தமிழக சிறைகளில் சிறைவாசிகளுக்கு உணவு வழங்குவதற்காக வாங்கப்பட்ட உணவுப் பொருட்களைக் கூடுதல் விலைக்கு வாங்கியதாக பில் தயாரித்துக் கொடுத்ததில் ஒவ்வொரு வருடமும் ரூ.25 கோடி முதல் ரூ.30 கோடி வரை அரசுக்கு இழப்பு ஏற் பட்டுள்ளது என தமிழ்நாடு சிறைத்துறை இயக்குநர் மகேஷ்வர் தயாள் சென்னை, வேலூர், கடலூர், சேலம், கோயம்புத்தூர், மதுரை மற்றும் பாளையங்கோட்டை மத்திய சிறைக் கண்காணிப்பாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
நாம் களமிறங்கியபோது சிறைத் துறை வட்டாரத்தில் நம்மிடம் “சிறைத் துறை இயக்குநரின் சுற்றறிக்கையில் ஒரு இடத்தில், ‘மதிப்பாய்வு செய்ததில் 58 சதவீதம் அதிக விலை கொடுத்து வாங்கியதாகக் கணக்கு காட்டப்பட் டுள்ளது’ என்றெல்லாம் இருக்கிறது. அதன்படி பார்க்கும்போது, கடந்த 10 ஆண்டுகளில் ரூ.250 கோடி முதல் ரூ.300 கோடி வரை அரசுக்கு நஷ் டத்தை ஏற்படுத்தியுள்ளனர். ஊழலுக்கு ஒரு சாம்பிள்..” என்று அந்த சம்பவத்தைச் சுட்டிக்காட்டி விரிவாகப் பேசினார்கள்.
"பாளையங்கோட்டை மத்திய சிறையில் 2017-18 காலகட்டத்தில் ஞாயிறுதோறும் சிறைவாசி ஒருவருக்கு 115 கிராம் கோழி இறைச்சி என்ற கணக்கில் கொடுப்பதற்கு, ஒரு கிலோ கோழி இறைச்சியை விலை ரூ.300-க்கு வாங்கியுள்ளனர். அதே சிறையில் கோழிப்பண்ணை அமைத்து, அதில் கோழிகளை வளர்த்து சிறை பஜாரில் ஒரு கிலோ கோழி இறைச்சியை ரூ.160-க்கு விற்று வந்தனர். அப்போது அந்தச் சிறைக்கு கோழி இறைச்சி வழங்கிய ஒப்பந்ததாரர் என்ன செய்தார் என்றால், சிறையில் உற்பத்தி செய்யப்பட்ட கோழிகளை ரூ.160-க்கு வாங்கி, அதே சிறைக்கு ரூ.300-க்கு விற்றுள்ளார். இந்தக் கொடுமையை என்னவென்பது?
நாங்கள் அறிந்தவரையில் ஊழலின் அளவை இயக்கு நர் குறைவாகவே மதிப்பிட்டுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் ரூ.500 கோடிக்கும் அதிகமாகவே அரசுக்கு நஷ்டத்தை ஏற் படுத்தியுள்ளனர். தமிழ்நாடு சிறைத்துறை இயக்குநரே கண்டு பிடித்த இந்த ஊழலின் கோர முகத்தை முழுவதுமாகத் தோலுரிக்க வேண்டுமென்றால், அடி முதல் நுனி வரை அலசி ஆராய்ந்து உண்மையை வெளிக்கொணர வேண்டும்''’என கூறினர். ஊழலின் ஊற்றுக்கண்ணை நாம் தோண்டியதும் தகவல்கள் ஒவ்வொன்றாகக் கசிய ஆரம்பித்தன.
சிறைத்துறையில் ஒவ்வொரு மத்திய சிறையிலுள்ள சிறைக் கண்காணிப்பாளர்தான், அந்த மத்திய சிறைக்கும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள கிளைச்சிறை, மாவட்டச் சிறை மற்றும் இதர சிறைகளில் உள்ள சிறைவாசிகளுக்கும் உணவு சமைப்பதற்குத் தேவையான மளிகைப் பொருட்கள் மற்றும் சிலிண்டர் ஆகியவற்றைக் கொள்முதல் செய்வதற் குக் கடமைப்பட்டவர். அந்தக் கொள்முதல் எவ் வாறு செய்யப்படவேண்டும் எனச் சிறை விதிகளில் (29(11)/1983, 29(11)/2024) உள்ளது. அதில் ‘சிறைக் கண்காணிப்பாளரே சிறைச்சாலையின் சிக்கனமான செயல்பாட்டுக்கு பொறுப்பாவார். அனைத்துச் செலவினங்களையும் செய்வதற்குமுன், அதன் அவசியத்தை அவர் கவனமாகப் பரிசீலிப்பார். மேலும், செலுத்தப்படும் அனைத்துக் கட்டணங் களும், அவர் திருப்திப்படும் அளவுக்கு மிகக் குறைந்ததாக ஒத்துப்போகின்றனவா என்பதை உறுதிப்படுத்திக்கொள்வார்’என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 9 மத்திய சிறைகளுடன் சேர்த்து மொத்தம் 141 சிறைகள் உள்ளன. இதில் மொத்தம் சுமார் 20,000 சிறைவாசிகள் இருக்கின்ற னர். ஒவ்வொரு சிறையிலும் சிறைவாசிகளுக்கு உணவு வழங்குவதற்காக அரிசி, மைதா, ரவை, சீனி ஆகியவை அரசு ரேஷன்களிலும், பால் ஆவினிலும், டீத்தூள் டாண்டீயிலும் (பஆசபஊஆ) வாங்கப்படும். மளிகைப் பொருட்களையும் காய்கறிகளையும் அரசு ஆணை எண்:135 நாள்:10-2-2009-இன் பிரகாரம் கூட்டுறவு சங்க சட்டத்தின்படி, கண்டிப்பாக பதிவு செய்யப்பட்ட மொத்த விற்பனைப் பண்டகசாலையின் மூலமாக மட்டுமே வாங்கியிருக்கவேண்டும். அல்லது ஒவ்வொரு வருடமும் முறையாக தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளி சட்டம், 1998 மற்றும் தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளி விதிகள் 2000 மூலம் செய்தித்தாள்களில் விளம்பரப்படுத்தி, அதில் குறைவான புள்ளிகள் அளித்துள்ள நபருக்கு அதனை வழங்கியிருக்க வேண்டும். ஆனால், சிறைத்துறை உயர் அதிகாரிகள் இது எதையும் பின்பற்றாமல் வருடத்திற்கு பல நூறு கோடிகள் புழங்கும் இந்த டெண்டர்கள் குறித்து எவ்வித செய்தியோ அறிக்கையோ, ஊடகங்களில் எவ்விதமான விளம்பரமும் செய்யாமல் தமிழ்நாடு மாநில பனைவெல்லம் (ம) தும்பு விற்பனை இணையம் லிமிடெட்டில் அதிகப் பணம் கொடுத்து வாங்கி, கோடிக்கணக்கில் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி ஊழல் செய்துள்ளனர்.
இந்தத் தமிழ்நாடு மாநில பனைவெல்லம் (ம) தும்பு விற்பனை இணையம் லிமிடெட் என்ற நிறுவனமானது, கூட்டுறவுசங்கச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்படாத, காதி மற்றும் கிராமத் தொழில் துறையின் கீழ்வரும் ஒரு அமைப்பாகும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்துச் சிறைகளுக்கும் (கோவை மற்றும் சேலம் மத்திய சிறை தவிர) இந்த அமைப்பிடமிருந்தே மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் வாங்கப்பட்டு வருகின்றன. இது அரசு ஆணைக்கு எதிரானதாகும்.
அதற்கு முன்பு, கடந்த 2016 முதல் 2020 வரை, ஒவ்வொரு மத்திய சிறையின் கண்காணிப்பாளரும் குறுநிலமன்னர் போல் செயல்பட்டு, அந்தந்தப் பகுதியில் உள்ள, அவர்களுக்குச் சாதகமான நபர்களுடன் கூட்டு சேர்ந்து, சிறைக்கான காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்கி ஊழல் செய்துள்ளனர். இன்னும் ஊடுருவிப் பார்த்தால், சிறை தோன்றிய காலம்தொட்டே, இந்த மளிகைப்பொருள் கொள்முதல் ஊழல் நடந்திருப்பது தெரியவரும்.
தமிழ்நாட்டில் தற்போது வாரத்தில் ஞாயிறு மற்றும் புதன் கிழமைகளில் சிறைவாசிகளுக்கு கோழிக்கறி வழங்கப்படுகிறது. அக்கோழிக்கறியை அதிக விலைக்கு (கிலோ ரூ.330) வாங்கி அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி வந்ததால், சிறைத்துறை இயக்குநரின் உத்தரவுப்படி, அனைத்து மத்திய சிறைகளிலும் கோழிப்பண்ணை துவங்கப்பட்டது. கோழிப்பண்ணை அமைப்பதற்கான முதற்கட்ட தேவைகளின் அனைத்துச் செலவுகளுக்கும் பணம் தேவைப்பட்டது. சிறைத்துறை தலைமை அலுவல கத்திடம் பணம் கேட்க, ‘இவ்வளவு நாள் சம்பாதித் தீர்களே, அதைக்கொண்டு கோழிப்பண்ணை துவக் குங்கள்’ எனப் பொட்டில் அடித்தாற்போல் சொல்லிவிட்டனர். வேறு வழியின்றி, முறைகேடா கச் சம்பாதித்த பணத்திலிருந்தே கோழிப்பண்ணை யைத் துவக்கினர். 3 மாதங்கள் கழித்து, தற் போதுதான் அதற்கான பணத்தைப் பெற்றுள்ளனர்.
ஒரு சிறைவாசிக்கு ஒரு நாளைக்கு கொள்முதல் செய்யப்படும் உணவுப் பொருட்களின் உண்மையான மதிப்பு... (காண்க: அட்டவணை)
2023-லிருந்து மேற்கண்ட அட்டவணையில் உள்ள விலை விகிதத்திலிருந்து அரசாணை பிரகாரம் 30 சதவீதம் அதிகப்படுத்தியுள்ளனர். இதனால், அரசுக்கு கூடுதல் செலவினமாக, வருடத்திற்கு ரூ.26 கோடி ஒதுக்கீடு செய்து அரசுப் பணம் வீண டிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
சராசரியாக ஒரு சிறைவாசிக்கு ரூ.100 என வைத்துக்கொண் டால் (தற்போது ரூ.135) சிறைத்துறையின் உயர் அலுவலர்கள் சராசரியாக ரூ.186 கொடுத்து பொருட்களைக் கொள்முதல் செய்கின்றனர். இதில் கிடைக்கும் லாபத் தொகையை சிறையில் பணிபுரியும் உயர் அதிகாரிகள் முதல் மேல் மட்டத்தில் உள்ளவர்கள் வரை பங்குபோட்டுக் கொள்கின்றனர்.
சிறைத்துறையின் இணையப் பக்கத்திலேயே அவர்கள் வழங்கியுள்ள 27-12-2024 நாளிட்ட ஆவணத்தின்படி தமிழ்நாட்டிலுள்ள மொத்த சிறைவாசிகளின் எண்ணிக்கை 20,705 பேர். சராசரியாக 20,000 சிறைவாசிகளுக்கான ஒரு வருடத்திற்கான சிறு கணக்கீடு இது:
20,000 ல ரூ.186 ல 365 = ரூ.135,78,00,000
20,000 ல ரூ.100 ல 365 = ரூ. 73,00,00,000 (-)
-----------------------
ரூ. 62,78,00,000
------------------------
மொத்தச் சிறைகளையும் சேர்த்து 20,000 சிறைவாசிகளுக்கு கணக்கீடு செய்து பார்த்தால், ஒரு வருடத்திற்கு ரூ.62 கோடியே 78 லட்சத்திற்கு, இதில் ஊழலாகச் சுழன்றுகொண்டிருப்பது தெரியவரும்.
இவர்களின் பழைய கணக்கீட்டின் படி ஒவ்வொரு வருடத்திற்கும் சராசரியாக ரூ.100 என வைத்துக்கொண்டால் வருடத்திற்கு ரூ.73 கோடியும், புதிய கணக்கீட்டின் படி ஒவ்வொரு வரு டத்திற்கும் சராசரியாக ரூ.135 என வைத்துக்கொண் டால் வருடத்திற்கு ரூ.98.5 கோடியும்தான் மளிகைப் பொருட்கள் மற்றும் சிலிண்டருக்கு சிறைத்தலைப் புக் குறியீட்டில் (2056 00 101 ஆஆ 36700 முதல் 2056 00 101 ஆஆ 36709 வரை) செலவாகியிருக்க வேண்டும். ஆனால், இவர்கள் கண்டிப்பாக இந்த அளவுக்கு செலவு செய்யாமல், இதைவிட மிக அதிகமாக செலவுசெய்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியுள்ளனர்.
(ஊழல் தொடர்ந்து கசியும்...)