குவாரியில் மண் எடுக்கும் விவ காரத்தில் ஒரு தரப்பினைச் சேர்ந்தவரை மற்றொரு தரப்பு கொலை முயற்சி செய்ததாக வழக்குப் பதிவான நிலையில், தொடக்கத்திலேயே களையெடுக்க வேண்டிய காவல்துறை கண்டும் காணாமல் இருக்க, மண்ணுக்கான போட்டியில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உயிர்ப்பலி நடக்கும் அசாதாரண சூழ்நிலை உருவாகியுள்ளது.
"13 மாவட்டங்களில் மண் அள்ளத் தடை' என, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்ட நிலையில், மண்பாண்டம், செங்கற்சூளைத் தொழில்கள் தேக்க நிலை அடைந்தன. இதுகுறித்து அரசுக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், சட்டப்பேரவை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய நீர் வளம் மற்றும் கனிமவளத் துறை அமைச்சர் துரைமுருகன், "செங்கற்சூளை வைத்திருப்போர், மண்பாண்டம் தொழில் செய்வோர், சாலை மேம்பாடு மற்றும் நிலங்களை மேம்படுத்துபவர்கள் வண்டல் மண்ணை அரசு அனுமதியுடன் எடுத்துக்கொள்ளலாம். இதற்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை" என்று கூறியதோடு, அரசாணையில் திருத்தம் செய்து மண் எடுப்பதில் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது.
அதன்படி, 1.5 மீ ஆழம் மட்டுமே மண் எடுக்க வேண்டும், கிராமப்புற சாலைகளிலிருந்து 10 மீ தொலைவிலும், நெடுஞ்சாலை, நீர் நிலை நீர்ப்பிடிப்பு மற்றும் ரயில்வே சாலைகளிலிருந்து 50 மீ தொலைவிலும் மண் எடுக்க வேண்டுமென வரையறை செய்யப்பட்டுள்ளது. இப்பொழுது அது நடைமுறையில் உள்ளதா? என்பது கேள்விக்குறி என்றாலும், தற்போது மண் அள்ளும் போட்டியில் இறங்கியுள்ள மண் திருடர்களால் கொலைக்கு அச்சாரமிடப்பட்டுள்ளது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இதற்கு தொடக்கமாக, ஆளுங்கட்சியான தி.மு.க. நிர்வாகி ஒருவரே கொலை முயற்சித் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றார்.
மண் அள்ளும் பிரச்சனையில் கொலை முயற்சிக்கு உள்ளான தி.மு.க. அயலக அணியின் மாவட்ட அமைப்பாளர் பன்னீர்செல்வம், "கடந்த 23-9-22 அன்று பகல் 11:50 மணி இருக்கும். என்னுடைய சேம்பரிலிருந்து பரமக்குடி திரும்பிக் கொண்டிருந்தேன். பொட்டிதட்டி -களரிப்பாலம் அருகில் எங்கிருந்தோ வந்த நாலைந்து நபர்கள் என்னு டைய காரை மறித்து நீண்ட கூரிய மூக்குள்ள அரிவாளை வைத்துத் தாக்கத் தொடங்கினார்கள். அரிவாளின் தாக்குதல் வேகத்தில் காரின் கண்ணாடிகள் உடைந்துவிட்டன. அதைத்தாண்டி என் மீது அரிவாள் வெட்டு படக்கூடிய தருணத்தில், மயிரிழையில் உயிர்தப்பி வந்துவிட் டேன். என் மீதான கொலைவெறித் தாக்குதலுக்குக் காரணம், சேம்பருக் காக மண் அள்ளும் விவகாரம்தான். என்னுடைய இடத்திற்கு அருகில் (பாண்டியூர் கண்மாய்) கல்பனா சேம்பர் மங்களசாமிக்கு இடம் இருக்கு. சேம்பருக்குத் தேவையான மண்ணை அவரவர்களேதான் எடுத்து தொழில் செய்ய வேண்டும். அடுத்தவருக்கு விற்பனை செய்யக்கூடாது. ஆனால் மங்களசாமி யோ தனக்கிருந்த பர்மிட்டை ராமநாதபுரம் கார்த்திக்கிற்கும், ஆர்.எஸ்.மடை ஜெயபாரத்திற்கும் கொடுத்து மண்ணை எடுத்துக் கொள்ள அனுமதித்துவிட்டார்.
அன்றிலிருந்துதான் பிரச் சனை தொடங்கியது. அசந்த நேரத்தில் என்னுடைய இடத்தி லும்கூட மண்ணை எடுத்து விட் டார்கள். அது எனக்குத் தெரிய வந்ததால் விவகாரம் பெரிதாகிய நிலையில், "திருட்டுத்தனமாக எடுத்த மண்ணிற்குப் பதிலாக வேறு மண் தர்றோம்' என்றாறு சமாதானம் செய்தார்கள். அத்துடன் பிரச்சனை ஓய்ந்தது என்றால், என்னுடைய இடத்தில் மண்ணைத் திருடுவதை அவர் கள் நிறுத்துவதாக இல்லை. எனவே மீண்டும் என்னுடைய இடத்திலேயே மண்ணை எடுத்தபோது நான் மறிக்க வேண்டியதாயிற்று. சேம்பர் சங்கக் கூட்டம் நடந்தபோது, "அவனுக்கு சீட் கொடுத்ததால் தான் பிரச்சனை. அதனால் அவனுக்கு நீங்கள் சீட் கொடுக்கக்கூடாது' என மங்களசாமியை கேட்டுக்கொண்டோம். அன்றிலிருந்து என்னை போனில் கூப்பிட்டு மிரட்டுவது, எனக்குத் தெரிந்தவர்களைக் கூப்பிட்டு மிரட்டுவது என்றிருந்தார்கள் கார்த்தியும், ஜெயபாரத்தும். ஒரு கட்டத்தில், மண்ணிற்காக எனது உயிரையே எடுக்கத் துணிவார்கள் என அன்றுதான் தெரிந்தது'' என்றார் அச்சத்துடன்.
காவல்துறையும் வழக்கம்போல் புகாரினை ஏற்று வழக்குப் பதிவு செய்து எதிரியைத் தேடிய நிலையில்... சாவகாசமாக முன்ஜாமீன் பெற்று திரும்பியுள்ளனர் எதிரிகள். குற்றச்சாட்டிற்கு ஆளான கார்த்திக்கோ, "நான் தொழில் செய்யுற வன். நிரந்தரமாக தொழில் செய்ய வெண்டுமென் கிறவன் இந்த மாதிரி பிரச்சனைகளுக்குப் போக மாட்டான். கல்பனா சேம்பருக்கு மண் ஓட்டும்போதே தனக்கும் மண் ஓட்டிக்கொடுக்கச் சொன்னார். ரேட் கட்டுபடியாகாததால் நானும் விட்டுட்டேன். அதுபோல் தெரியாமல் ஒரு இடத்தில் மண் அள்ளியதால் அதற்கு மன்னிப்பும் கேட்டு, திரும்ப அந்த மண்ணைக் கொண்டுவந்து வைத்து விடுகிறோம் என்றதும் பிரச்சனை விட்டுப்போச்சு. இதனைத் தாண்டி ஒரு தடவை நாங்கள் மண்ணை எடுத்துக் கொண்டிருக்கும்போது குறுக்கே வந்து மண்ணை அள்ள விடாமல் தடுத்தார். அது எதற்கு எனக் கேட்கத் தான் அவருடைய சேம்ப ருக்கும், பெட்ரோல் பல்க்கிற்கும் போனோம். ஆனால் இந்த சம்பவத்திற் கும் எங்களுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. அன்றைய தினம் நான் பரணிகுமார் மருத்துவமனையிலும், அவன் (ஜெயபாரத்) பல் மருத்துவமனையிலும் தான் இருந்தோம்'' என்றார்.
"சேம்பருக்காக மண் அள்ளுவது எவருடைய சொந்த இடத்திலும் இல்லை. இடமுள்ள விவ சாயிடம் என்றோ ஒரு நாள் அட்வான்ஸ் தொகை மட்டும் கொடுத்து வைத்திருந்து கிரையம் செய்யாமலேயே இப்பொழுது வரை மண் அள்ளிக்கொண்டு, விவசாயியையும் ஏமாற்றி, மாவட்ட அரசு நிர்வாகத்தையும் ஏமாற்றி வருகின்றனர். இதனைக் கண்டறிந்து காவல்துறை யிடம் கூறினால், "சவுடு மண் அள்ளிய விவகாரத்தில் கொல்லப்பட்ட இளமனூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மோகன் நிலை உங்களுக்கு வேண்டுமா?' என்று மிரட்டும் தொனியில் எதிர்க்கேள்வி எழுப்புகின்றனர். இப்பொழுதாவது மாவட்ட நிர்வாகம் விழித்துக்கொண்டு, மண் அள்ளும் விவகாரத்தினை முறைப்படுத்த வேண்டும். இல்லையெனில் உயிர்ப்பலிகள் நிச்சயம் நடக்கும்'' என்கின்றனர் உள்ளூர் பொதுமக்கள்.
படங்கள்: விவேக்