தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடக்கிறது. இதற்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறு கிறது. மார்ச் 20-ஆம் தேதி முதல் மனுத்தாக்கல் தொடங்கியுள்ள நிலையில் தேர்தல் களம் பரபரப்படைந்துள்ளது.
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அப்போது ஆளுங்கட்சியாக இருந்த அ.தி.மு.க. தன்னுடன் பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா. ஆகிய கட்சிகளுடன் இணைந்து தேர்தலைச் சந்தித்தது. என்றாலும், தமிழகத்தில் ஒரே ஒரு தொகுதியைத் தவிர மற்ற இடங்களில் மண்ணைக் கவ்வியது. இந்நிலையில், அ.தி.மு.க. பொதுச்செய லாளரான எடப்பாடி பழனிசாமியின் சொந்த மண்ணான சேலம் தொகுதியிலேயே, அ.தி.மு.க. இந்தமுறையும் கரையேறுவது கடினம்தான் என்ற பேச்சு கிளம்பியிருக்கிறது. சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் ஆளும் தி.மு.க. தரப்பில் சேலம் மேற்கு மா.செ.வான டி.எம்.செல்வகணபதி களமிறக்கப் பட்டுள்ளார். 24 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தலில் களம்காண்கிறார். வேட்பாளர் அறிமுகக் கூட்டம், நிர்வாகிகள் சந்திப்பு, எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் என ஆளுந்தரப்பு பம்பரமாகச் சுழன்று வருகிறது.
டி.எம்.செல்வகணபதி, அ.தி.மு.க. சார்பில் 1999-2004-ல் சேலம் தொகுதி எம்.பி., 1991-1996 வரை அமைச்சர் பதவிகளில் இருந்துள்ளார். தி.மு.க.வில் இணைந்தபிறகு 2010-2014 வரை ராஜ்யசபா எம்.பி. ஆக இருந்துள்ளார்.
கட்சித் தலைமை கரன்சியை இறக்காவிட்டா லும், சொந்தமாகவே செலவு செய்யக்கூடிய அளவுக்கு பசையுள்ள பார்ட்டி என்பதோடு, தேர்தல் கள வியூகங்களை நன்கு அறிந்தவர், எல்லாவற்றுக்கும் மேலாக அ.தி.மு.க. தரப்பிலும் இன்னும் அவர் மீது பாசமுள்ள ர.ர.க்கள் இருக்கிறார்கள் என்பது அவருக்கு கூடுதல் பலமாகப் பார்க்கப்படுகிறது.
பழுத்த அனுபவசாலியான டி.எம்.செல்வ கணபதிக்கு எதிராக, அ.தி.மு.க. சார்பில் ஓமலூர் வடக்கு ஒன்றிய அவைத்தலைவரும் அரசு ஒப்பந்ததாரருமான பரமசிவத்தின் மகன் விக்னேஷ் களமிறக்கப்பட்டுள்ளார். 31 வயதே ஆன பி.ஈ., பட்ட தாரி இளைஞர். கட்சியில் ஜெ., பேரவை மாநில துணைச்செயலாளர் பதவிவகிக்கும் விக்னேஷ், முதன்முதலாக தேர்தல் களத்தைச் சந்திக்கிறார்.
ஓமலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட திண்டங் கலம் ஊராட்சித் தலைவர் பதவியைக் கைப்பற்றுவதில் பரமசிவம் குடும்பம்தான் 50 ஆண்டுக்கும் மேலாக ஆதிக்கம் செலுத்திவருகிறது. ஓமலூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக உள்ள மணியின் நெருங்கிய உறவினர் என்பதால் அவருடைய சப்போர்ட்டும் இருக்கிறது. அத்துடன், "ப' வைட்டமினுக்கும் பஞ்சமில்லை என்கிறார்கள். இரட்டை இலையும், பணபலமும் விக்னேஷுக்கு பிளஸ் என்கிறார்கள்.
அதேநேரம், நாடாளுமன்றத் தொகுதியில் முற்றிலும் அறியப்படாத முகம் என்பதும், கூட்டணி பலமில்லாததும் பெரிய சறுக்கல் என இலைக் கட்சியினரே புலம்புகின்றனர். அ.தி.மு.க. சார்பில் மூத்த தலைவர்களுள் ஒருவரான செம்மலைக்கு சீட் கொடுத்திருந் தால் தி.மு.க. கூட்டணிக்கு வலு வான போட்டியாக இருந்திருக் கும் என்ற பேச்சும் உள்ளது.
அ.தி.மு.க.வைச் சேர்ந்த மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகை யில், “"இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. 30 சதவீத வாக்குகள் பெற்றாலே எங்களைப் பொருத்தவரை வெற்றிதான். சேலம் தொகுதி யில் அ.தி.மு.க. 3 லட்சம் வாக்குகளுக்குமேல் பெறும்,'' என்றார்.
என்னதான் தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக் கும் நேரடிப் போட்டியென்றாலும் கூட, பா.ம.க.வும் களத்திலிருப்பதால் சேலம் நாடாளுமன்றத் தேர்தல் களம் ரொம்பவே விறுவிறுப்பாக இருக்கும் என்கிறார்கள்.
பா.ஜ.க. கூட்டணியில் அங்கம்வகிக்கும் பா.ம.க. சார்பில், இடங்கணசாலையைச் சேர்ந்த அண்ணாதுரை போட்டியிடுகிறார். வழக்கறிஞரான இவர், இடங்கணசாலை நகர்மன்ற உறுப்பினர், மாவட்ட கவுன்சிலர் ஆகிய பதவிகளில் இருந்துள்ளார்.
சேலம் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட எடப்பாடி, ஓமலூர், வீரபாண்டி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் வன்னியர் சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ளனர். அதனால் தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க. ஆகிய மூன்று கட்சிகளுமே வன்னியர் சமூகத்தினரையே களத்தில் நிறுத்தியுள்ளது. கடந்த 2016 சட்டமன்றத் தேர்த லில், எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அண்ணாதுரை 56,681 வாக்குகள் பெற்று, இரண்டாம் இடம்பிடித்தார்.
இதுதொடர்பாக பா.ம.க.வின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், "பா.ம.க.வில் பெரும்பாலானோ ருக்கு பா.ஜ.க.வுடனான கூட்டணி பிடிக்கவில்லை. அதனால் அதிருப்தி வாக்குகள் இரு திராவிடக் கட்சிக்கும் சிதறிப்போகும். ஒருவேளை, சவுமியா அன்புமணியை சேலத்தில் நிறுத்தியிருந்தால் போட்டி இன்னும் கடுமையாக இருந்திருக்கும்,'' என்றார். இவர்கள் தவிர நாம் தமிழர் கட்சி சார்பில் எம்.பி.பி.எஸ்., எம்.எஸ்., படித்துள்ள மனோஜ்குமார் போட்டியிடுகிறார். வேட்பாளரைக் கண்டுபிடிப்பதற்கே நா.த.க., திணறிப்போனதாகச் சொல்கிறார்கள். இதுதான் அந்தக் கட்சியின் நிலை.
மெகா கூட்டணி, பண பலம், ஆளுங்கட்சி என்ற பலம் இருந்தாலும் தி.மு.க.வில் நிலவும் கோஷ்டி அரசியல் காரணமாக செல்வகணபதிக்கும் வெற்றி எளிதானதல்ல என்ற பேச்சும் இல்லாமல் இல்லை.
முக்கியத் தலைவர்களின் பிரச்சாரம், வாக்காளர்களுக்கு பணப்பட்டு வாடா ஆகியவற்றுக்குப் பிறகு தற்போதைய தேர்தல் களநிலவரங்களில் மாற்றம் வரக்கூடும் என்ற எதிர் பார்ப்பும் உள்ளது.