"பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா' (பி.எஃப்.ஐ.)எனும் முஸ்லீம் அமைப்பினை 5 ஆண்டு களுக்கு தடை செய்திருக்கிறது பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு. இந்த சம்பவம் முஸ்லீம் அமைப்புகளிடமும் ஜனநாயக சக்திகளிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோடி அரசுக்கு எதிரான கண்டனங்கள் அதிகரித்து வருகின்றன.
முஸ்லீம்களின் சமூக, கல்வி, பொருளாதார சூழல்களை மேம்படுத்துவதற்காக 2006-ல் கேரளாவில் உருவானது "பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா'. கேரளம், தமிழகம், கர்நாடகம் என தென்னிந்தியாவில் வலுவாகக் காலூன்றியுள்ள இந்த அமைப்பு அண்மைக் காலமாக டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவருகிறது.
சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்துக்கொண்டு இந்தியாவின் இறையாண்மைக்கும், சமூக நல்லிணக்கத்துக்கும் எதிராக இந்த அமைப்பு இயங்குவதாக ஒன்றிய அரசு தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்தே வந்தது.
சென்னையில் 4 மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, "பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மிகவும் ஆபத்தான இயக்கம். மனித உரிமை அமைப்பு போல இது இயங்கினாலும் தீவிரவாத இயக்கங்களுக்கு ஆட்சேர்ப்பில் ஈடுபட்டுள்ளது. மனித உரிமை செயல்கள், மாணவர் இயக்கம், அரசியல் என பல்வேறு முகமூடிகளை இந்த இயக்கம் அணிந்துள்ளது''’என்று கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார்.
கவர்னரின் இந்த பேச்சுக்கு அப்போதே கண்டனம் தெரிவித்த பி.எஃப்.ஐ.யின் தமிழக தலைவர் ஷேக்முகமது அன்சாரி, "எங்கள் இயக்கத்தை தீவிரவாத அமைப்பாக சித்தரிப்பது தவறு. அப்படி சித்தரிக்க என்ன ஆதாரம் இருக்கிறது?''’என்று கேள்வி எழுப்பியிருந்தார். "தமிழக கவர்னரின் கடுமையான இந்த குற்றச்சாட்டினால், இந்த இயக்கம் தடை செய்யப்படலாம்' என்ற சந்தேகமும் முஸ்லீம் அமைப்புகளிடையே எழுந்திருந்தது.
இப்படிப்பட்ட சூழலில்தான், கடந்த 22-ந் தேதி இந்த அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளின் வீடுகள் என இந்தியா முழுவதும் 15 மாநிலங்களில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனையில் குதித்தது "என்.ஐ.ஏ.' என்கிற தேசிய புலனாய்வு முகமை. என்.ஐ.ஏ.வுடன் இணைந்து ஒன்றிய அரசின் அமலாக்கத்துறை அதிகாரிகளும் சோதனையில் ஈடுபட்டனர். இதற்கு ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் வைத்துள்ள பெயர் "ஆபரேஷன் ஆக்டோபஸ்'.
ஆபரேஷன் ஆக்டோபஸின் கரங்கள் இந்த அமைப்பினரை தேடித் தேடி கைது செய்தன. சுமார் 170 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த அதிரடி சோதனைகளைத் தொடர்ந்து, தமிழகத்தில் கோவை, சேலம், தூத்துக்குடி, மதுரை, தென்காசி என பல்வேறு மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளின் வீடுகளின் மீது எரிபொருள் பாட்டில் வீச்சு நடந்து அதிர்ச்சியை ஏற் படுத்தியது. இதனையடுத்து கடந்த 26-ந் தேதி டெல்லிக்கு அழைக்கப் பட்டிருந்தார் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி.
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார் ரவி. அப்போது, சட்டவிரோத நட வடிக்கைகள் தடுப்பு சட்டமான ஊபா சட்டத்தின் 3-வது பிரிவின்படி, பி.எஃப்.ஐ. இயக்கத்தை தடை செய்வதற்கான ரிப்போர்ட்டை அவரிடமிருந்து பெற்றிருக்கிறார் அமித்ஷா. அதேபோல, உத்தரப் பிரதேசம், கர்நாடகம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களும் இந்த இயக்கத்தை தடை செய்வதற்கான பரிந்துரைகளை ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்துக்கு கொடுத்துள்ளன.
இதனையடுத்து, ஊபா சட்டத்தின் கீழ் "பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா' மற்றும் அதன் துணை அமைப்புகளையும் 5 ஆண்டுகளுக்கு தடை செய்ய முடிவெடுக்கிறது ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம். இதனை அமல் படுத்துவதற்கு முன்பாக, இந்தியாவில் இயங்கும் முக்கிய முஸ்லீம் அமைப்புகளின் தலைவர்களிடம் ஆலோசனை நடத்தியிருக்கிறது ஒன்றிய அரசு. தடை விதிக்க அவர்களும் சம்மதித்துள்ளனர்.
இந்த நிலையில்தான், இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கங்களான இந்திய இஸ்லாமியர் மாணவர் இயக்கமான "சிமி', வங்கதேச "ஜமாதுல் முஜாஹிதீன்' ஆகிய அமைப்புகளுடன் பி.எஃப்.ஐ. இயக்கத்திற்கு தொடர்பு உள்ளது. மக்களிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் பயங்கரவாத நடவடிக் கைகளில் ஈடுபட்டு, நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படுத்துவதுடன் பயங்கர வாதத்துடன் கூடிய மத ஆட்சியை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த அமைப்பு இயங்கி வந்துள்ளது.
மத ரீதியாக பிரிவினையை ஏற்படுத்தவும், நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தவும் இந்த அமைப்பு செயல்பட்டுள்ளது. நாட்டுக்கு எதிராகவும், அரசியல் சாசன அமைப்புகளை அவமதிக்கும் வகையிலும் செயலாற்றி வந்துள்ளனர். சமீபத்தில் நடந்த சோதனைகளில் இது உறுதி செய்யப்பட்டி ருக்கிறது. மேலும், பயங்கரவாத செயல்களுக்காக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நிதி திரட் டியிருக்கிறார்கள். அதனைப் பகிர்ந்திருக்கிறார்கள்.
இத்தகைய சூழல்களைக் கருத்தில்கொண்டு "பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா' மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை விதிக்கப்படுகிறது‘என்று தெரிவித்துள்ளது ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம்.
ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை, தமிழகத்திலுள்ள முஸ்லீம் அரசியல் கட்சி களிடமும் ஜனநாயக சக்திகளிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தடைக்கு கண்டனங்களும் எதிரொலிக்கின்றன.
தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் பாலனிடம் நாம் பேசிய போது, ‘’ "ஒரே தேசம், ஒரே சந்தை என்ற கார்ப்பரேட் பாசிச நிகழ்ச்சிநிரலை எதிர்த்து நிற்பவர்களை சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம், பண பரிமாற்றத் தடுப்புச் சட்டம் ஆகியவைகளை வைத்து ஒடுக்கிவருகிறது ஒன்றிய அரசு. அதன் வெளிப்பாடுதான் இந்த தடை. அரசமைப்புச் சட்டத்தை தூக்கியெறியவேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ்.சின் லட்சியம்.
இந்தியாவில் மெக்கா மஜ்ஜீத் குண்டு வெடிப்பு, மாலேகான் குண்டு வெடிப்பு, நான்தேட் குண்டு வெடிப்பு, அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு, பர்மானி குண்டு வெடிப்பு, பூனே குண்டு வெடிப்பு, நவிமும்பை குண்டு வெடிப்பு, ஜல்னா குண்டு வெடிப்பு, சம்ஜுதா விரைவு ரயில் குண்டு வெடிப்பு என நடந்த பல்வேறு குண்டு வெடிப்புகளுக்கு யார் காரணம் என்பது மக்களுக்குத் தெரியும்.
"பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா' அமைப்பை தடை செய்வதற்காகக் கூறப்பட்ட அத்தனை குற்றச்சாட்டுகளும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கும் பொருந்தும். இஸ்லாமிய இயக்கத்துக்கு தடை என்பது அவர்கள் அமைப்பாய்த் திரள்கிற உரிமையைத் தடுப்பதாகும். இந்தியாவில் இன்றைக்கு முஸ்லீம் அரசியல் கட்சிகள் எல்லாம் தங்களின் வலிமையை இழந்து விட்டன.
இந்தச்சூழலில், "பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா' எனும் இந்த அமைப்பு, அரசியல் ரீதியாகவும் வளர்ந்து வருகிறது. தென்னிந்தியாவில் வளர்ச்சி பெற்றுள்ள இந்த இயக்கம், வட இந்தியாவிலும் விரிவடையத் துவங்கியுள்ளது. அரசியல்ரீதியாக இந்த இயக்கம் வலிமை பெறுவதைத் தடுப்பதற்காகத்தான் தடை விதிக்கப்பட்டுள்ளது'' என்கிறார் அழுத்தமாக.
திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை ராஜேந்திரனிடம் பேசிய போது, "பி.எஃப்.ஐ. எத்தகைய பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டிருக்கிறது? அதற்கான ஆதாரங்கள் என்ன? என்பது குறித்தெல்லாம் ஒன்றியத்திலுள்ள இந்துத்துவா அரசு வெளிப் படுத்தவில்லை. வெளிநாட்டிலிருந்து நிதி வருகிறது என பொத்தாம் பொதுவாக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து சோதனைகள் நடத்தி, கைது செய்து, திடீரென்று தடை உத்தரவு பிறப்பித் திருப்பது கண்டனத்திற்குரியது. இஸ்லாமியர்கள் என்றாலே அவர்கள் இந்தியாவின் விரோதிகள் என ஒரு பிம்பத்தைக் கட்டமைத்திருக்கிறது வருகின்றனர்.
எத்தனையோ இந்து தீவிரவாத அமைப்புகள் நாட்டில் தாண்டவமாடிக் கொண்டிருக்கின்றன. அவைகளெல்லாம் சுதந்திரமாக நடமாட மோடி அரசு அனுமதிக்கிறது. "சனாதன் சன்சா' என்ற ஒரு இந்து தீவிரவாத அமைப்பு, மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பலரையும் படுகொலை செய்தது நிரூபிக்கப்பட்டு, அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். இருப்பினும் அந்த அமைப்பை தடை செய்ய வில்லை. இந்தியாவை இந்து ராஷ்ட்ராவாக உருவாக்க இஸ்லாமியர்களுக்கு எதிரான நடவடிக்கையை கட்டமைப்பதற்காகத்தான் இந்தத் தடை. தமிழகத்தில் இயங்கும் ஜனநாயக சக்திகளையும் தமிழ்த் தேசிய இயக்கங்களையும் அச்சுறுத்தத்தான் இந்தத் தடையை பிறப்பித் துள்ளனர்''’என்கிறார்.
"மனிதநேய மக்கள் கட்சி'யின் தலைவரும் எம்.எல்.ஏ.வுமான டாக்டர் ஜவாஹிருல்லா, "இந்தியா மதச்சார்பற்ற நாடு. நமது அரசியலமைப்புச் சட்டம், நாட்டு மக்கள் தங்களுக்கான அமைப்பை கட்டமைத்துக் கொள்ளவும் அதன் வழியாக தங்களின் கொள்கைகளுக்காக தொண்டாற்றவும் அனுமதிக்கிறது. அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கிறது மோடி அரசு. பி.எஃப்.ஐ. அமைப்பின் செயல்பாடுகளில் எங்களுக்கு ஏராளமான முரண்பாடுகள் உள்ளன. இருப்பினும் அந்த அமைப்பை தடை செய்வது ஏற்புடையதல்ல. ஒரு அமைப்பின் உறுப்பினர்கள் சிலர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலுவான சட்டங்கள் நாட்டில் இருக்கின்றன. அதைத் தவிர்த்துவிட்டு, ஒட்டுமொத்த அமைப் பையும் தடை செய்வது ஜனநாயக விரோதம்'' என்கிறார்.
"தமிழக வாழ்வுரிமைக் கட்சி'யின் தலைவரும் எம்.எல்.ஏ.வுமான வேல்முருகன் பேசிய போது,‘"மக்களுக்காகப் போராடுபவர்களையும் அமைப்புகளையும் ஒடுக்குவதற்காகவே ஊபா சட்டம் பயன்படுகிறது என்பதை மீண்டும் நிரூபிக்கிறது மோடி அரசு. இஸ்லாமிய அமைப்பின் மீது நடந்துள்ள தடை என்பது, ஒன்றிய பாசிச பா.ஜ.க. அரசை எதிர்க்கும் தமிழ்த் தேசிய இயக்கங்கள், இடதுசாரி அமைப்புகள் உள்ளிட்டவைகளை அச்சுறுத்துவதற்காகத் தான்''‘ என்கிறார்.
"தமிழ்த் தேசிய முன்னணி' தலைவரான பழ.நெடுமாறன்,‘’"தேசிய புலனாய்வு முகமை சோதனைகளை நடத்துவதற்கு முன்பு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளுக்கோ அதன் காவல்துறையினருக்கோ தெரிவிக்காமல் சோதனை நடத்தியது அரசியல் சட்ட மாண்பிற்கும், கூட்டாட்சி முறைக்கும் விடுக்கப்பட்ட அறைகூவல். பகலில் சோதனை நடத்தாமல் நள்ளிரவில் சோதனை நடத்துவது ஏன்? மத நல்லிணக்கத்துடன் வாழும் மக்களிடையே மதக் கலவரங்களை உருவாக்கவும், சனநாயக அமைப்புகளை சீர்குலைக்கவும் இந்திய அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கையை கண்டிக்கிறேன்'' என்கிறார்.
"மே 17' இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி,”"ஓர் அமைப்பை உள்நோக்கத்துடன் தடை செய்வது ஜனநாயகத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல். பி.எஃப்.ஐ. அமைப்பை தடை செய்யும் நோக்கத்திற்காகத்தான் சோதனைகளையே நடத்தியிருக்கிறது தேசிய புலனாய்வு முகமை. இஸ்லாமியர்களுக்கு எதிரான கொள்கைகளை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நடைமுறைப் படுத்த பி.எஃப்.ஐ. தடையாக இருப்பதால்தான் அந்த அமைப்பை தடை செய்துள்ளனர். இந்த தடையை மிக எளிதாக நாம் கடந்து சென்றால், ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அனைத்து ஜனநாயக அமைப்புகளும் தடை செய்யப்படும் ஆபத்து உண்டு'' என்கிறார்.
"பி.எஃப்.ஐ.' அமைப்பிற்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையின் விரிவாக்கம் ஜனநாயக அமைப்புகளை தாக்காமல் இருக்க வேண்டுமென்பதே அரசியல் கட்சிகளின் குரலாக இருக்கிறது.