ஸ்ரீமதி மரண வழக்கில் குற்றம்சாட்டப் பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதின்றம் உத்தரவிட்டது. அதற்கு அடுத்த நாளே, ஸ்ரீமதியின் தாயார் செல்வி, முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார்.
"அன்று தாய்ப் பசுவுக்கு நீதி கிடைத்தது, திருவாரூரை ஆண்ட மனுநீதிச் சோழனால்... இன்று ஸ்ரீமதிக்கு நீதி கிடைப்பதும் திருவாரூரில் பிறந்த மன்னன் மு.க. ஸ்டாலினால் மட்டுமே'' என, செல்வி மற்றும் ஸ்ரீமதி புகைப்படங்கள் அடங்கிய வாசகங்களால் தொடங் கும் நீதி வேண்டி விண்ணப்பத்தை ஸ்ரீமதியின் தாயார் செல்வி அளித்தார்.
"நீதி வேண்டி விண்ணப் பம் எனத் தொடங்கும் அந்த விண்ணப்பத்தில் ஸ்ரீமதியின் கொலைக்கு காரணமானவர் களைக் கண்டுபிடித்து தண்டனை வழங்க வேண்டுதல், இந்தப் பள்ளி யில் பல கொலைகள் நடந்துள்ள தால், பள்ளியை சீல் வைத்து அரசே எடுத்து நடத்த வேண்டுதல், பெண் கள் விடுதிக்கு அனுமதி இல்லாமல் நடத்தியிருப்பதால் அதற்கான தண்டனை வழங்க வேண்டும்' என மூன்று கோரிக்கைகளை முன் வைத்துள்ளார்.
"எனது மகள் ஸ்ரீமதி கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் தங்கி +2 படித்துவந்தாள். 12-07-2022 அன்று இந்தப் பள்ளியில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். ஆனால் இந்தப் பள்ளி அதை தற்கொலை என நாடகமாடு கிறது. எனது மகளின் உடற்கூராய்வு அறிக்கையில் அவள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப் பட்டாரா? என்ற முக்கியமான கேள்விக்கு, இதுவரை பதில் இல்லை. எனது மகளின் இறப்பின் தன்மையை ஆய்வு செய்த வழக்கறிஞர்கள் உண்மை அறியும் குழு, ஊடகங்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்கள் அனை வரும் கொலை என உறுதிப்படுத்தியுள்ளார்கள்.
மாண்புமிகு முதல்வர் அவர்கள், எனது மகளின் கொலைக்கு காரணமானவர் களை உடனடியாகக் கண்டு பிடித்து, தக்க தண்டனை வழங்கிடுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்'' என எழுதப்பட்டுள்ள அந்தக் கடிதத் தின் தொடர்ச்சியாக, "எனது மகள் இறந்த தருணத்திற்கு முன்பும் பின்பும் சக்தி மெட்ரிக் பள்ளியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காட்சிகளை எனக்கு காண்பிக்க காவல்துறை அதிகாரிகளைக் கேட்டேன். அவர்கள் காட்டவில்லை. என் மகள் இறந்துவிட்டதாக செய்தி சொன்ன பள்ளி நிர்வாகத்தினரிடம், நான் வரும்வரை மருத்துவ மனையில் காத்திருக்கச் சொன்னேன். ஆனால் அனைவரும் ஓடிவிட்டனர்.
என் மகள் இறந்த அன்று அவளது அறை மற்றும் உடைமைகளை காட்டச் சொன்னேன். காவல்துறையினர் காட்டவில்லை. என் மகள் எழுதியதாக ஒரு கடிதம் இருந்ததாக சொன்ன காவல்துறையினர், அதை என்னிடம் கொடுக்கா மல்... ஊடகத்திடம் படித்துக் காட்டினார்கள். என் மகளின் பிரேதப் பரிசோதனையை உரிய வருவாய் துறை மற்றும் மருத்துவ அதிகாரிகள் முன்னிலை யில் செய்யவேண்டும் என்று கோரியிருந்தேன். ஆனால் அந்த வகையில் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை. என் மகள் விழுந்ததாகக் கூறப்பட்டுள்ள இடத்தில் ரத்தம் எதுவும் இல்லை.
முதல் உடற்கூராய்வில், பாலியல் தொடர்பான பரிசோதனைகள் செய்யவில்லை. இரண்டாவது உடற்கூராய்வில் எங்கள் தரப்பில் மருத்துவரை அனுமதிக்கவில்லை. என் மகள் அணிந்திருந்த தங்கத் தோடு, வெள்ளிக் கொலுசு இரண்டையும் கேட்டதற்கு அதுபற்றிய எந்தத் தகவலும் இல்லை.
நீதியை எதிர்பார்க்கும் ஸ்ரீமதி.
"ஐயா! நான் உறங்குகிறேன் என நினைக்க வேண்டாம். ஒருவேளை நீதி மறுக்கப்பட்டால் மீண்டும் சந்திக்க வருவேன் நீதிக்காக. உங்கள் அன்பில் உறங்கும் ஸ்ரீமதி' என ஸ்ரீமதியின் இறந்த புகைப்படத்துடன் கூடிய ஒரு மனுவை அளித்தார்.
அந்த மனுவை முதல்வர் படித்துப் பார்த்தார்.
"ஸ்ரீமதியின் மரணத்தில் யார் சம்பந்தப்பட்டி ருந்தாலும், கட்சி பேதமில்லாமல் நாங்கள் நட வடிக்கை எடுப்போம்'' என்ற முதலமைச்சரிடம்... "சி.சி.டி.வி. காட்சிகளை எங்களுக்குக் காட்ட வில்லை'' என ஸ்ரீமதியின் தாயார் செல்வி சொன்னதற்கு, அந்த சந்திப்பில் முதல்வருடன் இருந்த கல்வி அமைச்சர், "கோர்ட்டில் வழக்கு இருப்பதால் அதைக் காட்டவில்லை'' என்றார்.
"கோர்ட்ல வழக்கு இருக்கும்போது அதைக் காட்டுவதற்கு தடையில்லை'' என ஸ்ரீமதியின் வழக்கறிஞர் காசிவிஸ்வநாதன் வலியுறுத்தினார். "அதற்கென்ன... நான் ஏற்பாடு செய்கிறேன்'' என்றார் முதலமைச்சர்.
"நாங்கள் உங்களைச் சந்திக்க வந்தோம். அந்த நேரம் நீங்கள் சென்னைக்குப் போயிருந்தீர்கள். அதனால் உங்களைச் சந்திக்க முடியவில்லை'' என்றார், சந்திப்பின்போது உடனிருந்த மற்றொரு அமைச்சர் எ.வ.வேலு.
இப்படி... அந்த உரையாடல் நீண்டு கொண்டே சென்றது.
ஸ்ரீமதியின் தாயார் செல்வியிடம் பத்து நிமிடம் அமைச்சர்களும், முதலமைச்சரும் பேசிக்கொண்டிருந்தார்கள். இறுதியாக... ஸ்ரீமதியின் மரணத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்திச் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்கள் ஸ்ரீமதியின் குடும்பத்தினரும், வழக்கறிஞர்களும்.
அதற்கு முந்தைய தினம், ஸ்ரீமதியின் மர்ம மரணத்திற்காக கைது செய்யப்பட்ட கனியாமூர் சக்தி பள்ளியைச் சேர்ந்த ஐந்துபேரின் ஜாமீன் வழக்கில் அரசு தரப்பில் வாதிட்ட அசன் முகமது அலி ஜின்னா, "இந்தப் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார் மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு பதியப்பட்டிருந்தது, அதில் சிறைக்குச் சென்ற அவர் பின்பு விடுதலையானார். இந்தப் பள்ளியில் ஏற்கனவே பல மரணங்கள் நடந்துள் ளன. ஸ்ரீமதியின் மரணம் பற்றி பல சந்தேகங்கள் உள்ளன'' என வாதிட் டார்.
ஸ்ரீமதி சார்பாக ஆஜரான வழக்கறிஞர் சங்கரசுப்பு, "ஸ்ரீமதியின் உடம்பில் அவர் கொலை செய்யப் பட்டார் என்பதற்கான காயங்கள் இருக்கிறது. எனவே இது கொலை தான். அதனால் சக்தி பள்ளியைச் சேர்ந்த ஐந்துபேருக்கும் ஜாமீன் வழங்கக்கூடாது'' என வாதிட்டார்.
இந்த வாதத்தில் குறுக்கிட்ட நீதிபதி இளந்திரையன், "குற்றம்சாட் டப்பட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்படவில்லை. நான்கு நாட் களுக்குப் பிறகுதான் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்த பள்ளியில் அனுமதி பெறாமல் விடுதி நடத்தினார்கள் என்பது வேறு விஷயம். எனவே இவர்களுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிடுகிறேன்'' என தீர்ப்பளித்தார்.
இதுபற்றி நம்மிடம் பேசிய ஸ்ரீமதியின் வழக்கறிஞர் சங்கரசுப்பு, "இவர்களுக்கு ஜாமீன் வழங்கியது தவறான தீர்ப்பு. இது நிச்சயம் கொலைதான்'' என்கிற வாதத்தை நான் முன்வைத்தேன். ஸ்ரீமதியின் முதல் போஸ்ட்மார்ட்டம் தகுதியில் லாத ஒரு டாக்டரால் செய்யப்பட் டது. அதில் பல உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீமதியின் உடலில் ஐந்து நபர்களை ஸ்ரீமதியை மானபங்கப்படுத்தியதற் கான கைரேகைகள் பதிந்துள்ளன. அதைப்பற்றி முதல் போஸ்ட்மார்ட்டம் எதையும் குறிப்பிடவில்லை.
இரண்டாவது போஸ்ட்மார்ட்டத்தில் அந்த விரல் ரேகைகளை பதிவு செய்ய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் ஏழு எலும்பு முறிவுகளை இரண்டாவது போஸ்ட்மார்ட்டம் நடத்திய டாக்டர்கள் கண்டுபிடித் திருக்கிறார்கள். மார்பகத்தின் முன்பக்கம், விலா எலும்பு பெல்விஸ் எனப்படும் இடுப்பெலும்பு முறிவுகளை இரண்டாவதாக போஸ்ட்மார்ட்டம் செய்த டாக்டர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
ஸ்ரீமதி பாலியல் கொடுமைக்குள்ளாக்கப்பட்டாரா என்பதைப் பற்றி முதல் போஸ்ட்மார்ட்டம் நடத்திய டாக்டர் கவலைப்படவில்லை. ஸ்ரீமதியின் மார்பில், பற்களால் கடித்த காயங்கள் இருப்பது பற்றி பல் மருத்துவரை வைத்து ஆராயவில்லை.
முதல் போஸ்ட்மார்ட்டம் முடிந்த பிறகு ஸ்ரீமதியின் உடல் கழுவப்பட்டது. அதனால் இரண்டாவது போஸ்ட்மார்ட்டம் நடத்திய குழுவினருக்கு பல தரவுகள் கிடைக்காமல் போனது. ஸ்ரீமதியின் உடம்பில் பல நகக் கீறல்கள் காணப்படுகிறது. ஸ்ரீமதி கொடுமை செய்யப்பட்டு, அதற்குப் பிறகு இறந்துள்ளார்'' என இரண்டு போஸ்ட்மார்ட் டங்களிலும் வந்த காயங்கள் தெளிவுபடுத்துகின்றன.
அந்த ஹாஸ்டலில் பத்துநாட்கள் மட்டுமே ஸ்ரீமதி தங்கியிருந்தார். அவர் இறப்பதற்கு மூன்று மணி நேரத்துக்கு முன்புதான் அவர் உணவருந்தி யிருக்கிறார். அவர் சாப்பிட்ட உணவு கூட செரிமானம் ஆகவில்லை.
"இந்த குற்றவாளிகள் அனுமதியில்லாமல் ஹாஸ்டல் நடத்தியிருக்கிறார்கள். அத்துடன் போக்ஸோ சட்டத்தின்படியும் கொலைக் குற்றத்தின்படியும் இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டிவரும் என நாங்கள் கோர்ட்டில் எடுத்துக் கூறினோம். ஆனால் நீதிபதி அவர்களுக்கு ஜாமீன் வழங்கிவிட்டார். இந்தப் போராட்டம் இத்துடன் முடியப் போவதில்லை. அடுத்தவாரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வேறொரு வழக்கில் ஸ்ரீமதி விவகாரம் விசாரணைக்கு வரவிருக்கிறது. அதில் எங்கள் தரப்பு வாதத்தை தெளிவாக மீண்டும் எடுத்துக் கூறவுள்ளோம். இந்தக் குற்றவாளிகள் இன்று ஜாமீன் பெற்றாலும்... அவர்கள் தண்டனையிலிருந்து தப்ப முடியாது'' என்கிறார் ஸ்ரீமதியின் வழக்கறிஞர் சங்கரசுப்பு.