""ஹலோ தலைவரே, வடமாநிலங்கள்ல இருக்கும் மக்கள் ஏ.டி.எம். மெஷின்கள்ல பணம் இல்லைன்னு பரிதவிச்சிக்கிட்டு இருக்காங்க. அதேபோல் நம்ம தமிழகத்திலும், சென்னை போன்ற பெருநகரங்கள்ல ஏ.டி.எம். மெஷின்ல கார்டை விட்டா, ரூபா நோட்டுக்கு பதில் காத்துதான் வருதுங்கிற குமுறல், மக்கள் மத்தியில் அதிகரிச்சிக்கிட்டு இருக்கு''’
""ஆமாம்ப்பா, மோடி அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவிச்சப்ப, இனி ரூபா நோட்டுக்கு பதில், டிஜிட்டல் மயம்தான்னு சொன்னுச்சு. ஆனால் ரிசர்வ் வங்கியோ, பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பு, நிலைமை எப்படி இருந்ததோ, அதே நிலைமைதான் இப்பவும் இருக்குன்னு சொல்லுது. தீர விசாரிச்சப்ப, 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் எல்லாம் பதுக்கப்பட்டிருக்கலாம்னு பேச்சு அடிபடுது. குறிப்பாக, கர்நாடக சட்டமன்றத் தேர்தல்ல ஆட்சியைக் கைப்பற்றும் பரிதவிப்பில் இருக்கும் பா.ஜ.க. தரப்பு, வாக்காளர்களைச் சரிக்கட்ட, கரன்சியை பதுக்கிட்டதால தட்டுப்பாடுன்னும் தகவல் பரவுது. இதனால் பாதிக்கப்பட்ட அனைத்துத் தரப்பு மக்களும் அதிர்ச்சியில் இருக்க, மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லியோ, "இது தற்காலிக நெருக்கடிதான்... விரைவில் நிலைமை சரியாகும்'னு நம்பிக்கை தெரிவிக்கிறார்''’
""சரியா சொன்னீங்க தலைவரே. ஏ.டி.எம். வறண்ட விவகாரம் மக்களை ரொம்பவே பாதிச்சிருக்கு''’
""ஆமாம்ப்பா, ஜெ.’ உயிரோடு இருந்தப்பதான் மோடி அரசு, இந்தப் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அமல்படுத்துச்சு. இதனால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட சிக்கலும் இன்னும் தீரலை. விசாரணைக் கமிஷன் அமைச்சும் ஜெ.வின் மர்ம மரணம் குறித்த சர்ச்சைகளும் ஓயலையே''’
""உண்மைதாங்க தலைவரே, ஜெ.’மரணத்தை விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனில் ஏற்கனவே வாக்குமூலம் கொடுத்திருக்கும் முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன்ராவ், ஜெ.வின் செயலாளரா இருந்த ராமலிங்கம், இளவரசி வாரிசுகளான விவேக், கிருஷ்ணப்பிரியா, கார்டன் பணியாளர் ராஜம்மா, ஜெ.வுக்கு எம்பாமிங் செய்த டாக்டர் சுதா சேஷையன், ஜெ.வின் உதவியாளரா இருந்த பூங்குன்றன்னு பலரிடமும் இந்த வாரம், சசி தரப்பு வழக்கறிஞரான ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை செய்தார். இதெல்லாமே தங்களுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்துமோன்னு சசி தரப்பே கவலைப்படுது''’
""எதனாலாம்?''’
""சொல்றேங்க தலைவரே, கமிஷனில் கொடுக்கப்பட்ட வாக்குமூலங்களைத் தாண்டியும் சில தகவல்களை சிலர் சொன்னதா சசி தரப்பிலிருந்தே பொய்யா பரப்பியிருக்காங்க. குறிப்பா, அப்பல்லோவில் ஜெ.வை ஸ்கேன் எடுக்கக் கொண்டுபோனபோது, அத்தனை அமைச்சர்களும் சீனியாரிட்டிப்படி, வரிசையா நின்னு அவரைப் பார்த்தாங்கன்னும், காவிரி விவகாரம் குறித்து ஐ.சி.யூ.வில் இருந்தபடியே ஜெ.’ 40 நிமிடம் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசியதாகவும், அதைப் பார்த்து எல்லோரும் உணர்ச்சி மேலீட்டில் கண்ணீர் வடித்ததாகவும் வெளியே செய்தி பரப்பப்பட்டது. இயல்பாவே தங்களுக்கு சாதகமாக வாக்குமூலங்கள் தரப்பட்டிருக்கும் நிலையில், இப்படிப்பட்ட டுபாக்கூராக வெளியாகும் செய்திகள், சேம்சைடு கோல் போல தங்களுக்கு எதிராகி விடுமோன்னு சசி தரப்பு ரொம்பவே கவலைப்படுது. போதாக்குறைக்கு கமிஷனின் தீர்ப்பு, தங்களுக்கு எதிராக வரும்படி எடப்பாடி அரசும் சிலவற்றைத் திசைதிருப்பப் பார்க்குதுன்னு சசிகலா தரப்பு கோபத்தில் இருக்கு. அதனால் தங்களுக்குச் சாதகமா எல்லாம் நடக்க, என்ன செய்யலாம்னு மன்னார்குடி டீம் களமிறங்கியிருக்கு''
""இந்த விசாரணைக் கமிஷனின் முடிவு எப்ப, எப்படி வரும்ங்கிற கேள்வி, மக்கள் மத்தியில் எழுந்திருக்கு. ஏன்னா, போன ஆண்டு ஜல்லிக்கட்டுக்கான மெரினா போராட்டம் நடந்தப்ப ஏற்பட்ட வன்முறை குறித்து விசாரிக்கவும், அப்ப ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வர் தலைமையில் ஒரு விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டதே? அதுவும் இன்னைக்குவரை இழுபட்டுக்கிட்டுத்தானே இருக்கு''’
""மெரினா போராட்டம்னு சொன்னதும் ஒரு விசயம் ஞாபகத்துக்கு வருதுங்க தலைவரே, அப்ப நடுக்குப்பம் பகுதியில், சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த டூவீலர்களை, போலீஸே உடைத்த வீடியோ காட்சிகளும், அப்ப பெண் போலீஸார் ஆட்டோக்களுக்கும் குடிசைகளுக்கும் தீ வைத்த வீடியோ காட்சிகளும் மீடியாக்கள்ல பரவுச்சு. அப்ப அந்த சம்பவத்தை விசாரித்த நக்கீரன், ஏ.சி. கமீல்பாட்சா டீம்தான் இந்தக் கலவரத்தை நடத்தியதுன்னு அப்போதே அம்பலப்படுத்துச்சு. ஆட்டோவுக்கு தீ வைக்கும் போலீஸ் படமும் நம்ம நக்கீரனில் வெளியானது. அந்த கமீல் பாட்சா, திருமங்கலம் ஏ.சி.யா இருந்தார். அவர் அலுவலகத்தை கடந்த 13-ந் தேதி இரவு சோதனையிட்ட லஞ்ச ஒழிப்பு டீம், அவர் அறையில் இருந்த இரண்டரை லட்ச ரூபாயையும், அப்போது அவரைப் பார்க்க வந்த பில்டர் ஒருவரிடமிருந்து இரண்டு லட்சத்து 80 ஆயிரம் ரூபாயையும், முறைகேடான பணம்ன்னு அதிரடியா கைப்பற்றியிருக்கு''’
""ஆமாம்ப்பா. அந்த ஏ.சி. விவகாரத்தை நானும் பார்த்தேம்ப்பா. ஒவ்வொரு பிரச்சினையும் வேற வேற கோணத்தில் திசை திரும்பறதை அண்மைக்காலமா பார்க்க முடியுதே?''
""உண்மைதாங்க தலைவரே, அண்மையில் தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு, தமிழ்மக்கள் காட்டிய கடுமையான எதிர்ப்பால், கொந்தளிச்சிப் போயிருக்கும் பா.ஜ.க.வின் கோபம், பிரதமர் மக்களைச் சந்திக்க பயந்து கோழைத்தனமாக சுரங்கப்பாதை அமைத்தும், சந்துபொந்து வழியாகவும் பயணம் செஞ்சார்ன்னு விமர்சிச்ச வைகோ பக்கம் திரும்பியிருக்கு. ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தை பல ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிச்சி வச்சவரே வைகோதான். இப்ப பல கட்சியினரும் அமைப்பினரும், ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்களின் போராட்டத்துக்கு ஆதரவா நிக்கிறாங்க. இந்த நிலையில், அண்மையில் நியூட்ரினோ எதிர்ப்பு நடை பயணத்தை நிறைவுசெய்த வைகோ, ஸ்டெர்லைட் பயணத்தில் பங்கேற்பதற்காகச் சென்றார்...''’
""வைகோ வருகையை எதிர்த்து பா.ஜ.க. வரிந்துகட்டியதாமே!''
""ஆமாங்க தலைவரே... பா.ஜ.க.வின் தூத்துக்குடி மாவட்ட தலைவரான சிவந்தி நாராயணன், தலைமையில் திரண்டவர்கள், ‘Go Back Vaiko-ன்னு கறுப்புக்கொடிப் போராட்டத்தை நடத்தினாங்க. இதைக்கண்ட வைகோ, "என்னை பிரபலமாக்கும் பா.ஜ.க.வுக்கு நன்றி. காவிக்கொடி ஏந்தும் கைகளில், கறுப்புக் கொடியைப் பார்த்ததில் மகிழ்ச்சிதான்'னு சொல்லிட்டு, ஸ்டெர்லைட் போராட்டத்தை எப்படி எப்படியெல்லாம் நடத்தினேன்னு விளக்க ஆரம்பிச்சிட்டார். இதனால் பா.ஜ.க. தரப்பின் கோபம், கொதி நிலைக்குப் போயிடுச்சு. அடுத்து அங்குள்ள குளத்தூரில் 17-ந் தேதி இரவு 9:15-க்கு தன் காரில் இருந்தபடியே வைகோ பேசும்போது, திடீர்ன்னு அவரை நோக்கி வீசப்பட்ட மதுப்புட்டி, குறிதவறி பின்னால வந்த காரில் விழுந்து சிதறிச்சு. இதனால் அவரது தொண்டர்கள் கொந்தளிக்க, வைகோவோ, விடுங்க, அதை போலீஸ்காரங்க பார்த்துப்பாங்க. நாம நம் வேலையைப் பார்ப்போம்'னு, அதையும் டேக் இட் ஈஸியாவே எடுத்துக்கிட்டார்''’
""காங்கிரஸில் ஏதோ விறுவிறுப்பு தெரியுதே?''’
""காங்கிரஸ் சார்பில், மாநில அளவில் மாவட்ட நிர்வாகிகள் போடப்பட்டு, பூத் கமிட்டிகளும் அமைக்கப்பட்டிருக்கு. இந்த நிலையில், புதிய நிர்வாகிகளோடு கலந்துரையாட மாநில தலைவரான திருநாவுக்கரசர், தன் சுற்றுப் பயணத்தைத் தொடங்கியிருக்காரு. அதன் தொடக்கமாக சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் சிவராஜசேகர் ஏற்பாடு செய்த கூட்டம் ராயப்பேட்டையில் நடந்துச்சு. ஆட்டம் பாட்டத்தோட, அங்கு திருநாவுக்கரசரை வாழ்த்தி டிஜிட்டல் காட்சியும் ஒளிபரப்பப்பட்டது. அங்கே பேசிய திருநாவுக்கரசர், "வர்ற தேர்தல்ல, உரிய சீட்டுகளை கூட்டணிக் கட்சியான தி.மு.க.விடம் இருந்து வாங்கணும்னு பலரும் சொன்னீங்க. காங்கிரஸைப் பலப்படுத்தி, இதுதான் காங்கிரஸுன்னு காட்டி, உரிய இடத்தை உரிமையாய் கேட்டு வாங்குவோம். அதற்காகத்தான் எனது இந்த சுற்றுப்பயணம்'னு சொல்லியிருக்கார்''’
""தேர்தல் வருதுங்கிற எதிர்பார்ப்பு எல்லா பக்கமும் அதிகமாயிருக்கு. அ.ம.மு.க.வின் மாவட்ட நிர்வாகிகளைத் தொடர்புகொண்ட தினகரன், முன்கூட்டியே தேர்தல் வர்றதுக்கான அறிகுறிகள் தெரியுது. அதனால் அதை எதிர்கொள்ளத் தயாராகுங்க. அது தொடர்பா ஆலோசனைக் கூட்டங்களைப் போடுங்கன்னு சொல்லியிருக்கார். அதேபோல் தன் கட்சியின் திருவாரூர் மா.செ.வான எஸ்.காமராஜை தொடர்புகொண்டு, நம்ம மன்னார்குடி குடும்பத்தின் இமேஜை சிதறடிக்க, மன்னார்குடியில் எப்படியாவது ஜெயிச்சாகனும்ன்னு எடப்பாடியும் ஓ.பி.எஸ்.சும் திட்டமிட்டிருக்காங்க. அங்கே அவங்களுக்கு ஒரு ஓட்டுகூட விழாதபடி செயல்படுங்க. அதேபோல் திருவாரூரில், உதயநிதி ஸ்டாலினை தி.மு.க. நிறுத்தலாம்னு தகவல் வருது. கலைஞர் ஊரிலும் நம்மை மீறி யாரும் ஜெயிச்சிடக் கூடாதுன்னும் அழுத்தமா சொல்லியிருக்காராம்.''
---------------------------------
இறுதிச்சுற்று
ரஜினி டெக்னிக்!
காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடந்தபோது, "காவலர்களை தாக்கியவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்' என ரஜினி தனதுடுவிட்டர் பக்கத்தில்கருத்து வெளியிட்டார். ரஜினியின் இந்த கருத்தை கடுமையாக கண்டித்துஇயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், சீமான், வேல்முருகன் பேசினர்.
இந்த நிலையில், ரஜினி மக்கள் மன்றம் சார்பில் வெளியான அறிக்கையில், ""காவிரி பிரச்சினை என்பது இன்றைய நேற்றைய பிரச்சனையல்ல. இதில் ஒரு நடிகராகவோ, தனிப்பட்ட மனிதராகவோ ரஜினிகாந்த் அவர்களால் தீர்வு காண முடியாது என்பது தெரிந்தும் அவர் மீது தேவையற்ற விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.நாட்டில் ஏற்படும் பிரச்சனைகள் அனைத்திற்கும் ரஜினி என்ன செய்துவிட்டார்? ரஜினி என்ன செய்துவிட்டார் என்று பேசுபவர்களுக்கு ஒன்றை பதிவு செய்ய விரும்புகிறோம். நாம் மாநிலத்தை ஆளும் அரசை கேட்பதை விட்டுவிட்டு தமிழகத்தில் ஒரு சில கும்பல் ரஜினிகாந்த் அவர்களை மட்டுமே குறிவைத்து விமர்சனம் செய்வது எந்தவிதத்திலும் நியாயமில்லை'' எனவேலூர் மா.செ. சோளிங்கர்.ரவி, இணைசெயலாளர் நீதி என்கிற அருணாச்சலம் இருவரும் கையெழுத்திட்டுள்ளனர்.
எதிர்ப்பட்டவர்கள் அனைவருக்கும் (குறிப்பாக திரையுலகினருக்கு) ரஜினி பதிலளித்தால் சரியாக இருக்காது என மன்ற நிர்வாகியை வைத்து பட்டும் படாமல் கண்டிக்க முடிவு செய்துள்ளதன் எஃபெக்ட்தான் இது.
-ராஜா