உலகத் தாய்மொழி தினமான 21-ந் தேதி ‘"தமிழைத் தேடி'’ என்கிற விழிப்புணர்வு பரப்புரை பயணத்தைத் தொடங்கியிருக்கிறார் பா.ம.க. மற்றும் பொங்கு தமிழ் அறக்கட்டளையின் நிறுவனரான மருத்துவர் ராமதாஸ். தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான ராமதாஸ், தமிழுக்கு முக்கியத்துவம் தரும் தி.மு.க. ஆட்சியில் தமிழைத் தேடி பரப்புரை பயணம் மேற்கொள்வது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த பயணத்திற்கான தொடக்கவிழா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. சென்னையில் தொடங்கி 8 நாள் பயணம் மேற்கொள்ளப்பட்டு சங்கம் வளர்த்த மதுரையில் 28-ந்தேதி பயணத்தை நிறைவு செய்கிறார் மருத்துவர் ராமதாஸ். இந்த பயணத்தின் போது முக்கிய நகரங்களில் பொதுக்கூட்டங்களையும் நடத்துகிறது பொங்கு தமிழ் அறக்கட்டளை.
பொங்கு தமிழ் அறக்கட்டளையின் தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நடந்த இந்த விழாவின் தொடக்கமாக, மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்ட தமிழன்னையின் படத் துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் ராமதாஸ். இதனை யடுத்து, பிரச்சார வாகனத்தில் கம்பீரமாக அமர்ந்திருந்த தமிழன்னை சிலையை ராமதாஸ் திறந்து வைத்தார். தமிழன்னை சிலையை கம்பீரமாகவும் மிக அழகாகவும் உருவாக்கிய சிற்பியை மேடையில் கௌரவித்தார் ராமதாஸ்.
விழாவை சிறப்பிக்கும் வகையில், ’"தமிழைத் தேடி; தமிழர்களை நாடி; தமிழினப் போராளி வருகிறார். எங்கும் தமிழ் இல்லை; எதிலும் தமிழ் இல்லை ; தங்கத் தமிழ் எங்கே என தேடுகிறார்'’ என்று எழுதப்பட்ட பாடலை பாடி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தார் தமிழின் துள்ளலிசைப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி.
ராமதாஸ் எழுதிய "எங்கே தமிழ்?' எனும் புத்தகம் விழாவில் வெளியிடப் பட்டது. பா.ம.க. தலைவர்கள், பொங்கு தமிழ் அறக்கட்டளை நிர்வாகிகள், சீர்காழி சிவசிதம்பரம் உள்ளிட்ட தமிழின உணர்வாளர்கள் என பலரும் திரளாக வந்து கலந்து கொண்டனர்.
விழாவில் உலகத் தமிழ் சங்கத்தின் தலைவர் வி.ஜி. சந்தோஷம், டெல்லி தலைநகர் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் முகுந்தன், இச்சங்கத்தின் சென்னை தலைவர் கணபதி, டெல்லி முத்தமிழ் பேரவை தலைவர் கண்ணன், அனைந்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்க தலைவர் பெரியண்ணன் உள்ளிட்டோர், மருத்துவர் ராமதாஸையும் அவர் மேற்கொண்டுள்ள பயணத்தையும் வாழ்த்திப் பேசினார்கள்.
இறுதியில் பேசிய ராமதாஸ், "தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தமிழைத் தேடி நான் செல்கிறேன் என்பதை விட, நாம் அனைவரும் செல்கிறோம் என்றுதான் நான் நினைக்கிறேன். என்றைக்கும் தமிழ் நிலைத்து நிற்கும் என நினைக்கும் நல்ல உள்ளங்களும் என்னோடு மதுரைக்கு வருகிறது.
தமிழ் எங்கே இருக்கிறது? என்று கேட்டால், அங்கு பார்த்தேன்; இங்கு பார்த்தேன்; கல்லூரியில் பார்த்தேன்; தோட்டத்தில் பார்த்தேன்; நீதிமன் றத்தில் பார்த்தேன் என்று யாராவது சொன்னால், அவருக்கு 5 கோடி பரிசு தருகிறேன். ஆனா, என்னி டம் 5 ஆயிரம் கூட கிடையாது. என் தலையை அட மானம் வைத்தாவது 5 கோடியை தருவேன். எனக் குத் தெரியும்… தமிழ் இருக்கிறது என்று யாராவது சொல்வார்களா? சொல்லமுடியாது. அந்தளவுக்கு தாய்மொழியான தமிழை தமிழ்நாட்டில் தேட வேண்டியதிருக்கிறது. தமிழ் இருப்பதாக எவரேனும் சொன்னால் அவர் பொய் சொல்கிறார் என அர்த்தம்.
தமிழைத்தேடி என்கிற இந்த பயணம் தமிழ்நாட்டில் வாழுகிற மற்ற மொழிகளைப் பேசுபவர்களுக்கு எதிரானது இல்லை. தமிழ்கூறும் நல்லுலகத்திற்காகத்தான் இந்த பயணம். மதுரையை இந்த பயணம் சென்றடையும் போது பயணத்தின் வெற்றி பெரிதாகப் பேசப்படும்''” என்று பெருமிதமாகப் பேசினார் ராமதாஸ்.
வள்ளுவர் கோட்டத்தில் துவங்கிய முதல்நாள் பயணத்தில் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட பலரும் ராமதாசுடன் பயணப்பட்டனர். பயணத்தின் முக்கிய நிகழ்வாக, மறைமலைநகர், மதுராந்தகம் நகரங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டங்களில் பேசிய ராமதாஸ், ‘"தாய்மொழி தமிழில் பேசும்போது பிற மொழிகளை கலந்து பேசாதீர்கள். பிற மொழி கலப்புதான் தாய்மொழி யின் சிதைவுக்கு காரணம். தமிழைத்தேடி பயணம் மேற்கொள்வதே எனக்கு வெட்கமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் நம் அன்னைத் தமிழ் அழிந்து கொண்டிருக்கிறது. உயர்நீதிமன்றம், கோவில், உணவு விடுதிகள், திருமண நிகழ்ச்சிகள், விளம்பரங்கள் என எதிலும் தமிழ் இல்லை. தமிழகத்தில் தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என 3 முறை சட்டமியற்றப் பட்டுள்ளது. ஆனால் நடைமுறைப்படுத்தவில்லை. தற்போதைய ஆட்சி மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. தமிழை இந்த ஆட்சி பாதுகாக்கும் என நினைக்கிறேன்''’என்றார் உணர்ச்சிமிகுந்தவராக.
அன்னைத்தமிழை காக்க ராமதாஸ் மேற் கொண்டுள்ள இந்த பயணத்தை, ஆளும் தி.மு.க. அரசு உற்றுக் கவனிக்கத் தொடங்கியிருக்கிறது!
______________
கலையில் வல்லவரான சிற்பி சிவா
கோல்டும் காப்பரும் கலந்த புதுமையான நிறத்தில் ஜொலிக்கும் தமிழன்னையின் சிலையை உருவாக்கியவர் பிரபல சிற்பி சிவா. சிற்பக் கலையில், சர்வதேச, தேசிய, மாநில அளவிலான விருதுகளையும் வரவேற்பையும் பெற்றவர் சிவா. மூன்றாம் கண் கொண்ட சிவனின் உருவத்தை நவீன பாணியில் ஹரியானா மாநிலத்தில் உருவாக்கியவர் சிவா. ராஜஸ்தானின் கிடைக்கும் அபூர்வ மார்பிளைக் கொண்டு ஒரே கல்லில் 12 அடி உயரத்துக்கு சிவனின் சிலையை உருவாக்கினார். அந்த சிலை தேசிய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஒருவரின் உருவத்தை சிலை வடிவத்தில் தத்ரூபமாக உருவாக்கும் கலையில் வல்லவரான சிற்பி சிவாவிடம், தமிழன்னை சிலையை உருவாக்கும் பொறுப்பைக் கொடுத்தார் மருத்துவர் ராமதாஸ்.
இது குறித்து சிவாவிடம் நாம் பேசியபோது, "கருங்கற்களாலும் மரத்தாலும்தான் இதுவரை சிலைகள் உருவாக்கப்படுகின்றன. இவைகளைத் தவிர்த்து, தமிழன்னை சிலையை புதிதாக உருவாக்க வேண்டும் என ஒரு புதிய யோசனையை சொன்னார் அய்யா ராமதாஸ். அவரின் யோசனையை ஏற்றுக் கொண்ட நான், "கண்ணாடி இழைகள் கொண்ட நாற்கல்லில் புதிதாக வடிவமைக்கலாம். கிட்டத்தட்ட 1000 ஆண்டுகளுக்குக்கூட எவ்வித சேதாரமும் சிலைக்கு ஏற்படாது' என்று சொன்னதில் மகிழ்ந்து போனார் அய்யா. மேலும், "இதுவரை இல்லாத வண்ணத்தில் சிலை இருக்க வேண்டும். கோல்டும் காப்பரும் கலந்த நிறத்தில் இருந்தால் சிறப்பாக இருக்கும்' என்றும் அவர் சொல்ல, அதனை அப் படியே ஏற்றுக் கொண்டு வடி வமைத்தோம்'' என்கிறார் சிவா.