ஆந்திராவும், கர்நாடகாவும் பாலாற்றின் குறுக்கே பல தடுப்பணைகளைக் கட்டி தண்ணீரைத் தடுத்துவருகிறது. அதையும் மீறி தமிழ்நாட்டுக்கு வரும் குறைந்தபட்ச தண்ணீர் விஷமாக மாறி அடிக்கடி மீன்கள், வாத்துகள் செத்துமிதக்கின்றன, மக்களுக்கும் பல நோய்கள் வருகின்றன. இதனை நீர்வளத்துறை, மாசுக்கட்டுப் பாட்டு வாரியம் எதுவும் கண்டுகொள்வதில்லை என்கிற குரல் விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் கேட்கிறது.
தமிழ்நாட்டுக்குள் 222 கி.மீ. தூரம் பயண மாகும் பாலாறு, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலுள்ள பல நூறு ஏரிகளுக்கு நீர் ஆதாரமாகவும், பல்லாயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கும், பல லட்சம் மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. பாலாற்றின் கரையை ஒட்டினாற்போல் வாணியம்பாடி, ஆம்பூர், ராணிப்பேட்டை பகுதிகளிலுள்ள தோல் தொழிற் சாலைகளின் கழிவுநீரால் பெரும்பாதிப்புகள் ஏற்படுகின்றன.
இதுகுறித்து விவசாயியும், சமூக ஆர்வலரு மான வாணியம்பாடி வடிவேல்சுப்பிரமணியம் பேசும்போது, “"வாணியம்பாடி பகுதியில் மட்டும் சிறியதும், பெரியதுமாக 110-க்கும் மேற்பட்ட தோல் கழிவுநீர் தொழிற்சாலைகள் உள்ளன. 30 ஆண்டு களுக்கு முன்பு தோல்களை இயற்கை முறையில் பதப்படுத்தி சுத்தம்செய்தார்கள். இப்போது கெமிக்கல் கொண்டு சுத்தம் செய்கிறார்கள். அந்த குரோமிய கெமிக்கல் நீரை பாலாற்றில் கலக்கவிடுகிறார்கள். இந்த கழிவுநீரால் பாலாறு படுகை முழுவதுமே விஷமாக மாறிவிட்டது. தோல் தொழிற்சாலைகளின் கழிவுநீரை சுத்திகரிக்க பொதுசுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்துள்ளோம், அங்குதான் கழிவுநீரை அனுப்புகிறோம். பாலாற்றில் எங்கள் கம்பெனிகளின் கழிவுநீர் கலப்பதில்லை. வாணியம்பாடி, ஆம்பூர் நகராட்சி, பேரூராட்சி களின் சாக்கடைக் கழிவுதான் கலக்கிறது, அதனால்தான் அசுத்தமாகிறது எனச் சொல்லிவருகிறார்கள். சில தினங்களுக்கு முன்பு பாலாற் றில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்துமிதந்தன, இப்படி அடிக்கடி நடக்கும். குறிப்பாக சனிக்கிழமை இரவு சில டேனரிகள் கழிவுநீரை பாலாற்றுக்குத் திருப்பிவிடுவார்கள். ஷாம்பு நுரைபோல் பொங்கிவரும் அந்த நீர், பாலாற்று நீரோடு கலந்த துமே மீன்கள் செத்துமிதக்கும். உடனே கம்பெனி ஆட்கள் வந்து சில கெமிக்கலை பாலாற்று நீரில் கலந்துவிட்டு செத்த மீன்களை அள்ளிக்கொண்டு போய்விடுவார்கள். இந்த செயலை எதிர்த்து கடந்த 20 ஆண்டுகாலமாக பல போராட்டங்களை விவசாயிகள், சமூகநல ஆர்வலர்கள் நடத்திவிட் டார்கள். இதனை எந்த அரசும் கண்டு கொள்ளவில்லை. இப்போது இந்த கம்பெனிகளின் அராஜகம் அதிகமாகிவிட்டது. பாலாற்று நீரால் பாலாற்று படுகையே விஷமாகிவிட்ட நிலையில் இப்போது மணல் குவாரிகளால் அடுத்த சிக்கலை எதிர்நோக்கியுள்ளது.
பாலாற்றில் வரும் நீர், பல நூறு ஏரிகளுக்கு கால்வாய் வழியாக செல்லும். அந்த நீர், அந்தப் பகுதி விவசாயத்துக்கு, மக்களின் குடிநீருக்கு பயன்பட்டுவந்தது. கடந்த மழைக் காலத்தில் பாலாற்றில் அதிகமாகவே தண்ணீர் ஓடியது, ஆனால் ஏரிகள் நிரம்பவில்லை. இதற்குக் காரணம், பாலாற்றில் தொடர்ச்சியாக மணலை சுரண்டி எடுத்துவிட்டதால் ஆற்றின் ஆழம் அதிகமாகிவிட்டது, இதனால் ஆற்றில் வரும் தண்ணீர் கால்வாய் வழியாகச் செல்லமுடியாதநிலை. அதாவது... ஆறு கீழே, ஏரி கால்வாய் மேலே என மாறிவிட்டது. இந்த நிலையை மாற்ற, கழிவுநீர் கலப்பதையும், மணல் அள்ளுவதையும் நிறுத்தவேண்டும், ஏரிப் பாசன வாய்க்கால்களை சரிசெய்யவேண்டும், பாலாற்றின் குறுக்கே ஆங்காங்கே தடுப்புச்சுவர் கட்டவேண்டும்'' என்றார்.
சமம் குடிமக்கள் இயக்கத்தின் மண்டலச் செயலாளர் ஆம்பூர் ஜேசுபாதம் நம்மிடம், “"சில ஆண்டுகளுக்கு முன்பு பாலாற்றின் கரையோரம் வசிக்கும் மக்களிடம் குரோமிய கெமிக்கல் நீரால் வரும் உடல் உபாதைகள் குறித்து விழிப்புணர்வுக்குச் சென்றபோது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கிட்னி, இதயம், தோல் நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஒரு நிறுவனம் செயல்படுகிறதென்றால் சி.எஸ்.ஆர். நிதிமூலமாக அப்பகுதி மக்களுக்கு நலத்திட்டப் பணிகளைச் செய்யவேண்டும் என்கிற சட்ட முள்ளது. இந்த நிறுவனங்கள் மருத்துவ முகாம்கள்கூட நடத்துவதில்லை. இப்போது இந்த கெமிக்கல் நீரால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தோல் தொழிற் சாலைகளின் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ய வாணியம்பாடியில் வாணிடெக், ஆம்பூர் டெக், பேரணாம்பட்டு என மூன்று சுத்திகரிப்பு நிலை யங்கள் உள்ளன. அந்த சுத்திகரிப்பு நிலையத்துக்கு டேனரிகள் கழிவுநீரை அனுப்ப வேண்டும். டேனரிகள் அனுப்பும் கழிவுநீருக்கு தகுந்தாற்போல் கட்டணம் செலுத்தவேண்டும். இதற்காக ஒன்றிய- மாநில அரசுகள் கோடிக்கணக்கில் மானியம் தருகிறது. அதை வாங்கும் சுத்திகரிப்பு நிலைய நிர்வாகங்கள் பொய்க்கணக்கு எழுதி கொள்ளை யடிக்கின்றன, அரசுகளும் இதனை கண்டுகொள்வதில்லை.
அதற்குக் காரணம், இந்தியாவில் அதிக அந்நியச்செலவாணி பெற்றுத் தரும் வாணியம் பாடி -ஆம்பூர் பகுதி தொழிலதிபர்கள் இந்திய அளவில் லெதர் தொழிலின் டான்களாக இருக்கிறார்கள். தங்கள் தொழில் பாதிக்கப் படக்கூடாது என அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகளை அள்ளித் தருகிறார்கள். இதனால் இவர்களின் அத்துமீறல்களை ஆட்சிக்கு வரும் கட்சிகள் எதுவும் கண்டுகொள்வதில்லை. மீனல்ல, மனிதனே செத்துமிதந்தாலும் நீர்வளத்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கண்டுகொள்ளாத அளவுக்கு அதிகாரிகளுக்கு கப்பம்கட்டுகின்றனர். அவர்களுக்கு விவசாயத்தின் மீதும், மக்களின் மீதும் குறைந்தபட்ச அக்கறைகூட கிடையாது'' என்றார்.