நீலகிரி மாவட்டம் கூடலூரில் பொக்காபுரத்தில் இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு சொந்தமான மோனார்க் ஹோட்டலை இழுத்து மூடினார்கள்.
யானைகளின் வழித் தடங்களை நீலகிரியில் உள்ள குடில்கள் ஆக்கிரமிப்பதாக யானை ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், "யானைகளின் வழித்தடங்களை மறிக்கும் 39 விடுதிகளில் 27 தங்கும் விடுதிகளுக்கு உடனடியாக சீல் வைக்க வேண்டும். மீதமுள்ள 12 விடுதிகள் உரிய ஆவணங்களை மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்து முறையிடலாம்' என சொல்லியதன்படி, கடந்த 12-ந் தேதி சீல் வைக்கப்பட்டது. ஆனால் 12 தங்கும் விடுதிகளில் மிதுன் சக்கரவர்த்திக்கு சொந்தமான குடில்கள் சீல் வைக்கப்பட்டன .
"யானைகளின் வழித்தடங்களை மறித்து நிற்கும் குடில்களை மூடும் மாவட்ட நிர்வாகம் ஏன் ஈஷாவின் மீது மட்டும் நடவடிக்கை எடுக்க மறுக்கிறது?' என கேள்வி எழுப்புகிறார் இயற்கை ஆர்வலர் சிவா. ""யானைகளின் வழித்தடங்களை மறிக்கும் குடில்களுக்கு சீல் வைக்கப்பட்ட செயல் மிகவும் பாராட்டுக்குரியது. ஆனால் ஈஷா மறித்திருப்பது யானைகளின் வழித்தடத்தை விட யானைகளின் வாழ்விடங்களை மறித்திருக்கிறது.
அதாவது கோவை மாவட்டத்தில் 543 சதுர கிலோமீட்டர் உள்ள காட்டில் மட்டும் 473 சதுர கிலோமீட்டரில் யானைகள் வசிக்கின்றன.
150-க்கும் மேற்பட்ட யானைகள் இங்கே இருக்கின்றன. இந்தியாவிலேயே மிக அடர்த்தியான காடுகள் இங்கேதான் இருக்கின்றன. போளுவாம்பட்டி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி 2-ல் யானைகளின் வாழ்விடங்களை மறித்து ஈஷா யோகா மையத்தின் ஜக்கி ஏகப்பட்ட கட்டடங்களை கட்டியிருக்கிறார். இடிப்பதற்கு எத்தனையோ உத்தரவுகளை நகர ஊரமைப்புத் துறையினர் வழங்கிய பின்பும் இங்குள்ள மாவட்ட ஆட்சியர்கள் யாரும் கண்டுகொள்வதில்லை. ஏனென்றால், இந்தப் பகுதியை ஆக்கிரமித்திருப்பது மத நிறுவனங்களும், பிரபல கோடீஸ்வரர்களின் கல்வி நிறுவனங்களும்தான்.
மத நிறுவனமான ஈஷாவின் பக்தராக இந்தியாவின் பிரதமரே இருக்கும்போது மாவட்ட கலெக்டர்கள் எம்மாத்திரம்? இந்த ஈஷாவை ஒட்டியுள்ள 2 கிலோமீட்டரில் பழங்குடியின மக்களில் 3 பேர் கடந்த 2 வருடங்களில் இறந்திருக்கின்றனர். காருண்யா பல்கலைக்கழகத்தை ஒட்டியுள்ள மூன்று கிலோமீட்டரில் 3 பழங்குடியின மக்கள் இறந்திருக்கின்றனர். இதே நீலகிரி -கூடலூரில் மட்டும் ஈஷாவின் கட்டடங்கள் இருந்திருக்குமேயானால் சீல் வைக்கப்பட்டிருக்குமா? சீலைத் தூக்கி "செல்'லில் போட்டிருப்பார்கள்.
ஈஷாவுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்திருக்கும் வெள்ளியங்கிரி பழங்குடியின மக்கள் சங்கத்தின் முத்தம்மாளுக்கு வரும் கொலை மிரட்டல்களை அவர் எதிர்கொண்டுதான் வருகிறார். ஈஷாவின் மீது மொத்தம் 3 வழக்குகள் ஹைகோர்ட்டில் இருக்கிறது. இன்னும் இருந்துகொண்டேதான் இருக்கும், எந்த முடிவுகளும் எட்டப்படாமல்'' என்கிறார் கோபமாய்.
-அருள்குமார்