புதுக்கோட்டை நெடுஞ்சாலைத் துறை ரோடுரோலர் ஓட்டுநராக இருந்த மாணிக்கம் இறந்தபிறகு அவரது மகன் பாண்டித்துரைக்கு கருணை அடிப் படையில் நெடுஞ்சாலைத் துறை அலுவலக உதவியாளராக பணி வழங்கியது. பாண்டித்துரை தனது சாமர்த்தியத்தால் ஓ.பி.எஸ்., எடப்பாடி வரை பழக்கத்தை வளர்த்துக்கொண்டு நெடுஞ்சாலைத்துறையில் வரும் ஒப் பந்தங்களை வாங்கிச் செய்யுமளவுக்கு வளர்ந்தார்.
தொழிலதிபர் பாண்டித்துரை, தரமில்லாத பொருட்களை இறக்கி நெடுஞ்சாலைப் பணிகள் நடந்துள்ளது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார் என்ற புகாரின்பேரில் கடந்த 2022 அக்டோபர் 13-ஆம் தேதி பாண்டித்துரையின் வீடு, அலுவலகம், மேலாளர் வீடு என 5-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து ஆவணங்களை கைப்பற்றிச் சென்றனர்.
இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை திருவண்ணா மலையிலுள்ள பாண்டித்துரை நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் போட அவரது மேற்பார்வையாளர் சதீஷ் கிளம்பினார். அதற்கு புதுக்கோட்டையிலிருந்து காரில் பணம் கொண்டுபோவது வழக்கம். அதேபோல 5-ஆம் தேதி ரூ.82.67 லட்சம் பணத்தை பண்டல்களாகக் கட்டி ஓட்டுநர் ராமனுடன் காரில் புறப்பட்டுச் சென்றார். திருச்சி - காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையிலுள்ள கட்டியாவயல் கிராமத்திலுள்ள பங்கில் காருக்கு பெட்ரோல் போட காரை நிறுத்தினார் ராமன். மேற்பார்வையாளர் சதீஷ் சிறுநீர் கழிக்கச் செல்வதாக இறங்கிச்சென்று மீண்டும் திரும்பி வந்தபோது பணத்துடன், கார் ஓட்டுநர் ராமனையும் காணவில்லை.
சதீஷ் சிறுநீர் கழிக்கச் சென்ற சில நிமிடங்களில் அருகிலேயே நின்ற பொலிரோ காரில் ராமன் ஏறிச் சென்றதாகக் கூறியுள்ளனர்.
இதுகுறித்து நிறுவன உரிமையாளர் பாண்டித்துரைக்கும், திருக்கோகர்ணம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் ஓட்டுநர் ராமனுக்கு போன் செய்தால் போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. அதனால் அவர் கடைசியாக பேசிய எண்ணைப் பார்த்தபோது அந்த எண் ராமனின் சகோதரர் லெட்சுமணன் எண் என்பது தெரியவந்தது. அந்த எண்ணும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததால் பணத்தை காரில் கடத்திச்சென்றவர்கள் ஓட்டுநர் சகோதரர்கள்தான் என்பதை உறுதி செய்தனர் போலீசார். இருவரது செல்போன் எண்களையும், யார் யாருக்கெல்லாம் பேசியுள்ளனர் என்பதையும் ஆய்வு செய்தனர். பூங்குடி செல்வமணி, புத்தாம்பூர் சண்முகம் ஆகியோருடன் அதிகம் பேசியிருந்ததும், கடைசியாக அவர்களிடம் பேசியதும் தெரிந்தது.
அதனால் அவர்கள் இருவரையும் தூக்கிவந்து போலீசார் உரிய முறையில் விசாரித்தனர். “"சதீஷுக்கு ஓட்டுநராக உள்ள ராமன் எங்களிடம், நான் அடிக்கடி பணத்துடன் திரு வண்ணாமலை போவேன். இந்த மாதம் சம்பளம் கொடுக்க பணத்துடன் கிளம்பும்போது சொல்றேன். காருடன் தயாராக இருங்கள். நான் பெட்ரோல் பங்கில் காரை நிறுத்தி சிறுநீர் கழிக்கப் போவேன். மேற்பார்வையாளரையும் போகவைக்கிறேன். அந்த நேரம் வந்துவிட்டால் நாம் பணத்துடன் வேறு காரில் ஏறிப் போய்விடலாம் என்று அவரது தம்பி லெட்சுமணன் உள்பட எங்களையும் அழைத்தார்.
அவர் சொன்னதுபோல போய்க் காத்திருந்து பணத்தை அள்ளிக் கொண்டுவந்து அவங்க தோட்டத்தில் பண்டல்களாக மண்ணைத் தோண்டி புதைத்துவைத்திருக்கிறோம். அதில் கொஞ்சம் பணத்துடன் ராமனும் லெட்சுமணனும் எங்கோ சென்று விட்டனர். மீதிப் பணம் புதைக்கப் பட்டுள்ளது. கடத்தலுக்குப் பயன்படுத்திய காரும் அங்கே நிற்கிறது'' என்று கூறியுள்ளனர்.
ராமனின் தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த பண்டல்களை தோண்டி எடுத்தபோது ரூ.75 லட்சம் மட்டுமே அதில் இருந்தது. மீதிப் பணத்துடன் ஓட்டுநர் சகோதரர்கள் தப்பிச்சென்றது தெரியவந்தது. கடத்தல் காரும் நின்றதைப் பார்த்து மாவட்ட எஸ்.பி. வந்திதா பாண்டேவுக்கு போலீசார் தகவல் கொடுக்க, விரைந்து வந்த எஸ்.பி. மீட்கப்பட்ட பணம் மற்றும் காரைப் பார்வையிட்டார். மேலும், பூங்குடி செல்வமணி, புத்தாம்பூர் சண்முகம் இருவரையும் கைதுசெய்தனர்.
தப்பி ஓடிய ஓட்டுநர் சகோதரர்களை தேடிவந்த நிலையில்... வியாழக்கிழமை ஓட்டுநர் ராமன், அவரது தம்பி லெட்சுமணன், பணத்தைப் பதுக்கி வைத்திருந்த வீரமணி ஆகிய 3 பேரையும் கைதுசெய்து அவர்களிடமிருந்த பணத்தையும் மீட்டு சிறைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தேர்தல் பணமா?
இந்த சம்பவம் குறித்து விசாரணை அதிகாரிகள் கூறும்போது, "பாண்டித்துரைக்கு புதுக்கோட்டை போலவே திருவண்ணாமலையிலும் நிறுவனம் உள்ளது. அங்கேயும் வரவு-செலவு நடக்கிறது. ஆனால் புதுக்கோட்டையிலிருந்து தான் சம்பளம், செலவினங்களுக்கு பணம் கொண்டுபோறதா சொல்றதுதான் நெருடலா இருக்கு. ஏன் இவ்வளவு தொகையை பணமா கொண்டுபோகணும். ஊழியர்களின் வங்கிக் கணக்கில் செலுத்திவிடலாம். பாண்டித்துரை, அ.தி.மு.க. மாஜிக்களிடம் மட்டுமின்றி முன்பு அ.தி.மு.க.வில் பவராக இருந்து தி.மு.க. பக்கம் வந்து, இப்ப அவதிப்பட்டு வரும் ஒரு அமைச்சரிடமும் நெருக்கமாக இருந்தவர். அந்த அமைச்சர் வீட்டில் ரெய்டு நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு ஒரு கண்டெய்னர் புறப்பட்டு புதுக்கோட்டை வந்தது. அந்த கண்டெய்னரை சில ஒப்பந்தப்புள்ளிகளின் தோட்டத்துக்குக் கொண்டுபோனதா சொன்னார்கள். தேர்தல் அறிவிப்பு வந்தால் பணம் கொண்டுபோக முடியாமல் பா.ஜ.க., அதிகாரிகளை வைத்து டைட் பண்ணும் என்பதால் இப்பவே பணம் அனுப்பும் பணிகளை கட்சித் தலைமைகள் செய்துவரலாம். தீர விசாரித்தால்தான் தெரியும்''” என்றனர்.