"ஹலோ தலைவரே, ஒரு பக்கம் தேர்தல் தகிப்பு விறுவிறுப்பா எகிறுதுன்னா, இன்னொரு பக்கம் எதிர்க்கட்சிகளை நோக்கி புதிய புதிய அஸ்திரங்களை ஏவத் தொடங்கியிருக்கு டெல்லி.''”
"ஆமாம்பா, இந்தமுறை தமிழகத்தில் முடிஞ்சவரை அடிச்சிப் பார்த்துடறதுங்கிற முடிவோட டெல்லி இருக்குதே?''”
"உண்மைதாங்க தலைவரே, அதுக்காக எதையும் செய்யத் தயாரா இருக்கு டெல்லி. தலைமறைவாக இருந்த போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜாஃபர் சாதிக்கை, அதிரடியாகக் கைது செய்த மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர், சாதிக்கை தங்கள் கஸ்டடியில் வைத்து விசாரித்து வருகிறார்கள். எப்படியாவது சாதிக்கிடம் தி.மு.க.வின் முக்கியப் புள்ளிகளைப் பற்றி வாக்குமூலம் வாங்கும் முயற்சிகளும் தீவிரமா நடக்குது. இந்த நிலையில், ஜாஃபரின் சகாவான சதா என்கிற சதாசிவத்தையும் 13ஆம் தேதி கைது செய்திருக்கிறார்கள். இந்த விவகாரத்தை தி.மு.க.வுக்கு எதிராகவே கொண்டு செல்லத் துடிக்கும் டெல்லி, இதற் காக, ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரியான ஜே.கே. திரிபாதியை சிறப்பு விசாரணை அதிகாரியாக நியமிக்கவும் திட்டமிடுது. தேர்தலுக்கு முன் தி.மு.க. தரப்பை மக்கள் முன் அசிங்கப்படுத் தறதுதான், அந்த விசாரணை டீமுக்கு கொடுக் கப்பட்டிருக்கும் ஸ்பெஷல் அசைன்மெண்ட்டாம்.''
"இதை எப்படி தி.மு.க. எதிர்கொள்ளப் போகிறது?''”
"போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஜாஃபர் சாதிக் விவகாரத்தில் தி.மு.க. தனியாக ஒரு ஸ்பெஷல் டீமை வைத்து விசாரணை நடத்தியிருக்கிறது. சாதிக் தங்கள் கட்சிப் பிர முகர்கள் யார் யாரிடம் நெருக்கமாக இருந்தான் என்றும், அவன் யார் யாருக்கெல்லாம் பணம் கொடுத்தான் என்றும் துருவியிருக்கிறார்கள். ஆனால் ஜாபரிடமிருந்து சம்பந்தப்பட்ட பகுதியின் தி.மு.க. மா.செ. உட்பட எவரும் கை நீட்டவில்லை என்பது அதில் தெரியவந் திருக்கிறது. அரசின் திட்டங்களுக்கு பத்தோடு பதினொன்றாக சாதிக் நிதி கொடுத்திருப்பதைத் தவிர, வேறு எவருக்கும் தனிப்பட்ட முறையில் அவன் பணம் கொடுக்கவில்லை என்பதையும் உறுதிசெய்த பிறகே அறிவாலயத் தரப்பு நிம்மதி அடைந்திருக்கிறதாம். அதனால் என்னதான் டெல்லி திட்டமிட்டாலும், இந்த வில்லங்க விவகாரத்தில் தங்களை சிக்கவைக்க முடியாது என்று தெம்பாக சொல்ல ஆரம்பித்திருக்கிறது தி.மு.க.''”
"சரத்குமார் தனது கட்சியை பா.ஜ.க. வோடு இணைத்து, தன் ஆதரவாளர்களுக்கு திடீர் ஷாக் கொடுத்திருக்கிறாரே?''”
"பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடப் போகிறோம் என்று சொல்லி வந்த சரத்குமார், தனது சமத்துவ மக்கள் கட்சி யை பா.ஜ.க.வுடன் இணைப்பதாக அறிவித்து விட்டார். இது அவரது ஆதரவாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. 2007-ல் கட்சியைத் தொடங்கிய சரத்தை, அவர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு தரப்பினர் ஆதரித்து வந்தனர். கட்சியை பா.ஜ.க.வில் இணைக்கும் முடிவை எடுப்பதற்கு முன், அவர் கட்சியின் ஏனைய நிர்வாகிகளிடம் கூட ஆலோசிக்கவில்லை என்கிற குரல் எழுந்திருக்கிறது. இந்த நிலையில் அதிருப்தியில் இருக்கும் அவரது கட்சியின் நிர்வாகிகளையும் தொண்டர்களையும், தங்கள் கட்சிகளில் இணைத்துக் கொள்ள, தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் ஆர்வம் காட்டுகின்றன.''”
"சரத்தை பா.ஜ.க.வின் மாநிலத் தலைவராக நியமிப்பதற்கான ஆலோசனை நடப்பதாகச் சொல்கிறார்களே?''”
"இதுக்கு முன்னாடி ஒரு முக்கியமான தகவலை உங்களுக்குச் சொல்றேங்க தலைவரே.. கேரள மாநிலம் விழிஞ்ஞம் கடற்கரையில் போதைப் பொருளான ஹெராயினை 300 கிலோ அள விற்குக் கடத்திய விவகாரத்தில் 10 இலங்கைத் தமிழர்கள் உட்பட 13 பேர் மத்திய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ.வால் கைது செய்யப் பட்டனர். இந்தக் கும்பலுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ஆதிலிங்கம் என்பவரும் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். இவ ரிடம் நடந்த விசாரணையின்போது அவர் இந்த பிசினஸில் சம்பாதித்த பணத்தை, சினிமாவில் முதலீடு செய்ததும் தெரியவந்திருக்கிறது. இந்த ஆதிலிங்கம், சரத்தின் மகளான நடிகை வர லட்சுமியின் முன்னாள் உதவியாளர் என்பதால், இந்த விவகாரம் குறித்து வரலட்சுமியை விசாரிக்கவும் என்.ஐ.ஏ. தீர்மானித்தது. இந்த விவகாரத்தைத் துருப்பாக வைத்துதான், நடிகர் சரத்குமாரை தங்கள் பக்கம் பா.ஜ.க. வளைத்திருக்கிறது என்கிறார்கள். இந்த நிலையில்தான் சரத்தை, தமிழக பா.ஜ.க. தலைவராக்கினால், பா.ஜ.க. கூட்டணிக்கு அ.தி.மு.க. வரக்கூடும் என்கிற எண்ணத் தில் சில மூவ்கள் நடந்து வருவதாக கமலாலயத் தரப்பில் பேச்சு அடிபடுகிறது.''”
"அதெல்லாம் இருக்கட்டும். இந்த நேரத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்குமாங்கிற கேள்வியையும் சிலர் கிளப்பறாங்களே?''”
"அதுக்கு என்ன காரணம்கிறதைச் சொல்றேங்க தலைவரே, இந்திய தேர்தல் ஆணையர் களில் ஒருவரான அருண் கோயல் கடந்த வாரம் திடீரெனத் தன் பதவியை ராஜினாமா செய்து விட்டார். அதனால் தேர்தல் ஆணையத்தின் இரண்டு ஆணையர் பதவிகளும் காலி நாற்காலிகளா ஆகிவிட்டது. தற்போது, தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் மட்டுமே பதவியில் இருக்கிறார். இந்த நிலையில், காலியாக உள்ள தேர்தல் ஆணையருக்குரிய 2 இடங்களையும் நிரப்ப மோடி அரசாங்கம் தீவிரம் காட்டுது. அதே சமயம், உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கு இதற்கு தடையாக இருக்குமோ என்ற விவாதமும் நடந்துவருகிறது. அது என்னன்னா, தலைமைத் தேர்தல் ஆணையரையும், தேர்தல் ஆணையர்கள் இருவரையும் தேர்வு செய்யும் கமிட்டியில் பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.''”
"ஆமாம்பா...''”
"இந்த நிலையில் அண்மையில் சட்டத் திருத்தத்தின் மூலம், இந்தக் கமிட்டியில் இருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கி விட்டு அவருக்கு பதிலாக மத்திய அமைச்சரவைக் குழுவைச் சேர்த்துவிட்டது மோடி அரசு. இந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட சட்டச் சிக்கல்கள் இருக்கும் போது, தேர்தல் ஆணையர்களை மோடி அரசால் நியமிக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த சூழலில் இந்த வழக்கின் விசாரணை வருகிற 15ஆம் தேதி உச்சநீதிமன்றத் தில் வரப்போகிறது. அப்போது அது எடுக்கும் முடிவைப் பொறுத்தே இந்த நியமனங்கள் அமையும் என்கிறார்கள். நியமனத்திற்கு எதி ராக நீதிமன்றம் நின்றால், தேர்தலே தள்ளிப் போக வாய்ப்பிருப்பதாகவும் சொல்கிறார்கள். ஆனால் அந்த அளவிற்கு நிலைமை போகாது என்கிறவர்களும் அதிகமாய் இருக்கிறார்கள்.''”
"அதெல்லாம் சட்டப்படி நடக்கட் டும்ப்பா. இந்த நேரத்தில் தி.மு.க. பொன்முடி, மீண்டும் அமைச்சராகப் போகிறார்னு தகவல் வருதே?''”
"ஆமாங்க தலைவரே, கடந்த 2006-2011 வரையிலான தி.மு.க. ஆட்சிக் காலத்திலும் அமைச்சராக இருந்த பொன்முடி, அந்தக் காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, அவர் மீதும், அவர் மனைவி விசாலாட்சி மீதும் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கைப் பதிவு செய்தது. நீண்ட காலமாக இழுபட்டுவந்த இந்த வழக்கிலிருந்து, விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் இவர்களை விடுவித்தது. இதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த மேல்முறையீட்டை விசாரித்த உயர்நீதிமன்றம், பொன் முடி மற்றும் அவரது மனைவி இருவருக்கும் அதிரடியாக தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஷாக் கொடுத்தது. இதனால் பொன்முடியின் அமைச்சர் பதவியும் எம்.எல்.ஏ. பதவியும் ஒருசேர பறிபோனது. இந்த நிலையில் இந்தத் தீர்ப்பை நிறுத்திவைக்கக் கோரி பொன்முடி தரப்பு, உச்ச நீதிமன்றத்தில் முறையிட, பொன்முடி குற்ற வாளி என்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்து, அவர் தரப்பு சந்தித்து வந்த முட்டுக் கட்டைகளை விலக்கியிருக்கிறது. இதைத் தொடர்ந்து அவரது எம்.எல்.ஏ. பதவி அவ ரிடமே திரும்புகிறது. இதற்கிடையே, பொன் முடியின் திருக்கோவிலூர் தொகுதி காலியான தாக சட்டமன்றத் தரப்பு வெளியிட்ட அறிவிப் பும் திரும்பப் பெறப்பட்டிருக்கிறது. எனவே, பொன்முடி விரைவில் பழையபடி அமைச்சர் ஆக்கப்பட இருக்கிறார் என்ற டாக் அறிவாலயத் தரப்பில் பரபரப்பாக அடிபடுகிறது.''”
"தேர்தலை முன்னிட்டு, தங் கள் பேச்சாளர்களின் ஆலோ சனைக் கூட்டத்தை தி.மு.க. நடத்தியிருக்குதே?''’
"தேர்தல் நெருங்கி விட் டாலே தி.மு.க.வில் பேச்சாளர் களுக்கான முக்கியத்துவம் கூடிவிடும். அந்த வகையில், தேர்தல் பணிகளில் பேச்சாளர்களின் பங்கு குறித்து விவாதிக்க, அவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தை அக்கார்ட் ஓட்டலில் 12ஆம் தேதி தி.மு.க. நடத்தி யது. இதில் ஜெகத்ரட்சகன், திருச்சி சிவா, ஆர்.எஸ். பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் தி.மு.க.வின் பேச்சாளர்கள் 350 பேர் பங்கேற்ற நிலையில், இந்தக் கூட்டத்திற்கு தலைமை ஏற்க இருந்த உதயநிதி, வேட்பாளர் தேர்வில் பிஸியாகி விட்டதால் இதில் கலந்துகொள்ளவில்லை. கடைசியில் ஜெகத்ரட்சகன் தலைமையில் இந்தக் கூட்டம் நடந்தது. அது முடிந்ததும் பேச் சாளர்கள் அனைவரையும் அறிவாலயத்துக்கு வரவழைத்து, தலா ஒரு சூட்கேஷும், 5000 ரூபாய் பணமும் கொடுத்து, மகிழ்ச்சிப்படுத்தி அனுப்பியிருக்கிறது அறிவாலயம்.''”
"தி.மு.க.வின் சிட்டிங் தொகுதியான திண்டுக்கல்லை சி.பி.எம். வாங்கியதில், தி.மு.க. தரப்பில் சுணக்கம் தெரிகிறதே?''”
“"உண்மைதாங்க தலைவரே, திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் சிட்டிங் எம்.பி. யாக இருப்பவர் தி.மு.க.வைச் சேர்ந்த வேலுச் சாமி. இவர் கடந்த தேர்தலின்போது தமிழ் நாட்டில் அதிக வாக்கு வித்தியாசத்தில், அதா வது 5 லட்சத்து 40 ஆயிரம் வாக்குகள் கூடுத லாகப் பெற்று, வெற்றி வாகை சூடினார். எனவே இந்தமுறையும் இந்தத் தொகுதி தி.மு.க.வுக்கு தான் என்று அமைச்சர்களான ஐ.பெரியசாமி, சக்கரபாணி உள்ளிட்டோர் ஆவலோடு காத் திருந்தனர். ஆனால், கூட்டணிப் பேச்சுவார்த் தை யின்போது திண்டுக்கல்லை சி.பி.எம். கட்சி தி.மு.க.விடமிருந்து வாங்கிவிட்டது. இது அங் குள்ள தி.மு.க.வினரை சோர்வடையச் செய்திருக் கிறது. எனினும் கட்சியின் உத்தரவு இது என்பதால் அனைவரும் கப்சிப் என்று இருக்கிறார்கள்.''
"திண்டுக்கல்லில் சி.பி.எம். கட்சி, யாரை நிறுத்தப்போகிறது?''”
"ஒரு பெரிய டீமே தொகுதி மீது பார்வையை வைத்திருக்கிறது. குறிப்பாக, திண்டுக்கல்லில் சம்பந் தம்; பண்ணியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செய லாளர் பாலகிருஷ் ணன் பெயர் இங்கு பலமாக அடிபடுகிறது. அதேபோல் அக்கட்சி யின் மாநில செயற்குழு உறுப்பினரும் மூன்று முறை திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவருமான தோழர் பாலபாரதி நிறுத்தப் படலாம் என்கிற எதிர்பார்ப்பும் அங்கே நிலவுகிறது. கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரக்கூடி யவர் என்கிற நம்பிக்கையை இவர் இப்பகுதி மக்களிடம் பெற்றிருக்கிறார். அதேபோல், கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினரான வாசுகியின் பெயரும், சட்டமன்றத் தேர்தலில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை எதிர்த்து போட்டியிட்ட மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டியனின் பெயரும் அடிபடு கிறது. இவர்களோடு சச்சிதானந்தம், மத்திய கமிட்டி உறுப்பினரான சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினரான தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் ராமலிங்கம், பேராசிரியர் மூட்டா மனோகரன் ஆகியோரின் பெயர்களும் விறு விறுப்பாக அடிபடுகிறது. இருப்பினும், 15ஆம் தேதி சென்னையில் நடக்கும் சி.பி.எம்.மின் செயற்குழுக் கூட்டத்தில், வேட்பாளர்களைத் தீர்மானிக்க இருக்கிறார்களாம்.''”
"பா.ஜ.க.வுடன் கூட்டணியை உறுதி செய்திருக்கிறதாமே பா.ம.க?''”
"ஆமாங்க தலைவரே, ஒரு பக்கம் பா.ம.க. ராமதாஸ் தரப்பு எடப்பாடியோடு கூட்டணி பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போதே, அன்புமணி தரப்பு பா.ஜ.க.விடம் டீலிங் பேசி முடித்திருக்கிறது. 10 லோக்சபா தொகுதி, ஒரு ராஜ்யசபா தொகுதி மற்றும் அன்புமணிக்கு ஒன்றிய அமைச்சர் பதவி என்கிற கோரிக்கை யோடுதான் இந்தப் பேச்சுவார்த்தை ஆரம்பித் தது. அன்புமணியின் ராஜ்யசபா மற்றும் அமைச்சர் பதவி குறித்த டிமாண்டுக்கு நோ சொல்லிவிட்டது டெல்லி. ராஜ்யசபா சீட் அவசியம் வேண்டும் என்றால் 4 லோக்சபா தொகுதி மட்டும்தான் ஒதுக்க முடியும். ஓ.கே.வா? என்று பா.ஜ.க. கறார் காட்டியது. இதில் மிரண்டுபோன அன்புமணி, தேர்தல் ஆணையத்தில் பா.ம.க.வின் அங்கீகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ள, 8 சதவீத வாக்குகள் அல்லது 2 எம்.பி.க்கள் அல்லது 6 எம்.எல்.ஏ.க் கள் இருக்கவேண்டும். எங்களிடம் 6 எம்.எல்.ஏ.க் கள் இல்லை. அதனால் இந்தத் தேர்தலில் 8 சத வீத வாக்குகளை பா.ம.க. பெற வேண்டியிருக் கிறது. அதனால், 10 லோக்சபா தொகுதிகளை எங்களுக்குக் கொடுங்கள் என்று வலியுறுத்தி, இதற்கு ஓகே. வாங்கியிருக்கிறாராம். இதுதான் புதன்கிழமை இரவு வரையிலான நிலவரம்.''”
"பா.ம.க.வின் இந்த முடிவுக்கு அன்புமணியின் பயம்தான் காரணம் என்கிறார்களே?''”
"கடந்த 15 நாட்களாக அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. திரைமறைவில் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. ஏறத்தாழ கூட்டணியையே உறுதி செய்துவிட்டார் ராமதாஸ். இந்த நிலையில்தான் டெல்லியுடன் பேசி, அப்படியே நிலைமையை மாற்றியிருக்கிறார் அன்புமணி. இதற்குக் கார ணம், மருத்துவக் கல்லூரி கட்ட முறைகேடாக அனுமதி கொடுத்த விவகாரம் ஒன்றில், அன்புமணி நேரடியாக லஞ்சம் பெற்றதற்கான சாட்சியங்களை சி.பி.ஐ. திரட்டி வைத்திருக்கிற தாம். அதை வைத்து அன்புமணிக்கு பா.ஜ.க. தரப்பில் இருந்து நெருக்கடி தரப்பட்டதால் தான், அவர் பயத்தில் வளைந்துவிட்டார் என் கிறார்கள். பா.ம.க.வின் இந்த முடிவு எடப்பாடி யையும், அவர் தரப்பையும் சற்றே கவலையில் ஆழ்த்தியிருக்கிறதாம். வலுவான கூட்டணிக் கட்சிகள் அமையாத நிலையில் பா.ம.க.வையும் நழுவவிட்டுவிட்டோமே என்று வருந்திய எடப்பாடி, மீண்டும் பேசுவோம், ராஜ்யசபா சீட்டையும் தருகிறோம் என்று அழைத்தும் தைலாபுரத் தரப்பிலிருந்து பதில் இல்லையாம்.''”
’"தமிழகம் வந்த மோடியை ஒரு பா.ஜ.க, நிர்வாகி, அசால்ட்டாக பொய் யைச் சொல்லி நம்ப வைத்துவிட் டாராமே?''”
"சமீபத்தில் சென்னை வந்த பிரதமர் மோடியை கட்சி நிர்வாகிகள் பலரும் வரவேற்ற னர். அப்போது சென்னை கிழக்கு மாவட்ட பா.ஜ.க. பொருளாளரான அஸ்வந்த் பிஜோய் என்பவரும் வரவேற்க நின்றிருந்தார். தன் அருகே மோடி வந்தபோது அவர், "எனக்கு இரட்டை குழந்தை பிறந்ததாக செய்தி வந்திருக்கிறது. அவர்களைப் பார்ப்பதைவிட உங்களைப் பார்ப்பதில்தான் எனக்கு மகிழ்ச்சி என்பதால் இங்கே நேராக ஓடிவந்துவிட்டேன்' என்று உற் சாகமாகச் சொன்னார். இதைக்கேட்டு மகிழ்ந்த மோடி அவரைத் தட்டிக்கொடுத்துவிட்டுச் சென்றதோடு, தனது எக்ஸ் பக்கத்திலும் அது குறித்து மகிழ்ச்சியோடு பதிவு செய்திருந்தார். ஆனால் உண்மையில் மோடி வந்தபோது, அந்த அஸ்வந்த்தின் கர்ப்பிணி மனைவிக்கு குழந்தை பிறந்திருக்கவில்லையாம். சும்மா, அவர் உதார் விட்டதை மோடி அப்படியே நம்பிவிட்டா ராம். இதையறிந்த பா.ஜ.க. நிர்வாகிகள் சிலர், இது குறித்து கட்சித் தலைமைக்குப் சீறலோடு புகார்களை அனுப்பியிருக்கிறார்களாம்.''”’
"நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். தமிழக காங்கிரஸ் பிரமுகரும் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சசிகாந்த் செந்திலுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் சீட் கொடுக்க விரும்புகிறாராம் ராகுல்காந்தி. அதையறிந்த தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும், அவர் தேர்தலுக்கு சரியான நபர் இல்லை. அவரால் மக்களிடம் இறங்கிச்செல்ல முடியாது. மேலும் அவரது முக்கிய உறவினர் ஒருவர் தி.மு.க.வோடு நாம் வைத்திருக்கும் கூட்டணியை பகிரங்கமாக விமர்சித்துக் கொண்டு திரிகிறார் என் றெல்லாம் ராகுலுக்கு புகார் கடிதங்களைத் தட்டி விட்டுக் கொண்டிருக்கிறார்களாம்.''”