி. பொன்மாணிக்கவேலுவுக்கு இது ஒரு பெரிய வழக்கு. ஆனால், சி.பி.ஐ.க்கு இது பெரிய வழக்கே அல்ல. தமிழக அரசு கொடுக்கும் ஆவணங்களை வைத்துத்தான் விசாரிக்கும். லோக்கலில் யார், யார் ஊழல்வாதிகள் என்பது சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு தெரியாது. அதை கிடப்பில் போட்டுவிடும் சி.பி.ஐ. என்று நினைத்துதான் தமிழக அரசு இப்படியொரு கொள்கை முடிவை எடுத்திருக்கிறது. ஆனால், சி.பி.ஐ. மத்திய அரசின் கண்ட்ரோலில் வரக்கூடியது. ஏற்கனவே, சிலைக்கடத்தலில் தொடர்புள்ள பிராமணர்களை காப்பாற்றிவிட்டு பிராமணர் அல்லாதவர்களை மட்டும் குறிவைத்து அதிரடியாக செயல்பட்டு வந்தது பா.ஜ.க. தற்போது, சி.பி.ஐ. வசம் இந்த வழக்கு வந்துவிட்டதால் இன்னும் பா.ஜ.கவுக்கு சாதகமாகிவிட்டது. இதன்மூலம் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களை காப்பாற்றுவதோடு… இந்து அறநிலையத்துறை அதிகாரிகளை கைதுசெய்து இத்துறையை கலைத்துவிட்டு, கோயில்களை அந்தந்த நிர்வாகத்திடமே ஒப்படைக்கும் முயற்சியிலும் பா.ஜ.க. ஈடுபடும். தமிழக அரசே ஒழுங்காக விசாரித்து அதிகாரிகள் மீது சரியான நடவடிக்கை எடுத்திருக்கலாம்''’என்கிறார்கள் இன்னொரு கோணத்தில்.
பொன்மாணிக்கவேல் விசாரணையில் கவிதா கைது செய்யப்பட்ட நிலையில்... கவிதாவால் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டு, அப்போதைய ஆணையர் அசோக்கால் கிடப்பில் போடப்பட்ட சமயபுரம் கோயில் தங்கம் மோசடியில் ஏ.சி. ரத்தினசபாபதி ஓய்வுபெறும் நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இது எடப்பாடி அரசுத் தரப்பின் எதிர்நடவடிக்கை என்கிறார்கள். அதிகாரிகளை கைது செய்வது மட்டுமல்ல, சிலைத்திருட்டு மற்றும் ஊழல் புகாருக்கு உள்ளாகியுள்ள இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், அவரது மகன் விஜயகுமார் என்கிற விஜய்வரை விசாரித்தால்தான் சிலைக்கடத்தலில் நடக்கும் மாபெரும் ஊழல்களும் மோசடிகளும் வெளிவரும். ஆனால், சி.பி.ஐ. என்ன செய்யப்போகிறது என்கிற கேள்விக்குறி ஏற்பட்டுள்ளது.
பொன்மாணிக்கவேல் நடவடிக்கைகளால் கைதான கவிதா, சசிகலாவின் அண்ணி இளவரசியின் சம்பந்தியான திருச்சி கலியபெருமாளின் அண்ணன் மருமகள். அதேபோல் அறநிலையத்துறை முன்னாள் ஆணையரான வீர சண்முகமோனியும் வசமாக சிக்கியிருக்கிறார். இவரும் சசிகலா தரப்புக்கு நெருக்கமானவர்.
2010-ல் மாஜி எம்.எல்.ஏ. ஆலங்குடி வெங்கடாசலம் கொலையில் சசிகலா உறவுகளுக்கு உள்ள தொடர்பை கண்டறிந்தார் பொன்மாணிக்கவேல். ஜெ. மூலம் அவரை சமாதானப்படுத்தும் வகையில் உளவுத்துறையில் போஸ்டிங் தந்தது சசிகலா தரப்பு. பின்னர் 2011-ல் சசிகலா சொந்தங்களை ஜெ.விடம் போட்டுக் கொடுத்த உளவு டீமில் இவரும் அடக்கம் என சசிகலா தரப்பு கோபம் கொண்டது. இந்நிலையில், சிலை கடத்தலில் சசிகலா உறவுகளை பொன்மாணிக்கவேல் நெருங்கிய நிலையில், அவர்களைக் காப்பாற்றும் ரகசிய டீலிங்குடன்தான் சி.பி.ஐ. விசாரணை என சீன் மாற்றியிருக்கிறது எடப்பாடி அரசு என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தினர்.
-மனோ, ஜெ.டி.ஆர்.,
தாமோதரன் பிரகாஷ்