RSS's domination on Ayurveda College

நாகர்கோவில் மையப்பகுதியில் இருக்கிறது அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனை. தமிழகத்திலுள்ள ஒரே ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியான இங்கு தமிழகம், கேரளா, புதுச்சேரி உட்பட பல்வேறு மாநிலங்களிலிருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படிப்பதோடு மருத்துவமனையில் தினமும் சுமார் 150 உள்நோயாளிகளும் 500-க்கு மேற்பட்ட வெளிநோயாளிகளும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்த மருத்துவக் கல்லூரியில்தான் கடந்த 2023 அக்டோபரில் ஒரு பெண் மருத்துவர் உட்பட, 5 பயிற்சி பெண் மருத்துவர்கள் சக சீனியர் டாக்டர்கள் சிலரால் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்படுவதாக கோட்டார் போலீசில் புகார் கொடுத்து பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தினார்கள்.

Advertisment

தற்போது மீண்டும் அதே மருத்துவக்கல்லூரியில் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தைக் கொண்ட 11 மருத்துவர்கள் ஒன்றுசேர்ந்து கல்லூரிக்குள் மதரீதியாக பிரிவினையை உருவாக்கி மாணவர்களிடையே காவிமயத்தை பரப்பிவருவதோடு மருத்துவக்கல்லூரி டீனையும் பணி செய்யமுடியாமல் நெருக்கடி தந்துவருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

Advertisment

இதுகுறித்து ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவக்கல்லூரி இயக்குனரகத்துக்கு தொடர்ந்து புகார் கடிதங்கள் சென்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அந்த மருத்துவர்களுக்கு ஆதரவாக இருப்பதாக பெயர் சொல்லவிரும்பாத மருத்துவர் ஒருவர் தனது குமுறலை நம்மிடம் கொட்ட, இதுசம்பந்தமாக கல்லூரி டீன் கிளாரன்ஸ் டேவியிடம் பேசினோம்.

""நான் ஆன் டூட்டியில் இருப்பதால் என்னால் எதுவும் சொல்லமுடியாது. நீங்களே விசாரியுங்கள்''’என்றார் அவர்.

இதையடுத்து அந்த மருத்துவக் கல்லூரி வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது நம்மிடம் பேசியவர்கள். ""சார் இந்த மருத்துவக் கல்லூரியை வடநாட்டிலிருந்து வந்து இங்கு பணிபுரியும் மருத்துவர்கள், ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்பரிவார் அமைப்புகளின் காரியாலயத்தைப்போல் நடத்துகிறார்கள். இதற்கு இங்குள்ள ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தில் ஊறிய சில மருத்துவர்களும் ஊழியர்களும் உடந்தையாக இருக்கிறார்கள்.

இங்கு டீனாக இருக்கும் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த கிளாரன்ஸ் டேவியைத் தூக்கிவிட்டு அந்த இடத்தில் வடநாட்டைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ்.காரர் ஒருவரை உட்காரவைக்க என்னவெல்லாம் செய்யணுமோ அதைச் செய்துகொண்டிருக்கிறார்கள். குறிப்பிட்ட அந்த 11 மருத்துவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதுதான் நடக்கணும். அவர்கள் டூட்டிக்கு ஒழுங்கா வரமாட்டார்கள். ஐ.டி.கார்டு, மருத்துவர் கோட் போடமாட்டார்கள்.

அதேபோல் இந்த 11 பேரும் வெளியில் கிளினிக் வைத்திருக்கிறார்கள். அங்கே வேலைசெய்ய இங்கே படிக்கிற பிள்ளைகளைக் கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்கிறார்கள். அவர்கள் போகவில்லை என்றால் பிராக்டிகல் தேர்வில் தோற்கடிப்போம் என மிரட்டுவதால், பயந்து அவர்கள் செல்கிறார்கள். இதையெல்லாம் டீன் கிளாரன்ஸ் டேவி கண்டித்து சர்க்குலர் அனுப்பினார். உடனே டீன் மீது மாணவிகளை வைத்து உயரதிகாரிகளுக்கு பெட்டிசன் போட வைக்கிறார்கள்.

வெளிமாநிலங்களிலிருந்து இங்கு பணிபுரியும் மருத்துவர்களுக்கு இரண்டு ஆண்டுகளில் கட்டாயம் தமிழ் பேசவும் எழுதவும் தெரியவேண்டும் இதற்காக துறைரீதியாக தேர்வும் நடத்தப்படும். இங்கு பணிபுரியும் வெளிமாநிலத்தவர்கள் தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஆனால் தமிழ் எழுதவும் பேசவும் தெரியாது. இதனால் நோயாளிகள் கஷ்டப்படுகிறார்கள். இதையெல்லாம் குறிப்பிட்டு டீன் இயக்குனரகத்துக்கு பலமுறை கடிதம் எழுதியுள்ளார். எந்த நடவடிக்கையும் இல்லை.

ஆத்திரத்தில் அந்த மருத்துவர்கள் நாகர்கோவில் மாநகராட்சியைச் சேர்ந்த ஒரு பா.ஜ.க. கவுன்சிலர், ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த சிலரை வைத்து டீன், அவருக்கு ஆதரவாக இருக்கும் மருத்துவர்களை கொலை மிரட்டல் விடுத்துவருகிறார்கள்’’ என்றனர்.

சீனியர் மருந்தாளுநர் ஒருவர் கூறும்போது, “மருத்துவக்கல்லூரி வளாகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்கு எதிர்க்கிற அந்த கூட்டம்தான் அயோத்தியில் ராமர் கோவிலில் திறக்கப்பட்ட அதேநாளில் இங்கு ராமரின் படத்தை வச்சி பூஜைசெய்ய முயற்சி செய்தாங்க. மருத்துவக் கல்லூரியில் மட்டுமல்ல மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடமும் மதரீதியில்தான் அவர்களின் நடவடிக்கை இருக்கும்.

மருத்துவமனைக்கு சிகிச்சை பெறவரும் குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு நல்ல சிகிச்சையும் மற்றவர்களுக்கு அலட்சியமும் காட்டுகிறார்கள். இந்த மருத்துவர்களை மீறி மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தால் எதுவும் செய்யமுடியாது. ஆயுர்வேத மற்றும் சித்த இயக்குனரகமும் இவர்களது ஆர்.எஸ்.எஸ். பின்னணி காரணமாக இந்த மருத்துவர்கள் சொல்வதைத்தான் கேட்கிறது'' என்றார்.

ஏற்கெனவே இந்த மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக இருந்து பதவி உயர்வு மூலம் டீனான கிளாரன்ஸ் டேவி வந்தபிறகுதான் அவர் முயற்சியில் இங்கு எம்.டி.கோர்ஸ், குறைந்த விலையில் மருந்து விற்பனை மையம், கல்லூரிப் பேருந்து, கட்டடம் மற்றும் மாணவ மாணவிகளுக்கு போதுமான அடிப்படை வசதிகள் போன்றவை வந்து கல்லூரி முன்னேற்றம் அடைந்துள்ளது. இந்தச் சூழலில் வடநாட்டு மருத்துவர்கள் காட்டும் ஆதிக்கம் கல்லூரியின் வளர்ச்சியை கேள்விக்குறியாக்கும் என்று அஞ்சுகின்றனர் அந்தப் பகுதி வர்த்தகர்கள்.

குற்றம்சாட்டப்பட்டிருக்கும் அந்த மருத்துவர்கள் தரப்பில் கூறும்போது, "டீன் கிளாரன்ஸ் டேவி உள்ளூர்க்காரர். காங்கிரஸ் அனுதாபி. குறிப்பிட்ட சில திறமையான மருத்துவர்களை அவருக்குப் பிடிக்காது. இதனால் தொடர்ந்து அவர்கள் மீது சம்பந்தமில்லாத புகார்களை அதிகாரிகளுக்கு அனுப்பிவருகிறார். கல்லூரியில் செய்யக்கூடாத செயல்களில் ஈடுபடுபவர்களை தன்னைச் சுற்றி வைத்திருக்கிறார். இதை எதிர்ப்பதால்தான் தனக்கு நெருக்கமானவர்களை வைத்து அவதூறு பரப்பிவருகிறார்'' என்கின்றனர்.