ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு அ.தி.மு.க.வுக்குள் தொடங்கிய அதிகாரப்போட்டியால் அ.தி.மு.க. நான்காக உடைந்த சூழலில், கட்சிக்குள்ளும், நீதிமன்றங்களிலும் நடந்த போராட்டங்களில் அடுத்தடுத்து எடப்பாடி பழனிசாமியின் கையே ஓங்கியதால், எதிரிக்கு எதிரி நண்பன் என்று டி.டி.வி.தினகரனோடு இணைந்து செயல்படத் தொடங்கியுள்ளார் ஓ.பி.எஸ். சசிகலா மட்டும் பிடிகொடுக்காமல் தனித்தியங்க, வைத்தி லிங்கத்தின் மகன் திருமண விழாவை, சசிகலா வோடு இணைவதற்கான மேடையாக மாற்ற ஓ.பி.எஸ். விரும்பினார். ஆனால் அந்த திருமண விழாவிலும் சசிகலா கலந்துகொள்ளாமல் புறக்கணித்தது ஓ.பி.எஸ். ஆதரவாளர்களைச் சோர்வடையச் செய்துள்ளது.

dd

தஞ்சாவூர் மகாராஜா மஹாலில், ஜூன் 7ஆம் தேதி புதனன்று, மாஜி அ.தி.மு.க. அமைச்சர் வைத்திலிங்கத்தின் மகன் சண்முகபிரபு - யாழினி இணைக்கு, ஓ.பி.எஸ். தலைமையில் திருமணம் நடந்தது. திருமணத்தில் டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். டி.டி.வி.தினகரனும், ஓ.பி.எஸ்.சும் ஒன்றாக சேர்ந்து தாலி எடுத்துக்கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தது அனைவர் கவனத்தையும் ஈர்த்தது.

விழாவில் வாழ்த்திப்பேசிய ஓ.பி.எஸ், "அ.தி.மு.க. தொண்டர்களின் எண்ணமே அனைவரும் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்பதுதான். தொண்டர்கள் தான் இயக்கத்தின் ஆணி வேர். ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் மலரச் செய்ய அனைவரும் ஒன்றுசேர வேண்டும். அப்படி ஒன்றிணைந்து அரசியல் செய்தால் நம்மை வெல்ல யாரும் கிடையாது'' என்று நாசூக்காக பா.ஜ.க.வுக்கும் குட்டு வைத்தார்.

அடுத்ததாகப் பேசிய தினகரன், "சிலரின் துரோகத்தால், சுயநலத்தால், ஆதிக்க மனப்பான்மையால், பேராசையால், அ.தி.மு.க.விலிருந்து கனத்த இதயத்தோடு வெளியேறி, ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அ.ம.மு.க. என்ற கட்சியை தொடங்கவேண்டிய கட்டாயமானது. ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் அ.தி.மு.க. நிர்வாகி களையும், கட்சியினரையும் ஒரே மேடையில் சந்திப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த இணைப்பு இயற்கையாகவே நடந்தது. துரோகிகளுக்கு பாடம் புகட்டவும், உண்மையான ஜெயலலிதாவின் ஆட்சியை தமிழகத்தில் கொண்டுவரவும் நாங்கள் அனைவரும் ஒருங்கிணைந்துள்ளோம்''’என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு குட்டு வைத்தார்.

வைத்திலிங்கம் ஆதரவாளர் ஒருவரிடம் இவ்விழா குறித்து கேட்டபோது, "அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ்.சுக்கான அனைத்து வழிகளையும் தனது பண பலத்தால் அடைத்துவிட்டார் எடப்பாடி பழனிச்சாமி. அதோடு, வைத்திலிங்கத்தின் அரசியல் எதிர்காலத்திற்கு வேட்டு வைக்க முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜை பயன்படுத்தினார் எடப்பாடி. இச்சூழலில் தான் வேறுவழியில்லாமல் டி.டி.வி.தினகரனை சந்தித்தார் ஓ.பி.எஸ். அடுத்த கட்டமாக சசிகலாவையும் சந்திப்பேன் எனக் கூறியிருந்தார். ஆனால் சசிகலாவை சந்திக்க எடுத்த முயற்சி களுக்கு சசிகலா பிடிகொடுக்கவில்லை. தினகரன் மீதான கோபமும், நாங்கள் இணைந்தால் சமுதாயரீதியாக இணைந்ததாக விளம்பரப்படுத்துவார்கள் என்று அஞ்சியுமே நேரில் ஒருங்கிணையாமல், "என்னுடைய ஆதரவு எப்பவும் உங்களுக்கு உண்டு. நான் ஒருபுறம் அ.தி.மு.க.வை இணைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறேன். வெற்றி நமக்குத்தான்' எனக் கூறினார்.

இச்சூழலில், ஐப்பசி மாதம் நடக்கவிருந்த வைத்திலிங்கத்தின் மகன் திருமணத்தை அவசர அவசரமாக நடத்த ஏற்பாடு செய்தனர். வைத்திலிங்கத்தின் சம்பந்தி தவமணியும் சசிகலாவின் ஆதரவாளர் தான். திருமணத்தில் சசிகலா, தினகரன், ஓ.பி.எஸ்., திவாகரன் என ஒதுங்கியிருப்பவர்களை ஒரே நேரத்தில், ஒரே மேடையில் ஏற்றி விட வேண்டும் என நினைத்தார் வைத்திலிங்கம். இப்படிச்செய்தால் கூட்டணி வலிமை பெறும், தனக்கெதிராகச் செயல்படும் முன்னாள் அமைச்சர் காமராஜையும் காலி செய்துவிடலாமென நினைத்தார். ஆனால் திருமண அழைப்பிதழ் கொடுக்கச் சென்றபோதே "எனக்கு உடல் நலம் சரியில்ல, அதோட நான் அங்கு வந்தால் அவ்வளவு சரியா இருக்காது. திருமணம் முடிந்ததும் வீட்டிற்கு வந்து மணமக்களை வாழ்த்துகிறேன்' எனக்கூறி வைத்தியின் ஆசையில் இடியை இறக்கினார் சசிகலா. திவாகரன் எடப்பாடியோடு மறைமுக நட்பிலிருப்பதையும் சசிகலா புறக்கணிப்புக்கு ஒரு காரணமாகச் சொல்கிறார்கள். சசிகலாவிற்கு வைத்திலிங்கத்தின் மீது பாசம் உண்டு. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், வைத்தியின் பிறந்த நாளில் ஒரத்தநாடு போகிற வழியில் சந்தித்து வாழ்த்தினார். திருமணத்திற்கு நிச்சயம் வருவார் என எதிர்பார்த்திருந்தார். ஆனால் அது நடக்கவில்லை''” என்றார் விரிவாக.

Advertisment

ss

இதுகுறித்து அ.தி.மு.க. வட்டாரத்தில் விசாரித்தோம்... "ஜெயலலிதா காலத்தில் அதிகாரமிக்கவராக வலம்வந்தவர் வைத்திலிங்கம். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிரச்சனைகளை சரிசெய்வதிலும் இறங்கினார். எடப்பாடியால், வைத்திலிங்கம் கட்டம்கட்டப்பட்ட பிறகு, வைத்திலிங்கத்தின் சொந்த ஊரான ஒரத்தநாட்டிலேயே பொதுக்கூட்டம் நடத்தி வைத்திலிங்கத்தை கடுமையாகச் சாடினார் எடப்பாடி. ஆர்.காமராஜும் சேர்ந்துகொண்டு வைத்திலிங்கத்தை எதிர்த்ததால், வைத்தியை ரொம்பவே சூடாகி, தீவிர எதிர் அரசியலில் இறங்கினார் வைத்தி. இந்நிலையில், தனது மகனின் திருமணத்தில் சசிகலா, ஓ.பி.எஸ்., தினகரன் மூவரையும் மேடையேற்ற நினைத்தார் வைத்திலிங்கம். நினைத்தது நிறைவேறாமல் போனதில் வைத்திலிங்கத்துக்கும் ஓ.பி.எஸ்.ஸுக்கும் ஏமாற்றமே''’என்கிறார்கள். ஓ.பி.எஸ். அணியின் ஆசை இனி என்று நிறைவேறுமோ!

Advertisment