ரத்தம் சிந்தியும் உயிர் கொடுத்தும் பெற்ற தொழிலாளர் நல உரிமைகளை, முதலாளித்துவ மும், தாராளமயவாதமும் ஒவ்வொன்றாய்ப் பிடுங்கியெறிகின்றன. நீளும் அந்தத் துயர காவியத்தில், ஒரு துயரிசைப் பாடலே சென்னை சாம்சங் தொழிலாளர்கள் சங்கம் அமைக்க, அந்நிறுவனம் தெரிவிக்கும் எதிர்ப்பு என்கிறார்கள் தொழிலாளர் வர்க்கத் தோழர்கள்.
சென்னையை ஒட்டியுள்ள காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ஏராளமான பன்னாட்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அதிலொன்று ஸ்ரீபெரும் புதூரை அடுத்த சுங்குவார் சத்திரம் பகுதியில் இயங்கிவரும் சாம்சங் நிறுவனம்.
இந்தப் போராட்டம் தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட சி.ஐ.டி.யு. தொழிற் சங்கத்தைச் சேர்ந்த தோழர் முத்துக்குமாரைத் தொடர்பு கொண்டு பேசினோம். "சாம்சங் நிறுவனத் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைக்காக, அவர்களது கோரிக்கையை முன்வைத்தனர். ஆனால் நிறுவனத்தினர் அதைப் பூர்த்திசெய்து தர முன்வராத காரணத்தினால் சி.ஐ.டி.யு. தொழிற்சங்க யூனியனைத் துவங்கினார்கள். இதற்கு மிரட்டல் வரவே, கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதியிலிருந்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் செய்துவருகின்றனர். சாம்சங் நிறுவனமோ, தொழிலாளர் நலத்துறையோ, தமிழக அரசோ இதைப்பற்றி கண்டுகொள்ளவே இல்லை''’என்றார்.
இந்தப் போராட்டத்தை பற்றி சி.ஐ.டி.யு. மாநில தலைவர் சௌந்தரராஜன் நம்மிடம் பேசினார். "ஒரு தொழிற்சாலை தொடங்கியதும் தொழிலாளர்கள் பல கனவுகளுடன் வேலைக் குச் செல்வார்கள். ஆரம்பத்தில் அவர்களது உரிமை என்னவென்று தெரியாது. பின்னர் தொழிற்சாலை நிர்வாகம் அவர்களை அடிமை போல் நடத்துவதும் தொழிலாளர்கள் உழைப்பைச் சுரண்டுவதும் புரிந்த பின்புதான் தொழிற்சங்கத்தை அமைப்பார்கள். சாம்சங் நிறுவனம் கடந்த 2006-ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது. 16 ஆண்டுகளாக அந்த நிறுவனத்தின் பணபலத்தில் அவர்களே உருவாக்கிய சங்கம் மட்டுமே செயல்பட்டு வருகின்றது. தொழிலாளர்களின் உரிமைக்காக கடந்த ஜூன் மாதம் சாம்சங் தொழிற்சாலை தொழிலாளர்கள், சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தைத் தொடங்கினர். அன்றிலிருந்து அந்த நிறுவனத்தைச் சேர்ந்த உயரதிகாரி கள் தொழிலாளர்களை தனித்தனியாக மிரட்டிவந்தனர். இந்த நிலையில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தை சேர்ந்த குணசேகரன் மிரட்டலைத் தட்டிக்கேட்டார். ஹெச்.ஆர். டிபார்ட்மெண்டைச் சேர்ந்த பாலாஜி உத்தரவின் பெயரில், சாம்சங் நிர்வாகத்தின் குண்டர்கள் அவரைத் தாக்கி, ஐந்துநாட்கள் ஒரு அறையில் பூட்டிவைத்தனர். பின்னர் தொழி லாளர்கள் மூலம் அவர் மீட்கப்பட்டார்.
தற்போது 1,810 தொழிலாளர்கள் அந்த நிறுவனத்தில் வேலை செய்துவருகின்றனர். அதில் 1,450 பேர் நிரந்தரத் தொழிலாளர்கள். தொழிலாளர்களின் உரிமைக்காக கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதியிலிருந்து வேலை நிறுத்தம் செய்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தொழிலாளர் நலத்துறையோ அதைச் சார்ந்த அதிகாரிகளோ செவிசாய்க்க வில்லை. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசனிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர் சாம்சங் நிறுவனத்தை ஆதரித்துப் பேசிவருகிறார்.
ஒரு சங்கம் துவங்கி 45 நாட்களுக்குள் பதிவு செய்யவேண்டும். 90 நாள் கடந்தும் இதுவரை இந்த நிறுவன ஊழியர்களின் சங்கத்தை பதிவு செய்யவில்லை, தென்கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவனத்தின் குளோபல் பாலிஸி, அவர் கள் உருவாக்கும் சங்கத்திலேயே தொழி லாளர்கள் சேரவேண்டும். மற்ற எந்த ஒரு சங் கத்தையும் அவர்கள் அங்கீகரிக்கமாட்டார்கள்.
ஒரு நாட்டின் சூழலில் உருவாக்கப்படும் விதிகள், அந்த நாட்டு எல்லைக்குள்தான் செல்லுபடியாகும். அதனை இங்கும் நடை முறைப்படுத்தத் துடிக்கிறார்கள். சுதந்திரம் பெற்று நாம் இன்னும் முதலாளித்துவத்தின் கீழ் அடிமைகளாக உள்ளோம் என்பதையே இது சுட்டிக்காட்டுகிறது'' என்றார்.
இதுபற்றி நம்மிடம் பேசிய பெயர் கூற விரும்பாத சாம்சங் நிறுவன தொழிலாளி ஒருவர், "அடிப்படையான கோரிக்கைகளைத் தான் நாங்கள் முன்வைத்துள்ளோம். அவர்களின் சங்கத்தினால் எந்தவொரு நன்மையும் தொழிலாளர்களுக்குக் கிடைக்கவில்லை. அதனால் நாங்கள் புதிய சங்கம் துவங்கியுள்ளோம். அதை அங்கீகரித்து எங்களின் நியாய மான கோரிக்கைகளை ஏற்று பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பது மட்டும் தான் எங்கள் கோரிக்கை. 85 சதவிகித தொழிலாளர்கள் எங்கள் பக்கம் உள்ளனர். போராட்டத்தில் பங்கேற்பதற்காக நிர்வாகம் சார்பில் எங்கள் வீட்டுக்கே சென்று மிரட்டுகின்றனர். சிலருக்கு பரிசுப் பொருட்கள் கொடுத்து வளைத்துப் போடப் பார்க்கிறார்கள். இதையெல்லாம் விட்டுவிட்டு எங்களின் உழைப்புக்கான உரிமையை வழங்கினால் போதும்'' என்று தெரிவித்தார்.
இந்த போராட்டம் தொடர்பாக சாம்சங் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறை யைச் சேர்ந்த பார்த்திபனைத் தொடர்புகொண் டோம். அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். யாசினி என்பவரை தொடர்பு கொண்டோம். அவர் நம் அழைப்பை ஏற்கவேயில்லை.
தொழிலாளர்கள் சங்கம் வைக்கிறது ஒரு குத்தமாய்யா?