கடந்த 2020ஆம் ஆண்டு, சாத்தான்குளத்தை சேர்ந்த பென்னிக்ஸ், ஜெயராஜ் ஆகியோரை, விசாரணை என்ற பெயரில் லாக்கப்பில் வைத்து அடித்தே கொன்றது காவல்துறை. அவர்களுக்கு நடந்த சித்ரவதையைப் பற்றி புலனாய்வு செய்து உண்மையை வெளிக்கொண்டுவந்தது நமது நக்கீரன். அதேபோன்ற ஒரு கொடூர சம்பவம் தற்போது காஞ்சிபுரம் நகரில் நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரத்திலுள்ள காலண்டர் தெருவில் வசித்துவரும் ராஜேந்திரபாபுவின் மனைவி கஸ்தூரி. இவர், ஓய்வுபெற்ற காவல் ஆய்வாள ரான கணவரைப் பிரிந்து வாழ்ந்துவந்தார். கஸ்தூரியின் ஒரே மகன் மாதேஷ் டேராடூனி லுள்ள பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார். இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி, கஸ்தூரி வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால், போலீசாருக்கு தகவல் செல்ல, போலீசார் வீட்டைத் திறந்துசென்று பார்த்தபோது, கவிழ்ந்த நிலையில் கஸ்தூரி பிணமாகக் கிடந்தார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரபு மற்றும் காஞ்சிபுரம் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வளையா பதி ஆகியோரை கைது செய்த னர். போலீசாரின் கடுமையான விசாரணையில், கொலையை அவர்கள் செய்ததாக ஒப்புக் கொண்டதாகக் கூறப்பட்டது.
கொலையை வளையாபதி செய்யவில்லை, கொடூர சித்ர வதையால் ஒப்புக்கொள்ள வைக்கப்பட்டனரென்று காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டு இயக்கத்தை சேர்ந்த தோழர் ஆசீர் நம்மிடம் கூறினார். "முதலில் கொலை எப்போது நடந்ததென்று தெரியவில்லை. கடைசியாக கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி சனிக்கிழமை மாலை கஸ்தூரியின் மகன் மாதேஷ் செல்போனில் பேசியுள்ளார். மாதேஷுக்கு ஹெச்.டி.எஃப்.சி. வங்கியிலிருந்த பிசினஸ் அக்கவுண்டை க்ளோஸ் செய்வது தொடர்பாகத் தனது தாயிடம் பேசியுள்ளார். அதேபோல, தனக்கு பேராசிரியர் பணி கிடைத் துள்ளதால் தன்னோடு தாயையும் அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளையும் செய்து வந் துள்ளார். இதற்காகத் தங்கள் வீட்டை விற்ப தற்கு வளையாபதியிடம் பேசியிருப்பதாகவும், விலை படியவில்லையென்றும் மகனிடம் தெரிவித்துள்ளார் கஸ்தூரி. அதேபோல், அன்றைய தினம் மகனுக்கு அனுப்பியுள்ள செல்ஃபியில், கஸ்தூரி அணிந்திருந்த 24 சவரன் நகை தெளிவாகத் தெரிகிறது. மகனிடம் சிறிது நேரம் பேசிவிட்டு உறங்கச் சென்றிருக்கிறார்.
அடுத்தநாள் ஞாயிற்றுக்கிழமையன்று மாதேஷ் போன் செய்தபோது கஸ்தூரி போனை எடுக்கவில்லை, திங்கட்கிழமை யன்று, மாதேஷ் அனுப்பிய கொரியர் தொடர் பாக காஞ்சிபுரம் கொரியர் அலுவலகத்திலிருந்து போன் போட்டபோதும் கஸ்தூரி எடுக்க வில்லை. மகன் மாதேஷ் அனுப்பிய கொரியருக் காக காஞ்சிபுரம் கொரியர் அலுவலகத்தில் இருந்து போன் செய்தும் கஸ்தூரி எடுக்கவில்லை, டாகுமெண்டை ரிட்டர்ன் அனுப்புவது தொடர்பாக ஆகஸ்ட் 21ஆம் தேதி கொரியர் அலுவலகத்திலிருந்து மாதேசுக்கு போன் செய்ய, அதையும் எடுக்காத தால் மாதேஷ் சந்தேகப்பட்டு தன் நண்பர்களுக்கு தகவல் தர, நண்பர் கள் சென்று பார்த்தபோது, கஸ்தூரி தங்கியிருந்த முதல் மாடியிலிருந்து துர்நாற்றம் வீச, மாதேஷிற்கு தகவல் கொடுத் துள்ளனர். அதேநேரம், உறவினரும் குடும்ப நண்பருமான வளையாபதிக்கும் மாதேஷ் போன் செய்துள்ளார். அவர் விரைந்து வந்து பார்த்து போலீசுக்கு தகவல் கொடுக்க, போலீசார் வந்து பார்த்தபோது, கஸ்தூரியின் உடல் அழுகிய நிலையில் குப்புறக் கவிழ்ந்தபடி கிடந்துள்ளது. கஸ்தூரியின் உடலை பிணக்கூராய்வுக்கு போலீசார் அனுப்ப, விஷயமறிந்து கஸ்தூரியின் மகன் மாதேஷ், விமானத்தில் விரைந்து வந்துள்ளார்.
பிணக்கூராய்வுக்காகக் கொண்டுசெல்லப் பட்ட கஸ்தூரி உடலின் போட்டோவைப் பார்த்ததுமே தலைமை மருத்துவரான டாக்டர் அங்கயற்கண்ணி, 'கஸ்தூரியின் தலையில் பின் பகுதியிலும், முன்பகுதியிலும் கனமான பொருளை வைத்துத் தாக்கியுள்ளதாக முதற் கட்டமாகத் தெரிவித்துள்ளார். ஆகவே இது கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டு விசா ரணை நடத்தப்பட்டது. கஸ்தூரியின் ஈமச் சடங்கை முடித்து, அஸ்தியை கோவளம் கடலில் கரைக்கும்வரை வளையாபதியும் உடனிருந்துள் ளார். இந்நிலையில், ஆகஸ்ட் 25ஆம் தேதி இரவு 10 மணியளவில் வளையாபதியின் பணி யாளரான எலக்ட்ரீஷியன் பிரபுவை விசா ரணைக்காக போலீசார் அழைத்துச்சென்றுள்ள னர். அந்நேரத்தில் பிரபுவின் மனைவி தீபாவும், அவர்களது மகனும் இருந்துள்ளனர். பின்னர் பிரபுவின் அக்கா வீட்டிலும், பரந்தூரிலுள்ள அவரது அண்ணன் வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தியுள்ளனர்.
ஆகஸ்ட் 26ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு, வாலாஜாபாத்தை அடுத்த கருக்குப்பேட்டை பகுதியில் காரில் வந்துகொண்டிருந்த வளையாபதியை, டி.எஸ்.பி. மணிமேகலை டீம் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அவரது மனைவி யை அந்த காரிலே வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவரை வீட்டில் இறக்கிவிட்டபின் சிவகாஞ்சிபுரம் காவல் நிலையத் துக்கு சென்ற கார் டிரைவர் பழனியை, கலால் காவல் நிலையம் அருகே அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு ஏ.எஸ்.பி. உதயகுமார் மற்றும் மூன்று எஸ்.ஐ.கள் அடங்கிய 15 பேர் கொண்ட போலீஸ் டீம் இருந்துள்ளனர். இரவு 10 மணியளவில் வளையாபதி கால் தாங்கியபடி வெளியே வந்துள்ளார். அடுத்த அறையில் விசா ரணையிலிருந்த பிரபுவை வளையாபதியிடம் அழைத்து வந்தபோது பிரபு, "அண்ணே, நீங்க சொல்லித்தானே செஞ்சேன்'' என்று கூறியுள் ளார். அடுத்ததாக, "ஒழுங்காக கொலையை நீ தான் செய்ததாக ஒத்துக்கொள்'' எனக்கூறி, 66 வயதான வளையாபதியை இரவு முழுக்க ரப்பர் ராடு போன்ற ஆயுதத்தால் அடித்து சித்ரவதை செய்துள்ளனர். இதேபோல் பிரபுவையும் சித்ரவதை செய்துள்ளனர்.
ஆகஸ்ட் 27ஆம் தேதி, பிரபு சுய நினைவை இழந்து மரணப்படுக்கைக்கு சென் றுள்ளார். போலீஸ் வாகனத்திலிருந்து குதித்த போது விபத்து ஏற்பட்டதாகக்கூறி செங்கல் பட்டு அரசு மருத்துவமனையில் பிரபுவை சேர்த்துள்ளனர். பிரபுவின் உறவினர்கள் வந்து பார்த்தபோது, கொடூரமாகத் தாக்கப் பட்டது தெரியவந்தது. கால் கட்டை விரல்கள் உடைக்கப்பட்டு, ஆசன வாயில் லத்தியை நுழைத்தும், பிறப்புறுப்பில் ஊசியை செலுத்தியும் கொடூரமாக சித்ரவதை செய்துள்ளனர். போலீசாரின் தாக்குதலால் பிரபுவின் இரண்டு கிட்னியும் செயலிழக்க, மூன்று நாட்களுக்கு ஒருமுறை டயாலிசிஸ் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் பிரபு. இதேபோல் வளையாபதி போலீசாரின் கொடூர தாக்குதலுக்குப்பின்னும் போலீசாரின் மிரட்டலுக்கு பணியாததால், தாம்பரத்திலுள்ள அவரது மருமகனான மருத்துவரை அழைத்து வந்தது போலீஸ். மருமகனின் ஆடைகளைக் கழற்றி நிர்வாணப்படுத்துவோம் என வளையா பதியை அச்சுறுத்தியதால் வேறுவழியின்றி கொலையை தானே செய்ததாக ஒப்புக்கொண்டி ருக்கிறார் வளையாபதி. அதேபோல், வளையா பதியின் மருமகனை வெளிவிட வேண்டுமென் றால் ஐந்து சவரன் நகை வேண்டுமென்று, வளையாபதியின் மனைவி முத்து சரஸ்வதியிடம், சிவகாஞ்சி காவல் ஆய்வாளர் ஜெயவேல் மிரட்ட, அவரும் காஞ்சிபுரம் தனலட்சுமி நகைக்கடையில் 5 பவுன் நகையை வாங்கிக் கொடுத்துள்ளார். அந்த நகையைத்தான் கஸ்தூரியிடமிருந்து திருடியதாக நீதிமன்றத்தில் போலீசார் ஒப்படைத்துள்ளனர்.
இந்நிலையில், ஆகஸ்ட் 28ஆம் தேதி, வளையாபதியை, செங்கல்பட்டு சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, உடலிலிருந்த காயங்களைப் பற்றி நீதிபதி விசாரிக்க, பாத்ரூமில் வழுக்கி விழுந்துவிட்டேனென்று போலீஸ் சொன்னது போலவே சொல்லியிருக்கிறார் வளையாபதி. வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட வளையாபதியை வழக்கறிஞர் இம்ரான் சந்திக்கச் சென்றபோது, நடக்க முடியாததால் வீல் சேரில் அழைத்துவரப்பட்டுள்ளார் வளையாபதி. உடலெங்கும் காயங் களாக இருந்திருக்கிறது. மறுநாள் மயங்கிவிழவும், சுயநினைவு தப்பிய நிலையில் வேலூர் அரசு மருத் துவமனையில் சேர்க்கப்பட்டுள் ளார். தற்போது வளையாபதிக்கும் கிட்னி பெயிலியராக, டயாலிசிஸ் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டு, உயிருக்குப் போராடும் நிலையில் தான் இருக்கிறார்'' என்றார்.
வழக்கறிஞர் இம்ரான் கூறு கையில், "கஸ்தூரி குடும்பத்தோடு வளையாபதி குடும்பத்தினர் நல்ல நட்புறவில் தான் இருந்துள்ளனர். மாதேஷுக்கு பெண் பார்க்கும் பணியையும் செய்திருக்கிறார் வளையாபதி. வளையாபதியை கைது செய்த ஏ.எஸ்.பி. உதயகுமார், "நீதான் எலட்ரீஷியன் பிரபு மூலம் கொலை செய்ததாக ஒப்புக்கொள்' எனக்கூறி, சுவரில் இரண்டு கைகளையும் தூக்கியபடி நிற்கவைத்து, எட்டு போலீசார் ரப்பர் ராடால் தாக்கியுள்ளனர். அவர் இறுதிவரை ஒப்புக்கொள்ளாததால் மருமகனை அழைத்துவந்து நிர்வாணப்படுத்த முயன்றபோது தான் வேறுவழியில்லாமல் ஒப்புக்கொண்டிருக்கிறார். கஸ்தூரியைக் கொல்ல வளையாபதிக்கு என்ன மோட்டிவ்? கஸ்தூரிக்கு வாரிசு இருக்கையில், வளையா பதி எப்படி சொத்தை அடையமுடியும்? வளையாபதியும் ஏகப்பட்ட சொத்துக் களோடு வசதியாக இருக்கும்போது ஏன் சொத்துக்காக கொலை செய்யவேண்டும்? இவர்கள் கொலை செய்ததற்கு என்ன ஆதாரம்? கஸ்தூரியின் 24 சவரன் நகை, கம்மல், மோதிரம் எங்கே? வளையாபதி மனைவியிடம் ஏன் 5 சவரன் நகையை காவல் ஆய்வாளர் ஜெயவேல் வாங்க வேண்டும்? இதுபோன்ற கேள்விகளிலிருந்தே போலீசார் வழக்கை ஜோடிப்பது அம்பலமாகிறது'' என்கிறார்.
வழக்கு தொடர்பாக எஸ்.பி. சண்முகம், டி.எஸ்.பி. மணிமேகலை, காவல் ஆய்வாளர் ஜெயவேலிடம் கேள்வியெழுப்பிய போது யாரும் சரியான பதிலைக் கூறவில்லை. மீண்டும் ஒரு சாத்தான்குளம் சம்பவம் நடந்திருப்பதாகவே தெரிய வருகிறது!