சுற்றுலாத்தலங்களான கொடைக்கானல், ஊட்டிக்கு செல்லக்கூடிய சுற்றுலா பயணிகள் இ-பாஸ் வாங்கிட்டுத்தான் செல்ல வேண்டும் என சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவுக்கு மக்களின் ரியாக்ஷன் எப்படியென்று அறிவதற்காக கொடைக்கானலுக்கு விசிட் அடித்தோம்.
கடந்த 29ஆம் தேதி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோடை இளவரசியைக் காண கொடைக்கானலுக்கு வந்து பாம்பார்புரத்திலுள்ள தமாரா தனியார் ஸ்டார் ஹோட்டலில் தங்கி யிருந்தார். அப்படியிருந்தும் சுற்றுலாப் பயணி களுக்கும், பொதுமக்களுக்கும் எந்த ஒரு பாதிப்பும் இல்லை. அந்த அளவுக்கு சர்வ சாதாரணமாகவே உள்ளூர்வாசிகளோடு சுற்றுலா பயணிகளும் அனைத்து சுற்றுலா இடங்களுக்கும் சென்று கோடை இளவரசியை ரசித்த வண்ணம் இருந் தனர். அதுபோல் தமிழக முதல்வரும் கோடை இளவரசியை ரசிக்க வரும்போது அங்கிருந்த சுற்றுலா பயணிகளுடன் செல்பியும் எடுத்துக் கொண்டார். அந்த அளவுக்கு கொடைக்கானலுக்கு முதல்வர் வந்தும் கூட எந்த ஒரு கட்டுப்பாடும் இல் லாமல் சுற்றுலாப் பயணிகள் வந்து போனார் கள். வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் எந்த ஒரு நிர்பந்தமும் இல்லாத அளவிற்கு வழக்கமான நடைமுறையிலேயே இருந்து வந்தனர். இந்நிலையில் கோடையின் வெப்பம் கொடைக் கானலையும் விட்டு வைக்கவில்லை. அந்த அளவுக்கு மேல்மலைப் பகுதியில் உள்ள கூக்கல், மன்னவனூர் உட்பட சில வனச்சரகத்தில் வெப்ப அலையினால் திடீரென கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தீ பற்றியது. அதைத்தொடர்ந்து பத்து நாட்களாக வனப்பகுதி முழுவதும் தீ பரவியதில், பல ஏக்கர் கணக்கிலான லட்சக்கணக்கான விலையுயர்ந்த மரங்கள் தீயில் கருகியதைக் கண்டு, வனத்துறையினருடன் தீயணைப்புத்துறையினரும் தொடர்ந்து தீயை அணைக்கப் போராடியும்கூட இன்னும் தீயை அணைக்க முடியவில்லை. இந் நிலையில் தான் கீழ்மலைப் பகுதியான கொடைக்கான லுக்கு தினசரி ஆயிரக்கணக் கானோர் வந்து செல் கிறார்கள்.
"எங்க கேரளாவில் எத்தனையோ சுற்றுலாத் தலங்கள் இருந்தும்கூட இ-பாஸ் நடைமுறைப் படுத்த எங்க அரசு முன்வர வில்லை. ஆனால் இங்கு இ-பாஸை நடைமுறைப் படுத்த அரசு முடிவெடுத் திருப்பதால், நாங்கள் தாமதிக்காமல் உடனடியாக 40 பேருடன் இரண்டு நாட் கள் டூர் வந்தோம். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கூடுதலாகத் தான் ரூம்களுக்கு கட்ட ணம் வசூலிக்கிறார்கள். ரூம்களுக்கு பற்றாக்குறை இருக்கிறது. ஹோட்டல்களிலும் விலை கூடுதலாக இருக்கிறது'' என்றார் கேரளா திருச்சூரைச் சேர்ந்த அப்பாஸ்.
திருச்சியைச் சேர்ந்த கண்ணன் குடும்பத் தினர், "கோடை சீசனுக்காக எங்களைப் போலுள்ள பலர் இரண்டு மாதத்திற்கு முன்பே ரூம் புக் பண்ணிவிடுகிறார்கள். அப்படியிருக்கும்போது, திடீரென இ-பாஸ் நடைமுறையை அரசு கொண்டு வந்திருப்பதால், நாங்கள் ரூம் புக் பண்ணும் தேதிக்கு இ-பாஸ் கிடைக்கவில்லை என்றால் ரூம்களுக்காகக் கொடுக்கப்பட்ட அட்வான்ஸ் திரும்பக் கிடைக்காது. அதேபோல் பாஸ் கிடைக்கும்போது ரூம்கள் கிடைப்பதிலும் சிக்கலிருக்கிறது. வருடத்திற்கு ஒருமுறை தான் சீசனே வருது. அதுலயும் இ-பாஸ் கொண்டு வருவது தேவையற்ற குழப்பத்தையே ஏற்படுத்தும்'' என்று கூறினார்.
"கோடை சீசனில் ஊட்டி, கொடைக்கானலுக்கு ஏழெட்டு முறையாவது போய்ட்டு வரு வோம். தற்போது இ-பாஸ் நடைமுறை யால் சாதாரண சுற்றுலா பயணிகள், எங்க ளைப் போலுள்ள மினி பஸ் டிராவல்ஸ்களி லும், வேன்களிலும் இ-பாஸ் எடுத்துவந்து சுற்றுலாத்தலங்களைப் பார்க்க ஆர்வம் காட்டமாட்டார்கள். இதனால் என்னைப் போன்ற டிரைவர்களின் வருமானம் பாதிக்கப்படு கிறது. எனவே இ-பாஸ் நடைமுறையை தமிழக அரசு ரத்துசெய்ய வேண்டும். இந்தியாவில் எத்தனையோ மாநிலங்களில் சுற்றுலாத்தலங்கள் இருந்தும், தமிழகத்தில் மட்டும் இப்படியான நடைமுறையைக் கடைப்பிடிப்பது வருத்தமாக இருக்கிறது. ஏற்கெனவே கொரோனா காலத்திலிருந்து எந்தத் தொழிலுமே சரிவர இல்லை. இந் நிலையில் இப்படியாக அரசு முட்டுக்கட்டை போடுவது எந்த விதத்தில் நியா யம்?'' எனக் கேட்கிறார் சென் னையைச் சேர்ந்த டிராவல்ஸ் டிரைவரான சுரேஷ்.
இது சம்பந்தமாக ஏரிச்சாலை கடை வியா பாரிகள் சங்கத் தலைவரான காஜா மைதீன், "வருடந்தோறும் ஏப்ரல், மே மாதங்களில் தான் சீசனே வரும். ஆனால் இந்த வருடம் ஏப்ர-ல் தேர்தல் என்பதால் சுற்றுலாப் பயணிகள் சரிவர வரவில்லை. அதன்பிறகாவது வருவார்கள் என்று பார்த்தால், கடந்த வருடத்தைவிட இந்த வருடம் குறைவாகத்தான் சுற்றுலாப் பயணிகள் வந்தபடி யிருக்கிறார்கள். அதிலும் மே ஒன்றாம் தேதி ஏரிக்கரையே மக்கள் வெள்ளமாகத்தான் இருக்கும். ஆனால் இந்த வருடம் ஒட்டுமொத்தமாகவே கூட் டம் சரிவர இல்லை. அப்படியிருக்கும்போது இ-பாஸை நடைமுறைப்படுத்தச் சொல்லி தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டிருக்கிறது. அதன் காரணமாக, இவ்வளவு நாள் வருபவர்களும்கூட இனிவரும் மாதத்தில் சரிவர வரமாட்டார்கள். இத னால் எங்களுடைய வியாபாரம் தான் பாதிக்கும். வருடத்தில் இரண்டு மாதத்தில் சம்பாதிக்கக்கூடிய வருமானத்தை வைத்துதான் இங்குள்ள கடை வியாபாரிகள், குடும்பத்தை நடத்திக்கொண்டு, கடைகளுக்கு வாடகையும் கட்டி வருகிறோம். இதிலும் பல வியாபாரிகள் கடைகளுக்கு வாடகை கூடக் கட்ட முடியாமலிருக்கிறார்கள். இச்சூழலில் திடீரென இ-பாஸ் கொண்டு வருவதின் மூலம் ஒட்டுமொத்த வியாபாரிகளும் பாதிக்கப்படுவார் கள். அதனால் இ-பாஸ் கொண்டு வரவேண்டாம் என தமிழக அரசு கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய வேண்டும்'' என்று கூறினார். "கொடைக் கானலிலேயே நாங்க தான் அரசு விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு சுற்றுலாப் பயணிகளிடம் வாடகை வசூல் செய்து வருகிறோம். அதுபோல் இங்கு டிராவல்ஸ் மற்றும் கார்களில் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு நகரத்தில் போக்கு வரத்து நெரிசலில்லாதபடி தான் இருக்கிறது. ஆனால் சுற்றுலாத் தலங்களான மோயர் பாயிண்ட், ஃபைன் பாரஸ்ட், குணா குகை, பில்லர் ரேக் ஆகிய பகுதிகளுக்கு கார்கள், டிராவல்ஸ் வேன்கள் மற்றும் பஸ்களில் சுற்றுலாப் பயணிகள் செல்கிறார்கள். இப்படி செல்லும் சுற்றுலாப் பயணிகளிடம் வனத்துறையினர், ஒவ்வொரு பகுதியிலும் செக் போஸ்ட் அமைத்து, 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை வசூலிக்கிறார்கள். உள்ளே சுற்றிப் பார்ப்பதற்கும் கட்டணம் வசூலிக்கிறார்கள். இப்படி ஒரு நாளைக்கு லட்சக் கணக்கான ரூபாயை வனத் துறையினர் சுற்றுலாப் பயணி களிடம் வசூலிக்கிறார்கள். இதற்கு உரிய கணக்குவழக்கும் இருப்பத காகத் தெரியவில்லை. அந்த பகுதி சாலையோ நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமானது. அவற்றை வனத்துறையினர் ஆக்கிரமித்துக் கொண்டு சுற்றுலாப் பயணிகளிடம் அடாவடி யாகக் கொள்ளையடிக்கிறார்கள். இந்த செக் போஸ்ட்களால்தான் மணிக்கணக்காக சுற்றுலாப்பயணிகள் அவதிப்படுகிறார்கள். இந்த வசூலை நிறுத்தினாலே போக்குவரத்து நெரிசல் ஏற்படாது. இந்நிலையில், சுற்றுலாத்தலங்களான கொடைக்கானலுக்கும், ஊட்டிக்கும் இ-பாஸ் வழங்க வேண்டுமென்று ஹைகோர்ட் தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருப்பதைப் பார்க்கையில், இப்படியான செக் போஸ்ட்களில் நீதித்துறையினரும் சிக்கி அனுபவித்ததால்தான் தமிழக அரசுக்கு இப்படி உத்தரவிட்டிருக்கிறார்களோ என எண்ண வேண்டியிருக்கிறது. இ-பாஸ் முறைக்கு பதிலாக, முறையற்ற வசூலைத் தடுத்தாலே போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கலாம்.
அதுபோல் இந்த சீசனில் ரெகுலர் ஹோட்டல்களைத் தவிர மற்ற பகுதிகளிலுள்ள ஹோட்டல்களில் விலைப்பட்டியலே கிடை யாது. அதனால் சீசனுக்கு தகுந்தாற்போல் 10ரூபாய்க்கு விற்க வேண் டிய டீயை 20 ரூபாய்க்கு விற்கிறார்கள். இப்படியாக இட்லி, புரோட்டா, ஆம்லேட், சாப்பாடு என ஒவ்வொன்றையும் விலை யேற்றி விற்கிறார்கள். இப்படி விலையை அதிரடியாக உயர்த்து வதன்மூலம் சுற்றுலாப் பயணிகளிடம் கொள்ளையடிக்கிறார்கள். அதிலயும் எம்.ஆர்.பி. ரேட் போட்டு வரும் பொருட்களின் விலையை கூட ஏற்றி வைத்துத்தான் சுற்றுலா பயணிகளிடம் பணம் பறிக்கிறார்கள். குறிப்பாக மூஞ்சிக்கல் பகுதியில் உள்ள அசைவ ஹோட்டலில் சுற்றுலா பயணிகள் விலையேற்றத்தைப் பற்றி கேள்வி கேட்டால், அடியாட்களை வைத்து மிரட்டி அடித்து விட்டு, கலாட்டா செய்ததாக போலீஸிடம் பொய்ப் புகார் கொடுக் கிறார்கள். இதை அரசு அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. இந்த நிலையில் தமிழக அரசுக்கு ஐகோர்ட் திடீரென இ-பாஸ் கொண்டுவரக் கூறி உத்தரவிட்டிருக்கிறது. இந்த நடைமுறையைக் கடைப்பிடித்தால் ஓரளவுக்கு ஹோட்டல்களில் விலையும் குறையும். சுற்றுலாப் பயணிகளும் ஈசியாக வந்து செல்வார்கள்" என்றனர் கொடைக்கானலில் உள்ள அனைத்து டாக்சி ஓட்டு னர்கள் மற்றும் உரிமையாளர் சங்கத்தைச் சேர்ந்த சிலர். ஆக, கோடை சீசனை முன்னிட்டு இ-பாஸ் நடைமுறைப்படுத்துவதை சுற்றுலா பயணிகளும், வியாபாரிகளும் ஒருபுறம் எதிர்த்தும் வருகிறார்கள். மற்றொருபுறம் சுற்றுலா பயணிகளிடம் கொள்ளை யடிப்பதும் தொடர்கிறது. இதனால் வெறுத்துப்போய் "கொடைக் கானலுக்கு யாரும் போகாதீங்க' என நொந்துபோய் மலையை விட்டு மனஉளைச்சலுடன் சுற்றுலாப் பயணிகள் தங்கள் ஊர்களுக்குச் செல்கிறார்கள்.
-சக்தி