"இங்கே வருவது என்னுடைய வீட்டிற்கு வருவது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது'' என்று முன்னாள் முதல்வர் ஜெ. பேசிய பிறகு ஸ்ரீரங்கம் தொகுதி, தமிழக அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக மாறியது. அந்தத் தொகுதியில் மணல் கொள்ளையர்களுக்கு எதிராக இருந்த அசிஸ்டெண்ட் கமிஷனரை அங்கிருந்து டிரான்ஸ்பர் செய்ய திருச்சியின் முன்னாள் உளவு மற்றும் நுண்ணறிவு அதிகாரிகள் முயற்சி எடுப்பது தற்போது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அகண்ட காவிரியும்- அதிலிருந்து பிரியும் கொள்ளிடமும் சூழ்ந்த ஸ்ரீரங்கம் பகுதியில் எப்போதும் மணல் கொள்ளை கொடிகட்டிப் பறக்கும். இந்த மணல் கொள்ளையர்களுக்கு அரசியல்வாதிகள் வரை அதிகாரிகள் வரை துணையாக இருப்பார்கள். இதே போன்று ரவுடிகளும் கஞ்சாவை முக்கியத் தொழிலாக நடத்தி வருவார்கள். இவர்கள் அனைவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சியில் உச்சக் கட்ட நுண்ணறிவு அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர் மிகவும் பக்கபலமாக இருந்திருக்கிறார்.
இந்த நேரத்தில் இலஞ்ச ஒழிப்புத் துறையிலிருந்து மாற்றம் ஆகி வந்த ஸ்ரீரங்கம் ஏசி இராமசந்திரன் மணல் கொள்ளை முதல், கஞ்சா வரை கடுமையாக நெருக்கடி கொடுத்தார். திருச்சியின் உச்சக்கட்ட நுண்ணறிவு அதிகாரி- ஏற்கனவே ஓய்வு பெற்ற உளவு அதிகாரி துணையோடு தன்னுடைய இடத்திற்குத் தன் மச்சானைக் கொண்டு வருவதற்காக முதல்வர் மகன் வரை கடுமையான முயற்சி செய்ததை நக்கீரன் இணையத்திலும் வெளியிட்டோம்.
ஸ்ரீரங்கம் ஏசியாக இருந்த இராமசந்திரன் திருச்சி மாநகர நுண்ணறிவு பிரிவு ஏ.சி.யானார். ஸ்ரீரங்கத்திற்கு மணிகண்டன் என்பவர் ஏசியாக நியமிக்கப்பட்டார். ஏசி மணிகண்டன் இராமசந்திரன் விட்டுச் சென்ற பணியைத் தொடர்ந்து, மணல் கொள்ளையர்களுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கினார்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீரங்கம் பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட ஏ.சி, மணி, கார்த்தி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தார். அவர்கள் முன்னாள் நுண்ணறிவு அதிகாரிக்கு வேண்டப்பட்டவர்கள், அவருக்காகத் தான் செய்கிறோம் என்று பேசியிருக்கிறார்கள். ஆனால் ஏசி மணிகண்டனோ அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் வழக்குப் பதிவு செய்திருக்கிறார். இதையடுத்து, இவர் இங்கே நீடித்தால் உங்களுக்குத்தான் சிக்கல் என நுண்ணறிவு அதிகாரிக் குத் தகவல் சொல்லியிருக்கிறார்கள் மணல் கொள்ளையர்கள்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஓய்வு பெற்ற நுண்ணறிவு அதிகாரி மீண்டும் ஓய்வு பெற்ற உளவு அதிகாரியுடன் கைகோர்த்து ஏசி மணிகண்டனை அங்கிருந்து மாற்றுவதற்குத் தமிழக அமைச்சர், முதல்வர் மகன், தமிழக முன்னாள் உளவு அதிகாரி என 3 வழிகளில் காய்களை நகர்த்தி, ஆட்டத்தை ஆரம்பித்தார்.
திருச்சியின் ஓய்வு பெற்ற முன்னாள் உளவு அதிகாரி தனக்கு நெருக்கமான தமிழக உளவு அதிகாரியிடம் கிருஷ்ணமூர்த்தியை ஸ்ரீரங்கத்திற்கு நியமிக்கச் சொல்லி சிபாரிசு செய்கிறார். அதே நேரத்தில் திருச்சி முன்னாள் நுண்ணறிவு அதிகாரி முதல்வர் மகன் மிதுனிடம் கோடிலிங்கம், மற்றும் கிருஷ்ணமூர்த்தியைச் சிபாரிசு செய்கிறார்.
கொங்கு மண்டல அமைச்சர் ஒருவரின் மாவட்டத்தில் டி.ஆர்.ஓ.வாக இருப்பவரின் கணவர்தான் ஏசி கிருஷ்ணமூர்த்தி. இவர் முன்னாள் தமிழக உளவு அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற சத்தியமூர்த்தியிடம், ஸ்ரீரங்கம் ஏசியாக நியமிக்கச் சொல்லி சிபாரிசு செய்திருக்கிறார். இந்நிலையில், ஏ.சி. மணிகண்டன் ஆகஸ்ட் 3 அன்று விஜிலென்ஸ் ஏ.சி.யாக மாற்றப்பட்டு, ஸ்ரீரங்கம் ஏ.சி.யாக சுந்தரமூர்த்தி நியமிக்கப்பட்டார். இதேபோல கஞ்சா-மணல்கொள்ளையைத் தடுத்த ஜீயபுரம் டி.எஸ்.பி. கோகிலாவும் சென்னை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டார்.
மணல் கொள்ளையர்களைக் காப்பாற்றுவதற்காக நேர்மையான அதிகாரிகளைப் பந்தாடுகிறார்கள் ஓய்வு பெற்ற உளவு மற்றும் நுண்ணறிவு அதிகாரிகள்.
-ஜெ.டி.ஆர்.