தேர்தலின்போது அரசியல்வாதிகள் கொடுக்கும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது. ஆனால், பெரம்பலூர் அருகே சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற ஒன்றியக்குழு உறுப்பினர் அரசின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்காமல் தனது சொந்த பணம் 12 லட்ச ரூபாயை செலவுசெய்து சாலை அமைத்துவருவது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

cc

பெரம்பலூர் மாவட்டம் ஓலைப்பாடி ஊராட்சி ஒன்றியம் 9-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு சுயேட்சையாக நின்று வெற்றிபெற்றவர் தமிழரசி. வாக்கு கேட்கும்போதே சாத்தநத்தம் கிராம பொதுமக்கள் தங்கள் ஊரிலிருந்து விவசாய இடுபொருட்களை வாங்குவதற்கும், விற்பதற்கும் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவதற்கும் வேப்பூருக்கு நன்னை வழியாக சுற்றிச்செல்ல வேண்டியிருப்பதால் குறுகிய நேரத்தில் செல்லும் வகையில் சாலை அமைத்துத்தருமாறு கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்நிலையில் கவுன்சிலராக வெற்றிபெற்ற தமிழரசி அந்த மக்களின் 50 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அரசின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்காமல் தனது சொந்தச் செலவில் சாலை அமைக்கும் பணியினை தொடங்கியுள்ளார். அதற்காக சில விவசாயிகளிடம் தேவையான இடத்தை கிரையமாகப் பெற்று 20 அடி அகலத்தில் சுமார் ஒன்னேகால் கிலோ மீட்டருக்கு தனது சொந்தப் பணம் 12 லட்ச ரூபாயை செலவுசெய்து சாலையமைக்கும் பணியினைத் தொடங்கியுள்ளார்.

பணிகள் அனைத்தும் முடியும் பட்சத்தில் சாத்தநத்தம் கிராம மக்கள் 5 கிலோமீட்டர் பயணித்து வேப்பூர் செல்லும் நிலைமாறி, தற்போது ஒருகிலோ மீட்டர் தூரத்திலே சென்றடையலாம். இந்தச் சாலையை வேப்பூர் ஒன்றிய சேர்மன் பிரபாசெல்லப்பிள்ளை திறந்துவைத்தார். இந்த ஒன்றியக்குழு உறுப்பினரின் செயல் அனைவரின் பாராட்டைப் பெற்றுள்ளது. பிரபல வழக்கறிஞர் அருளின் மனைவிதான் தமிழரசி.

""ஒன்றியக் குழு உறுப்பினராக பதவியேற்ற பிறகு சாலைப்பணியை நிறைவேற்றுவதற்கு கடும் முயற்சிசெய்தேன். இதில் சம்பந்தப்பட்ட 20-க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் ஒவ்வொருவரிடமும் பலமுறை நேரடியாகச் பேசி அவர்களை சம்மதிக்க வைத்தோம். இடம் கொடுத்த சிலருக்கு பணம் கொடுத்தோம் சிலருக்கு மாற்று இடம் வாங்கிக்கொடுத்தோம்.

இந்த பணி முடிந்தவுடன் இந்த சாலை 21 அடி அகலமும் ஒன்றேகால் கிலோமீட்டர் (1300மீட்டர்) நீளம் கொண்டது. இதுமட்டுமல்ல கிராமங்களை இணைக்கவும் விவசாய நிலங்களுக்குச் சென்றுவரவும் சுமார் மூன்றரை கிலோமீட்டர் தூரம் இரண்டு பேர் நடந்து செல்லக்கூடிய அளவுக்கு குறுகிய பாதையாக இருந்ததை இப்போது 10 அடி அகல சாலையாக மாற்றி சொந்த செலவில் புனரமைப்பு செய்துள்ளோம். விரைவில் இதை தார்ச்சாலையாக மாற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்படும்'' என்றார் தமிழரசி அருள்.

- எஸ்.பி.சேகர்