திரையிசையால் ரசிகர்களின் வாழ்வின் அங்கமாகவே மாறிய "பாடும் நிலா' எஸ்.பி.பி.க்கு நினைவஞ்சலி கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் கலந்துகொண்ட திரையுலகினரும் பிரபலங்களும், எஸ்.பி.பி. உடனான தங்களது நினைவைப் பதிவுசெய்தனர்.
நடிகரும் இயக்குனருமான பார்த்திபன், ""என் குரலை பதிவுசெய்து மெருகேற்றிக் காட்டும் இந்த மைக்கிற்கு என் சோகம் தெரியாது. அதுபோல, இத்தனை ஆண்டுகாலம் எஸ்.பி.பி. அவர்களின் காதல் மனைவியை விடவும் நெருக்கமாக இருந்த இந்த மைக்கின் சோகத்தை யார் பேசுவது? எஸ்.பி.பி. மனதுக்கு நெருக்கமானவர், அவரது இழப்பில் இருந்து இன்னமும் மீண்டுவர இயலவில்லை. எனக்கும், எஸ்.பி.பி.சரணுக்கும் பெயர்கள்தான் வேறு, எஸ்.பி.பி. மீது வைத்த அன்பு எப்போதும் ஒன்றுதான்'' என்றார்.
""இந்த மாதிரி ஒரு சூழலில் பேச வருவேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை'' என்று உடைந்த குரலில் பேசிய பின்னணிப் பாடகி சித்ரா, “""நான் எஸ்.பி.பி. சாருடன் நிறைய பாடல்கள் பாடியிருக்கிறேன். அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். பாடல்களைப் போலவே, சக மனிதர்களை எப்படி நடத்தவேண்டும், எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை அவரிடம் இருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும்'' என்றார்.
""பாட்டுப் பாடி மட்டுமே ஒரு மனிதனால் நிச்சயம் சாதித்துவிட முடியாது. அன்பு, பண்பு, மனிதநேயத்தை வெளிப்படுத்துவதோடு, பாடவும் செய்ததால் எஸ்.பி.பி. நம் நெஞ்சில் நிலைத்திருக்கிறார். இசையமைப்பாளரின் உணர்வை உள்ளார அறிந்து பாடக்கூடியவர் எஸ்.பி.பி.'' என்றார் இசையமைப்பாளர் வித்யாசாகர்.
பாடகர் மனோ, ""எஸ்.பி.பி. அண்ணாதான் எனக்கு உலகம். 14 வயதில் இருந்து அவரைப் பார்த்து வளர்ந் திருக்கிறேன். அவர் ஒரு யுனிவர்சிட்டி. என் திருமணத்திற்கு கியாரண்டி கையெழுத்து அண்ணன்தான் போட்டார். இதுபோல ஆயிரக்கணக்கான நினைவுகளால், நான் அண்ணனோடு வாழ்ந்திருப்பேன்'' என்றார் உருக்கமாக.
நடிகர் விஜய் சேதுபதி பேசியபோது, ""பாடவே தெரி யாதவரையும் கூட, பாடலின் பல்லவியைக் கடப்பதற்குள் பாடவைத்து, தான் பார்த்திராத கோடிக்கணக்கான நபர் களை தனக்கு நெருக்கமாக ஆக்கிக்கொண்ட உன்னதமான மனிதர் எஸ்.பி.பி.'' என்றார்.
எஸ்.பி.பி. உடனான தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட நகைச்சுவை நடிகர் மயில்சாமி, ""அண்ணனுடன் வாழ்ந்திருக்கிறேன். உலகம் முழுவதும் பயணித்திருக்கிறேன். அவர் யார்மீதும் ஒருபோதும் கோபப்பட்டுப் பார்த்ததில்லை. என் மகன் திருமணத்திற்கு பத்திரிகை வைத்தபோது, இந்தத் தேதியில் நான் ஊரில் இல்லை என்றார். இன்று உலகத்திலேயே அவர் இல்லை என்று நினைக்கும்போது வேதனையாக இருக் கிறது''’என்றார் கலங்கியபடி.
நடிகர் கார்த்தி, ""மக்களின் வாழ்க்கையை சந்தோஷப்படுத்தவும், அவர்களுக்கு எப்போதும் துணையாக இருப்பதற்காகவும் சிலபேர் படைக்கப்படுவார்கள். அந்தவகையில் எஸ்.பி.பி. இயற்கையே வடிவானவர். என் அப்பாவுக்கு அவர் பாடிய பாடலைத்தான், இன்று என் குழந்தைக்குப் பாடி தூங்க வைக்கிறேன். உயிருள்ளவரை அவரை என் நெஞ்சில் வைத்திருப்பேன்'' என்றார்.
நமது நக்கீரன் ஆசிரியர் பேசியபோது, ""தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும் என்ற ஐயன் வள்ளுவனின் குறளுக்கு ஒப்பாக, உலகப்புகழ் மங்காமல் வாழ்ந்து மறைந்தவர் எஸ்.பி.பி. அண்ணன். நடிகர் திலகம் சிவாஜியைப் போலவே, நம் வீட்டு ரேசன் கார்டில் மறைமுகமாக எழுதப்பட்டிருக்கிறது எஸ்.பி.பி.யின் பெயர். தலைக்குமேல் வைரக் கிரீடத்தை வைத்துக்கொண்டே பிறரையும் மதித்து வாழ்ந்ததே, மிகப்பெரிய விஷயம். சரண் அவர் தந்தையைப் போல வரவேண்டும் என்று எல்லோரும் சொன்னார்கள். நிச்சயம் வருவார். நக்கீரன் துணையிருக்கும்'' என்று உளப்பூர்வமாக பேசினார்.
பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே, ""உடலாக இல்லாமலேகூட, உணர்வாகவே இத்தனை கோடிப் பேரை நெருங்க முடியுமென்றால், எஸ்.பி.பி. நிச்சயம் கடவுள்தான். நம்மை மகிழ்விக்க வாழ்ந்த எஸ்.பி.பி.ஐ இழந்து நாம் திண்டாடிக் கொண்டிருக்கிறோம். உண்மையில் அவரொரு கொண்டாட்டம்'' என்றார்.
""எல்லோரும் என் தந்தையுடனான நினைவைப் பகிர்ந்தார்கள். எனக்கும் அவருக்குமான நினைவுகளை என் இதயத்திலேயே பத்திரமாக வைத்துக் கொள்கிறேன். வயது வித்தியாசம் பார்க்காமல், கொண்டாட்ட வாழ்வு வாழ்ந்தவர் அப்பா. நூறு வயதுவரை வாழவேண்டும் என்பது அவர் ஆசை. என் நண்பர்களுக்கும் நண்பனாய் அவர் இருந்ததால், அவர்களே இந்த நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்தினார்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி'' என்றார் எஸ்.பி.பி. சரண்.
இந்த நிகழ்வில் கலந்துகொள்ள முடியாத கமல், கங்கை அமரன் போன்ற மூத்த கலைஞர்கள் கலங்கியபடி பேசிய வீடியோக்களும் வெளி யிடப்பட்டன. எல்லோரும் எஸ்.பி.பி.யின் நினைவைப் பகிர்ந்தார்கள். எஸ்.பி.பி.யின் குரல் கலந்த காற்று, அரங்கெங்கும் நிறைந்திருந்தது.
-ச.ப.மதிவாணன்