"நீ டாக்டராக முடி யாது, உனக்குத் தகுதியில்லை'' எனத் தடுப்புச் சுவர் எழுப்பும் நீட் நமக்கு வேண்டாமென நீட்டிற்கு எதிராகக் குரல் கொடுக்கிறது தி.மு.க. அரசு. எனினும், "செருப்பு வீச்சும், பிரம்பு அடியும் வாங்கிப் படித்தால் நீட்டில் பாஸ் செய்ய முடியும். அது மாணவர் களுடைய பெற்றோரின் விருப்பமாக உள்ளது'' என்கிறது திருநெல்வேலியிலுள்ள நீட் கோச்சிங் சென்டர்!
"திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம், தெற்கு பைபாஸ் சாலையருகேயுள்ளது ஜல் நீட் கோச்சிங் சென்டர். இதன் உரிமையாளர் ஜலீல் அகமது. இவரது பயிற்சி மையத்தில் பயிற்றுநராகப் பணியாற்றி வந்தேன். இம்மையத்தில் நீட் கோச்சிங் பயிலும் மாணாக்கர்களை அவதூறாகப் பேசுவது, மாணாக்கர்களைக் கொடூரமாகத் தாக்குவது, செருப்பாலடிப்பது போன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன. இதனைச் செய்வது நீட் மையத்தின் உரிமையாளர்.
இது தொடர்பாக அவரிடம் பேசினேன். ஆனாலும் மாணாக்கர்களைத் தாக்குவதை நிறுத்தவில்லை. இதுகுறித்து பல வீடியோக் களை இத்துடன் இணைத்துள் ளேன். மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்' என, கடந்த மாதம் 28ஆம் தேதியன்று, மேலப் பாளையம் காவல் நிலையத்தில் பெயர் சொல்ல விரும்பாத நபர் ஒருவர் மொட்டைப் புகாராகக் கொடுத்திருக்கிறார்.
காவல்துறையின் விசாரணையும் நடவடிக்கையும் தாமதமானதால் பத்திரிகை, ஊடக செய்தியாளர்களிடம் வாட்ஸ் அப்பில் வீடியோக்களைப் பகிர்ந்துள்ளார். இது வைரலான நிலையில் மாநில மனித உரிமை ஆணையம் நேரடியாக விசாரணையைத் துவக்கியுள்ளது.
இரண்டாண்டுகளுக்கு முன்பு கேரளா வை பூர்வீகமாகக் கொண்ட ஜலீல் அகமது, நெல்லையில் "நீட்'டிற்கான பயிற்சி மையத்தை, பிரபலமான பயிற்சி மையத்திலிருந்து பிரிந்துவந்து துவக்கினார். எனவே அவரது சென்டரில் நம்பிக்கையுடன் பலரும் சேர்ந்தனர். இருபாலருக்கும் தனித்தனியாக ஹாஸ்டல். காலை 8 மணியிலிருந்து இரவு 8 மணி வரை பயிற்சி. வார நாட்களில் தேர்வு. கிருஷ்ணகிரி, தர்மபுரி, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும், கேரளாவிலிருந்தும் பலர் பயிற்சி மையத்தில் இணைந்தனர். வருடத்திற்கு ரூ.80 ஆயிரம் கட்டணம். அதுபோக, ஹாஸ்டல், உணவு, தேர்வுக்கட்டணங்கள் தனி. ஆக மொத்தம், லட்சத்தைத் தாண்டுகிறது.
வாட்ஸ்அப்பில் பரவிய முதல் வீடியோவில், 25ஆம் தேதி வாரத்தேர்வெழுதிவிட்டு அடுத்த பாட ஆசிரியருக்காகக் காத்திருக்கும் நேரத்தில் வகுப்பறையிலேயே சில மாணவர்கள் தூங்க, அதை சி.சி.டி.வி.யில் கண்ட சென்டர் உரிமையாளரும் தலைமை பயிற்சியாளருமான ஜலீல் அகமது, மாணாக்கர்களை பிரம்பால் அடித்து வெளுக்கிறார். பல மாணாக்கர்கள் அடி தாங்காமல் கத்திக் கூப்பாடு போடுவதும், சிதறி ஓடுவதும் அப்பட்டமாகத் தெரிகிறது. ஓடுகின்ற மாணாக்கர்களை இழுத்துவந்தும் அடிக்கிறார். மற்றொரு வீடியோவிலோ, ஒரு செருப்பைக் கையிலேந்தியபடி, "இந்த செருப்பு யாருடையது?'' எனக் கேட்டுக்கொண்டே வகுப்பறைக்குள் நுழைகிறார்.
மாணவி ஒருவர் தன்னுடைய செருப்பு எனக் கையை உயர்த்த, அவர் மீது செருப்பை வீசுவதும், அதையெடுத்து மறுபடியும் வீசுவதுமாகக் காட்சிகளாக பதிவாகியுள்ளன. இவ்விவகாரம் மாநில மனித உரிமை ஆணையத்திற்கு சென்ற நிலையில், தானாக முன்வந்து விசாரணையை முன்னெடுத் துள்ளனர்.
18ஆம் தேதி, வெள்ளியன்று, ஜல் நீட் கோச்சிங் சென்டருக்கு வந்த மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன், பாதிக்கப்பட்ட மாணக்கர்களிடம் விசாரணை மேற்கொண்டார். மாணவர்கள் ஒவ்வொருவ ராகத் தங்கள் காயத்தை அவரிடம் காண்பிக்க, குறிப்பெடுக்கப்பட்டது. இதில், சாதாரண பிரம்படிக் காயத்துடன் கொடூரமான ரத்தக்காயங்களும் இருக்க, விசாரணையின்போது உடனிருந்த போலீஸாரும், மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினரும் வருத்தப்பட்டது, மாணாக்கர்களுக்கு ஆறுதலளித்தது. விசாரணையின் முடிவில், "மாநில மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத் துள்ளது. அரைமணி நேரமாகக் காத்திருந்தும் அதிகாரிகள் யாரும் விசாரணை நடந்த இடத்திற்கு வரவில்லை. காவல்துறையிடம் நடவடிக்கை குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. பாதிக்கப் பட்டவர்களில் இருவர் சிறார் என்பதால், சிறார் குற்ற விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்யப் பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிலையத்தின் உரிமையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் யாரும் தற்போது இங்கு இல்லை. அனைவரும் தலைமறைவாகி யுள்ளனர். நீட் பயிற்சி மையத்தின் விடுதிகளிலும் ஆய்வு மேற் கொள்ள அறிவுறுத்தப்பட் டுள்ளது'' என்றார் கண்ணதாசன்.
இதே வேளையில், திரு நெல்வேலி ஜல் நீட் அகாடமி யில் மாணவர்கள் தாக்கப் பட்டதை அறிந்து திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ், மாணவர்களின் உண்மை நிலையைக் கண்டறிந்து கட்சித் தலைமைக்கு தெரியப்படுத்து வதற்காகச் செல்ல, அவர்களுக்கு நீட் அகாடமிக்கு உள்ளே செல்வதற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. தொடர்ந்து, 323, 355 மற்றும் 75ஜே ஆகிய பிரிவுகளின் கீழ் ஜல் நீட் அகாடமி உரிமையாளர் ஜலீல் அகமது மீது வழக்கினைப் பதிவு செய்தது மேலப்பாளையம் காவல் நிலையம். இந்தக் கொடுமைகளைப் பார்த்தாவது நீட் கோச்சிங் சென்டர்கள் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் அதிகரிக்க வேண்டும்!
-நா.ஆதித்யா
படங்கள்: விவேக்