சேலத்தில், இல்லாத இறைச்சிக் கூடம் ஏலம் விடப்படுவதோடு, சாலையில் பலர் பார்க்க நோய் வாய்ப்பட்ட ஆடுகளையும் அறுத்து வருகின்றனர் என்ற புகார் வர, விசாரணையில் இறங்கினோம்.

இது தொடர்பாக பேசும் ஆர்.டி.ஐ ஆர்வலரும், சேலம் தாதகாப்பட்டியைச் சேர்ந்த பா.ஜ.க. பிரமுகருமான சிவராமன் நம்மிடம் ....

salem

Advertisment

''கடந்த தி.மு.க ஆட்சியின் போது மணியனூரில் நவீன இறைச்சிக் கூடம் கட்டப்பட்டது. அது திறக்கப்பட்ட புதிதில், ஒரே வாரத்தில் 500 ஆடுகள் வரை வெட்டப்பட்டன. பிறகு அந்தக் கூடம் செயல்படாமல் இழுத்து மூடப்பட்டது. கடந்த அ.தி.மு.க ஆட்சியின் போது குகை பகுதியில் திறக்கப்பட்ட இறைச்சிக் கூடம் மட்டும் பெயரளவில் இயங்கி வருகிறது. அதே சமயம் செயல்படாத மணியனூர் இறைச்சிக் கூடத்திற்கும் சேர்த்தே ஆண்டு தோறும் மாநகராட்சி நிர்வாகம் டெண்டர் விட்டு பணம் பார்த்து வருகிறது'' என்றவர், மேலும் தொடர்ந்தார்...

”கடந்த அ.தி.மு.க ஆட்சியின் போது சேலம் அரிசிப்பாளையத்தைச் சேர்ந்த சதீஸ்குமார் என்பவர் 11.7.2020 முதல் மூன்று ஆண்டுக்கு 13.44 லட்சம் ரூபாய்க்கு இறைச்சிக் கூடங்களை ஏலம் எடுத்திருந்தார். மணியனூர், குகை மற்றும் ஜாரி கொண்டலாம்பட்டி இறைச்சிக் கூடங்களில் அறுவைக்கு வரும் ஆடு ஒன்றுக்கு 20 ரூபாய் கட்டணம் வசூலித்துக் கொள்ள அவருக்கு உரிமம் வழங்கப்பட்டது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் மூலம் தனக்கு லாபம் வரவில்லை எனக்கூறி, சில மாதங்களிலேயே அவர் ஒப்பந்தத்தை சரண்டர் செய்துவிட்டார். இந்த நிலையில், இப்போது தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, 13.9.2021 முதல் 12.9.2024 வரை மூன்று ஆண்டுகளுக்கு, கோபிநாத் என்பவருக்கு 10.35 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் விட்டிருக்கிறது மாநகராட்சி நிர்வாகம். சட்டம் போடும் சேலம் மாநகராட்சி நிர்வாகமே, அதை மீறுவதுடன், இல்லாத இறைச்சிக்கூடத்தின் பெயரில் ஏலம் விடுவதோடு, ஒப்பந்ததாரர்களுடன் சேர்ந்து கொண்டு மாநகராட்சி அதிகாரிகளும் ஊழலில் திளைக்கின்றனர், இதை ஏற்கமுடியாது'' என்கிறார் ஆதங்கமாய்.

இதையடுத்து மணியனூர், குகை மற்றும் இல்லாத ஜாரிகொண்டலாம்பட்டி இறைச்சிக் கூடங்களை ஒப்பந்தம் எடுத்ததாகச் சொல்லப் படும் கோபிநாத் என்பவரை தேடிப்பிடித்தோம். அவர் நம்மிடம் ...

"இதைப்பற்றி எனக்கும் ஒன்றும் தெரியாது. . தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் முருகன்தான் என் பெயரில் ஒப்பந்தம் எடுத்திருக்கிறார்'' என்று ஜகா வாங்கினார்.

salem

Advertisment

அந்த முன்னாள் கவுன்சிலர் முருகனை செல்போனில் பிடித்தோம். அவர் ''சார்... உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதால் சிக்கல் வந்துவிடக்கூடாது என்பதற்காக கோபிநாத் பெயரில் இறைச்சிக் கூடங்களை டெண்டரில் எடுத்தேன். கசாப்புக் கடைக் காரர்கள் யாரும் இறைச்சிக் கூடங்களுக்கு வந்து ஆடுகளை வெட்டிச்செல்வது இல்லை. அதனால் இறைச்சிக் கூடங்கள் மூடப்பட்டுக் கிடக்கின்றன. நாங்களும் நேரடியாக கறிக்கடைகளுக்கே சென்று ஆடுகளின் வியாபாரத்தைப் பொறுத்து, சுங்கம் வசூலித்துக் கொள்கிறோம். இந்த டெண்டர் மூலம் எங்களுக்கு பலத்த நட்டம்தான் ஏற்பட்டுள்ளது. அதனால் இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற முடிவு செய்து கடிதம் கொடுத்து இருக்கிறேன்'' என்றார் கவலையாய்.

கசாப்புக் கடைக்காரர்கள் தரப்போ, “ "ஒட்டுமொத்த கொண்டலாம்பட்டி மண்டலத் திற்கும் மணியனூர், குகை பகுதிகளில் மட்டுமே இறைச்சிக்கூடங்கள் உள்ளன. பல பகுதிகளில் இருந்து ஆடுகளை இறைச்சிக் கூடங் களுக்குச் சென்று வெட்டி, சுத்தப்படுத்திக் கொண்டு வருகிற வரை வாடிக்கையாளர்கள் காத்திருப்பதில்லை. அதோடு வாடிக்கை யாளர்கள் கண் முன்னாலேயே அறுத்தால்தான் அதை வெள்ளாடு என்று நம்புகிறார்கள். அதனால்தான் இப்படி வெளி யில் வெட்டுகிறோம்''’என் கிறது.

salem

இதுகுறித்து சேலம் மாநக ராட்சி ஆணை யர் கிறிஸ்து ராஜிடம் விளக்கம் கேட்க நாம் தொடர்பு கொண்டபோது, அவர் வழக்கம்போல் மீட்டிங்கில் இருப்ப தாகச் சொல்லப்பட்டது.

அதன்பிறகு நாம், கொண்டலாம்பட்டி மண்டல உதவி வருவாய் ஆணையர் முருகேசனிடம் கேட்டபோது, ''இறைச்சிக் கூடங்களை ஒப்பந்தம் எடுத்த கோபிநாத் என்பவர், போதிய லாபம் இல்லை எனக் கூறி, பாதியிலேயே ஒப்பந்தத்தை ரத்து செய்யும்படி கடிதம் அனுப்பி விட்டார்.

இதனால் தற்போது மாநகராட்சி நிர்வாகமே நேரடியாக கறிக்கடைக் காரர்களிடம் சுங்க கட்டணம் வசூலித்து வருகிறது. இறைச்சிக்கூடங்களுக்கு புதிதாக ஒப்பந்தம் விட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன'' என்றார்.

மக்களுக்கு சுகாதாரமான இறைச்சி கிடைப்பதை உறுதிப்படுத்துவதோடு, ஒப்பந்ததாரர்களும், மாநகராட்சியும் கூட்டுக் கொள்ளை அடிப்பதையும் உடனடியாக தடுக்கவேண்டும். இதுவே அங்குள்ளவர்களின் எதிர்பார்ப்பு