கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயிலை அடுத்துள்ள பாளையங்கோட்டை கீழ்ப்பாதியில் வசிப்பவர் சரவணன். இவரது மகன் கிஷோர் (23). இவர் கடந்த 2021-ஆம் ஆண்டு ரஷ்யாவுக்கு மருத்துவ படிப்பிற்காக சென்றுள்ளார். அப்பொழுது சேலம் அருகேயுள்ள எடப்பாடியை சேர்ந்த நித்திஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அறையெடுத்துத் தங்கியுள்ளனர். இதன் நடுவே மூன்றாம் ஆண்டு மருத்துவப் படிப்பை முடித்துள்ளனர்.
இந்நிலையில் படிப்புச் செலவுக்காக பகுதி நேர வேலை வாய்ப்பு தேடிவந்துள்ளனர். அப் பொழுது கொரியர் நிறுவனத்தில் வேலை யிருப்பதை அறிந்த கிஷோரும், நித்திஷும் வேலைக்குச் சேர்ந்துள்ளனர். வாடிக்கையாளர் களிடம் பொருட்களை டெலிவரி செய்யும் போது அதில் ரஷ்ய நாட்டால் தடைசெய்யப் பட்ட போதைப்பொருள் இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனையறிந்த ரஷ்ய காவல்துறையினர் கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் அவர்களை கைதுசெய்து சிறையி லடைத்தனர்.
இதனையடுத்து கடலூர் மாவட்டத்திலுள்ள அவர்களது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. தகவலின் அடிப்படையில் பெற்றோர் அவர்களை முன்ஜாமீனில் எடுத்து வர முயற்சியில் ஈடுபட்டனர். இந்நிலையில் திடீரென ரஷ்ய நாட்டு காவல்துறையினர் அவர்களை உள்நாட்டில் நடைபெறும் உக்ரைன் போருக்கு வலுக் கட்டாயமாக அழைத்துச் செல்ல, தனியறையில் பூட்டி சித்ரவதை செய்து அவர்களிடம் ஆவணத்தில் கையெழுத்துப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து அவர்கள் உயிருக்கு பாதுகாப்பு வேண்டி பேசிய ஆடியோ ஒன்றை பெற்றோர்களுக்கு அனுப்பியுள்ளனர். அதில் "தங்கள் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை உள்ளது. போருக்கு அனுப்பினால் உயிருக்கு பாதுகாப்பில்லை. எப்படியாவது எங்களை மீட்டுவிடுங்கள்' என கூறியுள்ளனர்.
அவர்களது பெற்றோர் தெரிவிக்கும்போது, "எங்களது மகனை ரஷ்ய சிறையிலேயே வைத்துவிடுங்கள்... போருக்கு அனுப்பவேண்டாம். பிரதமர் மோடி அவர்களும், தமிழ்நாடு முதல்வர் அவர்களும், இந்திய தூதரக அதிகாரிகளும், தலையிட்டு எங்களது மகனை மீட்டு இந்தியா அழைத்து வரவேண் டும்'’என கோரிக்கை விடுத்துள்ளதுடன், கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தின் முன்பு மாணவர் கிஷோர் படத்தை கையிலேந்தி போராட் டத்திலும் ஈடுபட்டனர்.
இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதி கூறியுள்ளார்.
காட்டுமன்னார்கோவில் தொகுதி எம்.எல்.ஏ. சிந்தனைச் செல்வனும் மாணவனின் வீட்டிற்குச் சென்று பெற்றோர்களுக்கு ஆறுதல்கூறி, "மாணவன் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லாமல் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
இதுகுறித்து அரசு உயரதிகாரி ஒருவரோ, “"போதைப்பொருள் தடைச் சட்டத்தில் தமிழக மாணவன் கைது செய்யப்பட்டுள்ளபோது போருக்கு அனுப்பும் முயற்சி என்பது சரியான தகவலாகத் தெரியவில்லை. இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகிறது. விசாரணையில் உண்மை தெரியவரும்''” என்றார்.