ஊர் ஊராகச் சென்று முரட்டு சிங்கிள்களுக்கு வலைவிரித்து, கல்யாண மோசடியில் ஈடுபடும் கும்பலை கொத்தாகத் தூக்கியிருக்கிறது காவல்துறை.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகேயுள்ள கள்ளிப்பாளையத்தைச் சேர்ந்தவர் தனபால் (35). திருமணத்திற்கு நீண்ட காலமாக பெண் தேடியும் கிடைக்காத விரக்தியில் இருந்த இவருக்கு, கடைசியாக பாலமுருகன் (45) என்ற தரகர் மூலம் மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்த சந்தியா (26) என்ற மணப்பெண் 'செட்' ஆகியுள்ளார்.
பெண்ணுக்கு தாய், தந்தையோ, பெரிய பின்புலமோ இல்லை என்பதையறிந்த தனபால், "குண்டுமணி தங்கம்கூட வேண்டாம்; கல்யாணச் செலவையும் நானே பார்த்துக்கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார். இருவருக்கும் கடந்த செப். 7-ஆம் தேதி, கொளக்காட்டுப்புதூரிலுள்ள வெங்கரை அம்மன் கோயிலில் வைத்து திருமணம் நடந்தது. திருமணத்தின்போது சந்தியா தரப்பில் அவருடைய அக்காள், மாமா மற்றும் தரகர் பாலமுருகன் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர்.
கல்யாணம் முடிந்த கோயில் வளாகத்தில் வைத்தே, தனக்கான தரகு கமிஷனாக 1.50 லட்சம் ரூபாயை கறாராகப் பேசி கறந்திருக்கிறார் பாலமுருகன். முதன்முதலாக சம்சார சாகரத்தில் நுழைந்த தனபால், புது மனைவியுடன் இரண்டாம் நாள் இரவை இனிமையாக கழித்திருக்கிறார். மறுநாள் காலையில் கண்விழித்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. புது மனைவி காணாமல் போயிருந்தார்.
சந்தியாவின் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. தரகர் பாலமுருகன், கல்யாணத்திற்கு வந்திருந்த அவருடைய அக்காள், மாமா ஆகியோரின் செல்போனுக்கு அழைத்தபோதும், அவர்களின் எண் களும் அணைத்து வைக்கப்பட்டிருந்தன.
எல்லோரு டைய செல்போனும் ஒரே நேரத்தில் சொல்லிவைத்தாற்போல் அணைத்து வைக்கப்பட்டிருந்ததால், தனபால் சந்தேகம் அடைந் தார். தன் வீட்டு பீரோவைப் பார்த்தபோது, அங்கே சந்தியாவுக்காக வாங்கி வைத்திருந்த விலை உயர்ந்த பட்டுப்புடவைகள், அவர் கொண்டுவந்த உடைகள் அனைத்தும் காணாமல் போயிருந்தன. சந்தியா, கம்பி நீட்டிவிட்டார் என்பதை உணர்ந்தார் தனபால்.
இது ஒருபுறமிருக்க, அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு இளைஞருக்கு திருமணம் செய்வதற்காக மணமகள் தேடி வந்தனர். மதுரையைச் சேர்ந்த தனலட்சுமி (45) என்ற தரகர் மூலம் அவருக்கு சந்தியாவின் புகைப்படம் கிடைத்துள்ளது.
இதையறிந்த தனபால், சந்தியா உள்ளிட்டோரை கூண்டோடு பிடிக்கத் திட்டமிட்டார். உடனடியாக தனலட்சுமியைத் தொடர்பு கொண்டு, தான் அந்தப் பெண்ணை மணந்துகொள்ள விரும்புவதாக கூறி, தன்னு டைய புகைப்படத்திற்குப் பதிலாக உள்ளூர் இளைஞ ரின் புகைப்படத்தை அனுப்பி வைத்துள்ளார். சந்தியா தரப்பிலும் அந்த இளைஞ ரைப் பிடித்துள்ளதாக சிக்னல் கிடைக்கவே, செல்போன் மூலமாகவே திருமண தேதியையும் முடிவுசெய்துள்ளனர்.
இதையடுத்து திருச் செங்கோட்டில் வைத்து செப்-23ஆம் தேதி திருமணம் முடிவானது. இதற்காக மணப்பெண் சந்தியா, தரகர் தனலட்சுமி, உறவினர் ஐயப்பன் (37) ஆகியோர் ஒரு காரில் திருச்செங்கோடு வந்துசேர்ந்தனர்.
அங்கு ஏற்கனவே அவர்களுக்காக வலைவிரித்துக் காத்திருந்த தனபாலும், உறவினர்களும், சந்தியா மற்றும் அவருடன் வந்த தனலட்சுமி, ஐயப்பன், கார் ஓட்டிவந்த ஜெயவேல் (38), உறவினர் கவுதம் (35) ஆகிய 5 பேரையும் கொத்தாக மடக்கிப்பிடித்தனர்.
கொலைவெறியில் இருந்த தனபால் தரப்பு, அந்த கும்பலை தூக்கிச்சென்று சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதில், ஐயப்பனுக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகே, பரமத்திவேலூர் காவல்நிலையத்தில் அவர்களை ஒப்படைத்துள்ளனர்.
காவல் ஆய்வாளர் வீரம்மாள் மற்றும் காவலர்கள் அவர்களிடம் விசாரணை நடத்தினர். ஐயப்பனின் தலையில் காயம் இருந்ததால், அவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். அங்கிருந்து அவர் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து, சந்தியா உள்ளிட்ட நான்கு பேரையும் செப்-24-ஆம் தேதி கைதுசெய்தனர். சந்தியாவும், தனலட்சுமியும் சேலம் பெண்கள் கிளைச்சிறையிலும், மற்ற இருவரும் பரமத்திவேலூர் கிளைச்சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
இந்த கும்பல், மோசடித் திட்டத்தை எப்படி அரங்கேற்று கிறார்கள் என்பது குறித்து விசாரித்தோம்.
''சந்தியா, பிறந்தது வளர்ந்தது எல்லாமே தூத்துக்குடி. இவருடைய கணவர் பாலமுருகன் (தரகர் பாலமுருகன் அல்ல). திருமணத்திற்குப் பிறகு கணவருடன் மதுரை தல்லாகுளத்தில் குடியேறினார். சந்தியாவின் உடன்பிறந்த அக்காவும் ஏற்கனவே திருமணமாகி மதுரையில் வசித்துவந்தார். அவருக்கு ஒரு பெண், ஒரு ஆண் குழந்தை உள்ளனர்.
சந்தியாவின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவர் அவரைவிட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். இந்நிலையில் அக்காவும் இறந்துவிட்டதால் அவருடைய குழந்தைகள் இருவரையும் சந்தியாதான் தனது பராமரிப்பில் வளர்த்து வருகிறார்.
இந்த நேரத்தில்தான் அவருக்கு தரகர் பாலமுருகனின் நட்பு கிடைத்திருக்கிறது. கல்யாணத் தரகரான பாலமுருகனுக்கு தமிழ்நாடு முழுவதும் தரகர்களுடன் நல்ல நெட்வொர்க் இருக்கிறது. அவர் சந்தியாவை பகடைக்காயாக்கி, அதன்மூலம் பணம் பறிக்க திட்டமிட்டார்.
பெரும்பாலும் இந்த கும்பல் நாமக்கல், காங்கேயம், கரூர், திருப்பூர் என கொங்குமண்டலத்தை குறிவைத்தே மோசடியில் ஈடுபட்டுள்ளனர். கவுண்டர், வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த பள்ளிப் படிப்பைத் தாண்டாத, அதேநேரம் பண பலமுள்ள, நீண்ட காலமாக கல்யாணம் ஆகாத முரட்டு சிங்கிள்களை தேடிப் பிடித்து மோசடி நாடகத்தை அரங்கேற்றி வந்துள்ளனர்.
இந்த கும்பலின் தலைவனான தரகர் பாலமுருகன், சந்தியாவை விதவிதமான கோணங்களில் புகைப்படங்களை எடுத்து கொங்கு மண்டலத்திலுள்ள தரகர்களிடம் கொடுத்துவிடுகிறார். அவர்கள் மூலம்தான் முரட்டு சிங்கிள்களைத் தேடும் படலம் நடக்கிறது.
வகையாக ஒருவர் கிடைத்து விட்டால், அவரிடம் குறைந்தபட்சம் 1 லட்சம் ரூபாய் முதல் 3 லட்சம் ரூபாய்வரை தரகு கமிஷன் பெறுகின்றனர். திருமணம், முதலிரவு, மோசடி என இவர்கள் புராஜக்ட்டின் காலம் அதிகபட்சம் 5 நாள்கள்தான். அங்கிருந்து நகை, பணம் என எவ்வளவு சுருட்ட முடியுமோ அவ்வளவையும் சுருட்டிக் கொண்டு ஓட்டம் பிடித்துவிட வேண்டும் என்பதுதான் சந்தியாவுக்கு கொடுக்கப்பட்டுள்ள இன்ஸ்ட் ரக்ஷன்.
சந்தியா கும்பலிடம் ஆறாவதாக சிக்கிய மாப்பிள்ளைதான் கள்ளிப்பாளையம் தனபால். ஈரோட்டைச் சேர்ந்த தரகர் மாரிமுத்து என்பவர் தனபாலை, தரகர் பாலமுருகனுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். அவருடன் திருமணம் நடந்த 15-வது நாளில் ஏழாவதாக அதே பரமத்திவேலூரில் ஒருவருடன் திருமண நாடகத்தை அரங்கேற்ற இருந்தபோதுதான் இவர்கள் பிடிபட்டுள்ளனர்'' என விவரிக்கிறார்கள் காவல்துறையினர்.
சந்தியா மட்டுமின்றி மேலும் நான்கு இளம்பெண்களை பாலமுருகன் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ரோஷினி என்ற இளம்பெண், பாலமுருகன், ஈரோடு மாரிமுத்து, ஐயப்பன் ஆகிய 4 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
மோசடிகள் பல ரகம். அதில், இதுவும் ஒரு ரகம்.